புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 30, 2014

அவள் பெயர் காதலி ....



மாலை நேரத்தின் சோம்பலை விரட்ட அலுவலகத்திலிருந்து சற்று தள்ளி இருக்கும் அந்த தேனீர் கடைக்கு செல்வது என் வழக்கம். தினமும் செல்வதில்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது அந்தக் கடையில்  தேநீரை பருகும் வழக்கத்தை வைத்திருந்தேன். அப்படி சென்று திரும்புகையில்  இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அவளை பார்த்திருக்கிறேன், என்னை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்திருந்தேன் அதெல்லாம் பொய்யென்றாள் பின்னர் ஒரு மாலை நேர அலைபேசி உரையாடலில்! அவள் என் வாழ்க்கையில் வந்தது இன்னும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பறிகொடுப்பதில் சுகமென்றால் அது காதலில் மட்டுமே சாத்தியம்! 

மற்றவைகளை பற்றி சொல்லுமுன், அவளைப் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்! கண்டதும் ஈர்க்கும் அளவிற்கு அவளிடம் அழகில்லை, முன் ஏறிய நெற்றி அதில் சின்னதாய் இரண்டு வண்ணங்களில் பொட்டு, பின்னாமல் தொங்குமுடி, அதில் தொங்கும் கொஞ்சம் மல்லி, சிரிக்கையில் பாதி தெரியும் மேல்வரிசை தெத்துப் பல், வலது கரத்தில் கட்டியிருக்கும் சிவப்பும் மஞ்சளும் கலந்த கயிறொன்று இப்படி கவனித்து பார்த்தால் அவளும் அழகிதான்! உருவத்தைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் சமவிகித சதை திரட்சி கொண்ட தேவதையவள்.

ஒரு சனிக்கிழமை மாலைவேளையில் பலநாள்  தயக்கங்களை உடைத்தெறிந்து ஒருவழியாக , "உன் மொபைல் நம்பர் சொல்லு" ... இதுதான் அவளிடம் நான் பேசிய முதல் பேச்சு. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, மிரட்சியாக Nine double eight four one ....என்று அவள் சொல்ல சொல்ல எனது மொபைலில் டைப்பிக் கொண்டேன். நான் போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மிக அவசரமாக நகர்ந்தேன். சாலையைக்  கடந்து அவள் எண்ணுக்கு அழைக்க, துண்டித்து விட்டு அவளே அழைத்தாள்! சில நொடிகள் நான் மௌனிக்க, அவளே பேசத் துவங்கினாள்! பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்! அவளின் ஆசைகள், விருப்பங்கள் அனைத்தையும் சொன்னாள்!

தன் நண்பர்களிடம் மறைக்கும் சில விசயங்களை கூட பெண்ணிடம் சுலபத்தில் சொல்லிவிட முடிகிறது! அன்பும், அக்கறையும் காட்டுவது பெண்களின் பலமென்றால், அதற்காக ஏங்குவது ஆண்களின் பலவீனம்! அம்மா சொன்ன கரிசனமான கட்டளைகளைத்தான் அவளும் சொன்னாள் , அம்மா சொன்னதை காற்றில் பறக்கவிட்டவன், அவள் சொன்னதும் உடனே செய்ய துவங்கிவிட்டேன்... வார்த்தைகள் ஒன்று தான் வாய்ஸ் தான் வேறு! 

துவங்கியது அவளாக இருந்தாலும், சண்டைக்கு சமாதானம் நான் தான் பேசணும், எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும் காதலித்தால் மண்டியிட்டு தான் ஆகவேண்டும் என்பது உலகநியதி போல. ஒரு நள்ளிரவில் பேசிக்கொண்டிருக்கையில், நீ நீயாக இரு, உன் செய்கைகளை நீயே சுய பரிசோதனை பண்ணு, அப்போதுதான் உன் தவறுகள் உனக்கே தெரியும், நான் சொன்னால் உனக்கு கோவம் வரும் என்றொரு சொற்பொழிவை ஆற்றினாள்! உண்மையில் அவளுக்குப் பிந்திய வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் தெரிந்தது!

