புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 31, 2015

"எங் கதெ" (நாவல்) - இமையம்




இதற்கு முன்னரே வீடியோ மாரியம்மன் என்ற நூலின் வாயிலாக எழுத்தாளர் இமையத்தைப்  பற்றி அறிந்திருந்தாலும், அதன் பிறகு வாங்கிய "ஆறுமுகம்" என்ற நூலை வாசிக்காமல் கிடப்பில் போட்டிருந்தமையால் , இமையத்தின் புதிய வெளியீடான "எங் கதெ" நாவலை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டினேன், ஒருநாள் சந்திப்பின் போது, "தலைவரே, "எங் கதெ" வாங்கிட்டிங்களா? எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க, நீங்க வாங்கவில்லை என்றால் நான் வாங்குகிறேன்" என்று சொன்ன தோழர் சீனுவை சாந்தப்படுத்தி, நான் வாங்கிவிடுகிறேன் என்று சொல்லி, அதே வாரத்தின் இறுதியில் டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி வந்தேன்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து, எழுத்தாளர் அபிலாஷ், இந்து தமிழ் நாளிதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்ததை படித்ததும், வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூலை மூடி வைத்துவிட்டு, அந்த வெற்றிடத்திற்குள் இந்த  "எங் கதெ" யை புகுத்திக் கொண்டேன். நண்பனை சந்திக்க கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருந்தேன், அவன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும், வசதியான இருக்கையாய் பார்த்து அமர்ந்து இந்நூலை வாசிக்க துவங்கினேன். அந்த நண்பர் வருவதற்குள் நூலில் பாதியை வாசித்து முடித்திருந்தேன். நூலின் நகர்வு அவ்வளவு விறுவிறுப்பு! சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்!

பொதுவாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் இருக்கும் அலாதி வேறெதிலும் இருக்காது, அப்படியொரு தீவிரம் காட்டுவார்கள் நம்மவர்கள், இந்த நம்மவர்களில் அடியேனும் அடக்கம்! அப்படியான ஒரு தனி நபரின் அந்தரங்கம் தான் கதையே! முதல் நான்கு பக்கங்களை வாசித்தாலே போதும் கதையின் வடிவத்தை யூகித்து விடலாம். சில நேரங்களில் கதையின் விறு விறு நகர்வை வட்டார எழுத்து நடை சிதைத்து படிக்கிற ஆர்வத்தை குறைத்து விடும். அப்படியொரு நாவல் ஒன்று எனது புத்தக அடுக்கில் மூன்று வருடங்களாக தூங்கி கொண்டிருக்கிறது. நல்லவேளை அம்மாதிரியான சிக்கல் இந்த புத்தகத்திற்கு இல்லை. கடலூர் வட்டார வழக்கில் புனையப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கான சிக்கல்கள் ஏதுமில்லை!

விபத்தில் கணவனை இழந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிட்ட, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு வருகிறாள் கமலா! ஊரிலிருக்கும் இளசிலிருந்து, பெருசு வரை எல்லோரும் அவளின் கவனத்தை ஈர்க்க படாத பாடுபட , அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இக்கதையின் நாயகனுக்கு கிட்டுகிறது. அதன்பின்பு குடும்பத்தை மறந்து, தங்கைகளை மறந்து, ஊரார்களை மறந்து, கடைசியில் தன்னை மறந்து இறுதியாக என்னவாகிறான் என்பதே மொத்தக் கதை. இம்மாதிரியான கதைகளையும், நிகழ்வுகளையும் அதைச்செய்யும் மாந்தர்களையும் நேரிடையாக பார்த்து வளர்ந்த சூழல் கொண்ட எனக்கு, இக்கதை பெருத்த அதிர்வை கொடுக்கவில்லை என்றாலும், உணர்வுகள் ததும்பிய எழுத்து நகர்வு மனக் கிளர்ச்சியை தூண்டுகிறது.

