புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 29, 2014

பிழைப்பற்ற பொழுதுகளில் சுட்டது ....























Post Comment

ஏப்ரல் 26, 2014

உதடு கவ்விய முத்தங்கள் ....


பெரும் வெடிப்புகளோடு 
பிளவுபட்டு கிடக்கிறது 
முத்தங்காணா 
என்னுதடுகள்...





வெண்ணெய்க்குள் விரலிட, 
வெடுக்கென பிடுங்கி 
தீக்குள் திணித்த மாதிரி 
இருக்கிறது 
அவளின் உதடு கவ்வும் முத்தம்!


Post Comment

ஏப்ரல் 23, 2014

காமங்கொண்ட எழுத்தாளர் ...


காமம் மிகப் புனிதமானது என்று சொல்லிக்கொண்டு திரியும் பலரின் பார்வைகள் மிகவும் மோசமானவையாகத்தான் இருக்கின்றன. (நான் சொல்ல வந்த பார்வை அவர்களின் எண்ண ஓட்டங்களை தான், வேறு எதையாவது என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல ). உதாரணத்துக்கு வேறு எந்த அந்நிய கிரகத்துக்கும் செல்லவேண்டாம், இருக்கவே இருக்கிறது இணைய எழுத்துலகம் ... பார்ப்பதற்கு வேண்டுமானால் படு சாந்தமாக இருப்பதாக தெரியலாம், ஆனால் இதன் மறுபக்கம் மகா கொடூரமானது.

புரட்சி பேசும் பலரின் எண்ணங்களில் கழுவ முடியாத அழுக்கு மண்டிக்கிடக்கிறது என்பது தான் பெருங்கவலையான ஒன்று. சென்ற ஆண்டில் ஒரு புத்தக வெளியீட்டுக்கு சென்று இருந்தேன். வாழ்த்திப் பேச நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். சிலர் எதார்த்தம் பிறழாமல் பேசினர். பலரின் பேச்சில் மசாலா நெடி தூக்கலாக இருந்தது. அதில் ஒரு தோழர் சும்மா சரவெடியாக வெடித்து தள்ளினார். பெண்ணியம் சிறக்க, தழைக்க, மேலோங்க, இப்படியாக அப்படியாக அடுக்கு மொழியில் அமிர்தமாய் பேசி முடித்தார். என்னுள் பெருந்தீயை மூட்டியது அவரின் பேச்சு ... 

ச்சே , எ மா ச வாழ்ந்து கொண்டிருக்கிறோம், பெண்ணியம் இன்னும் தழைத்தோங்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று உறுதி மொழி எடுத்தவன் தான், வருஷம் ஒண்ணாச்சி, என்ன செய்திருக்கிறேன் என்று திரும்பி பார்த்தால் அவமானமாக இருக்கிறது. சரி விடுங்கள் சென்ற வாரம் உயிர்ந்தெழுந்த இயேசு பிரான் பாவ மன்னிப்பு வழங்குவார் என்று நம்புகிறேன். பின்னே சின்ன குழந்தையை வன்புணர்ந்து கொன்றவனின் பாவத்தை கழுவும் போது, எதுவுமே செய்யாத என் பாவத்தை போக்க மாட்டாரா ? போக்குவார் என்று நம்புகிறேன். நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்று படித்த நினைவு...

என்னைய மாதிரி ஒரு மங்குனிய எங்கையும் பார்க்க முடியாது, நான் எதையோ சொல்ல வந்து வேற எதையோ உளறிகிட்டு இருக்கேன் பாருங்க.  அன்னைக்கு ஒருத்தர் என்னுள் பெருந்தீயை மூட்டினார் னு சொன்னேன் அல்லவா ? அந்த அண்ணாத்தைப் பற்றி அரசல் புரசலாக சில செய்திகளை கேள்வி பட்டேன் ஆனால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் "அண்ணார்" ஒரு அலையும் பெருச்சாளி என்பதை சம்பந்தப்பட்டவரே சொன்னதும் சற்று மிரட்சி யடைந்தேன். சரி நமக்கேன் கவலை என்று நழுவினேன், காரணம் சம்பந்த பட்டவங்களே சாந்தமாக இருக்கையில் நாம என்ன .*&#கு பொங்கணும் ? அப்படின்னு வந்துட்டேன்.

