புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 20, 2015

சேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...




எந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்று வருத்தம் கொள்கிறது. தங்களது ஆதர்ச வீரனை இனி அந்தந்த விளையாட்டுக்களில் பார்க்க முடியாது என்ற நிலை வருகையில் பலரும் அவ்விளையாட்டுகளின் மீது செலுத்திய அதீத கவனத்தை குறைத்துக் கொள்வதை நேரில் கண்டிருக்கிறேன். 

நான் கிரிக்கெட்டை ரசிக்க துவங்கிய சமயங்களில் கோலோச்சி தங்களது திறமையை வெளிப்படுத்திய கிட்டத்தட்ட எல்லோரும் ஓய்வை அறிவித்து விட்டார்கள், அதில் சச்சின் எனும் சகாப்தத்தை தவிர வேறு எவரையும் நல்ல முறையில் வழியனுப்பி வைக்க தவறி விட்டது (அதிலும் நிறைய அரசியல் இருப்பதாக சொல்லப் படுகிறது) இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம். 

வங்கப் புலி கங்குலியை கிட்டத்தட்ட கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அழுத்தம் கொடுத்து ஓய்வை அறிவிக்க வைத்தார்கள், அவ்வாறே திராவிட்டையும் செய்ய வைத்தார்கள். அணில் கும்ப்ளே மற்றும் திராவிட் போன்ற ஜாம்பவான்களை முழுக்க முழுக்க பக்கா அரசியல் உள்ளீடுகளின் அழுத்தத்தினால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். 

இதில் உச்சம் எனில் லக்ஷ்மண் எனும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ரன் குவிக்கும் எந்திரத்தை முடக்கி வைத்தது தான். ஓய்வை அறிவிக்கச் சொல்லி கட்டாயபடுத்தி இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து போன் போட்டார்கள் என்பது அப்போதைய பரபரப்பு, அதையும் தங்களது அதிகாரத்தினால் நீர்த்துப் போக செய்து விட்டார்கள். 

இடையில் சில வருடங்கள் சீனிவாசனும், தோனியும் செய்த அரசியில் மிகப்பெரியது. அணிக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறேன் என்று சொல்லிக் கொண்டு பல சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய பெருமை திரு. தோனி மற்றும் தேர்வாளர்களுக்கு உண்டு. கவுதம் கம்பீர், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் இப்படி சில பட்டியல் உண்டு. 



வயது கூட கூட, ஆட்டத்தில் திறமை குறைவது இயல்பு தான் அதை மனதில் வைத்து அவ்வீரர்களை ஓரங்கட்டுவது கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் முன்னொரு காலத்தில் அணிக்கு அளித்த பங்களிப்பை மறந்து அவர்களை மிகவும் மோசமாக நடத்தி ரிட்டையர் செய்யத் தூண்டுவது தான் அசிங்கத்திலும் அசிங்கமாக இருக்கிறது. இன்று நாம் செய்யும் அரசியல் நாளைக்கு நமக்கே நேரிடலாம் என்பதை உணர்ந்தால் இந்த அவலங்கள் நடைபெறாது.

சென்ற வாரத்தில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெற்றார், ஒருகாலத்தில் துவக்க ஓவர்களை வீசி எதிரணி மட்டையாளர்களை மிரள வைத்த காட்சிகள் வந்து போயின. இந்தியாவின் சிறந்த துவக்க மட்டையாளர், ரன் குவிக்கும் எந்திரம், இவர் களத்தில் இருக்கும் வரை எதிரணி செய்வதறியாது குழம்பி தவிக்கும், தோற்றாலும் சிரித்த முகத்துடன் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது இப்படி பல்வேறு அடைமொழிகளுக்கு சொந்தக்காரர் சேவாக் இன்று எல்லாத் தரப்பு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். 

அப்பர் கட் மன்னன், களத்தில் நிற்கும் வரை அசராமல் எல்லா பந்துகளையும் விளாசும் வல்லமை கொண்ட மனோதிடம், டெஸ்ட் மேட்ச் என்றால் வெகு தூரம் ஓடும் என் போன்ற ரசிகர்களை அதிரடியாக மட்டையை சுழற்றி டெஸ்ட் டின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய வித்தைக்காரர் இந்த டெல்லியை சேர்ந்த சேவாக். இரட்டை சதமும் சரி, முச்சதமும் சரி சிக்சர் பவுண்டரிகளால் மட்டுமே நிறைவு செய்த அசாத்திய துணிச்சல்காரர், எந்த நிலையிலும் தன்னிலை ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாதவர். தோனியுடன் ஏற்பட்ட பூசலினால் ஓரங்கட்டப்பட்டு, தற்போது தன்னோட பிறந்த நாளில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

சேவாக் என்ற வீரனுக்கு மதிப்பளிக்கவில்லை என்றாலும் அவர் செய்த சாதனைகளுக்கு மதிப்பளித்தாவது இந்த தென்னாப்பரிக்க டெஸ்ட் தொடரில் விளையாட வைத்து கௌரவம் செய்திருந்தால் என் போன்ற சேவாக் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும், அவருக்கும் ஓய்வு அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும். அவரின் இத்தனை வருட கடின உழைப்பை கொச்சைப் படுத்திய உணர்வு தான் மிஞ்சி நிற்கிறது. உங்களது ஒவ்வொரு அடியும் வரலாற்றில் பதிந்துவிட்டது இன்றைய சிலுவண்டுகள் எப்படி சிலுத்துக் கொண்டு திரிந்தாலும் உங்களின் அபரிமிதமான துணிச்சலும், எப்பேர்பட்ட பவுலரையும் கலங்கடிக்க கூடிய அதிரடியும் வேறு எவருக்கும் சாத்தியப்படாது. உங்களைப் போன்று கிரிக்கெட் ரசிகர்களை குஷிப் படுத்த முடியாது. உங்களது ஓய்வு அமைதியாகவும், குடும்பத்தினரோடு நிம்மதியாகவும் இருக்கட்டும் வீரு. 

சரி வீருவை விடுங்கள் வயதானவர், கம்பீர் இன்றளவும் ஐபில் வகையறா போன்ற கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கிக் கொண்டு தானே இருக்கார், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணியிடம் அடிமேல் அடி வாங்கி கொண்டிருக்கும்  இந்திய அணியில் அனுபவ வீரரான கம்பீருக்கு ஏன் இடம் அளிக்கவில்லை? ஒருவேளை அவரையும் ஓய்வுக்கு தயார் செய்கிறார்களோ, என்னவோ? 
   

Post Comment

அக்டோபர் 15, 2015

கத்துக்குட்டி


இப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்தேன். இடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் படம் வெளியான உடனே பார்க்க இயலாமல் போக, நேற்று தான் பார்க்க முடிந்தது. இப்படத்தை பற்றி சொல்வதை விட இப்படம் பேசும் சில விசயங்களை பார்க்கலாம். 



எப்போதெல்லாம் வாக்கு வங்கி சரிகிறதோ அப்போது தான் பாவப்பட்ட விவசாயிகளின் நினைப்பு வரும், அவ்வாறு நினைவு வந்தவுடன் சரிந்து கிடக்கும் தனது செல்வாக்கை மீட்டெடுக்க அவர்களை நோக்கி அவசர அவசரமாக ஓடும் அரசியல்வாதிகளை கண்டு சலித்து போன மனிதர்கள் வாழும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று முன்பொரு காலத்தில் சொல்லப்பட்ட தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மனிதர்களின் வாழ்வியலை இரண்டு மணி நேரம் திரையில் காணும் படி செய்திருக்கிறார் கத்துக்குட்டி இயக்குனர் சரவணன்.

விவசாயி எனும் ஒரு இனம் இருந்ததாகவும், அவர்கள் விவசாயம் எனும் அதி முக்கியமான தொழில் செய்து ஊருக்கெல்லாம் சோறு போட்டதாகவும் என்று வரலாற்றுப் புத்தகத்தில் ஏற்றாத குறைதான், மத்தபடி அவர்களின் வாழ்க்கை அதள பாதாளத்தில் தான் கிடக்கிறது. கிடந்து அல்லல் பட்டது போதும் நம்ம பிள்ளைகளாவது படித்து பெரியாளாகட்டும் என்ற நப்பாசையில் இருக்கிற நிலத்தை விற்று படிக்க வைத்து, வீட்டுக்கொரு இஞ்சினியர் உருவாக்கி விட்டு தன்னை சிதைத்து, மண்ணை தொலைத்து, எதிர்காலம் சூனியமாய் போய் எவ்வித ஆதரவு இல்லாமல் தனித்து நிற்கும் விவசாய குடிகளின் வலிகளை பதிவு செய்ய முனைந்திருக்கிறது இந்த கத்துக்குட்டி.



அடி மேல் அடி வாங்கி நசிந்து கிடக்கும் மக்களின் மீது, மீத்தேன் திட்டம் என்ற ஒன்றை இடியாய் இறக்கி வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் இது. அரசாங்கத்தை எதிர்ப்பது போல் காட்சியமைத்தால் படம் வெளிவராது என்றறிந்து மீத்தேன் திட்டத்தினால் வரும் விளைவுகளை சொல்ல முயன்றிருக்கிறார். 

விவசாயம், அதன் மீதான மக்களின் அலட்சிய போக்கு, மீத்தேன் திட்ட விளைவு, அரசாங்க கெடுபிடி, வடிக்கட்டிய அரசியல், குடி, பட்டினிச்சாவு, இயற்கை விவசாயம், கதிர்வீச்சு பாதிப்பு, இப்படி படம் நெடுக தொலைத்து கொண்டிருக்கும் வாழ்வியலை பற்றியே பேசிக்கொண்டிருந்தாலும் பாடமெடுக்கும் உணர்வு வராமல் பார்த்துக் கொள்கிறார். பன்ச் வசனங்களாய் கேட்டு கேட்டு புளித்துப் போன காதுகளுக்கு கொஞ்சம் இனிமையாய் இருக்கிறது மக்களின் கிராமத்து மொழி. 

இந்தப் படத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை, இதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பட்டியல் வெகு நீளமாய் நீளும், இருந்தும் முதல் முயற்சி, மக்களின் அவசிய பிரச்சினைகளைப் பற்றி பேசும் படமென்பதால் குறைகளை புறந்தள்ளி நிறைகளை மட்டும் சொல்கிறேன். இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தந்தால் மட்டுமே தொடர்ந்து இம்மாதிரியான படைப்புகள் வெளிவரும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதுகிறேன். 

படம் நெடுக பாடமெடுக்க முனைந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்றறிந்து சந்தியாவை வைத்து ஒரு குத்து பாடல்? அரசியல் கலாட்டா என்று கொஞ்சம் கமர்சியல் மாசலா பூசி கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். இவரை நம்பி முதலீடு செய்தவரும் பிழைக்க வேண்டுமல்லவா?

இயற்கையோடு தவழ்ந்திருக்கிறது கேமரா, பிண்ணனி இசையில் நிறைய மெனக்கெட வேண்டும் என்பதை படம் நெடுக உணர வைக்கிறது அயர்ச்சியான இசை. பாடல் ஒருமுறை கேட்கவைக்கும் ரகம். 

ரியல் எஸ்டேட் க்கு விளம்பரம் செய்ய வந்த தேவி ப்ரியாவை கடத்திக் கொண்டு சென்று பேசும் வசனங்களும், முதல் பத்து நிமிடங்களின் படத்தொகுப்பு பட்டாசாக இருக்கிறது. வசனங்களில் தொய்வில்லை என்றாலும் இயக்குனர் அதிகம் மெனக்கெட வேண்டுமென்று பலக்காட்சியமைப்புகள் உணர்த்துகின்றன. உதாரணம் பட்டினிச்சாவு பற்றி பேசி மீத்தேன் திட்டத்திற்காக நாயகியின் அப்பா தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் போது பார்வையாளனாய் மட்டுமே இருக்க முடிந்ததே தவிர பங்காளனாய் பங்கெடுக்க முடியவில்லை.

தனிக் கவனம் எடுத்து நடித்திருக்கும் சூரி, நரேன், சிருஷ்டி மற்றும் மற்ற நடிகர்களுக்கும் ஒரு பெரிய பூங்கொத்து. திரையில் காண வேண்டிய படமிது!


