புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 30, 2013

சிறு துளை நீராய்...


பெருத்த சண்டையில்லை,
வெறுக்கும் வார்த்தைகளுமில்லை,
சின்ன கருத்து முறிவு தான் 
சிதைந்தது கூடு ... 

நிரம்பிய பாத்திரத்தின் 
சிறு துளை நீராய் 
வெளியேறிக்கொண்டிருக்கிறது 
அவனும், அவனின் நினைவுகளும்!

அவனுக்கு நான் 
எப்படியோ ?

பால்யத்திலிருந்து நண்பனவன்,
என் வளர்ச்சி கண்டு 
அவனுக்கு மன வெதுமை,
உறுதியானது 
நிகழ்வொன்றில்!

தெரிந்து தான் விலகுகிறேன் 
இனி தேவையில்லை அவன்,
அவன் 
அவனாகவே இருக்கட்டும்,
நான் 
அவனுக்கு எதிரியாகி கொள்கிறேன்!

சின்ன சின்னதாய் 
உடைவதை விட ,
ஒரே முறை உடைத்துவிடுவதில் 
பெரு விருப்பமாயிருக்கிறேன்!

உடைபட்ட கூடுகள் ஒன்றிணைந்து 
"பிழைக்கத் தெரியாதவனென்று"
ஏளனம் செய்தாலும், 

நடிக்கத் தெரியாதவனென்று 
ஆறுதல் படுத்திக் கொள்கிறேன் 
"என்னை"

Post Comment

டிசம்பர் 29, 2013

ஊர்ப்பேச்சு # 12 ( Oor Pechu # 12)


நாலஞ்சி மாசமா காஞ்ச சருக தின்னு நாக்கு வறண்டு கெடந்த மாடுகளுக்கு இனி கும்மாளம் தான். இன்னும் அஞ்சாறு மாசத்துக்கு வெசனமின்றி பசும்புல்லா தின்னு கொழுக்கும். அதிலயும் இந்த கம்மம் புல்லுக்கு இருக்குற மவுசே தனிதான்!

தீனி பாப்பது ஒரு கலை, எல்லாத்துக்கும் அவ்வளவு லேசுல பில்லு சேராது. சேக்குற வெதத்துல சேத்தா தான் பில்லு சேரும். இதுல நம்ம ஆளு கில்லாடி, போறது தெரியாது, வாறது தெரியாது . நெஞ்சு கனக்க ஒரு கட்டு வூட்டு முன்னாடி கெடக்கும்.

இரத்தினம் தான் புல்லு அறுத்ததுன்னு, அறுத்த எடத்த வைச்சே சொல்லிபுடலாம் அம்புட்டு சுத்தமா இருக்கும். ஒன்ன விட்டு வைக்க மாட்டார். முள்ளு பூண்டா இருந்தாலும் அறுத்து கறம்புல தனியா போட்டு வைச்சிடுவார். நூலு புடிச்சி அறுத்த மாதிரி அளவா அறுத்து எடுப்பதில் இவரை அடிச்சிக்க ஆளில்ல!

அருவா தவுத்து உழவாரம் போட்டு செத்துனாலும் சாணம் மொழுவுன தரையாட்டும் பளிச்சுன்னு கண்ண பறிக்கும். புல்லு சேக்குறது எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் அதை கட்டுவது, எத்தனை மைலு நடந்தாலும் தல உள்ள வாங்காது ரத்தினம் கட்டின புல்லு கட்டு.

பச்ச புல்லு திங்குறதுல ஒரு செரமம் இருக்கு என்னன்னா காலயில , கட்டுத்தறிய அம்புட்டு லேசுல சுத்தம் பண்ண முடியாது. தொள தொளன்னு கழிய ஆரம்பிச்சிடுங்க, அதுலயும் இந்த பசுங்க பாடு தான் பெரும்பாடு, காளைக கூட இதுக அளவுக்கு பண்ணாது! பாவம் அதுங்க என்னா பண்ணும் எல்லாம், அதுகளோட உடல் வாகு அப்படி. பத்து நாள் கழிஞ்சி தான் பொறவு சரியாவும்.

கோட்டுவா கூட கழுவாம கட்டுத்தறிய சுத்தம் பண்றது தான் ரத்தினத்தோட மொவன் பண்ற மொத வேலை.ரெண்டு நிமிசத்துல கட்டுத்தறிய சுத்தம் பண்ணிடுவான், இன்னைக்கு அரை மணி நேரமா வழிச்சிக்கிட்டு கெடக்கான். சுத்தம் பண்ணிட்டு தான் பள்ளிக்கூடம் கெளம்புவான், வேலை அதிகம் வைக்குறது ன்னு மூஞ்சிய தூக்கி கிட்டே சாணக்கூடைய தூக்கி விட அம்மாவ கூப்புடுறான்.

வாய் நடுங்கும், இந்த  குளிர்லயும் ரெண்டு நாளா ஊறிட்டிருக்கும் கம்மஞ்சோத்து உருண்டையில ரெண்ட எடுத்து போட்டு கரைச்சி குடிச்சிட்டு கெளம்பிட்டார் அறுத்துபோட்ட சோள தட்டைவோள கத்தையா கட்டி குத்தி வைக்க ....

டீத்தண்ணி குடிச்சிட்டு போலாம், கொல்லை போயி ரெண்டு கன்னாம்பு கட்டி குத்துறத்துக்குள்ளே பசி குடல இழுக்கும் அதான் இப்படி. கம்மஞ்சோறு குடிச்சிட்டு போனா அரைக்காணி தட்டையை அனாமத்தா கட்டி குத்திட்டு கண்ணு குட்டிகளுக்கு கம்மம் புல்லு பார்த்துட்டு வந்துடலாம் என்பது ரத்தினத்தோட நெனைப்பு ....

இன்னைக்காவது என்னை சீண்டமாட்டாளா ன்னு ஒட்டுமேல பல்ல இளிச்சிட்டு கெடக்கு போன வாரம் பொறுக்கியாந்த பூவம் வெளக்குமாறு சீவு... சீக்கிரம் பபயலுக்கு சோறு கொடுத்து அனுப்பனுமேன்னு சக்கரமா சொழலுரா நாலு தப்படி வூட்டுக்குள்ள ...

Post Comment

டிசம்பர் 20, 2013

பெரும்பசி கொண்டு... (Semman Devathai # 14)


கருவாட்டுப்  பொட்டலத்தை
சுற்றிவரும்  
கடும்பசி கொண்ட  பூனை போல்,
பெரும்பசி கொண்டு 
திரிகிறேன் அவளின் மேல்!




கொதி மணல் புழு போல 
துடிக்கிறாள் அவள்,
சேற்றிடை மீனாக 
தவிக்கிறேன் நான்!
இடையில் 
மௌனமாய் சிரிக்கிறது 
"காதல்"

Post Comment

டிசம்பர் 07, 2013

வாழக் கற்றுக் கொடுங்கள் ....

ரு புள்ளியில் துவங்கி அதே புள்ளியில் வந்து முடிந்துவிடுகின்றன பெரும்பாலான சிக்கல்கள், வேடிக்கையாக சிலதுகள் மட்டும் வளைவு நெளிவுகளோடு ஒழுங்கற்ற வேதாளமாய் பயணித்து வேதனையில் முடித்து வைக்கும். தாய் திட்டியதால் மகள் தற்கொலை, மனைவியுடன் சண்டை கணவர் கால்வாயில் குதித்து தற்கொலை இப்படி எண்ணற்ற கொலைகளை ஒவ்வொரு நாளும் சர்வசாதரணமாக நாம் கடக்க வேண்டி இருக்கிறது. மறுபக்கத்தில் தற்கொலைக்கு முயன்று மரணத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு சாராரையும் பார்த்துவிட்டு நகர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்! சொற்ப எண்ணிக்கையிலான நிகழ்வுகளும் அதன் பின்னணிகளும் தான்  நம்மை உலுக்கி சில இரவுகளை தூக்க மிழக்கவும்  செய்யும்!