சமீபத்தில் கில்மா அண்ணாத்தின் ஒரு கட்டுரையை படிக்கும் சோதனை நேரிட்டது, பெண்ணியம் பற்றி அவ்வளவு நேர்த்தியான கட்டுரை. சரி ஆயிரம் தான் ஆள் "அப்படி இப்படி" என்றாலும் எழுத்தில் இவரொரு சூரியன் தான். என்னதான் படைப்பைத்தான் பார்க்கணும், படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்ல என்று சொன்னாலும், யோக்கியமான எழுத்தை பார்க்கும் போதும் அயோக்கியத்தனமான செய்கைகள் வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை. 

அந்த பெருச்சாளியின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில் கருத்துப் பெட்டியில் கேட்பவர்களுக்கு இப்பவே பதிலளித்து விடுகிறேன், அவர் ஒருத்தர் மட்டுமல்ல, அந்த வகையறா ஆட்கள் நம்முள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆகையால் அவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆகவே நண்பர்களே பெயரை அறிந்து கொள்ளும் ஆவலை விட்டொழித்து விட்டு, தான் அடக்கமாக இல்லாதவரை தன்னடக்கம் பற்றி எழுத தகுதியில்லை என்று எழுதப் பழகுங்கள். வாழ்வோம் வளமுடன் ....     

Post Comment

ஏப்ரல் 21, 2014

கண்ணாடி வளையல்கள்...(Semman Devathai # 16)





கலைந்த கூந்தல், 
தங்கம் கண்டிரா காது,
வலதில் இரண்டு,
இடதில் மூன்றாய் 
சாயமங்கிய 
கண்ணாடி வளையல்கள்,
மேற்சட்டைக்கு எதிர் வண்ணத்தில் 
பாவாடை,
கர கரக்கும் 
கறுத்த கொலுசு,
இவைகள் போதுமாயிருக்கிறது 

அழகியை 
பேரழகியாக்க !!!


Post Comment

ஏப்ரல் 18, 2014

ஊர்ப் பேச்சு # 15 ( Oor Pechu # 15)




சாணியை குப்பையில கொட்டிவிட்டு கூடையில ஒட்டியிருந்த ஈர சாணத்த போக்க, கூடைய திருப்பி வைச்சி ரோட்டுல ரெண்டு தட்டு தட்டிவிட்டு தும்ப செடிக மேல போட்டுவிட்டு கெளம்பினார் கனகசபை வம்பரம் தழ ஒடிக்க...

மேல கூடை விழுந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பூவுமேல சாணி விழுந்த கவலையா இருக்கும் போல தொவண்டு ஒடைஞ்சி அழுவுதுங்க தும்ப செடிக,....

மேக்கால பக்கம் பல்லு தேக்க வேப்பங் குச்சி ஓடிச்சிட்டு இருந்த இரத்தினம் பார்த்துட்டு என்னைய்யா காலையில வம்பரம் தழ ஓடிச்சிட்டு இருக்கே ன்னு, கெள எட்டாம தாவி கிட்டு இருந்த கனகசபைய பார்த்து கேட்டார்...

ஓ, நீ தானா இரத்தினம்... ரெண்டு கோழிவோல அட வைச்சிருந்தேன், எதுல பேன் புடிச்சுதோ தெரியல, வூடெல்லாம் பேனா இருக்கு .. மேலெல்லாம் ஊரி தொலைக்குதுக, அசந்து தூங்கி ரெண்டு நாளாச்சி ...

சாய்ப்பு தான் பூச்சி மருந்து விக்கிறானே, வாங்கி வந்து போட்டியா?

