புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 14, 2016

வானவல்லி - நூல் அறிமுகம்


சில வருடங்களுக்கு முன்பு 'இரவின் புன்னகை' என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத்தான் இவனைத் தெரியும், அடுத்தடுத்த பேச்சுக்களில் எனது மண்ணுக்காரன் என்று தெரிந்ததும் கூடுதல் நெருக்கமானது. இப்படித்தான் சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி அறிமுகமானான்.



அமெச்சூர் கவிதைகளை எழுதி உருகிக் கொண்டிருந்தவனை பல முறை திட்டியிருக்கிறேன், கவிதையின் வலிமையை பற்றியும், சமகால படைப்பாளிகளின் தவறுகளையும் பற்றியும் மணிக்கணக்கில் பேசித் தீர்த்திருக்கிறோம். தற்போது கவிதைகள் எழுதுவதை குறைத்திருக்கிறான் என்பது ஆறுதல். களப்பிரர்கள் பற்றி இவன் எழுதிய பதிவுகள் தரமான படைப்புகள். அதிகம் கவனம் பெறாமல் போனது காலத்தின் சோகம்.

பிறகொரு நாள் 'வானவல்லி' என்ற வரலாற்றுப் புதினத்தை இணையத்தில் தொடராக எழுதுவதாக கூறி, எழுதிவிட்டு என்னை வாசிக்கச் சொல்லி கருத்தினைக் கேட்டான். வரலாற்று நூல்களை வாசித்து பழக்கமின்மையால் முதல் இரண்டு தொடரினை வாசித்துவிட்டு கருத்தினை கூறினேன். அதன்பிறகு மின்னல் வேகத்தில் எழுத துவங்கிவிட்டான் நான் தான் அவனைப் பின்தொடர இயலாமல் போய்விட்டது. வாழ்வில் முதன் முறையாக இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்றால் அது 'வானவல்லி' என்ற தம்பியின் நெடிய கனவு நூல் தான்.

இந்த நூலினை எழுத வெற்றிவேல் மேற்கொண்ட ஆய்வும், வாசிப்பும் மிகப் பெரியது. ஒருமுறை எனது அறையில் வந்து தங்கியிருந்தவன் சட சடவென்று எழுதுவதைக் கண்டதும், வெறும் ஐந்து பக்கங்கள் எழுதவே நமக்கு நாக்கு தள்ளுகிறதே, ஆனால் இவனுக்கோ எப்படி சாத்தியமாகிறது என்ற ஆச்சர்யமும் கொஞ்சம் பொறாமையும் எட்டிப் பார்த்தது. அவ்வளவு கடின உழைப்பைக் கொடுத்து இந்நூலினை எழுதியிருக்கிறான்.



அவனது ஒருவருடத்திய உழைப்பினை வானதி பதிப்பகம் நான்கு பாகங்கள் கொண்ட புத்தகமாக வானவல்லியை வரும் புத்தக திருவிழாவினில் வெளியிட இருக்கிறது, அவனது எடையை விட புத்தக எடை கூடுதலாக இருக்குமென்று நம்புகிறேன்.

எனது 'இண்ட முள்ளு' நூல் வெளிவர முதன்மை காரணிகளில் இவனும் ஒருவன். எல்லோரிடமும் நட்பு பாராட்டும் தன்மையே அழகு. இவனின் சிறகு இன்னும் பெரிதாக விரியட்டும்.

இந்த ஒல்லிப்பிச்சான் இன்னும் பல நூல்களை எழுதி தனது இருப்பினை மிக அழுத்தமாக பதிவு செய்ய வாழ்த்துகளை கூறிக்கொண்டு, வானவல்லிக்காக காத்திருக்கிறேன்... நீங்களும் வாழ்த்துங்கள் அவன் வளரட்டும்....


Post Comment

மே 05, 2016

"இண்ட முள்ளு" - நூல் அறிமுகம்




உள்ளூர ஒரு கலக்கத்துடன் தான் முதன் முதலாக சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னை சேர்ந்து பல இன்னல்களுக்குப் பின்பு ஒருவழியாய் சீராக பயணிக்க துவங்குகையில் இணையப் பரிச்சயம் கிட்டியது. 2010ல் இணையப் பக்கத்தை துவங்கினாலும் இரண்டு மூன்று வருடங்கள் கவிதை என்கிற பெயரில் மொக்கைப் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தான் முதல் வலைப்பதிவர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு தான் நண்பர்களின் வட்டம் கொஞ்சம் விரிவடைந்து அவர்களின் எழுத்தை தீவிரமாக பின்தொடர்ந்து எனது தவறுகளை களைய முற்பட்டேன். அதன்பிறகு கவிதை எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு கதைகளின் பக்கமும் கட்டுரைகளின் பக்கமும் கவனத்தை திருப்ப முயன்றேன். 

2014 இறுதியில் தான் 'இண்ட முள்ளு'க்கான துவக்கப் புள்ளியை விதைத்து அதற்கான வேலைகளில் இறங்கினாலும் உள்ளூர எழும்பிய தயக்கத்தினால், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு எனது வழக்கமான வேலைகளில் கவனத்தைச் செலுத்தினேன். எனது மாமா கருணாகரசு, கோவை ஆவி, சீனு, தம்பி வெற்றிவேல் போன்றோர் புத்தக வேலை என்ன ஆச்சி, எந்த நிலைமையில் இருக்கிறது என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க, அவர்களிடம் தயங்கி தயங்கி புத்தகம் வெளியிடுமளவிற்கு எனது எழுத்து முதிர்ச்சி அடையவில்லை என்று நினைக்கிறேன், இன்னும் சில வருடங்கள் போகட்டும் என்று கூறினேன். 'உனது எண்ணம் தவறானது, நன்றாகத்தான் எழுதி இருக்கிறாய், தொடர்ந்து எழுதி புத்தகத்தை முடி' என்று ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் புத்தகப் பணியை உயிர்ப்பித்தேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இக்கதைகளை எழுதினேன், குறிப்பாக இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் எனது மண்ணில் நிகழ்ந்த நிகழ்வுகளே! அந்த நிகழ்வுகளையும், அதன் சார் மாந்தர்களையும் காயப் படுத்தாமல், நிகழ்வுகளை திரித்துக் கூறாமலும் கதையாக்க பெரும் சிரமமாக இருந்தது. இப்போது புத்தகமாக அதை வாசிக்கையில் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகுக்கு நானொரு திசை மாறிய பறவை. 2010 முன்புவரை எனக்கும் தமிழ் எழுத்துலகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இலக்கிய ஆளுமைகள் என்று நம்பப் படும் எவர் பெயரையும் அறிந்தது கூட கிடையாது. எங்கோ வெல்டிங் பட்டறையில் இரும்புகளோடு இரும்பாக கிடக்க வேண்டியவன் பாதை விலகி இப்படியொரு நிலையில் இருக்கிறேன். காலம்தான் எத்தனை வித்தியாசமானது. 

எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந்து ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களை அன்போடு நினைவு கூர்ந்து எனது ஒருவருட கனவும் கடின உழைப்பும், 'இண்ட முள்ளு' எனும் கதை தொகுதியை வாங்கி வாசித்துவிட்டு அதன் நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

பேரன்புடன் 

அரசன் 
  
புத்தக தொடர்புக்கு : 9943437899 

for online: Click here    

Post Comment