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் ஏமாற்றத்தை பரிசளிக்கையில், ஏற்படும் வெறுமையை விரட்ட  பலரும் தற்கொலை என்கிற நிவாரணியை கையில் எடுக்கின்றனர். அதிலும் சமகால தலைமுறைகள் இப்பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர்கள்! ஆசிரியர் கண்டித்ததினால் மாணவி தீக்குளிப்பு என்கிற தகவலுக்கு பின் ஒளிந்திருக்கிறது இந்தக் கால சந்ததிகளின் மன தைரியமும், அவர்களின் தன்னம்பிக்கையும். 

நான் பட்ட அவமானத்தை, துன்பத்தை என் பிள்ளைகள் படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பெற்றோர்கள் தான்  இப்படி ஒரு பலவீனமான விதைகளை நாளைய சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்! கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பக்குவப் படுத்தி பிள்ளை வளர்ப்பதை தவிர்த்து பலகீனப் படுத்தி வளர்ப்பதினால் யாருக்கு என்ன பலன்? பாவம் பிள்ளைகளின் வாழ்க்கை தான். 

புத்தகப் பொதியேற்றி அனுப்பி வைக்கும் நமக்கு, அவர்களுக்கு வாழ்க்கைப் பொதியையும் சுமக்க கற்று தர வேண்டிய கடமை இருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இயங்கும் பெற்றோர்கள் நம்முள் எத்தனை பேர் இருக்கிறோம் என்பது தான் நம்முன் எழுப்பபடும் வினா? நமக்கு பிரச்சினைகள் வராத வரை அதை ஒரு செய்தியாக கூட மதிக்காத சமூகத்தில் இருந்துகொண்டு நாளைய  சமுதாயம் நன்றாக இருக்கும் என்று எண்ணுவது வெறும் பகல் கனவு போலத்தான், ஒரு நாளும் நனவாகாது!

நாங்கள் அந்த காலத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா ? என்று என் முன் சந்ததியினர் யாராவது ஆரம்பித்தால் அவரை பாவமாய் பார்த்திருக்கிறேன். காது கொடுத்து கேட்டதுகூட இல்லை . இப்போது அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க தோன்றுகிறது. எந்த மாதிரியான கட்டுப்பாடுகளையும், எவ்வளவு சிரமங்களையும் கடந்து வந்திருப்பார்கள் என்று நினைக்கையில் மதிப்பு சற்று உயரவே செய்கிறது. எட்டணாவுக்கும், ஒரு ரூபாய்க்கும் நாள் முழுக்க வரப்பில் முள் பொருக்கி இருக்கியிருக்கிறேன் என்று எனது மாமா கருணாகரசு சொல்லும்போதெல்லாம் பட்டறிவின் வீரியத்தை உணர முடிகிறது!

உங்களைப் பின்தொடரும் சந்ததிகளுக்கு வாழ்க்கையை சுகமாக்கி கொடுங்கள் அது உங்களது உரிமை, கடமை கூடவே வாழ்க்கையை வாழவும் கற்று கொடுங்கள்! ஒரு தலைமுறை சொத்தையானால் மீள்வது மிகக் கடினம்! போடும் பாதை உறுதியாக இருப்பின் வண்டிகளின் பயணம் பாதுகாப்பாக இருக்கும்! 


Post Comment

டிசம்பர் 04, 2013

மதம் பிடிக்க துவங்குகிறது ...




ஒற்றை வரிசை பிடிக்காது 
என 
எப்படியும் வாங்கிவிடுகிறான், 
என்னிடமிருந்து 
இரட்டை வரிசையில் 
முத்தங்களை !

அடம் பிடிக்கும் அவனழகை 
இரசிக்க காத்திருக்கையில், 
"மதம்" பிடிக்க துவங்குகிறது 
காதலுக்கு !!!
.

Post Comment

நவம்பர் 29, 2013

ஊர்ப்பேச்சு # 11 ( Oor Pechu # 11)





ஐப்பசியில் சன்னமாய் தொடங்கி மார்கழியில் மல்லுகட்டும் பனியின் குளுமை, விடிகாலையில் பார்த்தால் சிறுமழை பெய்து நனைத்த மாதிரி செடி கொடிக குளித்திருக்கும். எவ்வளவு சீக்கிரம் படுத்தாலும் காலையில் எழும்ப எவருக்கும் மனசு வராது. காலைச்சூரியனின் இளஞ்சூட்டு வெயிலில் முகம் கழுவவே எல்லோரும் பிரியப்படும் கடுங்குளிர் காலம் அது. ஆனால் முதல் ஆளா எழும்பி குளுமையை விரட்டிக்கொண்டிருந்தார் இரத்தினம்! கடினமான உழைப்பாளி என்று சொல்லுவதற்கு வேறு ஏதும் வார்த்தைகளில்லை.

இப்ப போனாதான் பய ,பள்ளிக்கூடம் கிளம்பறதுக்குள்ள நாம வூடு திரும்ப முடியும் எந்திருடி. பனி நப்புல புடுங்க ஏதுவா இருக்கும் கெளம்பு , சீக்கிரம் கெளம்பு , பயலையும் எழுப்பு அவன் வந்தா ரெண்டு மெனை சீக்கிரம் காலியாவும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார் இரத்தினம் கம்பளித்துண்டை தேடியபடி!

மேற்கத்தி காட்ல வெளைஞ்சி வெடிக்க காத்திருக்கும் உளுந்து பிடுங்க தான் இம்புட்டு காலையிலே மனுஷன் ஆர்ப்பாட்டம் போடுறது. மூணு வருசமா அரைப்படி வெதை போட்டா முழுசா மூணு படி கூட விளையாம ஏமாத்தி கிட்டு இருந்த பூமி, இந்த வருசம் தான் காய் சடை சடையா காய்ச்சிருப்பத பார்த்து ஊர்க்கண்ணு விரிஞ்சிருச்சி, மனுசன் மனசு நெறஞ்சிருக்கு.வெயிலுக்கு முந்தி போனா களைப்பு தெரியாம சீக்கிரமா பிடுங்கலாம்னும், வெயில் ஏற ஏற உளுந்த நெத்து வெடிக்க ஆரம்பிச்சிடும்ன்னு உள்ளுக்குள்ள ஓடுறதாலத்தான் இம்புட்டு அவசரப்படுத்திட்டு இருக்கார்.  

இந்த மனுசனுக்கு தூக்கமே வராது , அலுத்துக்கொண்டே பாயின் மூலையில் சுருண்டு கிடக்கும் பயலை எழுப்பினாள் இரத்தினத்தின் மனைவி. ரெண்டு மூணு தடவ சுனங்கினவன் அப்பாவின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டான்.

இவர்களை எழுப்பிக்கொண்டே சுக்கு காபியும் தயார் பண்ணிட்டார், ஆவி பறக்க ஆத்திக்கொண்டிருக்க, கழுவிய முகத்தோடு அவர் பக்கம் வந்து அமர்ந்தான் பையன் ... ஆத்திய டம்ளரை அவனிடம் நீட்ட , வேண்டாம் உரைக்கும் என்று தப்பித்துக்கொண்டான். 

இரத்தினம் வைப்பது சுக்கு காபியல்ல, கசாயம் ன்னு தான் சொல்லணும் அவன் மனைவி மட்டும் அறிந்த இரகசியம் அது. குளிருக்கு இது எவ்வளவோ மேல் என அவளும் ஒரு டம்ளரை காலி பண்ணிவிட்டு 
மூவரும் கிளம்பினார்கள்.

மணி ஏழுக்கெல்லாம் கால் காணி உளுத்தங் கொடிகளை பிடுங்கிவிட்டார்கள், பனி நப்போடு கட்டு கட்டியாச்சின்னா இன்னைக்கே அடிச்சி உளுந்த எடுத்துடலாம் என்கிற முனைப்பில் தீவிரம் செலுத்தினார் இரத்தினம். 