எல்லா எழவையும் போட்டு பார்த்தாச்சி, அதங்குவனாங்குது? இனி கூட்ட இடிக்கிறது தான்யா மிச்சம்.. வம்பரங்கொத்து நாலு போட்டா கொஞ்சம் ,மட்டுப்படும்னு என் பொண்டாட்டி சொன்னா, சரி அதையும் போட்டு பார்த்துடலாமுன்னு வந்தேன்.. இங்க என்னடான்னா மரம் நீண்டு வளந்து நிக்குதுக...

நீ ஒரு மனுசன்யா , நாலைஞ்சி நாளுல காணாப் போற பேனுங்களுக்கு போயி கூட்டை இடிக்கனுங்கற.. வம்பரங்கொத்து போடு எல்லாம் சரியாயிரும்...

அதான் பாக்குறேன் இரத்தினம், பாலை பாலையா கத்தாழ நடுப்புற வைச்சி பொட்ட மண்ணால செஞ்ச கூடு ...

அதான் சொல்றேன் கனகசபை, ஆத்தரத்துல இடிச்சிட்டின்னா அதே மாதிரி கட்டமுடியுமா? ரெண்டு நாளைக்கு பொறு ... எல்லாம் சரியாயிரும்....
சரி ரெண்டு கோழின்னு சொன்னியே எத்தனை முட்டை வைச்ச, எத்தன பொரிஞ்சது? எத்தன கூமுட்ட ..?

ஒரு கோழிக்கு எட்டு கணக்கா, பதினாறு வைச்சேன் ... பன்னெண்டு பொரிஞ்சிடுச்சி, நாலு வெளங்காம போச்சி ..

வைச்ச எட்டையும் சம்முன்னு பொரிச்சிட்டு வூட்டையே சுத்தி வருது செவத்தது... இந்த கறுத்த சனியன் தான் வைச்சதுல நால பொரிச்சது, மீதி நாலும் கூ முட்டையா போனதுமில்லாம, பேன வேற கொடுத்து உசுர வாங்குது...

அது என்னய்யா பண்ணும், கோழியே வாங்கியாந்த மாதிரி சொல்றே, எல்லாம் படைப்பு தான் ... சலிச்சிக்காத வளக்குற வழிய பாரு.. கறிக்குன்னு வளக்குற கோழிவோ நோய பரப்புதாம்.. நாட்டுக்கோழிக்கு மவுசு கூடுது, கூடவே வெலையும்...

ஆமாய்யா, நானும் கேள்வி பட்டேன்... ஏன்யா இரத்தினம் முன்னல்லாம் கோழி கொழம்பு வைக்குற வீட்ட ரெண்டு தெரு தாண்டி நின்னாலும் கண்டுபிடிச்சுரலாம், இப்பல்லாம் சட்டிய மோந்து பாத்து கூட கண்டு பிடிக்க முடிலையே ...?

ஆமாய்யா கனகசபை, நாட்டுக்கோழி மணக்குற மணம் வேற எதுல இருக்கு சொல்லு ...? இருந்தும் அப்பல்லாம் மசாலா எல்லாம் கையில அரைச்சி போட்டாங்க ரெண்டு மூணு தெரு தாண்டியும் மணத்துச்சி ...
கடையில வாங்கி போடுற தூளுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்குதுல்ல ...

அதுவும் நெசந்தான், இரத்தினம் ... சரி சரி பேச்சி எங்க ஆரம்பிச்சி எங்கேயோ போய்டுச்சி .. கொஞ்சம் சோலி இருக்கு நாம பொறவு சாவகாசமா பேசலாம்யா ...

சரிய்யா கனகசப போயிட்டு வா ... நான் சொன்னதையும் மனசுல வைச்சுக்கோ ..  நாட்டு கோழிவோளுக்கு மவுசும், மதுப்பும் கூடிக்கிட்டே வருது .. அதனால பாத்து முடிவெடு ... 

சரிய்யா இரத்தினம் ,...
     


Post Comment

ஏப்ரல் 16, 2014

நினைவுகள் ...


