புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 19, 2020

பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்


ஒரு மருத்துவ மாணவரின் தற்கொலையிலிருந்து நீளும் இந்த நாவல் இச்சமூகத்தின் இடுக்களில் உள்ள அத்தனை நுழைவுகளிலும் உள் நுழைந்து பட்டவர்த்தனப் படுத்தியிருக்கிறது என்றே பார்க்கிறேன். குறிப்பாக மருத்துவத்துறையின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதும், அங்கு நிலவும் கீழ்மை மனங்கொண்ட மனிதர்கள் மீதும், மேன்மையானவர்கள் என்று நம்பப்படுவர்கள் மீதும் நிறைய கேள்விகளைக் கேட்டுள்ளது. முன்னுரையில் அண்ணன் சரணன் சந்திரன் சொல்லியிருந்தது போன்று  மயிலன், அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதினால் படிநிலைகளைக் கடந்து எழுத முடிந்திருக்கிறது. அவரால் இன்னும் விலாவாரியாக எழுத முடியும், அதைத் தொட்டிருந்தால் இந்த நாவலின் மையச்சரடு வேறு திசையை நோக்கி நகர்ந்திருக்கும் இல்லையெனில் வேறொரு சிக்கலினுள் ஆட்பட்டிருக்கக் கூடும். அண்ணாச்சி மயிலனிடம் நான் எப்போதும் வியந்து பார்ப்பது என்னவெனில் அவரிடம் எழுத்துச் சிக்கனம் இருக்கும், எதை எந்த அளவிற்கு சொல்ல வேண்டும் என்கிற கவனமிருக்கும், அதைத் தாண்டி நீட்டி முழக்க மாட்டார். இதை இவர் எழுதத் துவங்கியதிலிருந்து இன்றுவரை காண்கிறேன். எப்படி ஒரு சிகிச்சைக்கு ஒழுங்குமுறை எவ்வளவு அவசியமோ, அந்த ஒழுங்கு நேர்த்தியை எழுத்திலும் கடைப்பிடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். (மருத்துவராக இருப்பதினால் இந்த லாவகம் அவருக்கு சுலபமாக கைக்கூடி வந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பு)

மருத்துவம் பயின்று, நமது சமூகத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிகரமான மருத்துவர் என்று பெயரெடுப்பது இங்கு அவ்வளவு சுலபமல்ல... ஒரேயொரு சிகிச்சை தோல்வி போதும், அம்மருத்துவரின் முந்தைய வெற்றிகளனைத்தும் புறந்தள்ளப்பட்டு அம்மருத்துவரின் தகுதியின் மீது கபடி ஆடக்கூடிய ஆபத்தான சூழலில் இருக்கிறோம். ஒரு இருதய அறுவை சிகிச்சை அரங்கினுள் எவ்வளவு புரளிகளும், குரோதமும் பேசப்பட்டிருக்கின்றன என்கிற நேரடி அனுபவங்கள் எனக்கு உண்டு. சென்னையின் இரண்டு மிகப்பெரிய மருத்துவமனைகளில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன், அங்குள்ள அவநம்பிக்கைகள், ஒருவரது முன்னேற்றத்தின் மீது எறியப்படும் காழ்ப்புணர்வுகள், அணியாக வெளியே தெரிந்தாலும் அதற்குள் நிலவும் குழு/இன அரசியல், செவிலியர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள், ஊழியர்கள் அளந்துவிடும் பொய் மூட்டைகள்  இவைகளனைத்தையும் ஒரு நாவலில் பதிவு செய்ய முடியுமா என்றால், ஆம் அது தான் பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம்.

ஒருவரது உணர்ச்சியின் வெளிப்பாட்டை வைத்துத் தான் நல்லவன்/கெட்டவன் என்கிற முகமூடியை தரித்துவிட முயல்கின்ற கூட்டத்திற்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதித் தமிழனிடம் இருந்து எவ்வளவோ விலகி வந்திருந்தாலும் இந்த புறம் பேசும் விசயத்தில் இன்னும் அவர்களோடு ஒன்றுபட்டு முன்பை விட தற்போது அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோமோ? என்கிற எண்ணத்தையும் இந்த நாவலில் பேசப்பட்டிருக்கிறது, அதையும் ஒரு சின்ன பத்தியில் நறுக்கென்று சொன்ன விதம் தான் மயிலனின் எழுத்துச் சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டு.