மணி எட்டை நெருங்கினதும் புள்ள பள்ளிக்கூடம் கெளம்பனும், வீட்டுக்கு போகட்டுமான்னு மனைவி கேட்க, சரி நீயும் கூட போயி அவனை கெளப்பி அனுப்பிட்டு எனக்கு சோறு எடுத்துவான்னு சொல்லிட்டு புளிச்ச செடியை முறுக்கி முடிந்து கொண்டிருந்தார், உளுத்தங்கொடிகளை கட்டுவதற்கு.

உளுத்தங்கொடி சிறுசா இருந்தா பெரிய கூடையில அள்ளிடலாம், இந்த முறை உரம் கொஞ்சம் கூடுதலா போட்டதால செடி கொஞ்சம் முரடா வளர்ந்திருக்கிறதுனால கட்டா கட்டிடலாம் என்பது இரத்தினத்தின் எண்ணம்.

ஆறேழு கட்டுகளாக கட்டி கொண்டு போய் சிங்காரவேலு களத்துல சேர்த்தார், கடைசி கட்டையும் பிரிச்சி காயப் போட்டுட்டு, களைச்சி போய் புளிய மரத்தடியில் உக்காரவும், சோத்துக் கூடையோட மனைவி வரவும் சரியா இருந்தது ....


Post Comment

நவம்பர் 27, 2013

உன் இரகசிய அழகினை !


கொடியில் நீ 
தொங்கவிட்டுப் போன உந்தனாடைகள்,
உன் பேரழகையும், பெருந்திமிரையும்
பேசியபடி இருக்கின்றன ,
நீர்ச்சொட்டுகளாக!



உன் வீட்டு ,
மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் 
மற்றத் துணிகளோடு 
சேர்ந்து வந்துவிட்ட 
உந்தன் உள்ளாடையொன்று 
காற்றில் கசிந்துக் கொண்டிருக்கிறது 
உன் இரகசிய அழகினை !

Post Comment

நவம்பர் 20, 2013

எச்சில் முத்தங்கள்...


உதிரிகள் போல் 
சிதறி கிடக்கும் அவனின்  
நினைவுகளை 
கோர்த்துக்கொண்டிருக்கிறேன் 
நெடிய நரம்பொன்றில்,

"முதலிரவு" கழிந்த 
நான்காம் நாளிரவில் 
விமானம் ஏறியவன்,
இரண்டு வருடம் தொலைத்து, 
இன்றிரவு வருகிறானாம்!

கனவுகளை நனவாக்கி, 
ஏக்கங்களை சுமையேற்றி, 
வண்டி ஏறப் போவதாய் 
அலைபேசி வழி அழுது 
துண்டித்தான்!

செல்லும் அவசரத்தில் 
கடித்து காயப்படுத்திய,
உதட்டு தழும்போடு 
காத்திருக்கிறேன் 
அவன் தரும், 
எச்சில் முத்தங்களை சு(ம)வைக்க! 


Post Comment

நவம்பர் 13, 2013

பதிவுலகம் அவ்வளவுதானா ?


முன்புபோல் பதிவெழுத நேரம் கிடைப்பதில்லை என்பது என்னவோ உண்மையாக இருந்தும், பெரும்பாலான நேரங்களில் விழும் இடைவெளிகளுக்கு காரணம், "என்னத்த எழுதி", "என்னத்த படித்து" என்கிற இலக்கிய சிந்தனைகள் தான். இதுபோன்ற  சிந்தனைகள் அடிக்கடி என்னை ஆட்கொண்டு  தொடர்ந்து இயங்கவிடாமல் செய்கிறது,

ஏதாவது ஒரு சித்தரை சந்தித்து கலந்தாலோசிக்க விருப்பமாய் இருக்கிறேன், அனுபவசாலிகள் சிறந்த சித்தரை சிபாரிசு செய்யவும்!

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் இளம்பெண்கள் நிறைந்த திருவிழா போல் எப்போதும் சுறு சுறுப்பாய் இயங்கிய பதிவுலகம் இப்போது பல்லுபோன கிழவி கணக்கா பெரும் அமைதி கொண்டுள்ளது. 

என்னடா நமக்கு வந்த சோதனை, இப்படி நித்தம் பதிவெழுதி கொல்லுகிறார்களே என்றெல்லாம் குமுறிய காலம் போய், அந்த இரக பதிவுகள் கூட வருவதில்லையே என்கிற கவலை மனசுக்குள் பாரமேற்றுகிறது! ஆண்டவரே அவர்களின் வருத்தங்களை நீக்கி, மீண்டும் பதிவு எழுதும்படி இரட்சியும்! பாவங்கள்  தொலையட்டும்?....!

நண்பர்களை சம்பாரித்தது தவிர்த்து இங்கு நான் எதையும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்ற அலார மணி என் சிறு, பெரு மூளைகளின்? மடிப்புகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தாலும் நானும் ஒரு  பதிவன்? என்று சொல்லிக்கொள்(ல்லு)வதில் என்னவோ மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

சமீப காலமாக எவரும் புதிதாய் பதிவெழுத வந்தமாதிரி எனக்கு நினைவில்லை. நமக்குள்ளே தான் பம்பரம் சுற்றிக்கொண்டிருக்கிறோம். இந்நிலை நீடித்தால் சோர்ந்து கிடக்கும் பதிவுலகம் , இன்னும் சோர்ந்து தான் போகும். எத்தனை நாளைக்குத் தான் நம் சட்டைகளை நாமலே கிழித்துக்கொண்டு திரிவது ?

புதிதாய் வருபவர்களை ஊக்கப்படுத்தி, கரங்கொடுத்தால் தான் மேலும் புதியவர்கள் உள்நுழைய வாய்ப்பு உருவாகும். (எலேய் அரசா உம் பிரச்சினை என்னதான்னு சொல்லித்தொலையும் ). தெரிஞ்சாதான் சொல்ல மாட்டேமோ ? எதிலும் புது வருகை இல்லையெனில் அது  காலப்போக்கில் தானே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எங்கோ படித்த நியாபகம். 

எழுத வா வென யாரையும் கரம் பிடித்து இழுக்க முடியாது ? அவர்களாக வந்தால் தான் உண்டு என்கிற நிதர்சனமும் புரிகிற அதே வேளையில் தான்,  ஏன்? முன்பிருந்த பிளாக்கின் மோகம் இப்போதில்லை என்கிற பெருங்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது. உங்களுக்கு ?         


Post Comment

அக்டோபர் 30, 2013

நான் தொலைத்த தீபாவளி...




காலரில் மஞ்சள் தடவிய புதுச்சட்டையோடு,  எண்ணெய் தேய்த்துக் குளித்த சுறுசுறுப்பில் வெடியின் காதை திருகி கொண்டிருக்கும் எதிர்வீட்டுச் சிறுவனிடம், இருபது  வருடங்களுக்கு முந்திய என்னை காண்கிறேன்! அவனின் பார்வையிலும், செய்கையிலும் எத்தனை சந்தோசங்கள் ஒளிர்ந்து மறைகின்றன. அவனுக்கு எதைப் பற்றிய பயமுமில்லை,அவனின் முழுக்கவனமும் வெடியென்ற ஒன்றின் மீது தான் நிறைந்திருக்கிறது. வெடியை பற்ற வைக்க படாத படுகிறான். சில வெடிகள் வெடிக்காமல் அவன் ஆர்ப்பாட்டத்திற்கு சில மணித்துளிகள் அணை போட்டாலும் அயர்ந்து போகாமல் அடுத்த நொடியே மீண்டுவிடுகிறான். மாடிப்படியில் அமர்ந்துகொண்டு அவனின் சந்தோஷத்தை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 

இந்த வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள் மிக எளிதாய் நடந்தேறிவிடுகின்றன, நிறைய மாற்றங்கள் நமக்கு தெரியாமலே சன்னமாய் நம்முள் ஊடுருவி வெளியேறியும் விடுகின்றன. விரும்பியோ, விரும்பாமலோ நாம் சிலதுகளை அனுசரித்து போகத்தான் வேண்டியிருக்கிறது. வயது என்ற ஒன்று எவ்வளவு பெரிய  தாக்கத்தை மனிதருள் ஏற்படுத்துகின்றன என்பதற்கு எதிர்வீட்டுச் சிறுவன் ஒருவனே சாட்சி.வாழ்வின் வேக ஓட்டத்தினை தீர்மானிக்கும் காரணியாக வயதும் ஒன்றாக இருக்கிறது. 

