மழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன் மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுதழுவும் ஒரு மண் வாசம் நிறைந்த சிற்றூர் எங்க ஊர் ...அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம்
உகந்த நாயகன் குடிக்காடு...
எனது சிறு வயதில் எனது ஊரை ரசிக்க மறந்தேன் ... இப்போ நிறைய ஏங்கி கொண்டிருக்கிறேன்.. எல்லையற்ற எனது கிராம வாழ்வின் தாக்கம் இன்றைய நகர கட்டுப்பாடு வாழக்கையில் நிறையவே ஏங்க வைக்கின்றது ...
எங்க ஊரை பற்றி ஒற்றை வரியில் கூறவேண்டுமெனில் மண்ணை நேசிக்கும் மக்கள் வாழும் பூமி ..(கடந்த ஐந்தாறு வருடங்களாக நிலை வேறு மாதிரி செல்கிறது)
விவசாயம் சார்ந்த மக்கள் அதில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய அந்நிய நாடு நோக்கிய பயணம் அதிகமானதாலும், மேல் படிப்பு படித்த இளசுகள் அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லா காரணத்தாலும் கூட்டை விட்டு சிறிது சிறிதாக வெளியேறி விட்டார்கள் .. இரைதேடி நகரம் நோக்கி சிறகடித்த பறவைகளுள் நானும் ஒருவன் ... இப்போ நான் காணும் எனது ஊருக்கும் பத்து வருடங்கள் நான் கண்ட ஊருக்கும் நிறையவே வித்தியாசமும் , முரண்பாடும் இருக்க செய்கிறது .. நாகரிக வளர்ச்சி கூட என்று பெயரிட்டு கொள்ளலாம் ...
படிப்பறிவு குறைந்த ஊர் என்ற பெயரை இன்றைய தலைமுறைகள் மாற்றி காட்டி வருகின்றனர் .. கடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எம் மண்ணின் மைந்தர்கள் நிறையவே நல்ல மதிப்பெண் எடுத்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள் என்பது இதற்க்கு சான்று ...
அடுத்து நான் மிகவும் ரசிப்பது எனது ஊரின் திருவிழாக்களை ... ஊரே சேர்ந்து ஒற்றை இடத்தில் கூடி சாமி தரிசனம் செய்து பிரசாதங்களை பகிர்ந்து கொண்டு அன்பை நிலை நாட்டும் ஒரு உன்னத திருவிழா ..
ஊரில் நல்லதோ , கெட்ட நிகழ்வோ உடனே அனைவரும் ஒன்று கூடி தன் வீட்டு நிகழ்வாக கருதி வேலைகளை பங்கிட்டு சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்க முனைவர்... அங்கே தெரியும் அவர்களின் நேசம் ...
இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது. ஒவ்வொரு பொங்கலோ, அல்லது தீப ஒளி திருநாளோ அன்றுதான் அனைத்து பறவைகளும் தாய் கூட்டை தேடி ஓடி வரும் சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கின்றோம்...(உள்நாட்டில் வசிக்கும் சிலர் பணியின் நிமித்தம் காரணமாய் வராமல் கூட போவர். வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலையை கூற வார்த்தைகளே இல்லை ...)
இன்னும் நிறைய பகிந்து கொள்ள நிறைய விடயங்கள் இருந்தும் பதிவின் நீளம் கருதி இத்துடன் விடை பெற்று கொள்கிறேன் ...
இறுதியாக என்னையும் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்து நிறைகளை நிறைய பாராட்டி, குறைகளை கொஞ்சமாய் கூறி, அன்பு பாராட்டி வரும் எம் மண்ணின் மைந்தர் அன்புடன் நான் வலைப்பூ திரு . சி . கருணாகரசு அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்ள கடமை கொண்டுள்ளேன் ...
என்னை தொடர் பதிவுக்கு அழைத்த ஏஞ்சலின் http://kaagidhapookal.blogspot.com/)
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...
Tweet |