   

Post Comment

அக்டோபர் 03, 2015

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 11/10/2015, புதுக்கோட்டை


சென்னை மற்றும் மதுரையின் தொடர்ச்சியாக இந்த வருடம் புதுக்கோட்டையில் நிகழ இருக்கிறது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு. தொடர்ச்சியாக நான்காம் ஆண்டு சந்திப்பு நிகழ இருப்பது பெரும் மன மகிழ்வைத் தருகிறது. இம்முறை புதுக்கோட்டை நண்பர்கள் அதற்கான முயற்சியை முன்னெடுத்து மிகச் சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள், மேலும் விழாக் குழுவினர் பெரும்பாலானோர்  ஆசியர்கள் என்பதினால் கூடுதல் ஒழுங்கு இருக்குமென்று பெரிதும் நம்புகிறேன், அவர்களின் கலந்தாய்வு கூட்டங்களை நிகழ்த்திய விதம் அதற்கான சான்றாக இருக்கிறது. விழாக்குழுவினர் அனைவருக்கும் முன் கூட்டிய எனது வாழ்த்துகள் தோழமைகளே!



முந்தைய சந்திப்புக்களில் இல்லாத அளவிற்கு சில புதுமையான திட்டங்கள் வகுத்து செயல் படுத்தவும் காத்திருக்கிறார்கள் அதற்காகவே கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது. எழுத்துக்கும், கலைக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதை பெரிதும் நம்புகிறவன் நான், அவ்வாறே விழா அரங்கினை கவிதைகளாலும், அதற்கு தகுந்த ஓவியங்களாலும் நிரம்பச் செய்ய இருக்கிறோம் என்று சென்னை சந்திப்பில் திரு. முத்துநிலவன் அவர்கள் சொன்னதிலிருந்து, அவ்வப்போது மனம் அந்த அரங்கத்தையே சுற்றி வருகிறது. 

பிரத்யோகமாக ஒரு வலைத்தளம் துவங்கி அதில் எல்லாத் தகவல்களையும் ஒருங்கிணைத்து அளிப்பதினால் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. வரும் காலங்களில் சந்திப்புக்களை நிகழ்த்தப் போகும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.



உடலுழைப்பையும் தாண்டி, கணிசமான பண பங்களிப்பையும் அளித்து விழாவை நிகழ்த்த இருக்கும் நண்பர்களுக்கு முடிந்தவரை, நம்மளால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். வங்கி கணக்கிலோ அல்லது விழா நிகழ்வன்றோ கூட கொடுக்கலாம் என்று நம்புகிறேன்.



மேலும் உடனுக்குடன் உங்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ள, பிரத்யோக வலைப்பக்கமான தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 2015 தளத்தை பாருங்கள், மற்றும் தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றுவது மட்டுமில்லாமல், நேர்த்தியாக ஒருங்கிணைத்து அளிக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்திலும் http://dindiguldhanabalan.blogspot.com/ பதிவர் சந்திப்பு - 2015 பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்!


இதுவரை இல்லாத அளவிற்கு சில புதுமைகளை நிகழ்த்த இருக்கும் நண்பர்களுக்கு ஆதரவளித்து, வரும் 11/10/2015 அன்று புதுக்கோட்டையில் சந்தித்து மன மகிழ்வோம் நண்பர்களே, வாருங்கள் அனைவரும்!


Post Comment

அக்டோபர் 01, 2015

ஒரு வெயில் நேரம் - நர்சிம் (சிறு கதைகள்)


சில நாட்களுக்கு முன் எனது புத்தக அலாமரியை மேய்ந்து கொண்டிருக்கையில் கையில் சிக்கியது இந்த "ஒரு வெயில் நேரம்", எப்போது இந்நூலை வாங்கினோம் என்ற ஆச்சர்யத்துடன் எடுத்து சில பக்கங்களை புரட்டுகையில் நினைவுக்கு வந்தது. இந்த நூலை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிறது, எப்படி தவற விட்டேன் என்கிற சிந்தனையில் படிக்கத் துவங்கினேன். அமிர்தம் சூர்யாவின் அணிந்துரையை படித்ததும் கொஞ்சம் மிகைப் படுத்தி புகழ்ந்திருப்பாரோ என்ற நினைப்புடன் வாசிக்கத் துவங்கிய என்னை, உன் நினைப்பு தவறென்றது முதல் கதை. வாசித்து முடிக்க மிகச் சரியாக இரண்டு நாட்கள் ஆனது எனக்கு, இடையிடையே நிறுத்தி நிறுத்தி தான் வாசித்தேன். ஒழுங்கான வாசிப்பாளனுக்கு ஒரு நாள் போதுமானது என்று நம்புகிறேன்.



பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகளால் உள்ளடங்கியிருக்கும் இந்த வெயில் நேரம் வாசிக்க வாசிக்க குளுமையாக இருக்கிறது. தன்னை கடந்து போன மனிதர்களையும், தாம் கடந்து வந்த மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் கதைக்களனாக தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் திரு. நர்சிம். ஒவ்வொரு கதைக்குப் பின் ஒரு அழுத்தமான வலி இருக்கிறது. சிலவற்றை படித்து அறிந்து கொள்ள முடிகிறது, இன்னும் சிலவற்றை உணரவும் முடிகிறது.

வாசிப்பாளனையும் கதையின் பங்குதாரியாக ஆக்குவதில் இருக்கிறது கதையாளனின் வெற்றி, அது நர்சிமுக்கு மிக அழகாய் கை கூடி வருகிறது. இந்த தொகுப்பிலுள்ள எந்த கதையிலும் இலகுவாய் நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது. வாசகனை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைத்து கதை சொல்கிறேன் என்று வகுப்பெடுக்காமல் எவ்வித சிக்கலுமில்லாமல் கதைக்குள் புகுத்தி கதை சொல்வது புது இரகம். ஒரு நாவலுக்கான கருவை சுமந்து நிற்கின்றன இவரது ஒவ்வொரு கதைகளும்.

இத்தொகுப்பில் என்னை பெரிதும் ஈர்த்தது என்றால் 'புளிக்காரக்கா' கதை தான், காதலியோடும், அவளின் அம்மாவோடும் நிகழ்த்தும் காதலன் ஒருவனின் காம களியாட்டம், அக்கதையை வாசித்து முடிக்கையில், உச்சிக்கிளையில் ஏறி காலின் பெருவிரலால் அழுத்தி புளியை உலுக்கும் அந்த உதறலை நமக்கும் வரவைக்கிறது. அந்த நடுக்கம் குறைய சில நாட்கள் தேவையாய் இருக்கிறது.

 'அம்பத்தாறு' கதையில் கிராமத்து ஆணின் மனதுக்குள் ஒளித்து வைத்திருக்கும் வன்மத்தை வெளிச்சம் போட்டு காட்டுகையில் மனது பக்கென்று அடித்துக் கொள்கிறது, வாழையடி வாழை கதையில் இறப்பினை வைத்து ஒருத்தன் கொண்டாடுவதும், ஒருத்தன் அதை துக்கமாய் அனுஷ்டிப்பதுமாக இருவேறு மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

'மதுரம்' கதையில் வரும் தங்கைய்யா போன்று ஊருக்கு ஒன்றேனும் இருப்பர், அப்படி ஒரு மனிதரோடு கொஞ்ச நாள் நானும் பழகி இருக்கேன் என்பதினால் இக்கதை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கைய்யா இறந்த பின்பு அவரின் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட காதல் கடிதத்தை வாசித்த எவராலும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது அந்த சோக சுரத்தை!

உச்சமாக 'வேப்பம் பழங்கள்' கதையில் வரும் பழனி செய்யும் செயல் நெஞ்சை பிசைந்தாலும் தன்னால் இல்லறத்தில் ஈடுபடமுடியாமல் தன்னோட தந்தையிடம் கதறுகையில் பழனி மேல் வரும் மரியாதை கலந்த அனுதாபத்தை கண்டு  பிரமித்து நிற்கையில், அவரின் அப்பா தரும் அதிர்ச்சியை பழனி மட்டுமல்ல வாசிக்கும் நம்மாலும் தாங்கி கொள்ள இயலாத பெருஞ்சுமை.

இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும், அது என்னவெனில் சில கதைகளை வாசிக்க கொஞ்சம் அதீத கவனம் தேவையாய் இருக்கிறது. அவ்வளவு எளிதில் சில கதைகளை புரிந்து கொள்ள இயலாமல் வாசகர்கள் தடுமாறலாம் என்பது எனது கருத்து. இந்த "ஒரு வெயில் நேரம்" வாசிக்கையில் நிச்சயம் ஒரு மழை நேரமாக நம்முள் படரக் கூடிய வல்லமை கொண்டுள்ளது, நேரம் கிடைக்கையில் வாசிக்க மறந்து விட வேண்டாம்.

இந்த நூலைப் பற்றியும், திரு. நர்சிம் அவர்களைப் பற்றியும் இணையத்தில் துழாவிப் பார்த்துவிட்டேன், உங்களுக்கு யாரேனும் தகவல் தெரிந்தால் கருத்துரையில் மறக்காமல் தெரிவித்து செல்லுங்கள்.

--------------------------------------------------------------------------

பதிப்பகம்: பட்டாம்பூச்சி
                      28/A, கிருஷ்ணன் கோயில் தெரு,
                      ஆழ்வார் திருநகர்,
                      சென்னை - 600 087.
                      mobile: 9841003366

பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 50/-

--------------------------------------------------------------------------

courtesy : http://vasagarkoodam.blogspot.com/2015/10/blog-post.html

Post Comment

செப்டம்பர் 28, 2015

கீதாரி - சு. தமிழ்ச்செல்வி


மீபத்தில் வாசித்த புத்தகங்களில் மிகப்பெரும் அதிர்வை தந்த புத்தகமிது, இயக்குனர் சமுத்திரகனி “கிட்ணா” எனும் பெயரில் திரைப்படம் எடுப்பதாகவும், அது சு. தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய “கீதாரி” எனும் நாவலை தழுவியக் கதை என்றும் எங்கேயோ வாசித்த செய்தியை மனதில் வைத்திருந்து தான் கடந்த புத்தகச் சந்தையில் இப்புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கினேன். இப்புத்தகத்தை தேடிய கதை மிக சுவாரசியமானது, அதைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக காண்போம்!



ஒரு புத்தகத்தை வாசிக்க துவங்குமுன், அப்புத்தகம் பற்றிய சின்ன மதிப்பிடலோடு தான் துவங்குவேன், பெரும்பாலும் என் மதிப்பிடலோடு ஒத்திருக்கும், சில புத்தகங்கள் நேரெதிராக அமைந்துவிடும். கீதாரி என் மதிப்பீட்டோடு நூறு சதவீதம் ஒத்திருந்தது. இப்புத்தகம் எனக்குப் பிடித்துப் போக முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது, இராமநாதபுரம் பகுதியிலிருந்து எங்களது பகுதி கிராமங்களுக்கு கிடை போடுவதற்கு வருடா வருடம் ஒரு இடையர்கள் குழு வரும் அதிலொரு ஆடு மேய்க்கும் பையன் எங்களது கூட்டாளிகளுள் ஒருவனாக இருந்தான், அதன்பொருட்டு அவன் படும் இன்னல்களை அவ்வபோது சிரிப்பினூடே சொல்ல கேட்டிருக்கிறோம் என்பதினால் கதையும், கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியலும் சற்று பரிச்சயம்!

வாழ்க்கையில் எதுவுமே அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது அதற்கான கடின உழைப்பு தேவை என்பது எவ்வளவு சத்தியமான உண்மையோ அதைவிட இருமடங்கு கடின உழைப்பை தந்து தங்களது தினசரி  வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த இடையர்களின் கூட்டம். ஒருபக்கம் இரவினில் ஆட்டுக்கு காவல், இன்னொரு பக்கம் கிடை போட்டிருக்கும் நிலத்துக்காரர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் இன்னல்கள், நிலையற்ற இருப்பிடமற்று ஒவ்வொரு ஊராய் ஆட்டு மந்தைகளோடு மந்தைகளாக பண்ட பாத்திரங்களை தூக்கிக் கொண்டு திரியும் பெண்கள் இப்படி அவர்களின் வாழ்வியலே கோரமானதாகத் தான் இருக்கிறது.


ஓய்வு என்பதே இல்லை என்றாகிப் போன வாழ்க்கையை நம்மால் நினைத்துப் பார்க்க இயலுமா? ஆனால் அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சமும் சளைக்காமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயாராக இருக்கிறார்கள். யாரிடமும் எதிர்த்துப் பேசுவதில்லை, எல்லோரிடமும் பணிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். 