பலகாரங்களை சாப்பிட அவனின் அம்மா அழைத்து ஆறு முறைக்கும் மேலாயிற்று, கொஞ்சம் கூட அவன் சட்டை செய்யவில்லை. வெடியை பற்ற வைப்பதும், வெடித்த காகிதங்களை கண்டு மலர்வதுமாக இருக்கிறான். இரண்டு வெடிகளுக்கு ஒருமுறை என்னையும் பார்த்து புன்னகை பூக்கிறான்.  குரலிட்டுக்கொண்டிருந்த அவன் அம்மா  இம்முறை வெளியே வந்துவிட இவன் வீட்டினுள் செல்ல, நினைவுகள் என்னை பின்னுக்கு இழுக்க தொடங்குகிறது.





ஏழு வயதிலிருந்து பதினைந்து, பதினாறுக்குள் தான் வெடிகளின் மீது வெறிக்காதல். ஒரு மாதத்துக்கு முன்பே தீபாவளி பற்றிய வண்ணக்  கனவுகளில் மிதந்து, எத்தனை வெடிகள், எவ்வளவு வாங்கவேண்டுமென்று பெரிய பட்டியலால் நிரம்பிவிடும்  வீட்டுப்பாட நோட்டின் கடைசி நான்கைந்து பக்கங்கள். தயாரித்து கொடுக்கும் பட்டியலில் கால்வாசி அளவு தான் அப்பா வாங்கி வருவார் என்று தெரிந்தும் பட்டியலிடுவதை நானும், பட்ஜெட்டை அப்பாவும் தளர்த்தியதில்லை. தீபாவளிப் புதுத் துணிகளின் மீதுகூட அவ்வளவு மோகம் இருந்ததில்லை, வெடிகளின் மீதும், அதன் ஒளி,  சத்தங்களின் மீதும் அவ்வளவு காதல். சில நாட்களுக்கு முன்பிருந்தே தீபாவளி களை கட்ட ஆரம்பித்துவிடும் குழந்தைகள் நிறைந்திருக்கும் வீடுகளில்.  

முதல் நாள் இரவே இந்த வெடியை, இந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் என்ற திட்டமிடலில் உறக்கம் தள்ளி போய் வழக்கமாய் எழும்பும் நேரத்தை விட தாமதமாக எழும்பி வெடியை தேடும் கண்களுக்கு தடை போடும் அம்மாவின் எண்ணெய் கிண்ணம். ஒருவழியாய் குளித்து வெடிகளை தொடச் சென்றால் நாலு பக்கத்துக்கு கண்டிப்பு கட்டளைகளை போடுவார் அப்பா. அதையும் கடந்து வெடித்து மகிழ்ந்த தருணங்களின் தடங்கள் இன்னும் மறையாமல் அப்படியே தான் இருக்கின்றன, என்ன காலமும் , நானும் கொஞ்சதாய் மாறியதாய் கவலை கொள்கிறது மனசு! சின்ன சின்ன மத்தாப்புக்கெல்லாம் பயந்து அப்பாவின் பின் ஒளிந்த காலத்திலிருந்து இன்றுவரை தீபாவளி தீபாவளியாகத்தான் இருக்கிறது. பருவமும், வாழ்வியலும் தான் அதிலிருந்து என்னை தனித்துவிட்டு, என் பின் சந்ததிகளை சேர்த்துக் கொண்டுவருகிறது.

பால்யமும், அதனுள் நிரம்பிய சேட்டைகளும், நந்தவனத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் பூக்களாக மனம் முழுதும்  நிறைந்து கிடக்கிறது. அதை இரசிக்கத்தான் நேரமின்றி துரத்திக் கொண்டிருக்கிறது எந்திர வாழ்வு. வளர்ச்சியையும், அது தரும் போதையையும் சுவைத்து மகிழ, இதுபோன்ற எண்ணற்ற மின்மினிகளை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. வளரும் பிள்ளையென்று அளவு சற்று கூடுதலாக எடுத்த புதுத் துணிக்குள் நான் புகுந்து கொண்டு, பலகாரம் சாப்பிட்ட எண்ணெய் பிசுபிசுப்போடும், கந்தக நெடியோடும் நண்பர்களோடு அன்று ஓடியாடிய அதே தெருவில் இப்போது என்னை ஓடவிட்டுருக்கிறேன், மீண்டு(ம்)  வர சில காலம் பிடிக்கும்! 


Post Comment

அக்டோபர் 23, 2013

மல்லிகைப்பூ தோளொன்று!




பெரும் நெரிசலில்லை, 
என்னைத் தவிர்த்து 
அவ்விடத்தில் 
மூன்று பேர்கள் மட்டுமே!

என் வலது தோளை 
உரசியபடி கடந்தது 
மல்லிகைப்பூ தோளொன்று!
ஏதோ, 
அவசரமென்று 
அவள் நடையில் தெரிந்தாலும், 

என் அவசியங்களை  புறந்தள்ளி 
அவள் அவசரத்தை,
ஆராயத் தொடங்கிவிட்டது  
குரங்கு மனசு! 

Post Comment

அக்டோபர் 21, 2013

நான் சுட்டது, உங்களுக்கு சுடாமல் # 2....




மட்டை வெட்டப்பட்ட பனைமரங்கள் 


காய்ந்த பனை மரம் ...


நஞ்சை நிலம் ...


எருக்கம் தான்...


சென்னையில் ஒரு காதல் காதல் சோடி ..


பனை வரிசை 

இயற்கையாய் அமைந்தது ...

எருக்கம் மலர்கள் 



முருங்கை 



மாற்றான் பிரதர்ஸ்...



Post Comment

அக்டோபர் 16, 2013

நையாண்டி சற்குணம் அவர்களுக்கு ...


வாகை சூட வா எனும் தரமான சினிமாவை திரையரங்கில் பார்த்து வியந்த சராசரி பாமர இரசிகன் நான், நையாண்டி என்கிற மகா கேவலத்தையும் முதல் நாளே திரையரங்கில் சென்று பார்த்து நொந்த கடைக்கோடி தமிழ் இரசிகனின் மனக்குமுறல் இது! படம் பார்த்து இத்தனை நாள் கழித்து எழுதுவதற்கு காரணம் இருக்கிறது!

தோழர் பிலாசபி பிராபகரன் சொன்னது போல் வாகை சூட வா என்னும் தரமான படத்தை திரையரங்கில் பார்க்காமல் போன பெரும்பாலானவர்கள் தான் நையாண்டியை இங்கு கிழித்து தொங்கவிட்டு இருகின்றனர்! என்னைய்யா உங்க நேர்மை?

வாகை சூடவா என்னும் நேர்த்தியான சினிமாவை வெற்றி பெற செய்யாத நாம் நையாண்டியை குறை கூறுவதில் என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நானும் எழுதாமல் இருந்தேன்! ஆனால் சில நாட்களாக என் கண்ணில் கண்ட நையாண்டி விளம்பரங்கள் மண்டையை கிறுகிறுக்க வைத்தமையால் தான் இந்த பதிவு!

