என்ன ரத்தினம் எப்படி இருக்கே, பாத்து ஒரு வாரம் ஆச்சே, என்ன வேலை நடக்குது என்று கேட்டுக்கொண்டே கையில புடிச்சிருந்த கன்னுக்குட்டிய பக்கத்துல இருந்த புளியங்கண்ணுல கட்டினார் கனகசபை.
என் கதைய ஏன் கேக்குற கனகசபை, பொழப்பு சிரிப்பா சிரிக்குது, வெளிநாட்டுல இருந்து வந்த மூணு வாரம் நல்லா இருந்தா, இப்ப சட்டி போட்டு கடைஞ்சி தள்ளுறா என் பொஞ்சாதி.
என்னாச்சி ரத்தினம்? மதியழகி அப்படி ஏதும் பண்ணாதே, நீ ஏதாவது வம்பு வளத்துருப்ப, அதான் எதாச்சும் சொல்லிருக்கும். நீ வந்தும் மூணு மாசம் ஆச்சு, சும்மா வீட்டுல இருக்குறதுனால அப்படி எதாவதும் பேசி இருக்கும்
இதுக்கெல்லாம் எதுக்கு மனச போட்டு கொழப்பிக்கிற...
நீ சொல்றதும் வாஸ்தவம் தான் கனகசபை, வெளிநாட்டுல இருக்குறத குடிச்சோமோ, வேலைய பார்த்தோமான்னு பொழப்பு ஓடுச்சி, சரி வாழ்நாளுல பாதிய அங்க கெடந்தே கழிஞ்சி போச்சு, மீதி நாளையாவது நம்ம மண்ணோட, மக்களோட இருக்கலாம்னு இங்க வந்தா நெலமை தலை கீழா இருக்குது.
நீயும் புள்ள, பொஞ்சாதிய விட்டுட்டு பாதி வாழ்க்கைய அந்நிய மண்ணுலையே கழிச்சி புட்ட, இனி அதெல்லாம் வேண்டாம் இருக்குறத வைச்சி ஏதாவது கடை வைச்சி பொழப்ப பாரு ரத்தினம்.
நானும் அதை நெனச்சிகிட்டு தான் இருக்கேன் கனகசபை, ஆனா மதியழகியோட தங்கச்சி புருஷன் வெளிநாடு போயிட்டு வந்துட்டு இப்ப பைனான்ஸ் பண்ணிட்டு இருக்காராம் , அதையே என்னையும் பண்ண சொல்லி தொந்தரவு பண்றா, அதான் பிரச்சினையே!
என்ன ரத்தினம் போயும் போயி அந்த வட்டிக்கு விடுற வேலைய எவனாவது பண்ணுவானா, ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான், உனக்கு இது சரி பட்டு வராதுன்னு எனக்கு தோணுதுப்பா.
இதுல கொடிகட்டி பரந்தவங்க எல்லாம் இன்னைக்கு இருக்குற எடம் தெரியாம போயிட்டாக, இது கொஞ்சம் வெவகாரம் புடிச்ச தொழில்.நான் வேணுமுன்னா மதியழகி கிட்ட இதை பத்தி பேசுறேன். சரி ரத்தினம் மாடுக மேய்ச்சலுக்கு போகணும், அப்புறம் சந்திப்போம்!
சரி கனகசபை போயிட்டு வா, நேரம் கெடைச்சா இதை பத்தி அவகிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு....