புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 12, 2014

குஷ்பூவும், தமிழக போலீஸும் ...


இன்று காலை அண்ணாசாலையிலிருந்து வடபழனி நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருக்கும் போது சத்தியமூர்த்தி பவனின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம், சமீபத்தில் "கை"க்கு தாவிய தங்கத் தலைவி குஷ்பூ வந்திருக்காங்களோன்னு பேரார்வத்தில் எட்டிப்பார்த்தேன், வெறும் கதர் வேட்டிகளா தெரிஞ்சதும் டபுக்குன்னு தலைய திருப்பிக்கிட்டேன். வழக்கம் போல வேட்டி உருவலாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். சுமார் 50 போலீஸ்களும், இரண்டு மூன்று வஜ்ரா வண்டிகளும் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தது.  பத்திரிக்கை கூட்டமொன்று அவர்களின் தீனிக்காக அலைமோதிக் கொண்டிருந்தனர். சென்ற தேர்தல்களில்லாம் திமுக வை மாபெரும் வெற்றி பெறச் செய்த குஷ்பூ வரும் தேர்தலில் காங்கிரசை தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்கப் போகும் தலைவிக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தியமூர்த்தி பவனிலிருந்து சற்று தூரம் தள்ளி ஒரு லெட்டர் பேடு கட்சியின் சுமார் பத்து பேர் கொண்ட பெருங்கூட்டமொன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.. யாரோ, யாரிடமோ மன்னிப்பு கேட்கவேண்டுமாம். கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு மூச்சுமுட்ட ஒரு தொண்டர் கத்திக் கொண்டிருக்க ஏனைய தொண்டர்கள் அவர்களுக்கே கேட்காத குரலில் திருப்பி சொல்லிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தையும்? பத்திரிக்கை  தூணொன்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. ஒன்னும் விளங்கல... அந்த 10 பேர் கொண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த 20லிருந்து 30 போலீஸ்களும், ஒரு பாதுகாப்பு வாகனமும் நிறுத்தப் பட்டிருந்தது. இரண்டு இடங்களிலும் சேர்த்து சுமார் 80 போலீஸ்கள் நின்று கொண்டிருந்தனர். 

தினந்தோறும் ஏதாவதொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வள்ளுவர் கோட்டம் இன்று அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இல்லையென்றால் இங்குமொரு 100 போலீஸ்கள் தேமே வென நிற்க வேண்டியிருக்கும். தினந்தோறும் முளைக்கும் கட்சிகளுக்கும், வெறும் விளம்பர பிரியர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தே ஓய வேண்டிருக்கிறது. காது கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கூட்ட இரைச்சல்களுக்கு மத்தியில் எதுவுமே காதில் விழாத மாதிரி நிற்கும் இந்த காக்கிகளை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு கோமாளித்தனங்களை நாள்தோறும் அவர்கள் கடந்து போக வேண்டியிருக்கிறது. 

நண்பனொருவன் சென்ற வருடத்தில் போலீஸுக்கு தேர்வாகி ஆர்வமுடன் சென்றவனை சில மாதங்கள் கழித்து சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், அவன் வேலைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் வேறு ஏதாவது சொல்லி திசை திருப்பிக் கொண்டிருந்தான். நேரிடையாகவே கேட்டேன். மிடுக்காக, கர்வமுடன் வேலைக்கு சென்றவன் சற்று சோர்வாக, அவன் வேலை நிலையை கூறியது கொஞ்சம் வருத்தத்திற்குரியது தான். எங்கள் பகுதியில் துணை ஆய்வாளாராக 28 வயதில் ஒரு வாலிபம் வந்திருந்தது, அவர் வந்ததிலிருந்து ஏரியாவில் ஆடிக்கொண்டிருந்த பலர் வாலை சுருட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப் பட்டிருந்தனர். அனால் துரதிருஷ்டம் என்னவெனில் அவர் கூட பணி செய்யும் சக போலீசுகள் சிலர் தில்லாலங்கடி வேலை செய்து வேறொரு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். எல்லாம் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.

உடலெரிக்கும் கத்திரி வெயிலிலும், சென்னையின் ஜெமினி மேம்பாலத்திலும், பீச் ரோட்டிலும் ஐந்தடிக்கு ஒரு காவலர் வீதம் நிற்கும் காக்கிகளை நினைத்து பாருங்கள். எந்த ஜென்மத்திலோ அவர்கள் மிகப்பெரிய குற்றம் இழைத்திருப்பார்களோ என்று சில நேரங்களில் வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன். அதுவும் பெண் போலீசுகள் நிலை பாவம். சரி எதையோ சொல்ல வந்து எங்கோ வந்து நிற்கிறேன் பாருங்கள்.

தேவையற்ற வீண் ஆடம்பரத்திற்காகவும், தன் இருப்பை நிலை நிறுத்தி, மீடியாவின் பார்வையிலே இருப்பதற்காகவும் தான் பல கட்சித் தலைமைகள், எதற்கு எடுத்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று அலப்பரையை கூட்டுகின்றனர். எந்த வொரு விசயத்தையும் தீர்ப்பதற்காக இவர்கள் போராடுவதில்லை, முடிந்தவரை பிரச்சினையை தீர்க்க விடாமல் சொரிந்து சுகம் காணவே அலைந்து கொண்டிருக்கும் கட்சிகள் பல இங்குள்ளன. தேவையற்ற விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தும் சில்வண்டுகளுக்கும் பத்திரிக்கையில் இடம் தந்து பணம் பார்க்கும் பத்திரிக்கை தர்மத்தை எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை.

நேற்று முளைத்த காளான்கள் போலிருக்கும் சின்ன சின்ன கட்சிகளுக்கும், காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கையில் மனம் சற்று கோபமடைகிறது, இவர்களை கோபம் சொல்லி என்ன பயன், அதிகாரத்திலிருக்கும் அரசு ஆணையிட்டால் தானே இவர்கள் சுழல்வார்கள். அரசோ தனக்கு இலாபமில்லாத எந்தவொரு விசயத்திலையும் மூக்கை நுழைப்பதில்லை. நேற்று முளைத்த காளான்கள் என்று வேறு சொல்லிவிட்டேன், இப்படித்தான் 65 வருடத்திற்கு முன் திமுகவையும், 42 வருடத்திற்கு முன் அ திமுகவையும் அப்போதைய பலம் வாய்ந்த கட்சிகள் நினைத்திருக்கும். இப்போது இந்த இரு கட்சிகளின் வேர் மிக ஆழமாக இருக்கிறது. எதையும் நாம் சுலபமாக சொல்லிவிடக்கூடாது. தமிழக மக்களை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.

நமது பணத்தை விரயமாக செலவு செய்வதை தட்டி கேட்க மனமில்லாத சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி எதிர்காலம் நன்றாக இருக்குமென்று ஆருடம் சொல்ல முடியும்? வாழ்க நானும், எனது குடும்பமும்.... 


     

Post Comment

டிசம்பர் 06, 2014

களவாடிய பொழுதுகள்...

எந்தவொரு திரைப்படத்திற்காகவும் இந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்திருந்ததில்லை, திரு. தங்கர் பச்சானின் "களவாடிய பொழுதுகளுக்காக" நீண்டதொரு காத்திருப்பிலிருக்கிறேன். தங்கரின் கருத்துக்கள் சிலதோடு முரண்பட்டாலும், அவரின் படைப்புகளை பெரிதும் நேசிப்பவன் நான். எழுத்தானாலும் சரி, சினிமா என்றாலும் சரி அவரின் படைப்பில் ஒரு ஜீவனிருக்கும். மண்ணின் மணம் நிறைந்திருக்கும். என் போன்ற கிராமத்தானின் உணர்வுகளை சுமந்திருக்கும் என்பதும் ஒரு காரணம் என்று கூறலாம். 

நன்றாக நினைவிருக்கிறது, நான்கு வருடங்களுக்கு முந்தி ஒரு பனிக்கால அதிகாலையில் திரு. தங்கர் பச்சானின் "அம்மாவின் கைப்பேசி" நாவலை வாசித்தேன். அந்த நூலில் மேலும் சில கதைகள் இருந்தது. ஆனால் அம்மாவின் கைப்பேசி தந்த பாரத்தை மனதின் ஓரத்தில் இன்னும் சுமந்து கொண்டுதானிருக்கிறேன். அதையே படமாகவும் எடுத்தார், நாவல் தந்த உந்துதலினால் முதல் நாளே சென்று பார்த்தேன். எழுத்தில் இருந்த நேர்த்தி, காட்சியாக திரையில் காணும் போது இல்லை. நடித்திருந்த நாயக, நாயகிகளின் குறை, திரைக்கதையில் தெளிவின்மை இப்படி நிறைய குறைகள் இருந்தாலும், ஒரு பிரேமுக்குள் என்ன என்ன இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக காட்டியிருந்தது கொஞ்சம் ஆறுதல்.




இப்போதும் அவரின் நாவலொன்றை தான் களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போ வரும் அப்போ வருமென்று காத்திருந்த எனக்கு சமீபத்தில் சில விளம்பரங்களை வெளியிட்டு இந்த வருடத்திற்குள் வருமென்று சொல்லியிருந்தார், மீண்டும் உற்சாகமானேன். ஆனால்  இப்போ அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவுதான் போலிருக்கிறது. பெரிய முதலைகளோடு மோதுவது மிகக் கடினம். 

முகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை. 

களவாடிய பொழுதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல் காலம் கனிந்து வரும் அதுவரை காத்திரு, உன் காத்திருப்பு வீண் போகாது என்று சொன்னது ஆறுதலாக இருந்தாலும், தன் படைப்புக்காக, ஒரு படைப்பாளி இவ்வளவு நாள் காத்திருப்பது கொடுமைதான். 

திரைக்கு வருவதற்கு முன் ஒரு திரைப்படம் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்குமென்று ஓரளவு அறிந்திருந்தாலும் இப்படியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் சில திரைப்படங்கள் முடங்கி கிடப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் சினிமாவின் சக்கரம் பின்னோக்கி சுழலாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 




களவாடிய பொழுதுகளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன் திரு. தங்கர் அவர்களே ...
    

Post Comment

டிசம்பர் 04, 2014

"மருதாணி வீடு"...



குடைந்தெடுத்த கற்கோயில்
போல கம்பீரமாய் வீடு,
சத்தம் கூட புகா வண்ணம்,
சரளைக்கல் சுற்றுச் சுவர்!


அந்த வீட்டை தவிர்த்து
ஊருக்குள் வழி சொல்வது கடினம்!


அங்குள்ள தென்னைகளுக்கு
நூறுக்கு மேலிருக்கும்
வயசு,
என்பார் "சுருட்டை" மெல்லும்
கருப்பு மாமா!


கடைசியாக அவ்வீட்டை
கடக்கையில்,
நான்காம் தலைமுறையின்
பேரக்குழந்தைகள் விளையாடுவதை
வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது
அவ்வீட்டின் முற்றம்!


அறுபதடுக்கு மிடுக்கைத் தாண்டியும்
அவ்வப்போது வந்து போகும்
அந்த "மருதாணி" வீடு 
அயலகத்தின் தனிமை இரவுகளில்!


மூன்று வருடம் கழிந்து 
ஊர் திரும்புகையில் 
அவ்விடம் வந்ததும் 
அனிச்சையாய் தலை திரும்ப 
அதிர்ச்சியாய் இருக்கிறது,


அவ்வீட்டைக் கொன்று
இரண்டடுக்கில் சமாதியொன்றெழுப்பி,
"இன்பகமென்று" 
பெயர் சூட்டியிருக்கிறார்கள்!....  




Post Comment