நையாண்டிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் செம நையாண்டியாக இருக்கிறது அதுவேறு கதை! களவாணி என்ற சுமார் படத்தையும், வாகை சூட வா என்ற விருது படத்தையும் கொடுத்த சற்குணம் ஏன் இந்த அளவுக்கு கீழிறங்கி மட்டமான படத்தை கொடுத்திருக்கிறார் என்று சற்று யோசிக்கையில் ஒன்று மட்டும் என் புத்திக்கு தெளிவாக விளங்குகிறது!

களவாணியில் தான் இயக்குனர் என்பதை நிறுத்திக்கொண்ட சற்குணம் வாகை சூட வா வில் சிறந்த இயக்குநர் என்பதை நிருபித்தவருக்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை கவலை தான் நையாண்டி என்ற வீழ்ச்சியை எடுக்க வைத்திருக்கிறது அதற்கு ரசிகர்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்!

பெரிய பட்டாளமே வைத்துக் கொண்டு சோபிக்க தவறிய சற்குணம் அவர்களிடம் வைக்கும் சில கோரிக்கைகள் ....

மதுரைக்காரர்கள் தன்னோட படங்களில் தன் மண்ணையும், மக்களையும் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்வது போல் நீங்களும் ஆசைபடுவது தப்பில்லை நேர்த்தி தேவையாய் இருக்கிறது பிரதர்! (மதுரை, மதுரை  என்று அவர்கள் கொடுக்கும் அக்கப் போர் அது வேறு கதை) 

திரைக்கதை உங்களுக்கு நன்றாக வரும் என்பதை முந்தைய இரு படங்களும் உணர்த்தின, அதை தவிடு பொடியாக்கியது இந்த நையாண்டிஎன்பதை மனதில் வையுங்கள் பாஸ்!

பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை முந்தைய பட பாடல்கள்  எவ்வளவு அருமையாக இருந்தது! இந்த மாதிரி குப்பை சினிமாக்களை எடுக்க தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள், குட் புக் லிஸ்டில் இருக்கும் நீங்கள் எடுக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து! 

மீண்டும் ஒரு தரமான சினிமாவில் சந்திப்போம்!  

Post Comment

அக்டோபர் 11, 2013

ஏக்கப் பெரு வலி!


அவளைப்பற்றி எழுதிட
அமர்கையில்,
மழை ஓய்ந்த
வானம் போலாகிறேன்!



எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!

இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில் 
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

மீண்டும்
அதே ஏக்கப் பெரு வலி!
உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!

தலை கவிழ்ந்த படி
அவளிடம் சொன்னேன்,
தலையை நிமிர்த்தி
சிரித்துவிட்டு செல்கிறாள்!

இதற்கு 
திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், 
அந்த நொடியே மறந்திருப்பேன்!


Post Comment

அக்டோபர் 05, 2013

ஊர்ப்பேச்சு # 10 ( Oor Pechu # 10)


இராத்திரி "கிடேரி" கன்னு ஈன்ற பசுவின் இளங்கொடியை நரம்பு பையில் போட்டு கட்டி தாழ்வாரத்தில் கட்டி வைத்திருந்தார் ரத்தினம்! நாயிடம் சிக்காமலிருக்க சற்று உயர்த்தி கட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்தார், இளங்கன்னை பாக்க எந்திருக்கும்பொதெல்லாம் இதுமேலவும் ஒரு கண்ணு இருந்து கொண்டே இருந்தது அவருக்கு!  

விடிஞ்சதும் விடியாததுமா கட்டுத்தறிய சுத்தம் பண்ணிட்டு, அது கட்டியிருந்த இடத்துக்கு கீழ இரத்தம் மாதிரி கொஞ்சம் கறுப்பா சொட்டியிருந்ததை நாய் நாக்கால் சுத்தம் பண்ணியிருக்கும் போல!

ருசி கண்ட நாய் பையை தவிர்த்து கவனம் சிதறாமல் பையையே பார்த்துக்கொண்டு இருந்த நாயை வெறட்டிவிட்டு பையை எடுத்துகொண்டு போய் ஊருக்கு வெளிய ஏரிக்கரை "ஆலின்" பெருத்தக் கிளையின் மூணாவது நடுக்கம்பில் கட்டிவிட்டு இறங்கி பனி போர்த்திய வெதுப்வெதுப்பான தண்ணியில் முங்கி எழுந்தார் இரத்தினம்!

மார்கழி மாசம் குளிருல அதுவும் விடிய விடிய ஏரில குளிக்கிற சுகத்த எப்படி சொல்ல? அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும்.  புகை படர்ந்திருக்கும் குளிர் நீரினுள் இறங்கி ஒரு முங்கி முங்கினாள் போதும் எம்மாம் பெரிய குளிரும் தெரிச்சி ஓடும்! மேந்தண்ணி குளிராவும், கீந்தண்ணி வெதுவெதுன்னு இருந்து ஏரிக்குள் இறங்கும்போதே மனசுல கிளர்ச்சிய உண்டுபண்ணும்!   

பொடி அள்ளுவது போல் கரை மண்ண அள்ளி பல்லுவிளக்கினார், களியும், மணலும் கலந்து சன்ன ரவை போல் இருந்ததால் இன்னொருமுறை எடுத்து நாலு சிலுப்பி சிலுப்பிவிட்டு அடித்தொண்டையிலிருந்து காரி நாலு முறை உமிழ்ந்தார், சத்தம் கேட்டு தான் எடம் திரும்பும் பழந்தின்னி வவ்வாலுக கொஞ்சம் மேல பறக்க ஆரம்பிச்சிதுக!  நடுத்தண்ணியில வா கொப்பளிச்சிட்டு இன்னொருமுறை முங்கி முங்கிட்டு மனுசன் விறுவிறுன்னு நடைய கட்ட ஆரம்பிச்சிட்டார் தர்மலிங்கம் டீ கடை நோக்கி!

பனியின் குளுமையை தேநீரும் , காலைநேர அமைதியை "முருகனைக் கூப்பிட்டு" என்று சௌந்திர ராசனும் விரட்டிக் கொண்டிருக்க கண்ணு முழிக்க ஆரம்பிச்சது ஊரு!

டீ குடிச்சிட்டு இருக்கும் இரத்தினத்த ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு டீ போடு தர்மலிங்கம்ன்னார் கனகசபை. 

என்ன இரத்தினம் இம்புட்டு காலையிலே குளிச்சிட்ட , என்ன சேதி! ஏதேனும் பயணமா ?

இல்லைய்யா மாடு கன்னுபோட்டிருக்கு, அதான் எளங்கொடி கொண்டு போய் ஆலமரத்துல கட்டிட்டு, உடம்பெல்லாம் பிசு பிசுன்னு இருந்துச்சி அப்படியே ஒரு குளியல போட்டுட்டு வாறன்! இப்படி காலையில குளிச்சி எம்புட்டு நாளாச்சி ... 

ஆமாம் இரத்தினம் , காலைக்குளியல் சுகமே தனித்தான்யா ... ஆமா என்ன கன்னு ?

"கிடேரி " (பெண் கன்று குட்டி ). சாயந்திரம் மூணு மணியில வலியில துடிச்சி ஒரு வழியா ஒம்பது மணி இருக்கும் அப்பத்தான்யா வெளிய தள்ளுச்சி .. பாவம் வயசான மாடு ... இதோட எட்டாவது கன்னு ... எஞ்சுமையில பாதிய சுமக்கும் இன்னொரு புள்ளய்யா அது ...

இந்த காலத்துல பெத்ததுக கூட கவனிக்கிறதில்ல இரத்தினம், இதுகதான் ஒருவழியில நம்மள காப்பாத்துதுக ...

சரி கனகசபை கம்பு வேக வைச்சிருந்தேன், எடுத்து மாட்டுக்கு வைக்கணும், கண்ணு போட்ட மாடு வேற ... சாயந்திரம் ஓய்வா இருந்தா வாயேன்  அந்தப் பக்கம், பேசி ரொம்ப நாளாச்சி ... 