நாவலின் சுருக்கம்:

இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மா, வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு பையனோடு வளசையில் இருக்கையில் ஒரு மழை இரவினில் வந்து கரிச்சா, வெள்ளச்சி எனும் இரட்டைப் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள் மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி. அடுத்த நாள் காலையில் ஊராரை கூப்பிட்டு தகவலை கூறினால் ஊரினர் எங்கு நம்ம தலையில் விடிந்து விடுமோ என்று எண்ணி நழுவ முயல, கஷ்டத்தோடு கஷ்டமாக நானே ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் என்று இராமு கீதாரி சொல்லவும், ஊரின் பெரும் புள்ளியான சாம்பசிவம் இன்னொரு குழந்தையை நான் எடுத்து வளர்க்கிறேன் என்று சொல்லி இப்போது என்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது எனவும் சில வருடங்கள் கழித்து வந்து வாங்கி கொள்வதாகவும் சொல்லி செல்கிறார். 

சொன்ன படியே சிறிது வருடங்கள் கழிந்து இரண்டில் ஒன்றை வாங்கி கொண்டு செல்லும் சாம்பசிவம் அப்பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்லி துன்புறுத்தி வளர்க்கிறார். 

கரிச்சா , வெள்ளையனோடு உதவியாக வளசையில் இருக்கிறாள், வளர்ந்து பெரியவள் ஆனதும் பெண் பார்க்க வரும் கூட்டத்தினர் வெள்ளையனையும், கரிச்சாவையும் இணைத்து வைத்து தவறாக பேசிவிட ராமு கீதாரி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தனி வளசை போட்டுக் கொண்டு இருக்குமாறு பணித்துவிட்டு தன்னோட மகள் மருமகனோடு இணைந்து கொள்கிறார்.

அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கும் போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சாம்பசிவம் வெள்ளச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறாள். 

ஆரம்பத்தில் ஒரு சுணக்கம் இருந்தாலும் கரிச்சாவும், வெள்ளைச் சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையை தவிர்த்து எவ்வித சிக்கலுமின்றி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். சரியான மேய்ச்சல் நிலமின்மையால் இன்னொரு பகுதிக்கு நகரும் நிலை நேரிடுகிறது, அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணனை சந்திக்கிறான் வெள்ளையன், அதன்பிறகு குழந்தையின்மையை காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவி முடிவு செய்து அதன்படியே காய் நகர்த்தவும், 

தன் மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளையன் இப்படி மனம் மாறிவிட்டானே என்று வருந்தி அவனைப் பிரிந்து ராமு கீதாரியிடம் வந்து சேர்கிறாள் கரிச்சா. ராமு கீதாரியோ பயங்கர பண நெருக்கடியில் இருக்கிறார். வெள்ளையனிடம் தனயே சென்று எடுத்து சொல்லியும் அவன் கேட்காமல் போனதில் ரொம்ப மன வருத்தத்தில் அவனை சபித்து விட்டு வந்துவிடுகிறார் ராமு. வெள்ளையன் திருமணம் ஏதோ காரணத்தினால் நின்று விட்டாலும் கரிச்சாவை மட்டும் மீண்டும் அழைக்க வரவே இல்லை. 

வெள்ளையனை பிரிந்து வந்த சில நாட்களிலே அவள் கருவுற்றிருப்பதை அறிகிறாள், ஆனால் வெள்ளையனிடம் போகாமல் தானே சுயமாக நிற்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் ஆடுகளை பிடித்துக் கொடுக்க சொல்லி வளர்க்கிறாள், குழந்தை பிறந்து வெள்ளைசாமியோடு சேர்ந்தாளா இல்லையா ? என்பது நாவலின் முடிவு ...

*********

அண்ணனாய் இருந்து வளர்த்தவனே கரிச்சாவை திருமணம் செய்து கொள்வது, வாசிக்கையில் மனதுக்கு ஒப்பாமல் இருந்தாலும் யதார்த்தம் அதுவாகத்தான் இருக்கிறது, அவர்கள் திருமணத்தின் போது கிடை ஆடுகளை பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லை என்பதினால் வெள்ளையன் ஆடு வளைக்க வைத்திருக்கும் கம்பை, மாப்பிள்ளைக்கு பதிலாக வைத்து திருமணம் நடத்துவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஆனால் அது அவர்களின் சடங்காக மதிக்கிறார்கள். இப்படி அவர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்புமின்றி தான் தங்களது விசேசங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

சமுத்திரகனி இயக்கி நடிப்பதாக சொல்லும் 'கிட்ணா' எனும் அந்தப் படம் எப்போது வருமென்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது. ஆனால் இன்னொரு கவலையும் மனதைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது, அது என்னவெனில், நாவலைத் தழுவி படமெடுக்கிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிய ஒரு சிலரைத் தவிர, பலரும் சொதப்பி இருக்கிறார்கள். அப்படி ஏதும் இக்கதைக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த நாவலை வாசித்து முடிக்கையில், நாமெல்லாம் சொகுசிலும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அதிலும் எண்ணற்ற குறைகளை கூறிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்று உணர்ந்து கொண்டேன். ஆங்காங்கே டாக்குமென்ட்ரி உணர்வு எட்டிப் பார்த்தாலும் அது அவர்களின் வாழ்வியலை வரலாற்றில் செய்யும் பதிவாக நினைத்து கடந்து வந்தேன். நிச்சயமாய் இந்த நூல் என்னளவில் முழுமையான ஒரு நாவல் கட்டமைப்பு தான். இன்றைய விரைவான வாசகத் தோழர்களுக்கு இது பிடிக்குமா என்பது சற்று சந்தேகம் தான். வாசித்தே ஆக வேண்டிய வகையறா புத்தகமிது, தவறவிடாதீர் ....

*********************************************************************************

மொத்தப் பக்கங்கள் : 175

விலை : ரூபாய் 75/-

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்


*********************************************************************************

நன்றி : வாசகர் கூடம்

Post Comment

செப்டம்பர் 24, 2015

49 - ஓ & மாயா ....


சில வருட இடைவெளிகளுக்குப் பிறகு கவுண்டரை திரையில் காணும் ஆவலில் முதல் நாள் இரவுக் காட்சிக்கு சென்றிருந்தேன். படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு கவுண்டர் தான் முக்கியம் என்பதினால் படம் மொக்கையாகவே இருந்தாலும் அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் தான் சென்றேன்! கவுண்டருக்கான ரசிகப் பட்டாளம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று நிறைந்திருந்த அரங்கம் உணர்த்தியது.



இப்போதையே தமிழ் ரசிகர்களை கணிப்பது அவ்வளவு எளிதல்ல போலும், எதற்கு சிரிக்கிறார்கள் எதற்கு வெறுக்கிறார்கள் என்று தெரியாமலையே படத்தை காண வேண்டியதாய் இருக்கிறது. படு மொக்கையான நகைச்சுவைகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பவர்களைப் பார்த்து ஒருவேளை நம்மளோட ரசனை மழுங்கி விட்டதோ என்ற பயம் உள்ளூர ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 

49 ஓ வின் முதல் பாதி சுமாருக்கும் படு கீழ், இரண்டாம் பாதி சுமார் ரகம். தலைவரின் தலையில் மொத்த சுமையை வலிந்து திணித்திருக்கிறார்கள். படத்தின் மைய பிரச்சினையான விவசாயத்தை விட்டு நழுவாமல் அதைப் பற்றி பேசி இருப்பதற்காகவே  இயக்குனருக்கு பெரிய கை குலுக்கல். 

குடி, கொலை, கொள்ளை, ஆபாசம், கேவலமான வசனத் தொகுப்புகள் என்று வந்து கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு மத்தியில், நலிந்து கிடக்கும் விவசாயியைப் பற்றி, விளை நிலங்கள் எப்படி அபகரிக்கப் படுகிறது பற்றி, எதைப் பற்றியும் கவலைப் படமால் எனக்கென்ன என்று ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் கேடு கெட்ட அரசியல் வாதிகளைப் பற்றியும், நமக்கு சோறு தான் முக்கியம் எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று செல்லும் இன்றைய சராசரி மனிதர்களைப் பற்றியும் துணிந்து பேச முனைந்திருக்கும் இயக்குனர் ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கும் அதற்கு துணையாய் ஆதரவு தந்து தயாரித்த திரு. சிவபாலன் அவர்களுக்கும், மேலும் மக்களின் தலையாய பிரச்சினைகளின் மூலமாக மீண்டும் திரை பிரவேசம் செய்திருக்கும் கவுண்டருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!  என்ன இப்படியான பிரச்சினைகளை பேசும் படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தருவதில்லை அதுதான் இங்கு பிரச்சினையே, அந்த வகையில் இது மக்களிடம் எந்த வகையில் சேர்ந்திருக்கிறது என்பது பெரிய வினாக்குறி தான்?

சீரியல்களே விறு விறுவென நகரும் காலத்தில் போய், சவ சவ என்று காட்சியை வைத்து பொறுமையை மிகவும் சோதிக்கிறார் இயக்குனர். அரசியல் நையாண்டி பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் அமரர் மணி வண்ணனை நினைவில் நிறுத்தினார். அரசியல் நையாண்டியை மணி வண்ணனைத் தவிர்த்து வேறு எவராலும் அவ்வளவு நாசூக்காக, நறுக்கென்றும் சொல்ல முடியாது என்பதை உறுதி படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்த வயதில் போயி கவுண்டரை ஆட வைத்து இம்சை செய்தது, பல சவ சவ காட்சிகள் தவிர்த்துவிட்டு சொன்னால் பார்க்க கூடிய படம் தான் இந்த 49 ஓ!

-----------------------------------------------------------------------------------------------------------

மாயா 

கருப்பு வெள்ளை காட்சியமைப்பு, கண்ணை மட்டும் அல்ல நெஞ்சையும் கொள்ளை கொள்ளும் ஒளி அமைப்பு இவற்றிற்காகவே இந்த மாயாவை பலமுறை பார்க்கலாம்! 



வயசு கூட கூட அழகு குறையும் என்பார்கள் ஆனால் நயன்தாராவின் அகராதியில் தலைகீழாக எழுதி இருக்கும் போல! பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்கள் போலும் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு நேர்த்தியாய் வந்திருக்கிறது காட்சிகள் அனைத்தும்! 

பேய் படம் எடுக்கிறேன் என்று குப்பைகளை எடுத்து இம்சிக்கும் இயக்குனர்கள் இந்தப் படத்தை சுமார் முன்னூறு தடவை பார்த்துவிட்டு படமெடுக்க வரட்டும் என்று மாயாவை வேண்டிக் கொள்கிறேன்!

பீசா விற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் மாயா தான், நேர்த்தியான சினிமாவை தந்த குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !   

Post Comment

செப்டம்பர் 08, 2015

பாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...




புலியின் பாய்ச்சல்? கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை ஆக்கிரமித்தோம். வழக்கமாய் என்ன எதிர் பார்த்து சென்றேனோ அதே டெம்ப்ளேட் கதை தான். படத்தின் டைட்டில் கார்டில் துவங்கிய ஒரு தீம் இசை படம் முடிந்து வீட்டிற்கு வந்து உறங்கி, காலையில் எழுந்து அலுவலகம் வந்து இதோ சாயந்திரம் ஆகிவிட்டது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த கருமாந்திர தீம் இசை. மூணே மூணு பிண்ணனி இசையை வைத்து முழுப் படத்தையும் ஒப்பேற்றி விட்ட இமானின் சாதூர்யத்தை கண்டு வியக்கிறேன். 

படத்திற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாத காட்சியை போன்று இருக்கிறது சூரியின் காமெடி??? காட்சிகள். எப்பவோ பரணில் ஏற்றி வைத்துவிட்ட காமெடி வசனங்களை தூசி தட்டி கொண்டு வந்து நிற்கும் இடங்களில் எல்லாம் சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வருகிறது. போதா குறைக்கு காஜல் அகர்வாலின் அறிமுகம் காட்சி மண்டையின் அனைத்துப் பக்கங்களிலும் அமிலத்தை தடவிய சுகத்தை தந்தது. காதல் காட்சிகள் அனைத்தும் ஆசம் என்று சொல்வதை தவிர வேறெந்த வார்த்தைகளும் இல்லை. 