அவளிடம் சொல்லிவிட்டு தான் ஊருக்கு கிளம்பினேன், நான் கோயம்பேட்டை அடையும் தருவாயில் அவளிடமிருந்து போன், என்னையும் உன்னுடன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போ என்று சொன்னதும், இளம் போதையிலிருந்த எனக்கு உள்ளூற உதற ஆரம்பித்துவிட்டது. பேருந்து நிலையம் வந்து மெல்ல சமாதானப் படுத்துகையில், சிரித்துக்கொண்டே, "யே .. லூஸு , நான் அத்தை வீட்டுக்குப் போவதற்காக கிளம்பி வந்தேன், சும்மா விளையாட்டுக்காக சொன்னா ,, இந்த பயம் பயப்படுறே" ... என்று சொல்லிவிட்டு மேலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்! (போதைக்கு அப்புறம் ஒரு நாள் கச்சேரி நடத்தினாள் என்பது அது வேறு கதை) பஸ்க்கு நேரம் இருந்தா, பக்கம் தானே , என்னை அத்தை வீடு வரை வந்து விட்டுட்டு போ என்றாள்! நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்கும் அந்த வேளையில் அவளுடன் நெருங்கி அமர்ந்து இருப்பது ஒரு வித கிளர்ச்சியை உண்டு பண்ணி கொண்டிருக்க, சட்டென இழுத்து இதழ் கவ்வினாள் (அவளுக்கும் உண்டு பண்ணியிருக்கும் போல), முதல் முத்தச்சுவை. மதுவை விட மாது தான் சிறந்தது!

பின்பொரு நாள் சிறிய மனக்கசப்பு பெரிய விரிசலை ஏற்படுத்த, இரண்டு மூன்று முறை சமாதானம் பண்ணியும் அவள் சாந்தமடையவில்லை! ப்ரியம் இருக்கையில் பெரிய விஷயம் கூட சின்னதாய் தெரிகிறது, பிரிவு கூடுகையில் சின்ன சின்ன விஷயம் கூட பூதகரமாகிவிடுகிறது என்னவோ உண்மை தான்! உச்சக் கோபத்தில் அவள் கத்த, நிதானமிழந்து அந்த வார்த்தையை சொல்லிவிட்டேன்! பாவம் துடித்துப் போனாள்! கொட்டிய பொருட்களை அள்ளலாம், ஆனால் சொற்களை? எத்தனையோ சமாதானம் எப்படியெல்லாம் செய்தாலும் தீர்க்கமாய் இருந்தாள்! இருந்தும் விட்டாள்!

சென்றவாரம் எதேச்சையாக அவளை காண்கையில், வேறு ஒருத்தனுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தாள், கழுத்தில் புது தாலியுடன்!

அரளி செடியா வெட்டி வீசிட, ஆலமரமாய் இருப்பவளை எப்படி? இனியொருத்தி வந்தாலும், அவள்  இடம் அவளுக்கு மட்டுமே!......               

 arasan, Ariyalur, raja, Sendurai, U N Kudikkadu, 

Post Comment

ஜூலை 24, 2014

பிள்ளைத்தாச்சி...


தேநீர்க்கடைக்காரன் 
வீசிய 
இரண்டு ரொட்டித் துண்டுகளை,
பெருத்த வயிறை 
அதக்கி அதக்கியபடி வந்து 
தின்றுகொண்டிருக்கிறது 
கர்ப்பிணி நாயொன்று!

அதுவரை அமைதியாயிருந்தவள்,
அருகில் சென்று 
தயங்கி கை நீட்டுகிறாள்,
தனித்தமிழில் வசை பாடி 
விரட்டுகிறான்!

சிரித்துக் கொண்டே, 
முடியை கோதியபடி 
மீண்டும் 
அதே இடத்தில் சென்று 
அமர்ந்து கொள்கிறாள் 
மனம் பிறழ்ந்த 
"பிள்ளைத்தாச்சி"!

  அரசன், கவிதை, சமூகம், Ariyalur, arasan, raja, Sendurai, U N Kudikkadu, 

Post Comment

ஜூலை 14, 2014

இது போதும் மன்மதா!!!



அழுந்தப் பதிந்த நகக் கீறலில் 
குருதி கசியக் காண்கிறேன்!

திட்டமிடாத்  தீண்டலில் 
திகைத்து திளைக்கிறேன்!

சூரியத் துண்டுகளை 
நிலவெரிக்கும் நேரமிது!

தேகம் முழுதும் 
அவன் முரட்டு ரேகைகள் 
நிரம்பியிருக்கிறது!

அவனது வியர்வையை, 
கண்ணீரால் துடைக்கிறேன்!

விழுதுகளாய் செலுத்தியவனிடம் 
வீழ்ந்து போனேன்!

இதழ்களில் பனித்துளி 
விரும்பிச் சுமக்கிறேன்!