ம்ம் சரி சரி வரேன் இரத்தினம், பாக்கலாம் ...  


Post Comment

செப்டம்பர் 30, 2013

சுமை தாங்கிகள்!



எவ்வளவோ சொல்லியும்
மணம் முடிந்த
இரண்டாம் வாரமே
இடம் பெயர்ந்தோம்
தனிகுடித்தனத்திற்காய்!

திருமணம் முடிந்த 
இரண்டு மாதத்தில்
எனக்கும் அவனுக்கும் 
இது நான்காவது சண்டை!

அவனால் மூன்று,
என்னால் இன்று!

சிறு மௌனம்,
பெரிய கிள்ளு,
இறுக்கும் அணைப்பு, 
இத்தோடு இளகிடுவோம்!


வழக்கத்துக்கு மாறாய் 
இரண்டு மணிநேரத்துக்கும்
மேலாக நீள்கிறது!
மௌனப்  பேச்சு!

இத்தனை நெருக்கத்தில் 
இவன் சும்மாய் இருந்ததில்லை 
என்னிடம்! அசையாமல் 
படுத்திருக்கிறான் 
விசிறியை வெறித்தபடி!

அவன் மௌனத்தை கலைக்க  
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !
அவன் சிரித்தான்!

என் பிடிவாதத்தை 
இன்றும் இரசிக்கும்  
அம்மாவும், அப்பாவும் 
என்னுள் வந்து போனார்கள்! 

சாப்பிட்டுக் கொண்டிருந்தால் 
என்னை சுமந்த  
அந்த  உயிர்களுக்கு 
நிச்சயம் புரையேறி இருக்கும்!


Post Comment

செப்டம்பர் 25, 2013

காதல்! (எனக்கு நேர்ந்த பயண அனுபவம்)


னிதருள் எத்தனை சுய விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் இந்த காதல் என்ற ஒன்றின் கீழ் எப்படியாவது இணைந்துவிடுகிறான்! "காதல்" எத்தனை வலிமையான, வசீகரமிக்க ஏகாந்த சொல்! இன்றளவும் காதல் என்ற ஒன்றை நோக்கியே பெரும்பால மனித மனங்கள் சுழலுகின்றன, என்பதை அடிக்கடி ஏதாவது ஒரு வினோத செய்தி, செய்கைகளின் மூலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன! சமீப காலமாக அதன் வடிவம் மாறுகின்றதே தவிர மூலமான "காதல்" இன்னும் கற்புடனே இருக்கிறது என நம்புகிறேன்!



(கேடி பில்லா இவரே தான் )



காதலை வெளிப்படுத்தி அதை முன்னெடுத்து செல்வதில் நகரத்துக்கும், கிராமத்துக்கும் சற்று மாறுதல் இருக்கிறதே தவிர, காதலில் அல்ல! என்ன நகரத்தில் சந்தித்து பேசிக்கொள்ள வாய்ப்பு எளிது, கிராமத்தில் சற்று சிரமம்! தொழில் நுட்ப வளர்ச்சியால் அதுவும் எளிதான மாதிரி தெரிகிறது! இருந்தும் சில கட்டுப்பாடுகள் நகரங்களை  விட கிராமங்களில் சற்று அதிகம்! சமீபத்தில் ஊருக்கு சென்றிருக்கையில் பேருந்தில் கண்ட ஒரு தலைக்காதல் அப்படியே உங்களுக்கும்...

அம்மிணி, கூட ரெண்டு புள்ளைங்களோட வந்து  பஸ்ல ஏறிச்சி, ஒரு கையில நோட்டு, இன்னொரு கையுல மொபைல் , கண்ணுல காதலோட ஒரு வாலிப முறுக்குடன் இளந்தாரிப்பய ஒருத்தன் ஏறினான்! அவன பார்த்த வுடனே சொல்லிப்புடலாம், காதல் வெறியில கண்டமேனிக்கு திரியுறான்னு  அப்படியொரு கள அய்யா முகத்துல! அம்புட்டும் காதல் வெறி ! சரி, மூணு புள்ளைங்க இருக்கே இதுல எது தலைவரோட ஆளா இருக்கும்ன்னு சின்னதா நோட்டம் விட்டேன். ஒரு மண்ணும் வெளங்கல! பொழுது போகணுமில்ல நடப்பதை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன்! டப்புன்னு ஒரு சந்தேகம் பய புள்ள மூனையும் ஒரே நேரத்துல கட்டைய கொடுக்குறானோன்னு! 


அங்கிட்டு மூணுல, ஓன்னுத்தான் பதினாறு வயதினிலே மயிலு கணக்கா பயல, மாவா அரைச்சுது, மத்த ரெண்டும் எந்த மாரியம்மன நெனச்சிக்கிட்டு இருந்ததோ யாருக்கு தெரியும்! எடையில கொஞ்சம் கூட்டம் கொறைஞ்சதும், ஏன்டா தம்பி நிக்குற அதான் எடம் இருக்குதுல்ல செத்த உக்காரலமுள்ள என்று பெருசு ஒன்னு சல்லைய கூட்ட (எல்லா பஸ்லயும் இப்படி ஒரு பெருசு ஏறிடும் போல, திருந்துங்க சாமிகளா !!!), நம்ம தம்பி, பெருசுக்கு பார்வையிலே பதிலச் சொல்லிட்டு பட்டைய கெளப்ப ஆரம்பிசிட்டாப்ள! வந்த வேலை முக்கியமுல்ல! 

திடிர்னு நினைவு வந்தவனாய் கையிலிருந்த கொரியன  (தான் நினைக்குறேன்) சீண்ட காதுக்கே நுழையாத இந்தியில பாட ஆரம்பிச்சிட்டாப்ள! காதல் வந்தா கண்ணு தெரியாதும்பாங்க இங்க என்னடான்னா காதும் கேக்காது போல! அங்கன மயிலும் பயலுக்கு பார்வையாலே வெறி ஏத்த பரவச நிலைக்கு போயிட்டாப்ள!  அஞ்சாறு பாட்டு ஓடியிருக்கும் அதுல ஒன்னு கூட தமிழுல இல்ல, சிலது இந்தி , இன்னொன்னு என்னா மொழின்னு வெளங்கல. இப்படியொரு சங்கீத கச்சேரி நடத்தி தான் தமிழன் என்பதை அட்சரசுத்தமாய் நிருபித்தான்! (ஆமா அவனும்  அந்த புள்ளைய பாக்குறான் , அந்த புள்ளையும் அவன  கொஞ்சுது . அப்புறம் என்னா கருமத்துக்கு? இந்த பாட்ட போட்டிருப்பான் ? இன்னும் விடை கெடைக்கல எனக்கு !!!)           

ரெண்டு பேரோட ஊரு வந்திருக்கும் போல, நாயகனும், மயிலும் இறங்கி கொள்ள பேருந்தே காலியானது போல உணர்ந்தேன்! பின்ன பொழுதுக்கும் பொழுதும் போச்சி, பதிவும் ஒன்னு தேருச்சில்ல. இதிலும் பாருங்க அவன் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவளும் தான்! இருந்தும் இரண்டு பேரின் முகத்திலும் ஒரு இனம்புரியா பிரகாசம்! இதுதான் காதலின் வலிமை. வேறு எந்த உறவுக்கும் கிடைத்திடாத கிளர்ச்சி, வீரியம் இந்த காதலுக்கு தான் உண்டு! காதல் எண்ணங்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்தாலே போதும் எத்தனை மாற்றங்கள் மனிதருள்! நல்ல காதலுக்கு கரம் கொடுத்து வலு சேர்த்திடுவோம் நண்பர்களே ! 

      

Post Comment

செப்டம்பர் 18, 2013

விலகிய துப்பட்டாவிடம் வீழ்ந்து தொலைக்கிறேன்!


இன்றோடு சரியாக
ஆறாவது முறையாக பார்க்கிறேன்!
அவளுடன் மேலும்
சில பெண்கள்
தோழிகளாக இருக்க கூடும்!

