புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 27, 2012

கண்கொத்திப் பறவை...(பதிவரின் நூல்)



நம்மில் பலர் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வந்தாலும், வெகு சிலரே அதை தொகுத்து புத்தகமாக்குகின்றனர், அந்த வரிசையில் நமது சக பதிவர், என் மனதிற்கினிய அண்ணன் மனவிழி சத்ரியன் அவர்கள் தனது கவிதைகளை தொகுத்து "கண்கொத்திப் பறவை" என்கிற பெயரில் முதல் தொகுப்பாக  வெளியிட்டுள்ளார். அவ்வப்போது ஒன்றிரண்டு கவிதைகளை வலைத்தளத்தில் வாசித்தாலும் மொத்தமாய் ஒரு புத்தகமாய் படிக்கும் சுகமும், சுவையும் தனிதான். 


நடுநிசியில் மனம் மயக்கும் மெல்லிசை போல், உள்ளம் நிறைக்கும் காதல் ராகம் இதில் நிறைய பாடியிருந்தாலும், கூடவே சமூகம் பற்றிய தன் கோபங்களை 'வரி'ச் சாட்டைக்கொண்டு சுழற்றி இருக்கிறார். எளிய தமிழில் புதுக்கண்ணோட்டத்தில் புனையப் பட்ட மென்மை கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. இந்த புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருப்பவர் நம் நண்பர் மின்னல்வரிகள் திரு. பால கணேஷ் அவர்கள்.  புலவர். ராமானுசம் அய்யா அணிந்துரை வழங்கி புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்கி வாசித்து கவிஞரின் முயற்சிக்கு ஊக்கம் அளியுங்கள் தோழமைகளே!

புத்தகம் கிடைக்குமிடம்:-

Discovery Book Palace Pvt Ltd.,
K. K. Nagar, Chennai - 600 078. (near Pondichery Guset House)
Ph: 044 - 6515 7525  www. discoverybookpalace.com

ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்கவும் 

Post Comment

டிசம்பர் 22, 2012

சிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...



முக்கிய பணி நிமித்தமாக என் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருந்தமையால் அவசர அவரமாக எனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான துணிகளை அள்ளிக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சீறியது என் பயணம் ... சாப்பிட கூட நேரமில்லை. திடீரென்று எடுத்த முடிவு .



ஒருவழியாக கோயம்பேடு வந்து சேர்கையில் இரவு 10 மணி, இறங்கி எங்க ஊருக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடை நோக்கி விரைந்தேன், வெறிச்சோடி கிடந்தது, இன்னைக்கு ஊருக்கு போனது மாதிரி தான் என்று எரிச்சலில் அருகில் ஏதோ கேட்க வந்த முதியவரிடம் கூட சரியாக பதில் சொல்லவில்லை. (இல்லைனா மட்டும்). 

சரியாக 11 மணிக்கு ஒரு தகரடப்பா பேருந்து இருமிக்கொண்டு உள்ளே நுழைந்தது வரும்போதே ஏகப்பட்ட நெரிசல். இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டிய பேருந்து வரும்போதே மூச்சடைக்கும் அளவுக்கு கூட்டத்தோடு வந்தது மேலும் எரிச்சலூட்டினாலும் இதை விட்டால் இனி காலையில் தான் அடுத்த பேருந்து என்ற நினைவு எப்படியோ ஏறி ஊர் செல்லவேண்டும் என்று எச்சரித்தது. உள்ளே சென்று பார்த்தால், சென்னையின் மொத்த குப்பையும் இங்கு தான் கொட்டியிருப்பது போன்ற உணர்வை தந்தது.

என்ன செய்ய இன்னைக்கு நாம இப்படித்தான் ஊருக்கு போகணும் என்று இருக்கு என்று நொந்துகொண்டே இருக்கையை தேடினேன், பேருந்தின் கடைசி இருக்கையில் ஒரு இடம் காலியாக இருந்தது, கொஞ்சம் தயக்கம் இருந்தும் எதையும் யோசிக்காமல் சென்று அமர்ந்து கொண்டேன். பேருந்து நகர ஆரம்பித்தது. நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார் அவரின் செய்கையும் பேச்சும் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது. பைல்ஸ் வந்தவர் போல அடிக்கடி பயணிகளிடம் எரிந்து விழுந்தார். எல்லாத்துக்கும் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்கள் இதையும் கொஞ்சம் கவனித்தால் நலம். 