இது போதும் மன்மதா,
இனியோர் சென்மம் 
வேண்டாம் எனக்கு!!!

Post Comment

ஜூலை 10, 2014

எரியுலை நீர்தான் என்னிலை...




னம் படபடக்கிறது,
கணக்கு முடிவாண்டு என்பதால் 
அலுவலகத்தில் 
இனிவரும் நாட்கள் 
எரியுலை நீர்தான் என்னிலை,
கூடவே இந்த தொல்லையும்.

கோபத்தில் சொன்னாலும்  
வரமால் போனால்  
வாழ்வே பெருந்தொல்லை!

அம்மா இல்லா சுமையை 
இந்த நாட்களின் இரவுகள் 
உணர்த்திக் கொல்கின்றன!

மாதமொருமுறை 
சிறகொடிந்து, 
சிறகு முளைக்கும் 
விசித்திர 
பெண் பட்டாம்பூச்சி நான்!

நாசி நெறிக்கும் 
புகை வீதிகளைக் கடந்து,
மாநகரப் பேருந்தின் நெரிசலில் 
மார்புடைந்து கீழ் இறங்குகையில் 
நசுங்கிய வேப்பம்பழமாகிறது 
மனசும் - உடலும்!

தேனீர் இடைவேளையில், 
அலுவலக சன்னல் கம்பிகளுக்கு வெளியே 
சிறுமியொருத்தி சில்லாடுவதைக் கண்டு, 
மனம் நசிந்து விரைகிறேன் 
இருக்கையை நோக்கி!

வாழ்க்கை சுகமானதுதான், 
எப்போதும் 
சுவையாய் இருப்பதில்லை!


Post Comment

ஜூலை 07, 2014

மானஸ்தன் வீடு ...




சட்டென்று கொட்ட
துவங்கிய கோடை மழைக்கு
ஒதுங்கினேன்,
ஊரைத்தள்ளியிருக்கும் 
"அந்த" வீட்டில்!

செம்மண் சுவர் தவிர்த்து
நான்கைந்து மூங்கில் கழிகளும்,
கூடவே மக்கிய தென்ன ஓலைகளும்,
எச்சமாய் நிற்கின்றன
இராசுவின் பெயரைச் சொல்லியபடி!

கள்ளக்காதலினால்,
மனைவியை கொன்று,
அன்றிரவே மகனோடு,
தானும் தூக்கிட்டுக் கொண்டாராம்,
மூன்று வருடத்துக்கு முந்திய 
ஐப்பசி  
அடைமழை இரவொன்றில்!

சமீபமாக பொழுது சாய்ந்தவுடன்  
அரவமற்ற வீட்டினுள் 
மூக்கை துளைக்கும்  மல்லி வாசணை,
கூடி முயங்கும் முனகல்
அடிக்கடி கேட்கமுடிறது!

கள்ளப் பதறுகளுக்கு 
புகலிடமா போச்சு ...
மானஸ்தன் வீடு 
மானங்கெட்டும் போச்சி ...


Post Comment

ஜூலை 02, 2014

பைத்தியப் பேச்சுக்கள் # 2

பத்தை முடித்து பதினொன்று பள்ளியில் சேர்ந்த சமயம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய களைப்பை பதினொன்றில் போக்கி கொண்டிருந்த சமயம். புது வரவு ஒன்றிரண்டை தவிர்த்து மீதி அனைவரும் ஆறிலிருந்து கூட படித்து வரும் நட்புத் தொல்லைகள் தான்! தைரியம் கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் பதின்ம வயது காலம். ஒனபதிலிருந்தே பேண்ட்டுக்கு மாறியிருந்தாலும் பதினொன்று சேர்கையில் கூடவே கொஞ்சம் உடையின் மேல் கவனமும் சேர்ந்து கொண்டது. வழிய வழிய எண்ணெய் தடவி படிய சீவிய பாகவதராய் பள்ளி சென்ற காலம் போய், அயர்ன் பண்ணியும் சின்ன சின்ன சுருக்கங்களுக்கெல்லாம் மனம் பட படக்க துவங்கிய அழகிய காலங்கள் அவை. 