கரு நீலமும் , வெண்மையும்
கலந்த நிறத்தில் உடை ,
முடியை மிக கவனமாக
ஒழுங்கு செய்திருந்தாள்,
மை பூசியிருப்பதை
புருவங்கள் உணர்த்துகின்றன!

ஒவ்வொரு முறையும் 
கண்களை கவனிக்க முற்பட்டு
விலகிய துப்பட்டாவிடம்
வீழ்ந்து தொலைக்கிறேன்!

இன்றாவது திருத்தமாய் 
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது 
ஏழு, எட்டு... என்று!

பண்பற்ற போட்டியினால் 
மழுங்கடிக்கபடுகிறது 
மரபும், மாண்பும்!
பல்லிளிக்கிறது 
பக்குவமற்றப் பாங்கு! 


Post Comment

செப்டம்பர் 14, 2013

ஏனெனில் நான் பதிவன் ...


எங்கு சென்றாலும் நிறைகளை விட குறைகளே கண்ணுக்கு அதிகம் தெரிவதால், ச்சே... நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எரிச்சல்  ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது ! 
சொந்த வேலையாக சில இடங்களுக்கு சென்றாலும், அங்கும் நமக்கு பதிவெழுத ஏதாவது சிக்காதா என்கிற என் பூதக் கண்கள் விரியத் தொடங்கிவிடுகின்றன. 



இது ஏதாவது பயங்கர நோயாக இருக்குமோ என்று மருத்துவரை பார்த்து தெளிவு கொள்வோம் என்று அங்கு சென்றேன், அங்கு செமத்தியாக ஒரு மேட்டர் சிக்கியது (பதிவெழுத தான் பாஸ், நீங்க நினைக்குற மாதிரி இல்ல)  எம் பெருமான் முருகன் விரும்பினால் அடுத்த பதிவில் காண்போம்! 

எங்கு எது நடந்தாலும் , அதை நம்ம பத்திரிக்கைகாரர்கள் பண்ணுவதைப் போல், (அது அவங்க தொழில்? )  கவர் பண்ணுவதில் குறியாக இருக்கிறேனே தவிர, ஏதாவது எம் பங்குக்கு கேட்கணும் என்கிற துணிச்சல் சுத்தமாய் இல்லையென்று தான் சொல்லவேண்டும். 

என்னையும் மீறி ஒரு வெறி பொங்கினால் நேராக அருகிலிருக்கும் இணைய சென்டரை நாடிச் சென்று , பிளாக்கிலும், பேஸ் புக்கிலும் முறையிட்டு என் சமூக கடமையை ஆற்றிக்கொள்கிறேன்! நாலு ஸ்டேடஸ் , மூணு பதிவு தேறிய நன்றியோடு அடுத்த சமூக குறைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது மனசு! 

என்னை மாதிரி ஒரு சமூக போராளியை கவனிக்காத மத்திய, மாநில அரசுகளை சில நேரங்களில் திட்ட தோன்றும், இதெல்லாம் நம் கடமை இதுக்கு போய் பலனை எதிர்பார்ப்பதா என்று ஆழ் மனசு கதறி கதறி சமாதானம் சொல்லுகையில் அமைதி கொள்கிறது மனசு ....

இம்புட்டு செஞ்சிருக்கோம், பதிலா நமக்கு இந்த இணையம் என்ன செஞ்சது என்று ஏடாகூடமா யோசிச்சு , மதிப்பற்ற இந்த பதிவுலகத்தை விட்டு விலகப் போகிறேன் என்று ஒரு பதிவை எழுதவேன், அண்டமெங்கும் நிறைந்திருக்கும் என் நலம்விரும்பிகள், தயவு செய்து விலகவேண்டாம் வேண்டுமென்றால் ஓய்வு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இதுவரை முப்பது முறைக்கு மேல் விலகவேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏற்றிருக்கிறேன் என்றால் என் பொறுமையை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம்!

எவரும் படித்திராத ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதி பெயர் வாங்கணும் என்று முடிவு பண்ணி மூணு வருசமா தேடிகிட்டு இருக்கேன், பழைய புத்தக கடை தாத்தா இந்த தெரு பக்கமே வந்துறாத என்பது போல் பல முறை பார்த்தாலும், நான் என்ன சாதாரணா ஆளா ? விடுவதாய் இல்லை! இந்த வருடத்தில் என் எண்ணம் ஈடேருமென்று அம்பலவாண சுவாமிகள் சொல்லியிருக்கிறார்!

ஆகவே இரசிக கண்மணிகளே கொஞ்சம் பொறுத்திருங்கள், இதுவரை யாரும் படித்திராத ஒரு புத்தக விமர்சனத்தோடும், யாரும் பார்த்திராத வித்தியாசமான சினிமா விமர்சனத்தோடும்  உங்களை இம்சிக்க விரைவில் வருகிறேன், அதுவரை அமைதியாக இருக்கும்படி உங்களை கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!



பி. கு.:  வலைப்பூ தொடங்கி  தொடர்ந்து பதிவு எழுதி உங்களை எல்லாம் இம்சிப்பேன் என்றும், இத்தனை நண்பர்களை சேர்ப்பேன் என்றும் சத்தியமாக நினைக்கவில்லை! இது என்னோட 200 வது பதிவு. இந்த இருநூறில் படிக்கும்படி இருந்தது வெகு சொற்பமே!  நல்ல பதிவுகளை தருவதற்கு முயற்சிக்கிறேன்! ஆதரவு அளிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் , வணக்கங்களும்! 


Post Comment

செப்டம்பர் 12, 2013

இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது...


ன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது,
மனிதப் பெருக்கத்தில்
தொலைந்து போனதாய்
சொன்னார்கள்,
நானும் வேகமாய் தலையாட்டினேன்!

சொல்லி சொல்லியே
தொலைக்கப்பட்டதே தவிர, 
எவரும்
தடுக்க முற்பட்டதில்லை!



ஏழெட்டு கிறுக்கலோடு
என் கடமை முடிந்ததாய்
எண்ணிக்கொண்டேன்!

மகளோடு சேர்த்து 
எதிர்வீட்டாரின் குழந்தைக்கும், 
மார் ஊட்டும் (மாரூட்டும்)  
மஞ்சுளா அக்கா 
இன்னும் 
உயிர்ப்போடு தான் வைத்திருக்கிறாள்!

இவளைப் போல் 
இன்னும் பலர் வைத்திருக்கலாம், 
தொலைந்து போனதாய்ச் சொல்லும் 

மனிதநேயத்தை!


Post Comment

செப்டம்பர் 04, 2013

நானும், தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பும்!


சென்னையில் தொடர்ந்து இரண்டாம் முறையாக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு! வெளியூர்களில் இருந்து நிறைய பதிவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்! திட்டமிட்டபடி விழா நிகழ்வுகள் நடந்து முடிந்ததில் மன நிறைவு... 

இந்த வருட சந்திப்பில் நிறைய நண்பர்களை காணவேண்டும் என்றும், அவர்களோடு பேசவேண்டும் என்று பெரிய பட்டியல் வைத்திருந்தேன், அனைத்தும் தவிடு பொடியாகின! உங்களோடு பேசமுடியாமல் போனதற்கு என்னை மன்னியுங்கள் தோழமைகளே! 

இந்த சந்திப்பு சில இனிய தருணங்களை வழங்கியது! குறிப்பாக சிறப்பு விருந்தினர்களோடு சில மணித்துளிகள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு எளிமை பொதிந்துள்ளது என்பதை, அவர்களோடு நெருங்கி பேசுகையில் புரிகிறது! அவர்களின்  எழுத்துக்கள் போலவே  அவர்களும் வெள்ளந்தி மனிதர்கள்!

