புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 23, 2015

சொர்க்க பூமி சென்னை ...


சென்னை வந்த புதிதில் ஊர்க்கார அண்ணன் ஒருவரோடு மெரீனா கடற்கரைக்கு சென்று வந்தேன், அதன்பிறகு சென்னையில் பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்த இடங்களெல்லாம் என் நினைவிலிருந்து அழிய துவங்கி ஒரு கட்டத்தில் சுத்தமாய் நினைவிலையே இல்லாமல் போனது. வெறும் இரண்டே இரண்டு மணிநேரத்தில் என்னுள் பிரமாண்ட பிம்பத்தை தோற்றுவித்திருந்த ஒட்டு மொத்த சென்னையையும், அதனுள் வாழும் மனிதர்களையும் கிட்டத்தட்ட வெறுக்கத் துவங்கியிருந்தேன். நமக்கான இடமில்லை இதுவல்ல, எவ்வளவு சீக்கிரம் இதைவிட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிவிட வேண்டும், வெளியேறுவதற்கான காரணிகள் என்னவென்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து இன்றோடு மிகச்சரியாக ஒன்பது வருடங்கள், ஐந்து மாதங்களாகின்றன. ஆம், இத்தனை வருடங்களும் சென்னையில் தான் இருக்கிறேன், இனிமேலும் சென்னையில் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்.

மெரினாவில் அன்று கண்ட காட்சிகளும், ஏற்படுத்திய தாக்கங்களும் என்னை அவ்வாறு யோசிக்க வைத்தது, இப்போது எந்த சூழலிலும் என்னால் வாழ முடியுமென்ற நம்பிக்கையை விதைத்திருப்பதும் அதே சென்னை தான். சென்னை போன்ற கேடு கெட்ட மாநகரத்தையும், அதே நேரத்தில் சென்னை போன்ற ஆகச்சிறந்த மாநகரத்தையும் உங்களால் பார்க்க இயலாது. ஆம் கண்ணாடி போன்றது தான், நீங்கள் என்னவாக காண ஆசைப் படுகிறீர்களோ அவ்வாறே தான் அதன் பிம்பமிருக்கும். வளர்ச்சி என்ற ஒன்று இல்லாத எதையும் நாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், குறிப்பிட வயதுக்கு மேல் வளாராமல், அப்படியே இருந்தால் அதை குழந்தை என்றா சொல்கிறோம்? ஆகவே பெரு நகரங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கின்றன. மக்களும் அதற்கு தகுந்தாற் தங்களை அடுத்த நிலைக்கு மாற்றிக் கொண்டிருக்கினறனர், முடியாதவர்கள் தான் அமர்ந்து கொண்டு பழமை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை வழங்கும் இந்த சென்னை மாநகரத்தை, சிறந்த ஆசான் என்று கூட சொல்லலாம். பலவித கற்பிதங்களை வழங்கிய பூமி இது. ஊரிலிருந்திருந்தால் கூட இத்தனை விதமான மனிதர்களை சந்தித்திருப்பேனா என்பது சந்தேகம் தான். பொய், புரட்டு, களவு, கொலை இப்படியான கரை படிந்த மண்ணில் தான் உண்மை, மனதுக்கு நெருக்கமான நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். சென்னையின் இரவுகள் அவ்வளவு அலாதியானது,  அனுபவித்தர்களுக்கு மட்டுமே அதன் சுகானுபவம் தெரியும். பாதியிலையே ஓடியிருந்தால் இத்தனை அனுபவங்களை சேகரித்திருக்க முடியுமா என்பது ரொம்ப சந்தேகம் தான்.

சென்னை வாசிகள் மிக மோசமானவர்கள் என்பது பெரும்பாலான அறிவு ஜீவிகள் வைக்கும் குற்றச்சாட்டு.  நான் கேட்டவரை, சென்னையின் பூர்வீக குடிகள் வெகு குறைவு, என்னைப்போல் கிராமத்திலிருந்து  பிழைக்க வந்தவர்கள் தான் இங்கு அதிகம் வசிக்கின்றனர், அதனால் தான் வருடா வருடம் சென்னையின் பெயர் தாங்கிய விரிவாக்கம் செங்கல்பட்டை கடந்து அசுரத்தனமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இந்த மோசமானவர்கள் வரிசையில் முதலில் வருபவர்கள் யார்? அப்போ, சென்னையின் பூர்வீக குடிகள் எல்லோரும் ஒழுக்க சீலர்களா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது, அதே கேள்வியை உங்களிடமும் முன் வைக்கிறேன், மனசாட்சிக்கு விரோதமின்றி பதில் கூறவும், உங்கள் ஊரிலிருக்கும் அனைவரும் நியாயஸ்தர்கள் தானா ?  எல்லா ஊரிலும் சில விதிவிலக்குகள் இருக்கும், அவர்களை புறந்தள்ளி விட்டு பிழைப்பை பார்ப்பது தான் அறிவார்ந்தவர்கள் செய்யும் வேலை.

எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை சென்னை ஒரு சொர்க்க பூமி தான், அதை நாம் அணுகும் விதத்திலிருக்கிறது சொர்க்கமும், நரகமும் ....
 


    

Post Comment

ஜூலை 06, 2015

இரவு நேரப் பேருந்து பயணங்கள் ....


பேருந்துப் பயணங்களை எந்த அளவிற்கு அலாதியாக எண்ணி ,பயணம் செய்தேனோ அதே அளவிற்கு வெறுக்கவும் செய்யத் தூண்டுகின்றன சமீபத்திய பேருந்து பயணங்கள். சென்னையின் மாநகரப் பேருந்துகளின் பயண அனுபவங்களை சொல்ல சொல்ல சளைக்காது, அவ்வளவு சுவாரசியமாய் இருக்கும். சில நேரங்களில் மண்டையை கொதிக்க வைக்கவும் செய்யும். எதுவாக இருந்தாலும் குறுகிய நேர பயணமென்பதால் பெரும்பாலும் மனதில் நிலை கொள்ளாமல் எளிதில் மறைந்து விடுகின்றன, ஆனால் தொலை தூர பயணங்கள் தரும் சுகானுபவங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது. ஐந்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு கூட இன்னும் மனதின் ஓரத்தில் வடுவாய் இருக்கின்றது. அப்படியொரு வல்லமை இந்த நெடியப் பயணங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

சனி இரவு சென்னையிலிருந்து கிளம்பி ஊருக்கு சென்று, மீண்டும் ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பி சென்னை சேர்வது இதுதான் பயணம். சோ, அடுத்தடுத்த இரண்டு இரவுகளை பேருந்தோடு கழிக்க வேண்டிய கட்டாயம். இப்போதெல்லாம் தனிப்  பயணமென்றால் பக்கத்தில் அமர்பவர்களை எண்ணித்தான் கலங்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆசாமியும் ஒவ்வொரு ரகத்தில் வருவார்கள் நாம் தான் சிக்கி சிதை பட நேரிடுகிறது. அதற்கு தகுந்தாற்போல் தான் இருக்கைகளும் கிடைக்கின்றன. எல்லாம் சரியாக அமைந்து, மகிழ்ச்சியான பயணமாக இருக்கப் போகிறது என்று எண்ணி முடிப்பதற்குள் எதாவது ஒரு சக்கரம்  தன் மூச்சை நிறுத்தி நமது எல்லா சந்தோசத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றன! ஆகையால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தான் பயணத்தை துவக்குவதினால் பெருத்த ஏமாற்றங்கள் கிடைப்பதுமில்லை!

சனி இரவு அருகில் அமைதியான ஜென்டில்மேன் அமர எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சுகானுபவமாக இருந்தது, திரும்பி ஞாயிறு இரவு விதியின் சதிப் பிடியில் வசமாக சிக்கி கொண்டேன். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்க கடைசி இருக்கைதான் ஆக்கிரமிக்கப் படாமலிருக்க, வலப்பக்க சன்னலோர இருக்கையை நான் ஆக்கிரமித்தேன். அப்பவே முன்னிருந்து பின்னோக்கிய ஒரு யுவதியின் புன்னகையில் ஒரு ஏளனம் இருந்தது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சன்னல் வழியே அடுத்த பேருந்தினுள் என் கவனத்தை செலுத்தினேன். பதினைந்து நிமிடங்கள் தாமதாக கிளம்பி மெல்ல ஊர்ந்து அரியலூரை கடந்து ஜெயங்கொண்டம் சாலையில் ஏறியதும் ஓட்டுனருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, மனுஷன் பாடாவதியாக ஓட்ட ஆரம்பித்து விட்டார். இரண்டு லாரிகளின் பின் பக்கங்களை முத்தமிட வேண்டியது நூலிழையில் தவிர்த்தாலும் வேகத்தை மட்டும் குறைக்கவில்லை. மனதினுள் சின்ன ஜெர்க் ஆனாலும், இன்னைக்கு சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நம்பினேன்.(அட சென்னைக்கு தாங்க). அதுவரை கடைசி இருக்கையில் ஒருத்தரும் ஆக்கிரமிக்கவும் இல்லை. 