னிதர்களின் நெஞ்சுக்கூட்டுக்குள் உறங்கி கொண்டிருக்கும் நினைவுகளுக்கு எண்ணிக்கை என்ற கடிவாளம் என்பதே கிடையாது. ஏக்கம், ஏமாற்றம், கனவு, கண்ணீர், குரோதம், இன்பம் இது போன்ற நிறைய இத்யாதிகளினால் சூழப்பட்டு எப்பொழுதுமே நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஒரு வேடிக்கை+ஆச்சர்யம் கலந்த ஒரு படைப்பு தான் மகத்தான இந்த மனிதப் படைப்பு. நினைவுகள் எனும் தூண்டிலில் விரும்பி அகப்பட்டு பின் விடுபட்டுக்கொள்வதை என் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளேன். 

குப்பையை கிளறி இரை தின்னும் கோழிகள் போல, நினைவுகளை கிளறி கிளறியே என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். வெறும் இரவுகளாக கழிய வேண்டியதை கவித்துவமாகவும், கவித்துவமாக கழிய வேண்டிய இரவுகளை கவலைகளாக்கவும் இந்த நினைவுகளால் மட்டுமே சாத்தியம். மாலை நேர மழைச்சாரல் போன்றது தான் நினைவுகள். சிலர் அதை இரசித்து மகிழ்வர், சிலர் எரிச்சலில் எரிந்து விழுவார்கள். சாரல் என்பது என்னவோ ஒன்று தான், அதை எடுத்துக்கொள்ளும் மன நிலைகள் தான் மாறுபட்டு நிற்கின்றன. எனக்கு எப்போதுமே மழைச்சாரல்(நினைவுகள்) மகிழ்ச்சியை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகவே இருக்கிறது...

மனிதர்களுக்கு முரட்டு குணமொன்று உண்டு, என்னவெனில் சரியான நேரத்தில் மிகச்சரியாக எந்தவொரு செயலையும் செய்ய மாட்டார்கள், காலம் கடத்தியே பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி தவறிய செய்கைகள் நினைவுகளாய் சேர்ந்து விடுகின்றன. நினைவுகள் ஒன்றும் உருவாக்கப் படுவதில்லை, நம் செய்கைகளின் , உணர்வுகளின்  எச்சங்கள் தான் நினைவுகளாக உருமாறி, பின் உயிர் பிசைவது. 

உறக்கம் தொலைந்த பின்னிரவுகளில் நினைவுகளை அசை போடுவது அமிழ்த சுவை, இருந்தும் பல பின்னிரவு தூக்கங்களை தின்று செமித்திருக்கின்றன இந்த நினைவுகள் எனும் அரக்கன். காலங்களும், சூழலும் தான் நிர்ணயிக்கின்றன அரக்கனையும், அமிழ்தையும்! கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பது அலாதியானது, ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் நிறைய வலிகளின் கறுப்பு ரேகைகள் படந்திருக்கும். வெற்றிக்குப் பிந்திய நினைவுகள் தோல்வியின் இரணங்களை சொல்லிக்கொண்டே இருப்பதினால் வெற்றியின் முக்கியத்துவம் மனதை விட்டு அகலாது.

நினைவுகளற்றவன் மனிதனாக இருக்க முடியாது. பார்ப்பதற்கு இலகுவாக தெரியும் சிறிய நிகழ்வுகள் கூட பெருஞ்சுமை கொண்டு அழுத்தும் நினைவுகளாக மாறிய கதையும் உண்டு. என்னதான் வேகங்கொண்ட மட்டும் ஓடினாலும் பிற்காலத்தில் அசைபோட சில அழகிய நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் ....


Post Comment

ஏப்ரல் 09, 2014

சோறு ...