ஒவ்வொரு இடைவேளைக்கும் பக்கத்திலிருக்கும் பாரதி அண்ணன் சலூனுக்கு கால் ஓட்டமெடுக்க துவங்கியது. இரண்டு மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்திருக்கையில் தலை கலைந்துவிடவா போகிறது இருந்தும் கலையாத தலையை கலைத்து சீவினால் தான் மனம் அமைதி கொள்ளும். ஆரமபத்தில் பாரதி அண்ணன் ஒருமாதிரியாக முறைத்தவர்,  போகப் போக, என்னடா தம்பி காலையில வரலை போல என்று கேட்குமளவிற்கு பழகிவிட்டோம்!

செருப்பிலிருந்து, ஓட்டும் சைக்கிள் வரை மாற்றங்களை விரும்பியது மனசு. தன்னை அழகுப் படுத்திக் கொள்வதில் அவ்வளவு பேரார்வம். யார் சொன்னது? பெண்கள் அழகுசாதன விரும்பிகள் என்று? ஆண்களும் தான். என்ன பெண்களுக்கு அழகுப் படுத்திக்கொள்ள பொருட்கள் அதிகம் அதனால் அப்பட்டமாய் தெரிகிறார்கள். ஆண்களுக்கு பாக்கெட் சீப்பும், கர்ச்சிப்பில் ம(டி)றைத்து வைத்திருக்கும் பவுடர் போதும். 

இத்தனை வருடங்களாக "லெனின்" விற்கும் சமோசவையோ, குச்சி ஐஸையோ வாங்கி வாய் பிதுங்க பிதுங்க தின்றுவிட்டு கால் சட்டையில் துடைத்துவிட்டு தேமே என்று போனவன், பேப்பரில் மடித்து சமோசா உண்ணுமளவிற்கு உருமாறியிருக்கும் என்னைக் கண்டு நானே நிறைய முறை வியந்திருக்கிறேன். பத்துகளில் இருந்த ஆசிரியர்களைப் போல் சிடு சிடுவென இல்லாமல் சிரித்துப் பேசும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். படிப்பின் மேல் இருந்த மாயத்திரை கொஞ்சம் விலகியதாய் எண்ணிக் கொண்டேன். படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை மதிய உணவுக்குப் பிந்திய இயற்பியல் வகுப்பில் பாதி உறக்கத்திலும் அறிந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது.

நட்புகளின் அராத்துகளும், மனம் நெருங்கிய தோழியின் சாடைப் பார்வைகளுக்காகவும் விடுப்புகளை தவிர்க்க தொடங்கினேன். எதை எதனுள் கலப்பது என்று தெரியாமல் குழம்பி, பக்கத்துக்கு மேடையில் நின்ற கோமதியிடம் கெஞ்சி கேட்க, அவளோ வேண்டா வெறுப்பாய் சொல்ல, குருட்டடியாய் கலந்து எல்லோருக்கும் மத்தியில் நான் கலந்த அமிலக் கரைசல் தனி நிறத்தில் இருக்க, வேதியியல் ஆசிரியர் செவிட்டில் அறையாத குறையாய் திட்டித் தீர்த்த கதையெல்லாம் இன்னும் அதன் நிறம் மாறாமல் உள்ளுக்குள் உறைந்து கிடக்கிறது.  

வகுப்புக்கு நான்கு பேர் அம்மாஞ்சியாக இருப்பார்கள். யாரிடமும் நெருங்கி வரமாட்டார்கள், பெண்களை விட கூச்ச சுபாவம் உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள். மதிப்பெண்ணுக்காகவே வளர்க்கப்படும் ஆடுகள். அப்படி எங்கள் வகுப்பிலும் இரண்டு பேர் இருந்தனர். இருவரும் எங்களை முரடர்களாகவும், அவர்களை நாங்கள் வெளிதேசத்து ஜந்துக்களாகவும் பார்த்துக் கொள்வோம். படிப்பெல்லாம் முடிந்து தொடர்பற்று போய் சில ஆண்டுகள் கழிந்து அதில் ஒருவனை சந்திக்கையில் அரவை மில்லில் வேலை பார்ப்பதாக சொன்னான். பள்ளியில் நன்றாக படித்தவன் கல்லூரியில் உருமாறி திசைமாறியிருக்கிறான். இன்னொருத்தனை சமீபத்தில் பேஸ்புக்கில் கண்டு பிடித்தேன். வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொன்னவன் மொபைல் நம்பர் வாங்கி அழைத்தான். பேசத்துவங்கிய இரண்டு நிமிடங்களில் அம்மாஞ்சி பிம்பம் உடைந்து அரக்கனாக பேசினான், அம்புட்டு அராத்து. நல்லவேளை என்னைப் பற்றி அவன் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை.....

         
    

Post Comment