கொலையும், கொலை சார்ந்த மனிதர்கள் வாழும் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒரு நியாயமான போலீஸ் வந்தால் என்ன அதகளம் பண்ண முடியுமோ அவ்வளவும் யாரும் கேள்வி கேட்க இடம் வைக்காமல் மசாலா இம்மி அளவும் குறையாமல் பார்த்து கொண்டிருக்கிறார் திரு. சுசீந்திரன். யாரோ கொடுத்த அழுத்தத்திற்கு படம் எடுத்தால் உங்களை நம்பி வரும் என் போன்ற ரசிகன் மீண்டும் எப்படி ஜி அடுத்த படத்துக்கு வருவான்? ஒரு சுமார், படம் கொடுத்தால் அஞ்சி மொக்கை படங்கள் கொடுத்தே தீருவது என்று விஷால் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் போலும். சின்ன சின்ன சுவாரசியங்கள் தவிர்த்து படம் கொட்டாவி விட வைக்கிறது. 



படத்துக்கு சென்ற முதன்மை காரணம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ரொம்ப ஈர்க்கவில்லை என்றாலும் மோசம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை. அந்தளவில் கொஞ்சம் மன நிறைவு. 

திரையில் ஓடிய படத்தைவிட எங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்லீப்பர் செல் இருவரின் அதகளம் தான் தாங்க முடியவில்லை. திடீர் திடிரென்று கைத்தட்டுவதும், பயங்கரமாக சிரிப்பதும் ஏதோ பேய் பட எபெக்டை கொடுத்து பீதியில் உள்ளாக்கி மண்டை காய வைத்துவிட்டார் மொக்கை ஜென்டில் மென். இவனுங்க விழுந்து விழுந்து சிரிப்பதினால் தான் சூரி போன்ற காமெடி? நடிகர்கள் காமெடி என்கிற பெயரில் பேசிய வசனங்களையே பேசி நம்மளை சோகத்தில் ஆழ்த்துகிறார்கள் போலும். எனக்கு கூட பிரச்சினை இல்லை, ஆவியின் பின் மண்டைக்கு பின்னாடி தான் அடிக்கடி தபேலா வாசித்துக் கொண்டிருந்தான் அந்த ஸ்லீப்பர் செல்! 

மொத்தத்தில் இருநூறு கொடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம். 


Post Comment

செப்டம்பர் 05, 2015

எழுத மறந்த கடிதம் # 1




எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை, ஊதா கலந்த வெள்ளைச் சுடிதாரில் உன்னை முதன் முதலில் பார்த்த தருணத்தில் எப்படி பரபரத்து, பேச்சற்று நின்றேனோ, அதே உணர்வு தான் இப்போதும். என்ன, அப்போது மனசெல்லாம் சந்தோசங்களும், கனவுகளுமாய் நிறைந்திருந்தன, இப்போது நீயும், உன் நினைவுகளுமாய் நிறைந்திருக்கின்றது. பெரும்பாலான பொழுதுகளை உன்னோடு கழிக்கவே பிரயத்தனப் பட்டேன், இப்பொழுது எப்படி நகர்கிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. சத்தியமாய் சொல்கிறேன் உன்னை அடியோடு மறந்து விடவேண்டும், உன் நினைவுகளை அமிலம் போன்றதொரு ஏதாவது ஒன்றில் கரைத்துவிட வேண்டும் என்று நினைக்கையில் தான், ஊற்று நீராய் கசிந்து கொண்டிருக்கிறாய். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் தேவையாய் இருக்கிறது.

ஏதாவது ஒரு அஞ்சலுக்காவது பதில் அனுப்புவாய் என்ற நம்பிக்கையில் இத்தனை மின் அஞ்சல்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன், பதிலெழுதாவிட்டாலும் பரவாயில்லை, படித்த பின் அழித்தலாவது மனது சற்று ஆறுதல் கொள்ளும். அதுவும் வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் உன் பிடிவாதம் பற்றி நானறிவேன். கொஞ்சலிலும், கெஞ்சலிலும் சொல்லியே மாற்றிக்கொள்ளாத நீ, இப்பொழுதா மாற்றிக்கொள்ள போகிறாய்?, உன்னிடம் பிடித்ததே, நீ, நீயாக இருந்தது தான்! "எனக்காக, உன் தனித்துவத்தை அழித்துக்கொள்ளாதே, ஒருவேளை நாம் பிரிய நேரிட்டால், உன்னை எதிலிருந்து மீட்டெடுப்பாய்" என்ற உன் வார்த்தைகளின் வலிமையை நாம் பிரிந்த சில மாதங்களில் அனுபவப் பூர்வமாய் அறிந்து கொண்டேன். சில நேரங்களில் அடக்க முடியா ஆத்திரங்கள் வந்தாலும், எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை அறிவுறுத்திய உன் தெளிநிலை சிந்தனையைக் கண்டு பிரமித்துக் கொள்வேன்!   

அவ்வளவு எளிதில் உணர்ச்சி வயப்படாமல் பேசுவதைக் கண்டு சில நேரங்களில் சந்தேகம் வரும், அப்போது "என்னை, காதலிக்கிறாயா? இல்லையா? என்று நான் கேட்கையில், யாருமில்லையென்றால் நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமொன்று தருவாய், அதில் கொஞ்சம் கோபம் கலந்திருந்தாலும், அடிக்கடி அப்படி கேட்க தூண்டும் எனக்கு. ஒவ்வொன்றையும் நினைவில் வைத்திருந்து, பரிசு கொடுக்கையில் முகம் சுளித்துக்கொண்டே, "ப்ளீஸ் சீனு, ச்சைல்டிஷ் ஆ பிஹேவ் பண்ணாத, கடைசி வரைக்கும் இப்படி ஒவ்வொன்றுக்கும் கணக்கு வைத்திருந்து ஞாபகமா உன்னால பரிசு கொடுக்க முடியுமா? யதார்த்தமா வாழப் பழகு! என்று சொன்ன உன் வார்த்தைகள், போன மாசம் என்னோட மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டு முழித்தபோது மண்டையில் உரைத்தது. இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவமாகத்தான் இருக்கிறாய் என்னுள்!     

உண்மையை சொல்ல வேண்டுமெனில் உன்னோடு பழகும் காலங்களில் நான், நானாக இருந்ததில்லை. பலமுறை எடுத்துரைத்தும் உன்னை சுற்றும் "அதுவாகத்தான்" இருந்தேன்! உன்னை பிரிய நேரிட்ட அன்று உலகமே எனக்கு எதிராக இயங்குவதாய் நினைத்து ஒளிந்து கொள்ள இடம் தேடிய போது கிடைத்தது உன் நினைவு மடிகள் தான். பேருந்தோ, ரயிலோ, மரத்தடியோ, கழிப்பறையோ இப்படி எங்கிருந்தாலும் நான் தலை வைத்து சுகங் காணுவது என்னவோ உன் நினைவு மடியில்தான்! பொதுவாக பெண்களை புதிர்களின் அணிவகுப்பென்று சொல்பவர்களை நரகத்தீயில் ஆழ்த்த வேண்டும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால் உன்னை நெருங்கி கவனிக்கையில் தான் அப்படி சொன்னவர்களை ஆரத்தழுவி மரியாதை செய்யாமல் போன அறிவீனத்தை எண்ணி அவமானம் கொள்கிறேன்.

ஆம், என்னை விட ஐந்து வயது இளையவள் நீ, உன்னிடம் பழகத்தூண்டிய முக்கிய காரணிகளில் ஒன்று, உன்னோட நிதானமான பேச்சு. லொட லொடவென்று பேசிக் கொல்லும் பலருக்கு மத்தியில், அளவாய், அதே நேரத்தில் மிக அழுத்தமாய் சொல்லிச் செல்லும் பாங்கிடம் தான் முதலில் மண்டியிட்டேன். சின்ன சின்ன அன்பு குமிழிக்குள் என்னை புதைத்துக் கொண்டு வெளிவர தெரியாமல் வழி தேடி அலைந்து கொண்டிருக்கையில், உன்னைச் சுற்றி அன்பு சுழலிருந்தாலும் எதனுள்ளும் தன்னை இழந்துவிடாமல், உன்னுள் இயங்க அனுமதிக்காமல், நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் உன்னைச் சுற்றி மட்டுமே இயங்க அனுமதிக்கும் அந்த முதிர்நிலை பக்குவத்தை கண்டு பலமுறை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். அதிசயத்தின் அதிசயமென்றால் அதில் உன் பெயரைத் தான் எழுத ப்ரியப்படுவேன்.

"இப்பொழுது தான் இப்படி புலம்பி தவிப்பாய், கால சுழற்சியில் உனக்கே உனக்கென்று ஒரு பெண் வருவாள், இதை விடவும் வாழ்க்கை மிக வேகமாக சுழன்றோடும், அப்போது என் நினைவு கூட உனக்கு வராமல் போகலாம், எல்லாவற்றுக்கும் தயாரான மன நிலையில் வாழப் பழகு, ஏமாற்றங்கள் இன்றி வாழலாம்" இதுதான் இறுதியாக நாம் சந்தித்த தினத்தில் நீ சொன்ன வார்த்தைகள். நீ, சொன்னது போன்று எனக்கே எனக்கென்று ஒருத்தி வந்திருக்கிறாள், உன்னைப் போன்று இல்லையென்றாலும் அவளிடமும் பிரமிக்க ஏராளம் வைத்திருக்கிறாள். நுட்பமான அன்புக்காரி. எனக்கென்று நெய்த ஆடையவள். திகட்டாமல் அன்பூட்டும் அழகி. அவளைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது, இருந்தும் சொல்வதினால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதினால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். உன்னை, உன் நினைவுகளை மறந்து விடுவேன் என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் இன்றும் என் செவி மண்டல சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பிராண வாயு இன்றி உயிர் வாழ முடியுமென்றால் நான் உன்னை, உன் நினைவுகளை மறப்பதும் சாத்தியமே! 

படிக்க மாட்டாய் என்று நம்புகிறேன், அப்படி ஒருவேளை நீ படிக்க நேரிட்டால் தயவு செய்து பதில் அஞ்சல் மட்டும் அனுப்பிவிடாதே!

   

Post Comment

ஆகஸ்ட் 31, 2015

"எங் கதெ" (நாவல்) - இமையம்




இதற்கு முன்னரே வீடியோ மாரியம்மன் என்ற நூலின் வாயிலாக எழுத்தாளர் இமையத்தைப்  பற்றி அறிந்திருந்தாலும், அதன் பிறகு வாங்கிய "ஆறுமுகம்" என்ற நூலை வாசிக்காமல் கிடப்பில் போட்டிருந்தமையால் , இமையத்தின் புதிய வெளியீடான "எங் கதெ" நாவலை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டினேன், ஒருநாள் சந்திப்பின் போது, "தலைவரே, "எங் கதெ" வாங்கிட்டிங்களா? எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க, நீங்க வாங்கவில்லை என்றால் நான் வாங்குகிறேன்" என்று சொன்ன தோழர் சீனுவை சாந்தப்படுத்தி, நான் வாங்கிவிடுகிறேன் என்று சொல்லி, அதே வாரத்தின் இறுதியில் டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி வந்தேன்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து, எழுத்தாளர் அபிலாஷ், இந்து தமிழ் நாளிதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்ததை படித்ததும், வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூலை மூடி வைத்துவிட்டு, அந்த வெற்றிடத்திற்குள் இந்த  "எங் கதெ" யை புகுத்திக் கொண்டேன். நண்பனை சந்திக்க கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருந்தேன், அவன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும், வசதியான இருக்கையாய் பார்த்து அமர்ந்து இந்நூலை வாசிக்க துவங்கினேன். அந்த நண்பர் வருவதற்குள் நூலில் பாதியை வாசித்து முடித்திருந்தேன். நூலின் நகர்வு அவ்வளவு விறுவிறுப்பு! சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்!

பொதுவாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் இருக்கும் அலாதி வேறெதிலும் இருக்காது, அப்படியொரு தீவிரம் காட்டுவார்கள் நம்மவர்கள், இந்த நம்மவர்களில் அடியேனும் அடக்கம்! அப்படியான ஒரு தனி நபரின் அந்தரங்கம் தான் கதையே! முதல் நான்கு பக்கங்களை வாசித்தாலே போதும் கதையின் வடிவத்தை யூகித்து விடலாம். சில நேரங்களில் கதையின் விறு விறு நகர்வை வட்டார எழுத்து நடை சிதைத்து படிக்கிற ஆர்வத்தை குறைத்து விடும். அப்படியொரு நாவல் ஒன்று எனது புத்தக அடுக்கில் மூன்று வருடங்களாக தூங்கி கொண்டிருக்கிறது. நல்லவேளை அம்மாதிரியான சிக்கல் இந்த புத்தகத்திற்கு இல்லை. கடலூர் வட்டார வழக்கில் புனையப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கான சிக்கல்கள் ஏதுமில்லை!