சரி சதி செய்யும் விதியை என்ன செய்வது என்று நொந்து கொண்டே சரி சற்று நேரம் கண்ணை மூடலாம் என்று எத்தனிக்கையில் "அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்" என்று வீரிட்டது சீனா தயாரிப்பு கைப்பேசி ஒன்று, இன்னொரு பக்கம் "அடிடா அவளை" என்று கதறியது. இந்த பெருத்த இம்சைகளுக்கு மத்தியில் எப்படி உறங்குவது விடிய விடிய சிவராத்திரி தான். 

தன் சந்தோஷம் தான் முக்கியம் என்று அடுத்தவன பற்றி கவலை படாத சமூகத்திற்கு நாம் மாறிவிட்டோம், இதை எண்ணினால் எவ்வளவு வெட்கமாக இருக்கிறது, வருகிற ஒவ்வொரு அரசாங்கமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டது மாதிரியான நாடங்களை நடத்திவிட்டு, நான்கு இலவசங்களை திணித்து விட்டு முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் செல்லுகையில் எப்படி உருப்படும், உருப்பெறும்!   


Post Comment

டிசம்பர் 13, 2012

யாருக்கு தெரியும்...



யாருக்கு தெரியும்,
உன் அழகை போற்றவே 
எனக்கு இந்த ஜென்மம் 
பணிக்கப்பட்டிருக்கலாம்!


உன் இதழ்களால்
ஈரமாகவே, 
என்னுதடு 
வறண்டு போகிறது. 


Post Comment

டிசம்பர் 11, 2012

இந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...



தமிழனின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் முதலிடம் இந்த சினிமாவுக்கு தான் என்பதை எப்போதும் மறுக்க முடியாது, அந்த அளவுக்கு சினிமா மோகம் தலைத்தூக்கி நிற்கிறது. எந்த காலத்திலும் சினிமா மீதுள்ள மோகம்  கூடுகிறதே தவிர, குறைந்த பாடில்லை. காலத்திற்கு தகுந்த மாதிரி நுட்பங்கள் மாறி திரைப்படங்களின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. அரங்கங்களும் உருமாறி வேறொரு பரிமாணத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 

மாநகரங்களில் அரங்கங்கள் அதி நவீன வசதியுடன் துல்லிய ஒலி, ஒளி அமைப்புடன் நம்மை கொள்ளை கொள்கிறது... கூடவே பணத்தையும். நடுத்தர வர்க்கம் குடும்பத்துடன் இந்த மாதிரி அரங்கங்களில் சென்று பார்ப்பது சிரமம் தான்! தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன இந்த திரைப்படங்களின் இப்போதைய நிலையை கண்டு மனம் சற்று வருந்தத்தான் செய்கிறது. 

எதார்த்த சினிமா, நகைச்சுவை சினிமா, கமர்ஷியல் சினிமா என்ற பல்முக  வடிவில் நம்மை தாக்கினாலும் ஏதோ சில ஒன்றிரண்டு தான் நம்முள் இறங்குகின்றன! மற்றவை கவிதை எழுத முயற்சித்து கசக்கப்பட்ட தாள்கள் போலாகின்றன, அந்த வகையில் இந்த வருடத்தில் வெளியான பெரும்பான்மையான தமிழ் படங்கள் சோபிக்கவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் , பெரிய நடிகர் , பெரிய இயக்குனர் என்று பந்தாவாக வெளியாகிய பல படங்கள் பல் இளித்தன. 


குறிப்பாக அரவான்,வேட்டை, சகுனி, முகமூடி, தாண்டவம், மாற்றான் இப்படி பட்ட படங்கள் வெளிவந்து பெருத்த அடிவாங்கினாலும் வழக்கு எண் 18/9, மெரீனா, நான், நான் ஈ, அட்டகத்தி ,சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை இப்படி சில படங்கள் அமைதியாக வந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தன. 

எந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை, வாலிபன் சுற்றும் உலகம், பாளையங்கோட்டை, லொள்ளு தாதா இப்படி ஏகப்பட்ட படங்கள் வந்து சல்லைய கொடுக்காமலும் இல்லை. தொலைக்காட்சிக்கென்றே படமெடுக்கும் இயக்குனர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்தனர்.

இன்னும் சில படங்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன, பாப்போம் வந்து எந்த அளவுக்கு ஓடுகிறது என்று. எப்படியும் எதிர்பார்ப்பு குறைய போவதுமில்லை அவர்களும் வெளியிடாமல் இருக்கபோவதுமில்லை. 