சோறு கண்ட இடம் சொர்க்கமென்று இருந்திடாதே, என்ற வாசகம் எத்தனை முறை என் காதுகளை கற்பழித்திருக்கும் என்று கணக்கில்லை, எங்கப் பக்கம் இந்த சொலவடையை சொல்லாத வாயுமில்லை. எனக்கு சோறு புடிக்காது என்று சொல்லும் அதிசய மனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை, ஒருவேளை உங்களில் யாரேனும் கேட்டாலோ, பார்த்தாலோ தகவலுப்பனுங்கள் எனக்கு...

உணவின்றி உயிர் வாழ்தல் கூடுமா? என்றால் முடியாது என்பது தான் என்னோட தீர்க்கமான பதிலாக இருக்கும், ஏன் மூர்க்கமான பதில்னு கூட சொல்லலாம். இந்த உணவுக்காக நம்மாளுங்க படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது. அது நம்மோட பிரச்சினை இல்லையென்பதால் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு நம்ம பிரச்சினைக்கு வருவோம்.

இந்த சோற்றுக்காக பல போர்கள் நடந்திருப்பதாக பண்டைய இலக்கியத்தில் படித்ததாக நினைவு, பல சோற்று மன்னர்கள் வாழ்ந்த வீரம் செறிந்த மண்ணின் மைந்தர்களைப் பார்த்து வெறும் பிரியாணிக்காக சோரம் போய்விட்டார்கள் என்று சொல்லும் மடையர்களை? கண்டு "நகைக்க"த் தான் தோன்றுகிறது.
இவர்களை தூற்றி விட்டு பிரியாணியை சுவைக்கப் போகும் அந்த நாக்குகளைப் பற்றி நமக்கேன் கவலை?

நானொரு சோறு விரும்பி என்று சொல்லிக் கொள்வதில் எந்த வெட்கமும் எனக்கு கிடையாது. உண்பது ஒன்றும் எளிதான விசயமல்ல, அது ஒரு "பெருங்கலை" என்று சொல்ல முடியாது என்றாலும் "கலை" என்று சொல்லுவதில் தவறிருக்காது. 

நாகரீகம் கருதி நளினமாய் சாப்பிடுவார்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் செய்யும் சேட்டைகள் இருக்கே அய்யயோ ரண கொடூரம். உலக நாடுகள் கிடைத்ததை தின்றுவிட்டு நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளைகளில், நம்ம ஆட்களோ விதவிதமான உணவு பதார்த்தங்களை கண்டு பிடித்து உண்டு களித்தனர் என்பது மிக முக்கியமான வரலாற்று பதிவு.

சில நேரங்களில் ஏற்படும் கோபங்களை நான் சோற்றின் மீது தான் காட்டுவேன், எல்லோரும் தூக்கி விசிறினால், நான் வயிறு முட்ட தின்பேன். இப்படித்தான் என் கோபங்களை தணித்துக் கொள்வேன். 

வயிறு ஒரு அதிசய உறுப்பு. நாக்கும், வயிறும் இல்லையெனில் உலகில் சண்டையே நடை பெறாது. ஆனால் அவ்வளவு எளிதில் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாது. வெகு சிலரால் முடிந்த ஒன்று. ஆனால் அவர்களை காண்கையில் மண்டையில் சட்டென்று தோன்றும் , இவர்களுக்கு சுவை உணர் சுரப்பிகள் என்னவாயிருக்கும் என்று தான்.

 சாப்பிட தெரியாதவர்கள் மாதிரி நடித்து எச்சில் விழுங்குவதை விட, உண்டு உயிர் வாழலாம் என்பது என் கொள்கை.....


Post Comment

ஏப்ரல் 07, 2014

புணர்விதியில் ...




அடர் "கறு" மங்கையவளின் 
இதழ் சேர 
கற்சிலை போலாகி
மீள்கிறேன் 
மின்னல் மணித்துளிகளில்.

அகம் கொதிக்க,
புறம் குளிர, 
புணர்விதியில் 
இது எவ்வகை?

அவள் மேனியெங்கும் 
என்னைப் பூசிக்கொள்ள 
இவ்விரவு 
விடியாமலிருக்கட்டும்! 

Post Comment