ஜெயங்கொண்டம் வந்ததும் ஆறேழு இந்தி வாலாக்கள் ஏற, பேருந்தே அதிர ஆரம்பித்து விட்டது. சொல்லி வைத்தாற் போல் என்னருகில் அமர்ந்து கொண்டான் அந்தக் கூட்டத்தின் பாஸ். என்ன பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை, இன்னொன்று அவர்களின் செய்கைகள் மண்டையை கொதிநிலையிலையே வைத்திருந்தது. அதுவரை குதிரை மாதிரி சீறிய டிரைவரும், வண்டியை கழுதை மாதிரி நகர்த்த ஆரம்பித்து விட்டார். ஒருவழியாக வண்டி விக்கிரவாண்டியில் ஓய்வுக்காக நிறுத்த, சட சடவென்று ஓடி இரண்டு பேர் கைகள் நிறைய முறுக்கு, மிக்சர், லேஸ் இப்படியான நொறுக்குத் தீனிகளை வாங்கி வந்து கொறிக்க ஆரம்பிக்க, ச்சே என்ன இவர்கள் என்று எண்ணினாலும் பிறகு , அவர்கள் காசு, அவர்கள் வயிறு நமக்கென்ன என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். அப்பொழுதான் என்னருகில் அமர்ந்திருந்த அந்த பாஸ் பேக்கினுள்ளிருந்து ஒரு பெப்சி பாட்டிலை எடுத்தான். கொஞ்சம் கடி, கொஞ்சம் குடியொடு பெப்சி பாட்டிலை காலி பண்ணி தூக்கி எறிந்துவிட்டு, பேருந்து கிளம்பிய சற்று நேரத்தில் வண்டிக்குள் வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டான். அப்போதுத்தான் வாடையும் மெல்ல வர ஆரம்பித்தது, ஆம் பெப்சிக்குள் மது கலப்படம். 

ஏற்கனவே உறக்கமின்றி உழன்று கொண்டிருக்க, கூட அந்தப் பக்கி குடைச்சலைக் கொடுக்க, மூன்றரைக்கு வடபழனியை வந்து சேர வேண்டிய பேருந்து ஐந்து மணிக்கு வந்தடைந்தது நெஞ்சில் இன்ப சுரக்க ஆரம்பித்தது. இப்படி எத்தனை சலிப்புகள் வந்தாலும் பேருந்துப் பயணங்களின் மீதுள்ள காதல் குறையவே மாட்டேன் என்கிறது. வேறு வழியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!   
     

Post Comment

ஜூலை 01, 2015

கேப்டனுக்கு ஒரு கடிதம் ....


திரு. விஜயகாந்த் அவர்களே,

வணக்கம், முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், ஆளும் மந்திரிகள் அனைவரும் இடைத் தேர்தலில் கண்ணயராமல் பணியாற்றி, ஜெயாவின் பாதத்தில் வெற்றியை? சமர்பித்து விட்டு ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி? தலைவர் என்ற முறையில் விவசாயிகளின் மீதான உங்களின் திடீர் கரிசனத்திற்கு மனம் நிறை நன்றிகள்! 

சோசியல் மீடியாவில் உங்களை வெறும் கேலிப் பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றனர், அதற்கெல்லாம் கலங்கிவிடாமல் உங்களது அரசியல் பயணத்தை இன்னும் இன்னும் ஆழத்தில் செலுத்திக் கொண்டு வருவது நாடறிந்ததே! அந்த வகையில் சமீபத்திய டெல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பை முறியடித்து பெரும் வெற்றி கண்டிருக்கிறது உங்களின் யோகா பயிற்சி!

எல்லா அரசியல் தலைவர்களிடம் இல்லாத சிறப்பு உங்களிடம் இருக்கிறது என்னவெனில் உள்ளதை உள்ளபடி சொல்லும் கலப்படமற்ற பேச்சு! அந்த சிறப்பான பேச்சே உங்களுக்கு ஆப்பாக அமைவது கவலை தரும் ஒன்று! எவ்வளவு  ஆழமென்றாலும் அதை  பார்த்து தீருவேன் என்று உறுதியோடு செயல்படும் உங்களது தீரத்தை பல சுவரொட்டிகளில் உங்களது விசுவாசிகள் கொச்சை தமிழில் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்க. சில மாதங்களாக தங்களது தொலைக்காட்சியும் அதே வேலையை செவ்வனே செய்து கொண்டிருப்பதை என்ன செய்வது என தவித்துக் கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன்!

உங்களின் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் பெரும் வெற்றியடைந்து மக்களின் துன்பங்களை போக்கி வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன், பொது வெளியில் பேசுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது அதை உணர்ந்து உங்களை மாற்றிக் கொண்டு செயல்படாதவரை உங்களின் தொண்டர்களைத் தவிர ஒருத்தரும் உங்களை மதிக்கப் போவதில்லை என்பது சற்று கசப்பான உண்மை! அரிதிலும் அரிதாக தான் சில சந்தர்ப்பங்கள் கிட்டும் அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! 