விபத்தில் கணவனை இழந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிட்ட, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு வருகிறாள் கமலா! ஊரிலிருக்கும் இளசிலிருந்து, பெருசு வரை எல்லோரும் அவளின் கவனத்தை ஈர்க்க படாத பாடுபட , அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இக்கதையின் நாயகனுக்கு கிட்டுகிறது. அதன்பின்பு குடும்பத்தை மறந்து, தங்கைகளை மறந்து, ஊரார்களை மறந்து, கடைசியில் தன்னை மறந்து இறுதியாக என்னவாகிறான் என்பதே மொத்தக் கதை. இம்மாதிரியான கதைகளையும், நிகழ்வுகளையும் அதைச்செய்யும் மாந்தர்களையும் நேரிடையாக பார்த்து வளர்ந்த சூழல் கொண்ட எனக்கு, இக்கதை பெருத்த அதிர்வை கொடுக்கவில்லை என்றாலும், உணர்வுகள் ததும்பிய எழுத்து நகர்வு மனக் கிளர்ச்சியை தூண்டுகிறது.

அச்சை வைத்து இயங்கும் சக்கரத்தைப் போல, கமலாவை சுற்றி தான் கதை நகர்கிறது. தன்னோட 28 வது வயதில் அவளிடம் தன்னை தொலைக்கிறான், 38 வயதில் தெளிவு பெறுவதாக முடித்திருக்கிறார். கமலாவை மிகத் தெளிவான பாத்திரமாக புனைந்து, அவளின் காலில் விழுந்து கிடக்கும் நாயை போல நாயகனை புனைந்திருப்பது அதகளம்! தனக்கே தனக்கு சொந்தமாக இருந்தவள் திடீரென பணி இடமாறுதலாகி போன இடத்தில் வேறொருவனிடம் வழிவதாக அமைத்து, இவனின் நிலை என்ன? இத்துணை வருடங்களாக என்னவாக இருந்தோம் என்ற சுய புரிதலை துவக்கி வைப்பது தான் எதார்த்தத்தின் உச்சம்!

ஓரிடத்தில் அவன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை தெரிய வைக்க, ஒரு நிகழ்வை சொல்லியிருப்பார். அதுதான் என்னைக் கவர்ந்த அம்சம். கமலாவிடம் அவமானப் பட்டு, அதன் விரக்தியில் வந்து வீட்டின் கொட்டகை கட்டிலில் குப்புற கிடக்கையில், ஊரிலிருந்து வந்திருந்த தங்கச்சிகளின் பிள்ளைகள் வந்து பொங்கல் காசு கொடு மாமா என்று கேட்கையில் பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு பசங்களை விரட்டிவிட்டு அவனின் அம்மா பாக்கெட்டில் பணம் வைப்பதும், அவனின் தங்கைகள் சும்மா பாக்கெட்டை செக் செய்வது போல் ஆளுக்கு கொஞ்சம் பணம் வைப்பது போல் வைத்து அந்தக் காட்சி கண்ணெதிரே வந்துப் போகுமளவிற்கு எழுத்தில் அனல் காட்டியிருப்பார் திரு. இமயம்.

ஊடாக, கமலாவின் கணவன் பின்புலத்தையும், அவரின் போராட்ட மனப்பான்மை பற்றியும், இவனை சித்தப்பா பையன் ஒருவனைக் கொண்டு இவனின் செய்கைகளை எடுத்துரைத்து இதெல்லாம் தவறு என்று சொல்வதாகவும், எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக நான் கமலா எனும் கடலினும் விழுந்து கிடக்கிறேன், தப்பென்று தெரிந்தும் அதிலிருந்து மீள மனமில்லாமல் கிடக்கும் ஒருத்தனின் வாழ்வை சினிமாவாக கண்ட திருப்தியை கொடுக்கும் இந்த நாவலை வாசித்து முடித்தால்!

இந்த மாதிரியான வகையறா கதைகளுக்கு முடிவு என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தாலும் கதையின் நகர்வு அதை மறைத்து விடுகிறது. தான் சொல்ல வந்ததை அறுபது எழுபது பக்கங்களில் சொல்லிவிட்டாலும், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே பக்கங்களை இழுத்தது சற்று இழுவையாக இருந்தது. இப்படி சின்ன சின்ன தொய்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த "எங் கதெ"   எல்லோருக்குமான கதை தான்!

இவரின் முந்தைய படைப்பான வீடியோ மாரியம்மன் பற்றி வாசிக்க இங்கு கிளிக்கவும்

========================================================================

புத்தகத்தின் பெயர்: எங் கதெ (நாவல்)
வெளியீடு: க்ரியா
ஆண்டு: 2015
பக்கங்கள் : 110
விலை : 110/-
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்:  creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
========================================================================


நன்றி : வாசகர் கூடம் 


Post Comment

ஆகஸ்ட் 29, 2015

அது பூனையில்லையாம் ...





சென்ற வாரம்  கூட சென்றிருந்தேன்,
அப்போது அது அங்கில்லை,
புதிய வரவென்று நினைக்கிறேன்,
கொழுத்த உடற்கட்டு,
வசீகரமான முகம்,
மூக்கினை தொட்டுப் பார்க்கவேண்டுமென்ற
தவிப்பினை ஏதோ ஒன்று தடுத்தது!
பார்க்கிறேன் என்று தெரிந்தும்,
ஏளனமாக என்னைப் பார்த்துவிட்டு
சன்னலுக்கு வெளியே முகத்தை திருப்பிக் கொண்டது!
அதன் பிறகு,
அதைப் பார்க்க கூடாது என்றெண்ணி
ஆறேழு முறை பார்த்துவிட்டேன்!
வழக்கமாய் ரெண்டொரு வார்த்தைகள்
பேசிச் செல்லும் தோழியின் அப்பா
இன்று ஏனோ என்னிடம் பேசாமல் போனது
வருத்தமாக இல்லையென்றாலும்
சங்கடமாக இருந்தது!
தேநீர் கொடுக்க வந்த தோழியின் அம்மா
சன்னலோரம் அமர்ந்திருந்த அதைப் பார்த்து
புன்னகைத்தது அழகாக இருந்தது!
குளித்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்ற தோழி
சரியாக நாற்பத்தியேழு நிமிடங்கள் கழிந்து வந்தாள்!
பொலிவான முகம்
மலிவான ஒப்பனைகளினால்
சிவந்திருந்தது!
பூசிய நறுமணத்தோடு
சோப்பின் வாசமும் நாசியை நெரிக்க
வந்து அமர்ந்த தோழியைப் பார்த்து
எப்போதுலிருந்து பூனை வளர்க்கிறீர்கள் என்று
கேட்டதும்,
கூடத்தை கடந்த
அவளின் அம்மா  நின்று என்னை முறைக்க,
அப்பா நகைத்துக் கொண்டே உள் சென்றார்!
என் கிட்டுவை, பூனையென்று எப்படி சொல்லலாம் என்று
திட்ட ஆரம்பித்த தோழியை கண்டு கொள்ளாமல்
வெளியேற கிளம்புகையில்
அந்தப் பூனை ஓடிவந்து,
வாஞ்சையுடன்
என் காலுக்குள் புகுந்து வெளியேறியது!



  

Post Comment

ஆகஸ்ட் 19, 2015

சுடு சோறு!


எப்போது அந்தப் பழக்கம் அவனை தொற்றிக் கொண்டது என்று இதுநாள் வரை யாருக்கும் தெரியவில்லை. எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தும் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி மழுப்பி விடுவான். அவனுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் "சுடு சோறு". நாங்கள் என்றால் நான், ரூபக், மெக்னேஷ், சீனு, மற்றும் ஆவி. நான் மட்டும் அவனுடன் எட்டாம் வகுப்பிலிருந்து கூட படித்து வருபவன், மற்றவர்கள் கல்லூரி சேர்ந்த பின்பு கூட்டணியானவர்கள். அவனை முதன் முதலில் சுடு சோறு என்று அழைத்தது ரூபக் என்று தான் நினைக்கிறேன்.



முன்பெல்லாம் சுடு சோறு என்று அழைத்துவிட்டால் போதும் முசு முசுவென்று கோபம் பொத்துக் கொண்டு வரும், இப்போதெல்லாம் அப்படி அழைத்தால் வெறும் சிரிப்போடு கடந்து விடுவதினால் அவ்வாறு அழைப்பதில் இருந்த அலாதி வெகுவாக குறைந்துவிட்டது. அவனுக்கு முப்பதை தொட இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. நல்ல நெடு நெடு வென வளர்ச்சி, மெலிந்த தேகம் என்றாலும் சற்று தொப்பை வெளித்தள்ளியிருக்கிறது. மேல் வரிசை பற்களில் ஒன்று வெளித்தள்ளி இருக்கும், அது தான் அவனுக்கு அழகே, ஆனால் தனது மொத்த அழகையும் இந்த ஒற்றைப் பல் கெடுப்பதாய் அடிக்கடி நொந்து கொள்வான். இதுதான் உனக்கு அழகு என்று எவ்வளவோ சொல்லியும், கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

லொட லொடவென்று பேசிக்கொண்டு இருந்தவன் தான், ஒருமுறை பனிரெண்டாம் வகுப்பில் தோழியொருத்தியை கிண்டல் பண்ண முற்பட்டு, அவள், எல்லோர் முன்னிலையில் வைத்து இவனை சராமாரியாக கலாய்த்து விட, அன்றிலிருந்து என்னிடம் கூட அளவோடு பேசிவருகிறான். பெண்களென்றால் சுத்தமாக பேசுவது கூட இல்லை. பிறகொரு பொழுதில் அந்த தோழி வந்து வருத்தம் தெரிவித்தும் அவளிடம் கூட பேசாமல் தவிர்த்து விட்டான். கல்லூரி சேர்ந்த இரண்டாம் வருடத்திலிருந்து எங்கள் வட்டத்துடன் மட்டும் கொஞ்சம் கல கலப்பாக பேச ஆரம்பித்திருக்கிறான், ஆனால் வகுப்புத் தோழிகளுடன் பேசுவதை இன்றுவரை தவிர்த்து வருவது பெருத்த ஆச்சர்யம் தான்.

ஒருமுறை, யார் யாருக்கு என்ன பிடிக்குமென்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெரைட்டியை சொல்லிக் கொண்டிருக்க, சுடு சோறு பிடிக்குமென்று சொன்ன அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாலும் நக்கலடிக்கிறான் என்று பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை கல்லூரி கேண்டினில் அப்போது தான், வடித்துக் கொண்டு வந்து பரிமாறிய ஆவி பறக்கும் சுடு சாதத்தை, நாங்கள் ஆற வைத்துக் கொண்டிருக்க, அவன் உண்டு முடித்து இன்னொருமுறை, சாதம் கொண்டு வாருங்கள் என்று கடை ஊழியனிடம் சொன்ன போது தான் அவன் உண்மையிலையே சுடு சோறுதான் என்று விளங்கியது!

இவனிடம் இருந்து எப்படியாவது சுடு சோற்றின் ரகசியத்தை கறந்து விட வேண்டுமென்று, ஆவி, திட்டமிட்டு நாங்கள் அனைவரும் உற்சாக பானம் அருந்த கடைக்குச் சென்றோம். ரெண்டாவது சுற்று முடிந்து மூன்றாவது சுற்றின் இறுதியில் மெல்ல சீனு ஆரம்பித்தான். முதலில் சொல்ல தயங்கியவனை மெல்ல தேற்றி சொல்ல வைத்தோம், அவன் சொன்னது என்னவெனில்...

டேய் மச்சி,.. உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியலை, எனக்கு சுடு சோறென்றால் அவ்வளவு பிரியம், சுடு சோறு மட்டும் இருந்துவிட்டால் போதும், சாம்பார், ரசம், கூட்டு பொரியல் கூட தேவையில்லை, வெறும் வடிச்ச கஞ்சியை வைத்தே சாப்புட்டு முடித்துவிடுவேன் அந்த அளவிற்கு சோற்றின் மீது பித்து. சுடு சாதத்தின் ருசியை அறிய இலையில் சாப்பிட வேண்டும் மாப்ளைகளா ...



"என்னடா சொல்றே" என்று வினவிய ரூபக்கை கை காட்டி அமர்த்திவிட்டு தொடர்ந்தான்.

சுட சுட சாதத்தை வாழையிலையில் அள்ளி வைத்தால், சூட்டினை தாக்கு பிடிக்க முடியாமல் இலையும் சற்று வெந்து கறுத்துப் போகும், அதோடு சாம்பார் கலந்து பிசைந்து சாப்பிட்டால் தேவலோக சுவையை தரும் டா என்றான், கண்களை அகல விரித்தபடி.

நம்ம முன்னவர்கள் வைத்தியத்திற்காக இலைகளில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், எனக்கு அது தரும் மணத்திற்காகவே இலைகளில் சாப்பிட பிடிக்கும். தாமரை, தேக்கு இலைகளில் சாதத்தை சாப்பிட்டர்வகளுக்கு மட்டுமே தெரியும் சோற்றின் சுவை. உங்களில் எத்தனை பேர் இலைகளில் சாப்பிட்டிருப்பீர்கள் என்று தெரியவில்லை, அப்படியே சாப்பிட்டிருந்தாலும் இப்படி ரசித்து ருசித்திருப்பீர்களா என்பது சந்தேகமே என்று எங்களை நோக்கியவனை, பேச்சை திசை மாற்ற முயற்சித்தோம், இருந்தும் விடாமல் தொடர்ந்தான். அப்படி இலைகளின் மீது பிரியமுள்ள எனக்கு சுடு சோறென்று பெயரே வைத்து விட்டார்கள் என்று சுடு சோற்றின் ரகசியத்தை அந்த மதுக் கூடத்தில் வைத்து உடைத்தான். ஆவி, ஏதோ சொல்ல அப்படியே பேச்சு திசை மாறி கிளம்பி வந்தோம்.

கல்லூரி முடிந்ததும், இலை விரும்பியான அவனுக்கு, வட இந்தியாவில் வேலை கிடைக்க, அங்கு இடம் பெயர்ந்துவிட்டான். இடையிடையே நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொள்கையில் சுடு சோறும், இலையும் இல்லாமல் முடியாது எங்களது பேச்சு.

சுடு சோறுக்கு நாளை கல்யாணம், வட இந்திய பெண்ணை காதலித்து மணக்கப் போகிறான். முதல் நாள் கல்யாண வரவேற்பில், வட மற்றும் தென்னிந்திய உணவுகளை கலந்து கட்டி பிரமாதமான விருந்து வழங்கினார்கள், என்ன, இலைக்குப் பதிலாக, காகித இலையில் விருந்து படைத்தார்கள்....

  

Post Comment

ஆகஸ்ட் 08, 2015

சண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்



நையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்குனர் பாலாவின் தயாரிப்பு என்றதும் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு எகிறியதும் உண்மை தான். பெரிய சறுக்கல் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய திறமை சற்குணத்திடம் இருப்பதாக நம்பிய என்னை, அப்படில்லாம் நம்ப படாது என்று மீண்டுமொரு மகா குப்பை படத்தை கொடுத்திருக்கிறார். தோல்வி படம் கொடுக்கலாம் தப்பில்லை, ஆனால் இப்படியொரு தோல்வி படத்தை கொடுக்க கூடாது திரு. சற்குணம் அவர்களே!  
கச்சிதமாக திரைக்கதை உங்களுக்கு செய்ய தெரியும் என்று நம்பிக் கொண்டிருந்த எங்கள் எண்ணத்தில் பெருத்த அடியை கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறீர். எந்த இடத்திலும் படத்தோடு இணைந்து கொள்ள முடியாமல் தவித்த தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும். மூன்றாம் தர இயக்குனர்களின் படங்கள் கூட கச்சிதமான கட்டுக்குள் இருக்கிறது உங்களது படம் எவ்வித இலக்குமின்றி எங்கோ துவங்கி எங்கோ முடிகிறது. ஒரு காட்சி கூட மனதில் அழுத்தமாய் பதிய மறுத்து தனித்தே நிற்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் அனைத்தும் மொக்கை தான். 

இத்துப் போன பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பாதியை, படத்தின் மைய கருவான ரெண்டு ஊரின் குளத்து பிரச்சினைக்கு கொடுத்திருந்தால் கூட படம் ஓரளவு அதன் பாதையில் பயணித்திருக்கும். எப்ப பார்த்தாலும் மோடு முட்டிக சண்டை போட்டுக் கொண்டு திரியும் ஊர்க்கார பயலுகள, நம்மாளு நாயகன் கடைசியில நாலே நாலு வசனம் பேசியதும், ஊரானுங்க கர்நாடாக காவேரித்தண்ணி மேட்டர பேசுற அளவுக்கு புத்திசாலியா ஆக்கின உங்க நரித்தந்திரத்தைக் கண்டு வியக்குறேன் ஜி!

அப்புறம் காதலிகிறாளா இல்லையா என தெரியாமலையே ஆப்பிள் போனை வாங்கி கொடுத்துவிட்டு, ஹீரோ பழைய சைக்கிளில் ஊரை வலம் வருவது கண் கொள்ளா காட்சி! கம்பீரமா திரிஞ்ச மில்லுக்காரனை கடைசியில் இப்படி காட்டுவீங்கன்னு யாருமே நினைச்சி கூட பாக்காத டிவிஸ்ட். அதுக்கு அப்புறமும் கொடுத்தீங்க பாருங்க அஞ்சாறு கிளைமேக்ஸ் சாமீ இதுதான் படைப்பின் உச்சம். 

தேர்ட் அம்பையர், ஒரு கையில்லாத மனிதர் கடைசியாக தண்ணீர் அள்ளி பருகுவது, பொங்கல் கொண்டாட்டம் இப்படி சின்ன சின்ன சுவாரிசயம் தவிர்த்து படம் சின்ன கிச்சு கிச்சை கூட மூட்டவில்லை.

சொந்த ஊரில் படம் எடுத்துவிட்டு, ஊர்க்காரர்களை பயன்படுத்தாம போனா சாமீ குத்தம் வந்துடும்ன்னு, பல ஆட்கள் சினிமாவுக்கே பழகாத முகத்தை பயன் படுத்தியது சிறப்பு, அதைவிட சிறப்பு அவர்கள் டையலாக் பேசுகையில் முகத்தை காட்டாமல் போனது.   

இந்த மாதிரி சவ சவ என்று நகர்ந்து கதைகளை தூக்கி பிடிப்பது பாடல்கள், அதையும் எந்த இடத்தில் பாடலை வைக்க வேண்டுமென்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் பாடல் வைத்த உணர்வை தந்தது எனக்கு மட்டுந்தானா என்று தெரியவில்லை. 



இட்லிக் கொத்து மாதிரி இம்புட்டு பொத்தலா சினிமா எடுத்ததுக்கு எதுக்குன்னே இத்தன உதவி இயக்குனர்கள் இந்த படத்துல வேலை செஞ்சாங்க? அவசரத்துல எடுத்த படம் மாதிரி தெரியல, தல கணத்துல எடுத்த மாதிரி இருந்தது.

கடேசியா ஒரே ஒரு கேள்வி, எதுக்கு பாஸ், சண்டி வீரன்னு தலைப்பு வைச்சிங்க அதை மட்டுமாவது நியாயப் படுத்துங்க உங்களுக்கு புண்ணியமா போவும்? 

  

Post Comment

ஆகஸ்ட் 04, 2015

ஆட்டம் - சு. வேணுகோபால்




"பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி, படைப்பாளிகளுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன் நான், ஏனெனில் முதல் முறை சறுக்கி, பின் வீறு கொண்ட எழுந்த பலரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் சொதப்பினாலும் மறு கதையின் மூலம் வாசகனின் ஆதர்சனாக முடியும் ஆகையால் ஒரு சோறு பதம் இங்கு எடுபடாது என்றே நம்புகிறேன். ஆனால் திரு. சு. வேணுகோபாலின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துவிடலாம் ஒரு சோறு பதத்திற்குள். நன்றாக நினைவிருக்கிறது, சென்ற தீபாவளிக்கு முந்தைய தின இரவினில் தான் திரு. சு. வேணுகோபாலின்  "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற நூலை வாசித்தேன், நூலை கையிலெடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன். முதன் முதலில் வாசிக்கும் எவருக்கும் இவரின் எழுத்துகளை பிடித்துப் போகும் அந்தளவிற்கு விறு விறுவென நகரக் கூடிய எழுத்து.

தி. நெருஞ்சி தந்த கிறக்கத்தில், "பால் கனிகள்". "ஆட்டம்" என்று மேலும் இவரின் இரு படைப்புகளை கடந்தப் புத்தக திருவிழாவில் வாங்கி வந்திருந்தேன். அதில் "ஆட்டத்தை" வாசிக்க துவங்கினேன், ஆச்சரியம் என்னவெனில் இந்த நூலையும் ஒரே நாளில் வாசித்து முடித்தது தான். தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும்  சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர். 

சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது,  இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!

கதைச்சுருக்கம்:

கபடியில் சிறந்து விளங்கிய வடிவேல், அதே ஊரை சார்ந்த கனகம் என்னும் பெண்ணை காதலிக்கிறான், இதற்கு அவனின் சக கூட்டாளிகளும் உதவுகிறார்கள், முதலில் மறுக்கும் கனகம் பிறகு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் வெவ்வேறு சாதியென்பதினால் ஊரை விட்டு ஓடி, பக்கத்து நகரத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் பிறந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் திருப்பமாக, கூட வேலை செய்யும் ஒருத்தனோடு காதல் கொள்கிறாள் கனகம், அதனையறிந்து வடிவேல் கண்டித்ததும், கள்ளக் காதலனோடு ஓடியும் விடுகிறாள். வேறுவழி தெரியாமல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே, தன்  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான் வடிவேல். அவமானம் அவனை துரத்துகிறது. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து தான், பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான், அப்படி வைராக்கியத்தோடு இருந்த வடிவேல் போட்டியில் ஜெயித்தானா ? என்பது தான் முதன்மை கதை. இதனிடையே சில கிளைக் கதைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தாலும் முதன்மை கதை நகர்வை துளியும் தடுக்கவில்லை.

இவரின் பலமே, எத்தனை கிளைக்கதைகளை புகுத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருப்பதாய் நகர்த்துவது தான். மற்றொன்று கபடி போட்டிகளின் போது நட்சத்திர வீரர், சக வீரன் கண்முன்னே வளருவதை கண்டு பொருமும் மன நிலையை அவ்வளவு நெருக்கமாய் பதிவு செய்திருப்பது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன், மனைவியும் இன்னொருவனோடு ஓடிப் போய்விட, தனது விபரம் தெரியாத இரு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் படும் இன்னல்களை. மனக் குழப்பங்களை, அவமானம் தரும் வலிகளை  முடிந்தளவிற்கு பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இறுதியாக ஒரு திருப்பத்தை தந்து முடித்திருப்பது விறுவிறுப்பு!

ஆசிரியருக்கு இந்த சித்திகளின் மீது என்ன தீரா வன்மமோ தெரியவில்லை, திசையெல்லாம் நெருஞ்சியில் சித்தி காடில்யா, வரம்பு மீறி உறவு கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார், அதே மாதிரி இந்த நாவலிலும் சித்தி நாகமணி என்பவள் மகன் உறவு வரும் காளையனிடம் உறவு கொள்வதாய் சித்தரித்திருக்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் அவரிடம் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே வாங்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது, அந்த ஆவலை முழுமையாய் தீர்த்து வைக்கிறது உள்ளிருக்கும் எழுத்தும்.

திசையெல்லாம் நெருஞ்சி பற்றிய எனது பார்வைகளை படிக்க இங்கு செல்லுங்கள் : திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


=====================================================================

வெளியீடு: தமிழினி பதிப்பகம்

வருடம் : 2013 திசம்பர்

மொ . பக்கங்கள்: 120

விலை : 90/-

======================================================================

நன்றி: vasagarkoodam.blogspot.com


Post Comment

ஜூலை 23, 2015

சொர்க்க பூமி சென்னை ...


சென்னை வந்த புதிதில் ஊர்க்கார அண்ணன் ஒருவரோடு மெரீனா கடற்கரைக்கு சென்று வந்தேன், அதன்பிறகு சென்னையில் பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்த இடங்களெல்லாம் என் நினைவிலிருந்து அழிய துவங்கி ஒரு கட்டத்தில் சுத்தமாய் நினைவிலையே இல்லாமல் போனது. வெறும் இரண்டே இரண்டு மணிநேரத்தில் என்னுள் பிரமாண்ட பிம்பத்தை தோற்றுவித்திருந்த ஒட்டு மொத்த சென்னையையும், அதனுள் வாழும் மனிதர்களையும் கிட்டத்தட்ட வெறுக்கத் துவங்கியிருந்தேன். நமக்கான இடமில்லை இதுவல்ல, எவ்வளவு சீக்கிரம் இதைவிட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிவிட வேண்டும், வெளியேறுவதற்கான காரணிகள் என்னவென்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து இன்றோடு மிகச்சரியாக ஒன்பது வருடங்கள், ஐந்து மாதங்களாகின்றன. ஆம், இத்தனை வருடங்களும் சென்னையில் தான் இருக்கிறேன், இனிமேலும் சென்னையில் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்.