இந்த வருடத்தில் சறுக்கி காயம் பட்ட பெரிய நடிகர்களும், இயக்குனர்களும் தவறை திருத்திக்கொண்டு புதியதாய் சிந்தித்து வரும் வருடத்தில் வெற்றி பெற வாழ்த்துவோமாக....

Post Comment

டிசம்பர் 10, 2012

செம்மண் தேவதை # 8 (Semman Devathai)


நீ குளிப்பதற்காக 
குளக்கரை வருகிறாய்,
உன்னிடம் தொலைவதற்காக 
வருகிறேன் நான்!




கூட்டத்தில் சிக்கிய  
குழந்தை 
அம்மா வேண்டும் என்று 
அடம்பிடிப்பது போல், 
உன்னை வேண்டியே  
மனம் தவிக்கிறதடி... 

Post Comment

டிசம்பர் 06, 2012

ஊர்ப்பேச்சு # 7 ( Oor Pechu)

வணக்கம் கனகசபை பார்த்து ரொம்ப நாளாச்சு ... என்ன வேலை அதிகமோ என்று கேட்டபடி தலையிலிருந்த முண்டாசை அவிழ்த்தார் ரத்தினம்!

என்ன ரத்தினம் மொட்டை எல்லாம் அடிச்சிருக்கே, ஏதேனும் விசேசமா?
ஆமாய்யா, குல சாமி கோயிலுக்கு குடும்பத்தோட போயிருந்தோம், சரி பழைய வேண்டுதல் ஒன்னு அதான்.

நீ சொன்னதும் தான் எனக்கே நினைவுக்கு வருது ரத்தினம், நானும் போயிட்டு வரணும், தூரத்துல இருக்குற கோயிலுக்கெல்லாம் தேடி தேடி போயிட்டு வரோம், பக்கத்துல இருக்கு குல சாமி, அங்க போயிட்டு வர முடியலையே. அடுத்த வாரத்துல ஒரு நா போயிட்டு வந்துற வேண்டியதுதான்.

போயிட்டு வா கனகசப, நல்லது தானே! நேத்து என்ன தழைஎல்லாம் வண்டியில ஏத்திகிட்டு போனமாதிரி தெரிஞ்சுது, எதுக்கு ?

ஆமா ரத்தினம், நாற்று வுட போறேன், அதுக்குத்தான் ஏரிக்கரை ஓரமா இருந்த ஆனா தழை, பூவரசு எல்லாம் வெட்டி வைச்சிருக்கேன், சேத்துல இத போட்டு மிதிச்சி நெல்ல தூவி விட்டு வந்தம்னா பயிரு  சும்மா கரு கருன்னு வரும் பாரு, அதை பாக்கவே நூறு கண்ணு வேணுமையா... 



முருகேசன் நேத்து உரம் வாங்கிட்டு போனான், அவனும் நாத்து வுடத்தான்  என்று சொன்னான். நீயும் உரமே போடலாமே, எதுக்கு கெடந்து வீணா இப்படி உடம்ப வருத்திக்கணும்!

இல்லை ரத்தினம் உடம்பு வளையாம, மண்ணை கொலை பண்ணுறவன் தான் இப்படி செய்வான்! குறைச்ச நாளுல அதிக மகசூல் பாக்கணுங்கிற பேராசையுல  சோறு போடுற பூமிய இப்படி உரத்தை கொட்டி, அப்புறம் பூச்சி மருந்து அடிச்சி மண்ணை நாசப்படுத்தி வைச்சிட்டானுவோ, சொன்னா திரும்பி நம்மள கேன பய கணக்கா முறைச்சிட்டு போறானுவோ, இவனுங்கள எப்படித்தான் திருத்துறதோ?

நீ சொல்றது சரி தான் கனகசபை, ரெண்டு ஏக்கர் மூணு ஏக்கர் வைச்சிருக்கிறவங்க உன்ன மாதிரி பண்ணலாம், முப்பது, நாப்பது ஏக்கர் வைச்சிருக்கிறவங்க என்னத்த பண்ணுவாங்க, அவங்க செலவ மிச்ச படுத்தனும், மகசூல் அதிகம் வரணும் என்று தானே ஆசை படுவாங்க.