குறுவை சாகுபடிக்கான பாசன தண்ணீர் பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விவசாயிகளை சென்று சேரவில்லை, "காவிரித்தாய்?" க்கு இடைத்தேர்தல் குடைச்சல் இருப்பதினால் இப்போதைக்கு இதன் மீதான கவனம் விழ வாய்ப்பில்லை. ஓட்டு நேரத்தில் தான் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் போன்ற அடித்தட்டு மக்களின் நினைவுகள் வரும் ஜெயா விற்கும், கருணாநிதிக்கும்!


திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறீர்கள், அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் துளிர் விட்டிருக்கிறது உங்களின் திடிர்க் கரிசனம் என்றாலும் உங்கள் குரல் ஒலித்தது சற்று ஆறுதல் தான்.

கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஜெயாவை திட்டவும், கருணாவை காய்ச்சி எடுக்கவும் பயன்படுத்தாதீர்கள், இன்னொன்று நீங்கள் எப்படி காரசாரமாக பேசினாலும் கடைசியில் காமெடியாக போய் தங்களையே அடி மட்ட அளவிற்கு வைத்து கலாய்த்து விடுகிறார்கள் நம்மவர்கள்! இதில் உங்கள் பங்கும் கணிசமாக இருக்கிறது, ஆம் எங்கையாவது ஏதாவது சிக்காதா?, பொழுது போகாதா ? என்று தேடிக்கொண்டிருக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மத்தியில் பெரிய பந்தியே வைத்து விட்டுப் போய்விடுகிறீர்கள்  அவர்கள் வைச்சி செய்யாமல் வேறு என்ன செய்வார்களாம்?

பாருங்கள் நானே சொல்ல வந்ததை சொல்லாமல் மீதி எல்லாத்தையும் உளறிக் கொண்டிருக்கிறேன், சரி மேட்டருக்கு வருகிறேன்,

நீங்கள் வாக்கு வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் செய்து கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் எவன் அதிக காசு கொடுக்கிறானோ அவனுக்கு வாக்கை செலுத்தி விட்டு வானத்தை வேடிக்கை பார்க்கிற கூட்டம் நாங்கள் நீங்கள் என்ன காட்டு கத்து கத்தினாலும் எங்கள் மண்டையில் ஏறவே ஏறாது.



காவிரித்தாய் என்று விளித்து ஜெயாவிற்கு விழா எடுத்த சில கோமாளி விவசாய சங்கங்கள் போல் நீங்களும் கழுத்தில் பச்சை துண்டு போட்டால் மட்டும் விவசாயி ஆகிட முடியாது, அவர்களின் கஷ்டங்களை அடி மட்டத்தில் இருந்து அணுக வேண்டும்,அல்லது அறிந்து கொள்ள முனைய வேண்டும்! அதை தவிர்த்து விட்டு பச்சை துண்டை போட்டுக்கொண்டு, எனக்கு ஓட்டு போடுங்கள் உங்களை தங்க தட்டில் வைத்து தாங்குகிறேன் மக்களே என்று கூப்பாடு போட்டு துயரில் இருப்பவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்!

திருவாரூரில் ஆர்ப்பாட்டம் பண்ணிய அன்று உங்கள் தொலைக்காட்சியில், தாங்கள் விவசாயிகளின் துயர்களை கேட்டறிவது மாதிரி ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்ததை காண நேரிட்டது. விவசாயிகளும், கழனியில் வேலை செய்யும் பெண்களும் களைத்துப் போயிருக்க, நீங்கள் மடிப்பு கலையாத உடையில், முகத்தில் பாதி மறைக்கும் அளவிற்கு குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! சிறிது நேரம் வெயிலில் நிற்கவே கூசுகிறது உங்கள் கண்கள், பொழுதினிக்கும் கொளுத்தும் வெயிலில் நின்று உடலெரிந்து சாகும் விவசாயி நிலையை எண்ணி பார்த்திர்களா?

எதுவும் செய்யமுடியவில்லை என்று கையை அகல விரிப்பதை விட கொடுமையானது இப்படியான கோமாளித்தனங்கள்! அவர்களோடு அவர்களாக கலந்து கொள்ள முடியவில்லை எனில், மற்ற கேடு கெட்ட அரசியல்வாதிகளைப் போன்று தள்ளி நின்று வேடிக்கைப் பாருங்கள் "விவசாயிகளின் இறப்பை"!

கொதிப்புடன்

கிராமத்தான்!

Post Comment