மெரினாவில் அன்று கண்ட காட்சிகளும், ஏற்படுத்திய தாக்கங்களும் என்னை அவ்வாறு யோசிக்க வைத்தது, இப்போது எந்த சூழலிலும் என்னால் வாழ முடியுமென்ற நம்பிக்கையை விதைத்திருப்பதும் அதே சென்னை தான். சென்னை போன்ற கேடு கெட்ட மாநகரத்தையும், அதே நேரத்தில் சென்னை போன்ற ஆகச்சிறந்த மாநகரத்தையும் உங்களால் பார்க்க இயலாது. ஆம் கண்ணாடி போன்றது தான், நீங்கள் என்னவாக காண ஆசைப் படுகிறீர்களோ அவ்வாறே தான் அதன் பிம்பமிருக்கும். வளர்ச்சி என்ற ஒன்று இல்லாத எதையும் நாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், குறிப்பிட வயதுக்கு மேல் வளாராமல், அப்படியே இருந்தால் அதை குழந்தை என்றா சொல்கிறோம்? ஆகவே பெரு நகரங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கின்றன. மக்களும் அதற்கு தகுந்தாற் தங்களை அடுத்த நிலைக்கு மாற்றிக் கொண்டிருக்கினறனர், முடியாதவர்கள் தான் அமர்ந்து கொண்டு பழமை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை வழங்கும் இந்த சென்னை மாநகரத்தை, சிறந்த ஆசான் என்று கூட சொல்லலாம். பலவித கற்பிதங்களை வழங்கிய பூமி இது. ஊரிலிருந்திருந்தால் கூட இத்தனை விதமான மனிதர்களை சந்தித்திருப்பேனா என்பது சந்தேகம் தான். பொய், புரட்டு, களவு, கொலை இப்படியான கரை படிந்த மண்ணில் தான் உண்மை, மனதுக்கு நெருக்கமான நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். சென்னையின் இரவுகள் அவ்வளவு அலாதியானது,  அனுபவித்தர்களுக்கு மட்டுமே அதன் சுகானுபவம் தெரியும். பாதியிலையே ஓடியிருந்தால் இத்தனை அனுபவங்களை சேகரித்திருக்க முடியுமா என்பது ரொம்ப சந்தேகம் தான்.

சென்னை வாசிகள் மிக மோசமானவர்கள் என்பது பெரும்பாலான அறிவு ஜீவிகள் வைக்கும் குற்றச்சாட்டு.  நான் கேட்டவரை, சென்னையின் பூர்வீக குடிகள் வெகு குறைவு, என்னைப்போல் கிராமத்திலிருந்து  பிழைக்க வந்தவர்கள் தான் இங்கு அதிகம் வசிக்கின்றனர், அதனால் தான் வருடா வருடம் சென்னையின் பெயர் தாங்கிய விரிவாக்கம் செங்கல்பட்டை கடந்து அசுரத்தனமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இந்த மோசமானவர்கள் வரிசையில் முதலில் வருபவர்கள் யார்? அப்போ, சென்னையின் பூர்வீக குடிகள் எல்லோரும் ஒழுக்க சீலர்களா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது, அதே கேள்வியை உங்களிடமும் முன் வைக்கிறேன், மனசாட்சிக்கு விரோதமின்றி பதில் கூறவும், உங்கள் ஊரிலிருக்கும் அனைவரும் நியாயஸ்தர்கள் தானா ?  எல்லா ஊரிலும் சில விதிவிலக்குகள் இருக்கும், அவர்களை புறந்தள்ளி விட்டு பிழைப்பை பார்ப்பது தான் அறிவார்ந்தவர்கள் செய்யும் வேலை.

எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை சென்னை ஒரு சொர்க்க பூமி தான், அதை நாம் அணுகும் விதத்திலிருக்கிறது சொர்க்கமும், நரகமும் ....
 


    

Post Comment

ஜூலை 06, 2015

இரவு நேரப் பேருந்து பயணங்கள் ....


பேருந்துப் பயணங்களை எந்த அளவிற்கு அலாதியாக எண்ணி ,பயணம் செய்தேனோ அதே அளவிற்கு வெறுக்கவும் செய்யத் தூண்டுகின்றன சமீபத்திய பேருந்து பயணங்கள். சென்னையின் மாநகரப் பேருந்துகளின் பயண அனுபவங்களை சொல்ல சொல்ல சளைக்காது, அவ்வளவு சுவாரசியமாய் இருக்கும். சில நேரங்களில் மண்டையை கொதிக்க வைக்கவும் செய்யும். எதுவாக இருந்தாலும் குறுகிய நேர பயணமென்பதால் பெரும்பாலும் மனதில் நிலை கொள்ளாமல் எளிதில் மறைந்து விடுகின்றன, ஆனால் தொலை தூர பயணங்கள் தரும் சுகானுபவங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது. ஐந்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு கூட இன்னும் மனதின் ஓரத்தில் வடுவாய் இருக்கின்றது. அப்படியொரு வல்லமை இந்த நெடியப் பயணங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

சனி இரவு சென்னையிலிருந்து கிளம்பி ஊருக்கு சென்று, மீண்டும் ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பி சென்னை சேர்வது இதுதான் பயணம். சோ, அடுத்தடுத்த இரண்டு இரவுகளை பேருந்தோடு கழிக்க வேண்டிய கட்டாயம். இப்போதெல்லாம் தனிப்  பயணமென்றால் பக்கத்தில் அமர்பவர்களை எண்ணித்தான் கலங்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆசாமியும் ஒவ்வொரு ரகத்தில் வருவார்கள் நாம் தான் சிக்கி சிதை பட நேரிடுகிறது. அதற்கு தகுந்தாற்போல் தான் இருக்கைகளும் கிடைக்கின்றன. எல்லாம் சரியாக அமைந்து, மகிழ்ச்சியான பயணமாக இருக்கப் போகிறது என்று எண்ணி முடிப்பதற்குள் எதாவது ஒரு சக்கரம்  தன் மூச்சை நிறுத்தி நமது எல்லா சந்தோசத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றன! ஆகையால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தான் பயணத்தை துவக்குவதினால் பெருத்த ஏமாற்றங்கள் கிடைப்பதுமில்லை!

சனி இரவு அருகில் அமைதியான ஜென்டில்மேன் அமர எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சுகானுபவமாக இருந்தது, திரும்பி ஞாயிறு இரவு விதியின் சதிப் பிடியில் வசமாக சிக்கி கொண்டேன். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்க கடைசி இருக்கைதான் ஆக்கிரமிக்கப் படாமலிருக்க, வலப்பக்க சன்னலோர இருக்கையை நான் ஆக்கிரமித்தேன். அப்பவே முன்னிருந்து பின்னோக்கிய ஒரு யுவதியின் புன்னகையில் ஒரு ஏளனம் இருந்தது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சன்னல் வழியே அடுத்த பேருந்தினுள் என் கவனத்தை செலுத்தினேன். பதினைந்து நிமிடங்கள் தாமதாக கிளம்பி மெல்ல ஊர்ந்து அரியலூரை கடந்து ஜெயங்கொண்டம் சாலையில் ஏறியதும் ஓட்டுனருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, மனுஷன் பாடாவதியாக ஓட்ட ஆரம்பித்து விட்டார். இரண்டு லாரிகளின் பின் பக்கங்களை முத்தமிட வேண்டியது நூலிழையில் தவிர்த்தாலும் வேகத்தை மட்டும் குறைக்கவில்லை. மனதினுள் சின்ன ஜெர்க் ஆனாலும், இன்னைக்கு சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நம்பினேன்.(அட சென்னைக்கு தாங்க). அதுவரை கடைசி இருக்கையில் ஒருத்தரும் ஆக்கிரமிக்கவும் இல்லை. 

ஜெயங்கொண்டம் வந்ததும் ஆறேழு இந்தி வாலாக்கள் ஏற, பேருந்தே அதிர ஆரம்பித்து விட்டது. சொல்லி வைத்தாற் போல் என்னருகில் அமர்ந்து கொண்டான் அந்தக் கூட்டத்தின் பாஸ். என்ன பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை, இன்னொன்று அவர்களின் செய்கைகள் மண்டையை கொதிநிலையிலையே வைத்திருந்தது. அதுவரை குதிரை மாதிரி சீறிய டிரைவரும், வண்டியை கழுதை மாதிரி நகர்த்த ஆரம்பித்து விட்டார். ஒருவழியாக வண்டி விக்கிரவாண்டியில் ஓய்வுக்காக நிறுத்த, சட சடவென்று ஓடி இரண்டு பேர் கைகள் நிறைய முறுக்கு, மிக்சர், லேஸ் இப்படியான நொறுக்குத் தீனிகளை வாங்கி வந்து கொறிக்க ஆரம்பிக்க, ச்சே என்ன இவர்கள் என்று எண்ணினாலும் பிறகு , அவர்கள் காசு, அவர்கள் வயிறு நமக்கென்ன என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். அப்பொழுதான் என்னருகில் அமர்ந்திருந்த அந்த பாஸ் பேக்கினுள்ளிருந்து ஒரு பெப்சி பாட்டிலை எடுத்தான். கொஞ்சம் கடி, கொஞ்சம் குடியொடு பெப்சி பாட்டிலை காலி பண்ணி தூக்கி எறிந்துவிட்டு, பேருந்து கிளம்பிய சற்று நேரத்தில் வண்டிக்குள் வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டான். அப்போதுத்தான் வாடையும் மெல்ல வர ஆரம்பித்தது, ஆம் பெப்சிக்குள் மது கலப்படம். 

ஏற்கனவே உறக்கமின்றி உழன்று கொண்டிருக்க, கூட அந்தப் பக்கி குடைச்சலைக் கொடுக்க, மூன்றரைக்கு வடபழனியை வந்து சேர வேண்டிய பேருந்து ஐந்து மணிக்கு வந்தடைந்தது நெஞ்சில் இன்ப சுரக்க ஆரம்பித்தது. இப்படி எத்தனை சலிப்புகள் வந்தாலும் பேருந்துப் பயணங்களின் மீதுள்ள காதல் குறையவே மாட்டேன் என்கிறது. வேறு வழியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!   
     

Post Comment

ஜூலை 01, 2015

கேப்டனுக்கு ஒரு கடிதம் ....


திரு. விஜயகாந்த் அவர்களே,

வணக்கம், முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், ஆளும் மந்திரிகள் அனைவரும் இடைத் தேர்தலில் கண்ணயராமல் பணியாற்றி, ஜெயாவின் பாதத்தில் வெற்றியை? சமர்பித்து விட்டு ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி? தலைவர் என்ற முறையில் விவசாயிகளின் மீதான உங்களின் திடீர் கரிசனத்திற்கு மனம் நிறை நன்றிகள்! 

சோசியல் மீடியாவில் உங்களை வெறும் கேலிப் பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றனர், அதற்கெல்லாம் கலங்கிவிடாமல் உங்களது அரசியல் பயணத்தை இன்னும் இன்னும் ஆழத்தில் செலுத்திக் கொண்டு வருவது நாடறிந்ததே! அந்த வகையில் சமீபத்திய டெல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பை முறியடித்து பெரும் வெற்றி கண்டிருக்கிறது உங்களின் யோகா பயிற்சி!

எல்லா அரசியல் தலைவர்களிடம் இல்லாத சிறப்பு உங்களிடம் இருக்கிறது என்னவெனில் உள்ளதை உள்ளபடி சொல்லும் கலப்படமற்ற பேச்சு! அந்த சிறப்பான பேச்சே உங்களுக்கு ஆப்பாக அமைவது கவலை தரும் ஒன்று! எவ்வளவு  ஆழமென்றாலும் அதை  பார்த்து தீருவேன் என்று உறுதியோடு செயல்படும் உங்களது தீரத்தை பல சுவரொட்டிகளில் உங்களது விசுவாசிகள் கொச்சை தமிழில் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்க. சில மாதங்களாக தங்களது தொலைக்காட்சியும் அதே வேலையை செவ்வனே செய்து கொண்டிருப்பதை என்ன செய்வது என தவித்துக் கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன்!