நீ என்னய்யா ஒன்னும் தெரியாத மாதிரி பேசுற, உம் பாட்டனும் , எம் பாட்டனும் அம்பது , அறுவது ஏக்கர் வைச்சிருக்கும் போதெல்லாம் எந்த உரத்தை போட்டு மூட்டை மூட்டையா மகசூல் பார்த்தாங்க. இப்பதானே மண்ணையும் கெடுத்து தன்னையும் கெடுத்து மக்கள் புத்தி கேட்டு திரியுதுங்க! யாரை குத்தம் சொல்லி என்ன பயன், எல்லாம் நடக்கிறது தான் நடக்கும்! சரி ஊற வைச்ச நெல்லை வடி கட்டணும் நான் போயிட்டு வரேன்!

சரிய்யா போயிட்டு வா , அப்புறம் சாவகாசமா பேசுவோம்!

Post Comment

டிசம்பர் 04, 2012

மென் முத்தம் ...




பெருத்த சத்தத்துடன் 
ஓடியாடிய
பெரும்புயல் 
நிதானமாய் மூச்சு வாங்கும் 
மெல்லிய தென்றலாய், 
மெல்ல என் கன்னத்தில் 
இதழ் பதிக்கிறான் 
பெரும் சண்டைக்குப் பின் ...



Post Comment

டிசம்பர் 03, 2012

கொலையாக சம்மதம்...




திருவிழாக் கடைவீதியில் 
நீ நடந்து போகிறாய்,
தெரு "விழாக்கோலம்"
காண்கிறதடி!

வேண்டாமென்று 
நீ ஒதுக்கிய ஐஸ்,
உனை வேண்டியே 
கரைகிறதாம்! 


கொலையாக சம்மதமாம் 
என் வீட்டு மல்லிகைகளுக்கு, 
நீ சூடிக்கொள்வதென்றால்!


Post Comment

நவம்பர் 29, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 11

பன ஓலை 


ஆமணக்கு மலர் 


முத்துச்சோளம்  


சோளத்தின் மீதுள்ள இழை  


கற்றாழை  


எறும்பின் ஊர்வலம்  


மலர்  


கார்த்திகை மொட்டு  


காட்டுப்பூ  


அடிக்கடி காணமல் போனாலும் கம்பம் அப்படியே தான் இருக்கு  


(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)

Post Comment

நவம்பர் 26, 2012

அம்மா இல்லா வீடு ...





அவசரமாய் சடை பிண்ணி 
அரைகுறையாய் ரிப்பன் கட்டி 
அரைகாத்து  சைக்கிளை 
மூச்சிறைக்க மிதித்து 
வந்தும் 
காலைக்கூட்டதை தவற விட்டமைக்கு 
கண்டிப்புடன் அடிக்கும் 
ஆசிரியருக்கு எப்படி 
புரிய வைப்பது 
அம்மா இல்லா வீட்டு வேலைகளை!

Post Comment

நவம்பர் 24, 2012

கதவிடுக்கு கண்கள்...



வெளிநாட்டிலிருந்த வந்திருந்த 
என்னை அழைத்து 
நலம் விசாரித்துக் கொண்டிருந்தார் 
உன் அப்பா!

உன்னை தேடிய என் கண்கள் 
கதவிடுக்கில் சிக்கிகொண்டன,
பின்புறம் நின்று கொண்டிருந்தாய்!

பிறகு 
கோயிலிலும், கொல்லைப்புறத்திலும் 
நான்கைந்து வார்த்தைகள் 
பேசியிருப்போம்! 

உள்ளத்து ஆசைகள் 
உன்னை சுழன்றாலும் 
வறுமை தொலைக்க 
வனவாசம் சென்றேன்!

மீண்டு வந்து காண்கையில் 
கனவுகளில் கல்லெறிந்த 
உன் அம்மா சொன்னாள் 
போன பங்குனியில தான் 
புள்ளைய கட்டிக்கொடுத்தொமென்று!

இருந்தும் கதவிடுக்கில் தேடும் 
கண்களை கட்டுப்படுத்த 
முடியவில்லை...

Post Comment

நவம்பர் 19, 2012

கூர்த்தீட்டும் காதுகள்


மிதமிஞ்சிய வேகத்தில் சென்ற 
வாகனமொன்றில் 
அடிபட்டு இறந்துபோனது 
நாயொன்று,
பாவம் 
பிறந்து இரண்டு நாட்களே ஆன 
அதன் குட்டிகள்!


========================================================================


கணவன் மனைவிக்குள் 
வாக்குவாதம்.
என்னவாயிருக்குமென்று 
கூர்த்தீட்டுகிறது  
பக்கத்து வீட்டு காதுகள்!

