புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 09, 2016

ஐந்து நூலும் - மனம் நிறைந்த தருணங்களும்.



நிகழ்வு நடந்த மறுநாளே எழுதியிருக்க வேண்டும் அடுத்த நாளே எனது கிராமத்திற்கு சென்று விட்டதினால் உடனடியாக எழுத முடியவில்லை. மனதிற்கு நெருக்கமான நிகழ்வினைப் பற்றி உடனடியாக எழுத முயடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. ஆகுதி பதிப்பகம் மற்றும் நண்பன் கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் சாத்தியாமானது இந்த நிகழ்வு. நான்கு கதைத் தொகுதிகள், ஒரு கவிதை நூல் ஆக ஐந்து நூல்களுக்கான அறிமுக நிகழ்வு, அதுவும் ஐந்து நூல்களைப் பற்றி பேசப் போகும் அனைவரும் பெண்கள் என்பதினால் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. 

வழமையான இலக்கிய நிகழ்வுகள் போலில்லாமல் இது தனித்துவமாக இருந்தது. இதுமாதிரியான நிகழ்வில் முதல் முறையாக கலந்து கொள்கிறேன் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி என்றால் பேசவிருக்கும் ஐந்து நூல்களில் எனது கதை தொகுப்பான "இண்ட  முள்ளு" வும் இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. 



தொடக்கத்தில் சிறு வட்டம் போன்று அமர்ந்திருந்த நண்பர்கள் நேரம் செல்ல சற்று பெரிதாகி பெரிதாகி கடைசியில் கிட்டத்தட்ட ஐம்பது நண்பர்கள் கொண்ட வளையமாக மாறியிருந்தது. நட்பின் அடர்த்தியை அங்கே காண முடிந்தது. நண்பன் அகரமுதல்வன் நிகழ்வினை தொடங்கி வைக்க, முதல் புத்தகமாக தோழி நந்தினி வெள்ளைச்சாமி, பொன் முத்துவின் "நினைவுக்கு வரும் சாவுகள்"குறித்து திறம்பட பேசினார். பொன் முத்து நிகழ்வுக்கு வராத குறையை நந்தினியின் பேச்சு போக்கியது.






அடுத்ததாக கார்த்திக் புகழேந்தியின் "ஆரஞ்சு முட்டாய்" நூலைப் பற்றி தோழி பா. விஜயலட்சுமி பேசினார். இவரின் குரல் வளத்திற்காகவே பேசவிட்டு கேட்கலாம். கம்பீரமான குரல். 

அடுத்தப்  புத்தகமாக எனது நூலான இண்ட முள்ளு குறித்து தோழி மனுஷி பாரதி பேசினார். நேர்த்தியான பேச்சு. கதைகளை பற்றிய அவரின் மதிப்பீடு அவ்வளவு உண்மையாக இருந்தது. அவரின் வாசிப்பு திறன் பற்றியும், நினைவு கூறும் தன்மை பற்றியும் கண்டு வியந்து போனேன். நன்றி தோழி.

அடுத்து நண்பன் மாதவன் நூலான "சிமோனிலா கிரஸ்த்ரா" பற்றி தோழி சுபா அவர்களின் உரை மிகக்  குறுகியதாக இருந்தது, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். பேசியவரைக்கும் நறுக்கு தெறித்த பேச்சு தான். மாதவனும் குறைவாகவே பேசினார், நிறைய எதிர்பார்த்திருந்தேன். அடுத்த அவருடனான சந்திப்பில் அந்தக் குறையினை போக்கி கொள்ளவேண்டும்.   

முடிவாக ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" குறித்து தோழி விஜிலா அவர்கள் பேசினார். அவரின் பேச்சினை முழுமையாக கேட்க முடியவில்லை, அந்த நேரத்தில் வந்த அவசிய வேலைகளினால் அது தடைப்பட்டு போனது. குறைந்த நேரமே கேட்க முடிந்தது. கூடுதலாக  மாதவன் புத்தகம் பற்றியும் பேசினார் என்று பின்னர் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி.




இவ்வளவு சிறப்பாக நடந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில், குறிப்புகளில்லை, முன் திட்டங்கள் ஏதுமில்லை. இவ்வளவு நேரத்தில் தான் பேசவேண்டும் என்ற அவசரமில்லை, போலி புகழ்ச்சிகள் இல்லை, பேசியவர்கள் அனைவரும் நிறுத்தி நிதானமாக தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக முன் வைத்தார்கள். இதுமாதிரியான மனம் திறந்த மணற்வெளிக்கூட்டங்களை அவ்வப்போது வைத்து உரையாடலாம், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

நிகழ்வுக்கு வந்திருந்த தோழமைகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும். எனது அழைப்பை ஏற்று குடும்பமாக வந்திருந்த கார்த்திக் சரவணன் அவர்களுக்கும், ஊருக்கு செல்ல வேண்டிய பயணத்தை நட்புக்காக தள்ளிவைத்து விட்ட வந்த நண்பன் கோவை ஆவி அவர்களுக்கும், அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும், எங்களது வாத்தியார் பால கணேஷ் அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.

எனக்கே எனக்கேயான நிகழ்வு போன்று நிகழ்த்தி காட்டிய நண்பன் கார்த்திக் புகழேந்திக்கும், ஆகுதி பதிப்பகம் அகர முதல்வனுக்கும் என்றைக்குமான அன்புகள் நிறைந்திருக்கும். இந்த நிகழ்வினை காலத்துக்கும் மறக்க முடியாது அப்படியான அன்பு நிறைந்த அடர்த்தியான நிகழ்வு மற்றொன்று வீட்டம்மாவுடன் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. இண்ட முள்ளுக்கென தனி விழா வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கிய தினம் அன்று. ஓடோடி கருப்பட்டி தேநீர் வழங்கிய தோழர் கவி மணிக்கும், படமெடுத்த தோழர் கிரிதரனுக்கும் சிறப்பு நன்றிகள். இப்படியான ஊக்கங்கள் இருந்தால் இன்னும் இன்னும் முயன்று பார்க்கலாம். 
     