மானுட முன்னேற்றத்தின் அடிப்படை விதியான கல்வியில், அதுவும் உயிர்க் காக்கும் உயரிய படிப்பான மருத்துவப் படிப்பில் சேரும் ஒரு சராசரி மாணவனின் மனச்சிதைவையும், அதிலிருந்து தன்னை தற்காத்து, மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் போராட்ட குணத்தினையும், சக மாணவர்களே அருகில் நின்று எள்ளி நகையாடுகையில் நொறுங்கி விடாமலும், தலைமை மருத்துவர், பயிற்சி மருத்துவ மாணவர்களின் மீதுத் தொடுக்கும் மன ரீதியான தாக்குதல்களையும், ஒடுக்குமுறைகளையும், நிராகரிப்புகளையும்  அதுவெழுப்பும் அகச்சிதைவுகளையும் எல்லாம் கடந்து எவ்வாறு ஒருவர் தேர்ச்சிப் பெற்று வருகிறார் என்பதினை  இந்தப்புத்தகத்தில் பதிவு செய்த அளவிற்கு தமிழில் வேறெந்தப் புத்தகத்திலும் நான் வாசித்ததே இல்லை. அதற்காகவே மயிலனுக்கு தனிக் கைக்குலுக்கல்கள்.

தானே எல்லோரையும் விட மேலானவன், தன் மீதுதான் ஒட்டுமொத்த வெளிச்சப் புள்ளிகளும் பாயவேண்டும், தன்னை எவரும் அவ்வளவு எளிதில் தொட்டுவிடக் கூடாது, மலையின் உச்சியில் நின்றாலும் கூட நிறைவு பெறாமல் இன்னும் அண்ணாந்து பார்க்கும் வேட்கை கொண்ட,  தான்தான் எல்லாவற்றையும் விட மேன்மையானவன் என்கிற அகச்சிக்கலுக்குள் இருக்கும் ஒரு மருத்துவ மாணவரோடு, எதிர்நிலையில் நின்று மரவுச்சிக்குக்கூட அந்த நேரத்தில் நிறைவு கொள்ளக்கூடிய  அடிப்படை புரிதலோடு இயல்புவாத வாழ்க்கையை ஓர் நேர்க்கோட்டில் வாழ நினைக்கும் மற்றொரு மருத்துவ மாணவர் – இவ்விருவர்களின் வாழ்வியல் அணுகுமுறையை, வாழ்வின் மீதான, உறவுகளின் மீதான நம்பிக்கைகளையும், அவ நம்பிக்கைகளையும், அவர்கள் சார்ந்த பணியிடச் சூழல்களையும், நட்பு என்கிற கேடயத்திற்குள் நிகழும் களேபரங்களை வாசகர்களுக்கு பிசிறில்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் மயிலன்.

ஒருத்தரை நிலைக் கொள்ளச் செய்வதும், வீழ்த்துவதும் அந்தந்த இடங்களின் சூழலும், சந்தர்ப்பமும் தான். கடிவாளம் போட்டுக்கொண்டு ஓடும் மனிதர்கள் ஒருக்கட்டத்தில் யாரோ ஒருவர் விரித்த கண்ணியில் சிக்குண்டு சிதைந்து போதலும், இத்தனை நாள் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் சிறு பொழுதில் நிர்மூலமாவது தெரிந்தும் செய்வதறியாமல் கையறு நிலையில் இருப்பதற்கான காரணம் புரிகையில் வேறொரு முடிவைத் தேடிக் கொள்கிறார்கள். தன்னுடைய மகுடத்தின் ஒவ்வொரு கல்லாக உருவி, தன்னை வீழ்த்துவதை யார்தான் அதை விரும்பி ரசித்துக் கொண்டிருப்பார்கள். அதிகாரத்தினால் வரையப்பட்ட ஒழுங்கற்ற வட்டத்தினை சீர் செய்யக் கூட விரும்பாத, ஏன் அப்படியொரு வட்டமிருப்பதைக் கூட கவனிக்காத ஒருத்தனை வெகு இயல்பாக சிதைத்து விட்டன சுற்றி இருந்த சூழ்ச்சிகள். அப்படியொரு அபாயகரமான இடத்தைத் தாண்டி வெளிவந்து தான் விரும்பிய மருத்துவச் சேவையை வழங்கிக் கொண்டிருப்போருக்கு நன்றி செலுத்துகிறேன்.