Post Comment

நவம்பர் 10, 2012

அனைவரும் சக மனிதர்களே! (உண்மை சம்பவம்)

சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு! அலுவலக வேலை நிமித்தமாக சில தகவல்களை நகல் எடுக்க வேண்டி இருந்தமையால் தகவல் தாட்களை ஓர் நகலத்தில் கொடுத்துவிட்டு, அருகில் கிடந்த தினசரியை புரட்டி கொண்டிருந்தேன், பின்னர் வந்த இரண்டு நண்பர்கள் காத்திருந்தார்கள் அவர்களும் நகல் எடுக்க வந்தவர்களாக இருக்க கூடும்! சிறிது நேரம் கழித்து வந்த இருவரில் ஒருவர்  இன்னொருவரிடம் கூறினார் அங்க பாரு மச்சான் ஒருத்தன் இந்த கம்மங்கஞ்சிய இப்படி குடிக்கிறானே, இவன் சத்தியமா பஞ்சத்தில் அடிபட்டவனாகத்தான் இருக்கும்.


அதற்கு இன்னொருவர் பதில், மச்சி அவன் தோற்றத்தை பார்த்தியா சத்தியமா இவன் ஒரு காட்டுபுறத்தான்  தான் அதான் இந்த வாங்கு வாங்குறான்! இப்படி தொடர்ந்தது அந்த நாகரிக? நண்பர்களின் உரையாடல்! என் வேலை முடிந்து நான் திரும்புகையில் நகலகத்தை சற்று தள்ளி வயதான பெண்மணி ஒருவர் தள்ளுவண்டியில் இரண்டு மண் பானையில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்! இருபதை கடந்த வாலிபர் ஒருவர் கூழ் குடித்துக்கொண்டிருந்தார், இவரை பற்றித்தான் அந்த இரு நவயுக கண்மணிகளும் உரையாடி களிப்புற்றது போலும்! அந்த வாலிபரும் பார்க்க கிராமத்திலிருந்து வந்தவர் போல் தான் காட்சி தந்தார், கசங்கிய உடை, எண்ணெய் தடவிய கேசம்! 

இந்த உலகத்தின் கரடு முரடுகளை பாருங்கள், ஒருவரின் செய்கையை கிண்டல் செய்து அதில் சுகம் காண்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்! பாவம் அவரிடம் பண பற்றாக்குறையாக இருக்கலாம், இல்லை அவர் விரும்பி அந்த உணவை அவர் உண்டிருக்கலாம், அதை இவ்வாறு கேளிபண்ணும் அந்த நவீன தோழர்களுக்கு எப்படி தெரியும் அந்த உணவு தான் உயிரை வளர்க்குமென்று!  அரை வேக்காட்டு உணவுகளை குளிர் அறையில் அமர்ந்து குதூகலாமாய் உண்பது சுகம் தான், வசதியை வெளிக்காட்டி நெஞ்சை நிமிர்த்தலாம், பாவம் அந்த உணவுகளில் ஆரோக்கியம் துளியும் இல்லை என்பதை எப்படி சொன்னாலும் ஏற்காது அந்த அரைவேக்காடு மனசுகள்! 

இந்த கம்பங்கஞ்சியை குடித்து தான் அவர்களின் முன்னோர் இல்லை முன்னோர்களின் முன்னோர் என்பது, தொண்ணூறு வரை உயிரோடு இருந்திருப்பர், இன்று காலம் மாறியதும் காட்சிகளும் மாறுகிறது, விருப்பம் இல்லையெனில் உதாசீன படுத்த வேண்டாமே! உன் விருப்பம் ஒன்றாக இருப்பின் இன்னொருவரின் விருப்பம் இன்னொன்றாக இருக்கும்! பணத்தை கொண்டு மனிதனை எடை போடாதிர்கள், மனத்தால் எடை போடுங்கள்! 

அவரும் சக மனித பிறப்பே! உங்களிடம் இருக்கும் பணம் அவரிடம் இல்லையென்பதால் மனித பிறப்பின்றி போகுமா? அந்த நிகழ்வு தான் என் தயக்கத்தை உடைத்தெறிந்தது! விருப்பம் இருந்தும் சில விடயங்களை இந்த மானங்கெட் "அடுத்தவன் கேலி பண்ணுவான் என்று செய்யாமல் நகர்ந்து கொண்டிருந்த நான் அதன் பிறகு என் விருப்பம் இதில் அடுத்தவர்கள் என்ன நினைத்தால் என்ன? நினைக்காமல் போனால் என்ன? என்று துணிந்து செய்து வருகிறேன்"   

முடிந்தவரை சக மனிதனை மதிப்போம், முடியவில்லையெனில் மிதிக்காமல் இருப்போம்!