உங்களின் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் பெரும் வெற்றியடைந்து மக்களின் துன்பங்களை போக்கி வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன், பொது வெளியில் பேசுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது அதை உணர்ந்து உங்களை மாற்றிக் கொண்டு செயல்படாதவரை உங்களின் தொண்டர்களைத் தவிர ஒருத்தரும் உங்களை மதிக்கப் போவதில்லை என்பது சற்று கசப்பான உண்மை! அரிதிலும் அரிதாக தான் சில சந்தர்ப்பங்கள் கிட்டும் அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! 

குறுவை சாகுபடிக்கான பாசன தண்ணீர் பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விவசாயிகளை சென்று சேரவில்லை, "காவிரித்தாய்?" க்கு இடைத்தேர்தல் குடைச்சல் இருப்பதினால் இப்போதைக்கு இதன் மீதான கவனம் விழ வாய்ப்பில்லை. ஓட்டு நேரத்தில் தான் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் போன்ற அடித்தட்டு மக்களின் நினைவுகள் வரும் ஜெயா விற்கும், கருணாநிதிக்கும்!


திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறீர்கள், அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் துளிர் விட்டிருக்கிறது உங்களின் திடிர்க் கரிசனம் என்றாலும் உங்கள் குரல் ஒலித்தது சற்று ஆறுதல் தான்.

கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஜெயாவை திட்டவும், கருணாவை காய்ச்சி எடுக்கவும் பயன்படுத்தாதீர்கள், இன்னொன்று நீங்கள் எப்படி காரசாரமாக பேசினாலும் கடைசியில் காமெடியாக போய் தங்களையே அடி மட்ட அளவிற்கு வைத்து கலாய்த்து விடுகிறார்கள் நம்மவர்கள்! இதில் உங்கள் பங்கும் கணிசமாக இருக்கிறது, ஆம் எங்கையாவது ஏதாவது சிக்காதா?, பொழுது போகாதா ? என்று தேடிக்கொண்டிருக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மத்தியில் பெரிய பந்தியே வைத்து விட்டுப் போய்விடுகிறீர்கள்  அவர்கள் வைச்சி செய்யாமல் வேறு என்ன செய்வார்களாம்?

பாருங்கள் நானே சொல்ல வந்ததை சொல்லாமல் மீதி எல்லாத்தையும் உளறிக் கொண்டிருக்கிறேன், சரி மேட்டருக்கு வருகிறேன்,

நீங்கள் வாக்கு வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் செய்து கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் எவன் அதிக காசு கொடுக்கிறானோ அவனுக்கு வாக்கை செலுத்தி விட்டு வானத்தை வேடிக்கை பார்க்கிற கூட்டம் நாங்கள் நீங்கள் என்ன காட்டு கத்து கத்தினாலும் எங்கள் மண்டையில் ஏறவே ஏறாது.



காவிரித்தாய் என்று விளித்து ஜெயாவிற்கு விழா எடுத்த சில கோமாளி விவசாய சங்கங்கள் போல் நீங்களும் கழுத்தில் பச்சை துண்டு போட்டால் மட்டும் விவசாயி ஆகிட முடியாது, அவர்களின் கஷ்டங்களை அடி மட்டத்தில் இருந்து அணுக வேண்டும்,அல்லது அறிந்து கொள்ள முனைய வேண்டும்! அதை தவிர்த்து விட்டு பச்சை துண்டை போட்டுக்கொண்டு, எனக்கு ஓட்டு போடுங்கள் உங்களை தங்க தட்டில் வைத்து தாங்குகிறேன் மக்களே என்று கூப்பாடு போட்டு துயரில் இருப்பவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்!

திருவாரூரில் ஆர்ப்பாட்டம் பண்ணிய அன்று உங்கள் தொலைக்காட்சியில், தாங்கள் விவசாயிகளின் துயர்களை கேட்டறிவது மாதிரி ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்ததை காண நேரிட்டது. விவசாயிகளும், கழனியில் வேலை செய்யும் பெண்களும் களைத்துப் போயிருக்க, நீங்கள் மடிப்பு கலையாத உடையில், முகத்தில் பாதி மறைக்கும் அளவிற்கு குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! சிறிது நேரம் வெயிலில் நிற்கவே கூசுகிறது உங்கள் கண்கள், பொழுதினிக்கும் கொளுத்தும் வெயிலில் நின்று உடலெரிந்து சாகும் விவசாயி நிலையை எண்ணி பார்த்திர்களா?

எதுவும் செய்யமுடியவில்லை என்று கையை அகல விரிப்பதை விட கொடுமையானது இப்படியான கோமாளித்தனங்கள்! அவர்களோடு அவர்களாக கலந்து கொள்ள முடியவில்லை எனில், மற்ற கேடு கெட்ட அரசியல்வாதிகளைப் போன்று தள்ளி நின்று வேடிக்கைப் பாருங்கள் "விவசாயிகளின் இறப்பை"!

கொதிப்புடன்

கிராமத்தான்!

Post Comment

ஜூன் 27, 2015

"Poet the Great"- Short Film


நண்பர் திரு. ஆர் வி சரவணன் இயக்க, ஆவியும், நானும் நடித்த "சில நொடி சிநேகம்" குறும்பட ஷூட்டிங்கில் தான் திரு. துளசிதரன் அவர்களை முதன்முதலில் சந்தித்தேன். அவரின் இயல்பான பேச்சு, எளிதில் அவரோடு ஒன்றிவிடலாம்.  துளசி சார் தேர்ந்த "கதைசொல்லி" என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவர், என்னைப்பொறுத்தவரை அவரொரு தேர்ந்த நடிகர், பிறகுதான் கதை சொல்லி மற்ற எல்லாமும் என்பேன்! புதிய நபர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதில் சிலவற்றை இவரிடமிருந்து சிலவற்றை கற்றிருக்கிறேன். 

ஆசிரியர் என்பதாலோ என்னவோ ரொம்ப எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை இருக்கிறது. இந்த வசனத்தை இப்படித்தான் சொல்லவேண்டும், இந்தக் காட்சிக்கு இப்படித்தான் முகபாவனை இருக்கவேண்டும் என்று மிகவும் நாசூக்காக சொல்லி தருவதில் வல்லவர் என்று சொல்லலாம்! கும்பகோண பேருந்து நிலையத்தில் மிகுந்த படபடப்புடன் இருந்த என்னை, அமைதிப் படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த பெரிதும் உதவியதும் இவரே! அடுத்து திரு. ஆவி அவர்கள் இயக்கிய "காதல் போயின் காதல்"  என்ற குறும்பட ஷூட்டிங் தினத்தன்று சற்று அதிகமாக பேசி மகிழ நேரம் கிடைத்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன்!

வருடம் ஒரு குறும்படம் என்ற கொள்கையில் இந்த வருடம் இயக்கியிருக்கும் படம் "Poet the Great". நண்பர்களையும், சக பதிவர்களையும் நடிக்க வைத்து எடுத்திருக்கிறார், இதில் எனக்கொரு வாய்ப்பும் தருவதாக சொன்னார், என்னால் தான் இம்முறை கலந்து கொள்ள இயலாமல் போனது (மன்னிக்கவும் சார், நிச்சயம் அடுத்த படைப்பில் இணைந்து கொள்கிறேன்). 





"Poet the Great"

வரலாறுகளை பெரும்படமாக  பண்ணுவது என்பதே வெகு சிரமம், அதை குறும்படமாக சுருக்கி பண்ணுவதின் கஷ்டம் நாமறிந்ததே, அந்த வகையில் இந்த முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பெரிய அனுபவம் இல்லாதவர்களை கொண்டு ஓரளவிற்கு நேர்த்தியான படைப்பாக்கியதில் தெரிகிறது இவரின் அனுபவம். புதிய நடிகர்கள், சின்ன சின்ன தொழில் நுட்ப குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் முழுமையான படைப்பு தான்.  மேலும் அடுத்தடுத்த படைப்புக்களில் இன்னும் சற்று சிரத்தை எடுத்து தரமான படைப்பாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்! எங்களின் எல்லா முயற்சிகளிலும் "பில்லராக" இருக்கும் கீதா ரங்கன் அவர்கள் இந்தப் படத்தின் ஆணி வேர் மட்டுமல்ல நடிக்கவும் செய்திருப்பது நிறைவைத்  தருகிறது!       


மிகச் சிறந்த உடல்மொழியும், வசன உச்சரிப்பகளுமாய் படத்தின் முதுகெலும்பாகிய எங்கள் தலைவர் திரு. துளசி அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக் கொள்கிறேன்!

படத்தினை நீங்களும் பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிருங்கள், அடுத்தடுத்த படைப்புகளுக்கு உதவியாக இருக்கும்!

இப்படத்தில் நடித்திருக்கும் எங்களின் வாத்தியார் பாலகணேஷ் அவர்களுக்கும், திரு. R V சரவணன் அவர்களுக்கும், கலைப்பெட்டகம் திரு. ஆவி அவர்களுக்கும், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


லிங்க்:


                                                                        Part - 1



Part - 2







Post Comment

ஜூன் 24, 2015

சண்டி வீரன் ...


நையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இனி,  இவரின் படங்களை முதல் நாளில் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்த என்னை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது சண்டி வீரன் முன்னோட்டம். தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாய்ச்சலால் பாய்ந்திருப்பார் என்று தெரிகிறது. ஆடியோ வெளிவந்து சில நாட்கள் ஆகியும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தான் இருந்தேன், பின்பொரு பொழுது போகாத சாயந்திர வேளையில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் தான் சண்டிவீரன் பற்றிய நினைப்பு வர பாடல்களை தரவிறக்கினேன். 



எடுத்த எடுப்பிலையே அல்டாப்பு மாப்பு என்னும் பாடலை கிளிக்க ஒருவித  கிலியை ஏற்படுத்த, ஒருவித தயக்கத்துடன் தான் "கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே, உச்சாணி கொம்பெத்தி என்னை உக்கார வைச்சானே" வரிகள் மனதை என்னமோ பண்ணியது. அன்றிரவு மட்டும் சுமார் நாற்பது தடவைக்குள் மேல் கேட்டிருப்பேன். என்னவென்று தெளிவாக சொல்ல தெரியவில்லை அப்படியொரு ஈர்ப்பிருக்கிறது இந்த பாடல் வரிகளில்! பாரதிராஜா அவர்களின் அன்னக்கொடி படத்தில் வரும் "பொத்தி வைச்ச ஆசை தான்", ரம்மி யில் வரும் "கூட மேல கூட வைச்சி" இப்படியான பாடல்களுக்குப் பின், என் மனதை பிசையும் பாடலாக இதுதான் இருக்கிறது. எத்தனையோ பாடல்கள் வந்தாலும் ஒரு சில பாடல்கள் மட்டுமே நம்முடைய பால்யத்தையோ, அதனுள் ஒளித்து வைத்திருக்கும் நினைவுகளையோ கிளறிவிட்டுச் செல்லும், அந்த ரகமென்று இந்த பாடலை உறுதியாகச்  சொல்வேன். 

இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை, பாடியது கூட அனிதா மற்றும் MLR கார்த்திகேயன் என்று இருக்கிறது, இரண்டு பேரின் குரலும் இந்த வரிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரொம்ப எளிமையான வரிகள், இந்த பாடல் முடிகையில் 

"ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் சோடியில்லையடி, 
ரெண்டும் ஒண்ணா சேரும் நேரம் வந்தா, 
ஒன்னு கொதிக்கும், 
ஒன்னு வெடிக்கும் 
காதல் இதுதாண்டி"! இது போதும் நின்னு பேசுமென்று நம்புகிறேன்! இந்தப் பாடலை கேட்கும்போதே இதன் காட்சிவடிவம் எப்படி இருக்குமென்ற ஆவல் மேலோங்குகிறது. 

 வழமையான காதல் பாடல்களைப் போல தான் இருக்கிறது இன்னொரு பாடலான "அலுங்குறேன், குலுங்கிறேன்" என்கிற பாடல்! 

இயக்குனர் பாலா தயாரிப்பில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சண்டிவீரனை காண ஆவல் அதிகமாகிறது. 

SN அருணகிரி என்பவர் இசையமைத்திருக்கும், இப்படத்தின் பாடல்  நகரத்தில் எப்படியோ, ஊர்ப்புறங்களில் ஒரு ரவுண்டு வருமென்று நம்பலாம் அதுவும், இந்த "கொத்தாணி" பாடல் பட்டையை கிளப்புமென்று நம்புகிறேன், பொறுத்திருந்து பார்ப்போம்!     
       

Post Comment