மனிதனுக்கு அடிப்படையில் ஒரு வேட்டை குணமுண்டு என்று எங்கையோ படித்த நினைவு, துறைத்தலைவர் மயில்சாமி, மருத்துவ நண்பரான சாதாசிவம், தாமோதரன், செவிலிகளான நாஸியா, லீமா, ஊழியர் மணி இவர்கள் எல்லோரும் வஞ்சம் தீர்த்தல் என்கிற புள்ளியில் இணைகிறார்கள். பிராபகரனின் வேட்டையில் வெளிப்படையாகவோ, உள்ளுக்குள்ளோ மகிழ்ந்து திளைக்கிறார்கள். எந்த முன்னேறிய சமூகத்திற்கும் இந்த நோயிலிருந்து விடுதலை கிடையாது என்றே நினைக்கிறேன்.

நாவலின் துவக்கமான பீடிகையும், பக்கங்கள்  192-200 வரை மயில்சாமியை தோலுரித்தளையும், பக்கங்கள் 201-208 வரை பெயரிப்படாத “நான்” என்கிற பாத்திரத்தின் தராசு நிறுவையையும், ஒவ்வொரு கதாப்பாத்திரம் பேசுவதை அதை அப்படியே நம்பிடாமல் அதனை பகுப்பாய்ந்து தேவையானவற்றைக் கொண்டு சித்திரம் வரைந்ததை உச்சமென கருதுகிறேன்.

திரும்ப, திரும்ப ஒரே தற்கொலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே என்கிற அயர்ச்சி ஏற்படுகையில், இதில் ஏன் தான் பிராபகர் தன்னை மரணித்துக் கொண்டார் என்கிற தேடுதல் சுவாரசியத்தை கொடுத்து வாசகனை இழுத்துச் செல்கிறது.  ஸ்மார்ட் போன் மீது பற்றிய தனது அதிருப்தியை அங்காங்கே பதிவு செய்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது, அதற்கேற்றார் போல் தானே சீரழிவுகளை கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மருத்துவத்துறைச் சார்ந்து, அதன் தேர்வுமுறைகளைப் பற்றியும், அங்குள்ள உள்ளரசியல், மூத்த அதிகாரிகளின் அதிகாரத்திமிர் பற்றியும், மாணவர்களின் குண நலன்கள் பற்றியும், தேர்ச்சி பெற்றவர்கள் பற்றியும், விரும்பியத் துறை கிடைக்காத மாணவர்களின் மனச் சிதைவுகள் பற்றியும் இவ்வளவு துல்லியமாக இதுவரை தமிழில் இப்படியொரு நூல் வந்திருக்காது அதற்காகவே மயிலனுக்கு ஆரத் தழுவலும், வணக்கங்களும்.

நாவலின் ஓரிடத்தில் உதவிப் பேராசியர் ஒருவர் மணி என்கிற கடைநிலை ஊழியர் நன்கு வேலை செய்பவதாகவும், மணி இருந்துவிட்டால் போதும் எனக்கு அறுவை சிகிச்சைக்கு உட்படும் நோயாளியை தயார் செய்து கொடுத்துவிடுவார், அதற்காக பெண் நோயாளிகளுக்கு மொட்டை அடிக்கையில் அந்த முடியினை எடுத்துக் கொண்டு போய் சவுரி முடிக்கடையில் மணி விற்பதை நான் கண்டு கொள்வதில்லை என்று சற்று பெருமையாக கூறுகையில்,விற்காமல் அந்த மயிரை வைத்துக் கொண்டு மணி, என்னச் செய்யக் கூடும் என்று எனக்கு குழப்பமாக இருந்தது என்று முடித்திருப்பார், அது தான் மயிலன் அண்ணாச்சி ... அந்த இழையோடும் நகைச்சுவையோடு விரைவில் இன்னொரு தொகுப்பை எதிர் நோக்குகிறேன் ...     

பேரன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு
அரியலூர் மாவட்டம் 

https://uyirmmaibooks.com/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f/

Post Comment