Post Comment

நவம்பர் 08, 2012

செம்மண் தேவதை # 7 (Semman Devathai)



பெருங்கூட்டம் நிறைந்த 
பேருந்து அது
உனக்கான நிறுத்தத்தில் 
நீயொருத்தி இறங்கியதும் 
மொத்த பேருந்தும் 
வெறிச்சோடி போகிறது 
எனக்கு!

************************************************************************************************************

நீ கடித்த நெல்லிக்கனிகளை 
சேமிக்க 
காத்திருக்கின்றன 
எறும்பு கூட்டமொன்று 
என்னைப்போலவே!


Post Comment

நவம்பர் 06, 2012

ஊர்ப்பேச்சு # 6 ( Oor Pechu)

என்ன கனகசபை ஆளையே பாக்க முடியல, என்ன வெளியூருக்கு ஏதும் போயிருந்தியா?

ஆமா ரத்தினம், மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சி இந்த நேரத்துல எது வைச்சாலும் அப்படியே பொழைச்சிக்கும் அதான் தென்னம்பிள்ளை, தேக்கங்கிழங்கு வாங்கியாரலாமுன்னு ஒரு ரெண்டு நாளு சுத்தி வந்தேன்.



இங்கேதான் கொண்டாந்து விக்கிறாங்களே, இங்கயே வாங்கலாமே! நல்லாதான் இருக்குது .

இல்லை ரத்தினம் நம்ம நேரா போயி வாங்குற வசதி இங்க வந்து விக்குறவங்க கிட்ட இருக்காது. நம்ம மனசுக்கு புடிச்சத நேர்ல போனாத்தான் வாங்க முடியும், அதுமட்டுமில்ல வெலையும் கொஞ்சம் கம்மியா இருக்கும்.

சரி சரி, என்ன காடு பூரா மரமா போடுறதா உத்தேசமா? 

இல்ல கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கலாம்னு இருக்கேன், போன வருசம் மேலக்காடு தவிர்த்து மீதி இருந்த ரெண்டு காணியிலும் தேக்கு , சவுக்கு போட்டுட்டேன். இந்த வருசம் மணக்காட்டுல கொஞ்சம் முந்திரி போடுலாமுன்னு பாக்குறேன், எப்படியும் மரம் வளர அஞ்சாறு வருசம் ஆவும், அதுவரைக்கும் கம்பு , சோளம், எள்ளு ஏதாவது போட்டுக்க வேண்டியது தான்!

நல்லா யோசிக்கிற கனகசபை. இருக்குறத விக்காம எப்படி பணம் சம்பாதிக்க முடியுமோ அப்படி பண்ணிட்டு வர. 

வேற என்ன பண்றது ரத்தினம், இருக்குறத வித்துபுட்டு சோத்துக்கு எங்க போறது. உக்காந்து தின்னமுன்னா மலையும் போறாது! விவசாயம் படுத்துகிச்சு இப்படி ஏதாவது வருமானத்துக்கு வழி தேடனுமில்ல!



ஆமாம். வீட்டுக்கு பின்னாடி இருக்குற ரெண்டு வீசத்துல கொஞ்சம் காய், கீரை போடலாம்னு இருக்கேன் ரத்தினம்! உரம் போடாம, பூச்சி மருந்து அடிக்காம வளர்த்து வெளையவைக்கும் காய்கறிகளுக்கு டவுனுல மவுசாம்! மத்த காய்கள விட இதுக்கு அம்பது, நூறு  கூட கொடுத்து நம்ம வீட்டுக்கே வந்து வாங்கிட்டு போறாங்க கடைக்காரங்க!

இது என்னய்யா புதுசா இருக்கு, பரவாயில்லையே கனகசபை. 

இதுக்கு பேரு ஆர்கானிக் காய்கறி! இயற்கை உரங்களை பயன்படுத்தி உருவாக்கும் காய் , கீரை , அரிசிகளுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்குறாங்க பணக்காரங்க. எப்படியோ மீண்டும் மக்கள் இயற்கை தான் உன்னதமுன்னு உணர ஆரம்பிச்சி இருக்காங்க , நல்லது தானே! அப்புறம் பாக்கலாம் ரத்தினம்!

நேரம் இருப்பின் இதையும் படிக்கலாமே:


Post Comment

நவம்பர் 03, 2012

ஏதோ சொல்லனும்னு தோணுச்சி ....


