அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி நேர்கையில் இயற்கையாகவே மனம் சலிப்படைந்து விடுவதை தவிர்க்க முடிவதில்லை. அவர்களின் பேச்சும், செய்கைகளும் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருக்கும். நகர்ப்புறங்களை விட கிராம வாசிகள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அதிகமாக இருக்கும். தான் பெரிய கடவுளென்றும், நம்மை நாடி வருபவர்களை ஏதோ தூசிக்கு ஒப்பாகவே கருதுகின்றனர்.
நான் நேரில் கண்ட ஒரு சில நிகழ்வுகளை இங்கு பட்டியலிடுகிறேன். ஒரு சான்றிதழ் வாங்க எங்க ஏரியா வருவாய் ஆய்வாளரை சந்திக்க சென்றேன். அப்போது ஒரு பாமர விவசாயியும் வந்திருந்தார், ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டு அது நொட்டை, இது நொட்டை என்று என்னை அலைக்கழித்தார் அந்த அதிகாரி... எனக்கு முன் வந்திருந்த பாமரரிடம் சில கேள்விக்கணைகளை தொடுத்தது அந்த கரு நாக்கு .. இதில் இணைத்திருக்கும் தாளுடன் ஏன் பிறப்பு சான்றிதழ் இணைக்கவில்லை, அந்த ஆள் இவர்களுக்குத்தான் பிறந்தான் என்பதை நான் எப்படி நம்புவது... படித்த நாக்கு தான் இப்படி ஒரு மனிதமற்ற கேலியும் கிண்டலையும் ஒரு சேர தொடுக்க பாவம் அவர் அப்படியே உருக்குலைந்து நின்றார். அந்த அரசாங்க அவலத்தின் வாயிலிருந்து உதிரும் சில எச்சில்துளிக்காகவே காத்திருக்கும் நாலைந்து அல்லக்கைகள் வாய் கிழிய சிரித்தது தான் வேதனையின் உச்சம். எனக்கு பின் சில பெண்களும் வந்து காத்திருந்தனர். வெளியே வருகையில் இதுவரைக்கும் நாலாயிரம் வாங்கி இருக்கான், இன்னும் வேலை முடிச்சு கொடுக்க மாட்டேங்குறான் என்று நொந்த படியே வெளியேறினார்...
இன்னொரு முறை ஒரு பட்டா பெயர் மாறுதல் விசயமாக வட்டாட்சியரை சந்திக்க செல்லுகையில், அங்கிருந்த ஒரு அதிகாரி ஒரு கர்ப்பிணியிடம் பேசிக்கொண்டிருப்பதை காண நேர்ந்தது. நீங்க இந்த விசயத்துக்காக இவ்வளவு தூரம் வரணுமா? வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அனுப்புங்க போதும், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன். எங்கெங்கு கையெழுத்து போடணுமோ அதை இப்பவே போட்டுட்டு நீங்க கெளம்புங்க, உங்களுக்கு பதிலாக யாரேனும் வந்தால், தன் பெயரை சொல்லி என்னை சந்திக்க சொல்லுங்க , நான் முடித்து அனுப்புகிறேன் என்றார். அந்த பெண்மணியும் முகம் மலர்ந்து விடை பெற்று சென்றார். எத்தனை முரண்பாடு மேலே உள்ள நிகழ்வுக்கும், இதற்கும்!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அங்கு அசிங்கத்தை கக்கிய அந்த வாய்க்கு எப்படியும் ஐம்பது இருக்கும், மனிதத்தோடு பேசிய இந்த வாய் முப்பதைத்தான் தொட்டிருக்கும். ஐம்பதுக்கு இருக்கவேண்டிய பொறுமையும், பொறுப்பும் முப்பதுக்கு இருக்கிறது. யாருக்காக சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்து பணத்தை நுகரும் அந்த மூக்குக்கு, பணம் மலத்தில் இருந்தாலும் சங்கடப்படுவதில்லை போலும்.
"தான் என்ற ஆணவம் அவர்களை அழிக்காதவரை, அவர்களாய் திருந்தப் போவதில்லை!"
Tweet |