அச்சை வைத்து இயங்கும் சக்கரத்தைப் போல, கமலாவை சுற்றி தான் கதை நகர்கிறது. தன்னோட 28 வது வயதில் அவளிடம் தன்னை தொலைக்கிறான், 38 வயதில் தெளிவு பெறுவதாக முடித்திருக்கிறார். கமலாவை மிகத் தெளிவான பாத்திரமாக புனைந்து, அவளின் காலில் விழுந்து கிடக்கும் நாயை போல நாயகனை புனைந்திருப்பது அதகளம்! தனக்கே தனக்கு சொந்தமாக இருந்தவள் திடீரென பணி இடமாறுதலாகி போன இடத்தில் வேறொருவனிடம் வழிவதாக அமைத்து, இவனின் நிலை என்ன? இத்துணை வருடங்களாக என்னவாக இருந்தோம் என்ற சுய புரிதலை துவக்கி வைப்பது தான் எதார்த்தத்தின் உச்சம்!

ஓரிடத்தில் அவன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை தெரிய வைக்க, ஒரு நிகழ்வை சொல்லியிருப்பார். அதுதான் என்னைக் கவர்ந்த அம்சம். கமலாவிடம் அவமானப் பட்டு, அதன் விரக்தியில் வந்து வீட்டின் கொட்டகை கட்டிலில் குப்புற கிடக்கையில், ஊரிலிருந்து வந்திருந்த தங்கச்சிகளின் பிள்ளைகள் வந்து பொங்கல் காசு கொடு மாமா என்று கேட்கையில் பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு பசங்களை விரட்டிவிட்டு அவனின் அம்மா பாக்கெட்டில் பணம் வைப்பதும், அவனின் தங்கைகள் சும்மா பாக்கெட்டை செக் செய்வது போல் ஆளுக்கு கொஞ்சம் பணம் வைப்பது போல் வைத்து அந்தக் காட்சி கண்ணெதிரே வந்துப் போகுமளவிற்கு எழுத்தில் அனல் காட்டியிருப்பார் திரு. இமயம்.

ஊடாக, கமலாவின் கணவன் பின்புலத்தையும், அவரின் போராட்ட மனப்பான்மை பற்றியும், இவனை சித்தப்பா பையன் ஒருவனைக் கொண்டு இவனின் செய்கைகளை எடுத்துரைத்து இதெல்லாம் தவறு என்று சொல்வதாகவும், எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக நான் கமலா எனும் கடலினும் விழுந்து கிடக்கிறேன், தப்பென்று தெரிந்தும் அதிலிருந்து மீள மனமில்லாமல் கிடக்கும் ஒருத்தனின் வாழ்வை சினிமாவாக கண்ட திருப்தியை கொடுக்கும் இந்த நாவலை வாசித்து முடித்தால்!

இந்த மாதிரியான வகையறா கதைகளுக்கு முடிவு என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தாலும் கதையின் நகர்வு அதை மறைத்து விடுகிறது. தான் சொல்ல வந்ததை அறுபது எழுபது பக்கங்களில் சொல்லிவிட்டாலும், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே பக்கங்களை இழுத்தது சற்று இழுவையாக இருந்தது. இப்படி சின்ன சின்ன தொய்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த "எங் கதெ"   எல்லோருக்குமான கதை தான்!

இவரின் முந்தைய படைப்பான வீடியோ மாரியம்மன் பற்றி வாசிக்க இங்கு கிளிக்கவும்

========================================================================

புத்தகத்தின் பெயர்: எங் கதெ (நாவல்)
வெளியீடு: க்ரியா
ஆண்டு: 2015
பக்கங்கள் : 110
விலை : 110/-
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்:  creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
========================================================================


நன்றி : வாசகர் கூடம் 


Post Comment

4 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


விமர்சனம் சிறப்பு நண்பரே வாங்குகிறேன் நண்பர் சென்னை சந்திப்பு பதிவு பார்த்தீர்களா ?
தமிழ் மணம் இணைய மறுக்கிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல வாசிப்பு அரசன்! அதான் இவ்வளவு அழகாக விமர்சிக்கின்றீர்கள்...

KILLERGEE Devakottai சொன்னது…


தமிழ் மணம் 1

'பரிவை' சே.குமார் சொன்னது…

அழகான விமர்சனம்...
அருமை... வாழ்த்துக்கள்.