எந்த நேரத்தில் வெளிய கிளம்பி வந்தேனோ தெரியலைங்க, நான் பாட்டுக்கு (ஹெட் போன்ல பாட்டுக்கேட்டுக்கொண்டு அப்படி வந்தாதான் யூத்துன்னு சொல்றாங்க) என் வழியில வந்தேன், எதிரே ஒரு நல்ல முறையில் உடையணிந்த ஒரு ஜென்டில் மென் வந்து தம்பி நீங்க சென்னையா ? என்றார். இல்லை என்றேன்! 


அப்போ என் கஷ்டம் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என்று கூறிவிட்டு நான் நேற்று ஒரு கம்பெனிக்கு இன்டர்வியுக்கு ஊர்ல இருந்து சென்னை வந்தேன், முடித்து பஸ்ல கோயம்பேடு போயிட்டு இருக்கும் போது என் பர்ஸ் தொலைஞ்சு போச்சு, நீங்க ஒரு சின்ன உதவி பண்ணனும், நான் ஊருக்கு போக ஒரு நூறு ரூபாய் தேவை படுது, நீங்க கொடுத்திங்க என்றால் புண்ணியமா போகும். கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று அவர் கெஞ்சியதும் சட்டென்று பையில் விட்டு நூறு ரூபாய் எடுத்து கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்!(பெரிய வள்ளல்னு நெனப்பா, ஓவரா படம் காட்டாத தம்பி விசயத்தை சொல்லு)

எனது வேலைகளை முடித்து எனது அறைக்கு திரும்பி கொண்டிருந்தேன், வழியில் ஒரு நபர் உற்சாக பானம் அருந்திய மகிழ்வில் சாக்கடை ஓரம் அமர்ந்து  தியானம் பண்ணிகொண்டிருந்தார், சற்று கவனித்து பார்த்தேன் என்னிடம் காலையில் பணம் கேட்டு மன்றாடிய அதே ஜென்டில் மென் தான் இப்படி ஒரு ஆராதனை பண்ணி கொண்டிருந்தார்! சட்டையை பிடிச்சு நாலு வார்த்தை திட்டனும் என்று தோன்றியது பிறகு எதற்கு நமக்கு இந்த வேலை, பணம் கொடுத்து ஏமாந்தது நாம், இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நடையை தொடர்ந்தேன்.( பணத்தை கொடுத்து பல்ப் வாங்கிட்டு, பேச்ச பாரு பெரிய பாகவதர் கணக்கா!) 

இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், நான் சென்னையை பற்றி ஓரளவு அறிந்து கொள்ளும் முன் (இந்த ஆறு வருடத்தில் இன்னும் சென்னையை பற்றிய முழு அறிவு இல்லை என்பது தான் உண்மை! அதற்காக சென்னையை குறை சொல்ல முடியாது, பிழைப்புக்காக சென்னை வரும் சில மனிதர்களால் மொத்த சென்னை வாசிகளுக்கும் அவப்பெயர் வந்துவிடுகிறது) நடந்த நிகழ்வு! பிறகு சில விடயங்களை கேட்டும், அனுபவமாக உணர்ந்தும் எப்படி இருக்கணும், இருக்க கூடாது என்பதை பழகிக்கொண்டேன்! (இது ரொம்ப முக்கியம், இப்ப என்னதான் சொல்ல வர)

ஆகவே உங்களோட நட்புகள் யாரவது புதிதாக ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு முன்னரே இருப்பவரிடம் நல்லது கெட்டதுகளை அறிந்து கொண்டு செல்ல சொல்லுங்கள், உங்களுக்கு அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! (யப்பாடா ஒரு வழியா முடிச்சிட்டான், இந்த அல்ட்ரா சிட்டியில இந்த மொக்கை பதிவு தேவையா?)

Post Comment

நவம்பர் 01, 2012

களவு போன கடவுள் ...


சுமை கூடியதால் 
வழக்கத்திற்கு மாறாக 
புகை கக்கியபடி நகர்கிறது 
நகரப்பேருந்து!

ங்கிலத்தில் உரையாடி 
ஆர்ப்பாட்டமாய் கடக்கிறது  
முகங்களை மூடிய 
இளம்பெண்கள் கூட்டமொன்று!

குடித்த தேநீருக்கு 
காசு கொடுக்காமல் சென்றவனை 
வசை பாடிக்கொண்டே 
பாலில் தண்ணீர் கலந்து 
கொண்டிருந்தார் கடைக்காரர்!