Post Comment

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க


விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார்.
தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள். ஒன்பது சிறுகதைகளையும் ஒரு மெல்லிய கண்ணி இணைக்கிறது. அது, “மேல ஒருத்தன் இருக்கான். அவன் பாத்துப்பான். எல்லாக் கணக்குக்கும் கூலி இல்லாமலா போய்டும்?” என்ற எளிய மனிதர்களின் அறம் சார்ந்த நம்பிக்கையே! இந்தத் தொகுப்பு ஒரு குறுநாவலுக்கான நிறைவைத் தருகிறது. ஒன்பது கதையின் மனிதர்களும், அவர்களின் மொழியும், வாழ்க்கையை அவர்கள் காணும் விதமும் ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது அந்நிறைவிற்கான காரணமாக இருக்கலாம். மேலும், மடையை உடைத்துக் கொண்டு வரும் பெரு வெள்ளம் போல் களத்து மேட்டு வேலைகள் பற்றித் தணியாத ஆர்வத்தில் சிறுகதைக்கான தேவையையும் மீறிப் பதிந்துள்ளார் அரசன்.
இண்ட முள்ளு
இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் அனைவருமே உழைப்பின் அருமையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ‘நட்டு வச்ச கோயில் செல போல மரங்கள் அசையாம’ இருந்தாலும், ‘சின்ன தீப்பொறி வுழுந்தா போதும் மொத்தத்தையும் ஒரே மூச்சில் எரிச்சி விடுவது போல பங்குனி வெயிலு’ காந்தினாலும் உழைப்புக்கு அஞ்சாத மக்கள். ‘தூவானம்’, ‘வெள்ளாம’, ‘நலுவன்’ ஆகிய கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். மனதில் குற்றவுணர்வைப் ‘பெருஞ்சொம’யாய்ச் சுமந்தவாறு காடு காடாய்த் திரியும் மருதன் கூட உழைப்பதற்குச் சுணக்கம் காட்டுவதில்லை.
இரண்டு மாதம் முழுகாமல் இருந்த செந்தாமரையும், மூன்று மாத கைக்குழந்தையின் தாயான மேகலாவும் தற்கொலை புரிந்து கொள்கிறார்கள். குடிப் போதையில் தனது தந்தையைக் கணவன் கை ஓங்கிவிட்ட பொறுமலிலும், நிலையான வேலையில் இல்லாத காதல் கணவன் சொன்ன கடுசான வார்த்தையாலும் இறைவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். “நெதானம் தப்பின எதுக்கும் ஆயுசு கம்மி தான்” என தத்துவ விசாரம் மேற்கொள்கிறான் ராசா. மற்ற கதைகளுக்கும், ராசா வரும் ‘காயடிப்பு’ கதைக்குமுள்ள ஒரு வேறுபாடினை நன்றாக உணர முடிகிறது. அரசனின் இயற்பெயர் ராசா என சி.கருணாகரசின் அணிந்துரையில் உள்ளது. எல்லாக் கதைகளும் அனுபவங்களாக மட்டுமே தொக்கி நிற்க, காயடிப்பு கதையின் கடைசி வரி மனதைக் கனக்க வைக்கும் அழகியலோடு முடிவது சிறப்பு.
Writer Arasan‘கெடாவெட்டி’ எனும் கதையில் குருசாமி இறந்ததும், ஊர்ப் பெருசுங்க “வழி வுட”ச் செல்கின்றனர். அதைப் பற்றி எழுத்தாளரிடம் கேட்கையில், “ஒருவர் இறந்த சிறிது நேரத்தில், ஊருக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுருட்டு, எண்ணெய், பந்தம், சின்ன மடக்கு, சிறிய மண் பானை வைத்து சூடம், ஊதுவத்தி ஏற்றிச் செய்யும் சடங்கு. அதன் பின் தான் மேளம் அடிப்பார்கள்” என்றார். அரசன் அரியலூர் மாவட்டத்தை இன்னும் அதிகமாகத் தன் எழுத்தில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இண்ட முள் என்பது ஒரு கொடிவகை. அதன் முட்கள் உடலில் தங்காமல், சதையைப் பிய்த்துக் கொண்டு வெளியேறி விடும் தன்மையைக் கொண்டது. அப்படித் தன்னைத் தைத்த சில உண்மைக் கதைகளை ‘இண்ட முள்ளு’ எனும் தொகுப்பாகி விட்டார் அரசன். கதைகளின் தீவிரத்தன்மையைப் பிரதிபலிக்காத புத்தக வடிவமைப்பு பெரும் குறையாகப்படுகிறது. முன்னட்டையை விட பின்னட்டை பிரகாசமாக உள்ளது. ‘இயற்கையாகிப் போன எங்களூரின் மூத்தக் குடிகள் அனைவருக்கும்’ எனப் புத்தகத்தின் மூன்றாம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போடப்பட்டுள்ளது. அதையே முன்னட்டையிலும் போட்டிருந்தால், கதைகளுக்கு மேலும் நெருக்கமாய் அமைந்திருக்கும்.
புத்தகத்தை ஆன்லைனில் பெற: இண்ட முள்ளு (சிறுகதைகள்)
புத்தகத்தைத் தபாலில் பெற: +91 99 4343 7899

Post Comment