விரைந்து வரும் வாகனங்களை  
சில மணித்துளிகள் 
ஆசுவாச படுத்த 
நேரம் கொடுத்துக்கொண்டிருந்தார்  
போக்குவரத்து காவலர்!

முகம் மறைத்த தாடியுடன் 
எங்கேயோ பார்த்து 
ஏதோ பேசிக்கொண்டிருந்தார் 
ஒரு முதியவர்!

டுங்கிய குரலில் 
நான்கு வரிகள் பாட,
விழுந்த சில்லறைகளை 
தடவி எண்ணினாள்
பார்வையிழந்த சிறுமி!

வசரமாய் சென்ற ஆம்புலன்சில் 
அடிபட்டு இறந்த 
நாயை வட்டமிடுகின்றன 
அதன் குட்டிகள் பசியுடன்!

றுப்புகளை உருவகப்படுத்தும் 
உடையணிந்த மங்கையை 
மானபங்க படுத்திக்கொண்டிருந்தன 
சில மன்மத பார்வைகள்!

கேட்டதும் வாங்கி கொடுக்கவில்லையென்று 
முகத்தை இறுக்கமாய்
வைத்துக்கொண்டு வேறங்கோ
நோட்டமிட்டது,
தாயிடம் கோபித்துக்கொண்ட 
குழந்தை!


த்தனை நிகழ்வுகளையும் 
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 
கடவுள், 
சற்றுமுன் 
களவு போனாராம்!





Post Comment

அக்டோபர் 31, 2012

சும்மா ஒரு விளம்பரம் ...


இந்த பய சும்மா இருந்தாலும் ஒரண்ட இழுக்குறான் 



இந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ ? கொட்டி தீக்குது ..



இன்னொரு தபா மொறைச்சே வசுவிடம் சொல்லிடுவேன்...



சக்ரவர்த்தி திருமகன் பார்த்துட்டாரா என்று மிஸ்டர் சீனுவிடம் கேளு ...



அவர் சக்ரவர்த்தி என்று கேட்டதுமே ஓட ஆரம்பித்துவிட்டார் அம்மா 



இம்மாம் பெரிய அணைய கட்டினவரு அமைதியா போய்ட்டார், தம்மாதூண்டு சிமென்ட் ரோடு போட்டவனெல்லாம் அலப்பரைய கூட்டுரானுவோ?



டிபன் சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாதே ....




Post Comment

அக்டோபர் 30, 2012

விரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)


நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் : 
அருணகிரி அதிரடி பேட்டி//


வர வர இந்த ஆளும் நாராயணி மாதிரி பேசுறாரே ...(இந்த ஈரவெங்கயாம் இங்க வேகாது நீங்க முன்னாடி பேசினது எல்லாத்தையும் நாங்க மறக்கல ஆதீனமே)


ப.சிதம்பரம் வெற்றிக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணையை நடத்தும்படி ஐகோர்ட் உத்தரவு// 
மாண்புமிகு நீதிபதி அவர்களே சற்று பொறுங்கள் இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது இவரின் பதவி காலம் முடிய,, பிறகு மனுவை பற்றிய விசாரணை வைத்துக்கொள்ளலாம் ..(இந்த கருமம் எல்லாம் இந்தியாவில் மட்டும் சாத்தியம் )

விஜயகாந்த் இனி எங்கு நின்றாலும் டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்// 
எதுத்தாப்புல இருக்குற டீ கடையில நின்னாலுமா தலைவரே

நான் பிரபலமாவது சிலருக்கு பிடிக்கவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் வருத்தம் 
......................................//

இதுக்கு மேலையும் நீங்க பிரபலம் ஆகணுமா தலைவா ?


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் சுகாதார சீர்கேடு! டெங்கு காய்ச்சலில் மாணவி பலி!//

அங்க மட்டுமா நாறுது, தமிழ் நாடே நாறுது ...


ஆசிரியர் திட்டியதால் தீ குளித்த மாணவன் சாவு//

ஏதோ டீ குடிக்கிற மாதிரி தீ குளிக்கிறது நல்லதுக்கு அல்ல ..

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் பலி : 
கும்பகோணத்தில் சாலை மறியல்//

பையன் இறந்ததுக்காக சாலை மறியல் செய்யும் மக்கள் 
படியில் தொங்கி பயணம் செய்யும் போதும் கண்டனம் செய்வது நலம் ...



(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா விலையில்லா பொருள் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)

Post Comment