உற்சாகமான ஒரு நாள் முழுதையும் பதிவர்களோடு செலவிட்டது மன நிறைவை தருகிறது! எதையும் பாராமல் இணையம், தமிழ் என்ற ஒன்றுக்காக ஒரு கூரையின் கீழ் குழுமியது ஆனந்தத்தில் திளைக்க வைத்துவிட்டது!

விழா என்று ஒன்று வந்துவிட்டால் அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை மன மகிழ்வுடன் பொறுத்துக்கொண்ட தோழமைகளுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்!


(சிறப்பு உரைக்கு முன்)




(எழுத்தாளர் பாமரனுடன் நான்!)




(திரு. கண்மணி குணசேகரன் அவர்களோடு )



(விழாவிற்காக உழைத்த தோழர்கள் - சிலர் விடுபட்டுள்ளனர் )



(திரு. சதீஷ் செல்லத்துரை மற்றும் வெற்றிவேல்)


காமெடி கும்மி நண்பர்கள் பலரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது! என்ன நேரம்தான் இல்லை அவர்களோடு கொஞ்சம் பேசி மகிழ!தோழர்களே என்னை மன்னிக்க!

இன்னும் எழுதநிறைய இருக்கிறது தேவைப்பட்டால் சரியான நேரத்தில் இன்னொரு பதிவில் மிக தெளிவாக சொல்கிறேன்!

முடிவாக அனைவரும் கிளம்பிய பிறகு அவரவருக்கு கொடுத்த பணியோடு எதிர்பாராமல் சற்று சுமை கூடினாலும்  திறம்பட செய்து முடித்த மன நிறைவோடு நான், சீனு மற்றும் ரூபக் மூவரும் அவரவர் இல்லம் நோக்கி நகர்ந்தோம்! 


Post Comment

ஆகஸ்ட் 31, 2013

தமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...


Post Comment

ஆகஸ்ட் 28, 2013

கோலாகல பதிவர் திருவிழா ...


ந்த வருடத்திற்கான பதிவர் சந்திப்புக்கான துவக்கபுள்ளி மிக தாமதமாக போடப்பட்டாலும், ஆயத்தப் பணிகள் என்னவோ வெகு வேகமாக நடந்து, இதோ இன்னும் சில நாட்களில் வடபழனியை ஆக்கிரமிக்கப் போகிறது பதிவர்களின் புயல்! இறுதி கட்டப் பணிகள் மிக துல்லியமாக நடைபெற்று வருகிறது! குறிப்பாக வெளியூர் பதிவர்கள் தங்குமிடம், அவர்களை அழைத்து வரும் பொறுப்பு இப்படி சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் விழா ஒருங்கிணைப்பு தோழர்கள்! விழாவின் பிரமாண்ட வெற்றிக்கான அறிகுறி இப்போதே தென்பட ஆரம்பித்து விட்டது.




ரண்டு சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தந்து உரை ஆற்ற இருக்கின்றார்கள்! திரு. பாமரன், திரு. கண்மணி குணசேகரன் இவர்களின் எழுத்து பலருக்கும் பரிச்சயமாயிருக்கும், உரையை கேட்டு மகிழ்வோம் வாருங்கள்! அடுத்ததாய் பதிவர்களின் தனித்திறன் நிகழ்ச்சி இவ்வருடம் புதியதாய் இடம் பெற்றிக்கிறது! எழுத்தில் மின்னும் இவர்கள், மற்ற திறமைகளையும் வெளிக்கொணர வாய்ப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன்! கலந்து கொண்டு சிறப்பிக்க? போகும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!  





சென்ற வருடம் போல் இந்த வருடமும் புத்தக அரங்கு அமைத்து பல முன்னணி பதிப்பகத்தாரின் புத்தகங்களை நமக்கு சிறப்பு விலையில் வழங்க இருக்கும் பதிவர்களின் வேடந்தாங்கல் அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு என் நன்றிகள்!  புத்தகங்களை ஆன்லைனில் வாங்க இங்கு செல்லுங்கள்!  

அடுத்து சக பதிவர்களின் புத்தக வெளியீடும் இருக்கிறது, அவர்களுக்கு நம் மனங்கனிந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வோம்! அதைப்பற்றிய விரிவான தகவல்களை மெட்ராஸ் பவனில் பாருங்கள்!

துவரை வருகையை உறுதி செய்தவர்களின் பட்டியலை காண இங்கே செல்லுங்கள்! சென்ற வருட பதிவர் சந்திப்பின் வெற்றி இந்த வருடத்தின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது! இதுவரை வருகையை உறுதி செய்யாத தோழர்கள் விரைவில் உங்களின் வருகையை உறுதி செய்யுங்கள்! அதனை வைத்து தான் தங்குமிடம், உணவு  போன்றவற்றை தயார் செய்ய முடியும்! வருகையை உறுதி செய்ய கீழுள்ள நண்பர்களை தொடர்பு கொள்ளவும்!

மதுமதி – kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் – madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

Post Comment

ஆகஸ்ட் 20, 2013

பதிவர்களின் இரண்டாமாண்டு திருவிழா




Post Comment

ஆகஸ்ட் 16, 2013

நான்காம் தலைமுறை

சில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில்! திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. பெரிதாய் கவலையில்லை, வறுமையும் சொல்லும்படி இல்லை. இளமை முறுக்கு, வாலிபச் செருக்கு என்று விதவிதமாய் திட்டுவாள்  முத்தம்மாள் பாட்டி! 





சுருக்கம் விழுந்த தேகம் , சுருள் சுருளாய் முடி. இரவிக்கை அணியாத உடல். மனசு இன்னும் சுறுசுறுப்பாய் தான் இருக்கிறது, உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது என்று சமீப காலமாக அடிக்கடி அவள் சொல்லி கேட்கமுடிகிறது! என்பது வயதை கடந்தவள் . சோறின்றி கூட இருந்து விடுவாள், பேச ஆளின்றி அவளால் இருக்க முடியாது! பறவைகளோடு, மனிதர்களும் இரைதேடும் அறுவடைக் காலங்களில் நின்று கூட பேச நேரமிருக்காது. அந்த அவசரக் காலங்களில் இவளுக்கு அடை காக்கும் கோழி தான் தோழி!

தலைகுளித்து, வெயிலில் உணர்த்தி, எண்ணெய் தடவி சிக்கெடுக்கும் விதம் அவ்வளவு அழகு! இவள் வெற்றிலை போடும் முறையை யாரேனும் புதிதாய் காண நேரிட்டால், அவர்களுக்கும் வாய் சிவக்கும்! அவ்வளவு நேர்த்தி! வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன் என்று அடிக்கடி அவள் சொல்லுவாள், அர்த்தம் அறியாமல் பேரப்பிள்ளைகள் உதாசீனப் படுத்தாமல் இல்லை, இருந்தும் கோபப் படமாட்டாள் முத்தம்மாள் பாட்டி!

சிலமுறை கேட்டிமிருக்கிறேன் ஏம் பாட்டி உனக்கு கோவமே வராதா என்று? சின்ன புன்னகைதான் பதிலாக தருவாள்! தங்கைகள் பெரியவர்களானதும் பாட்டி அவர்களிடம் மட்டுமே அதிக நேரங்களை செலவிடுவாள், நிறைய சொல்லிக்கொண்டே இருப்பாள், என்ன சொல்கிறாள் என்று விளங்கவும் விளங்காது, தங்கைகள் சிக்கி கொண்டதை எண்ணி உள்ளூர கொண்டாடி இருக்கிறேன்! என்னதான் பேசுகிறாள்  என்று கேட்க மனம் விரும்பியதுமில்லை! இப்போ என்ன கிழவி பேசியிருப்பாள் என்று யூகிக்க முடிகிறது!


வேலைக்காக ஊரைவிட்டு கிளம்புகையில் எல்லோரும் சற்று மனம் கனத்து நிற்கையில் இவள் மட்டும் எல்லாரையும் ஒரு அதட்டு அதட்டிவிட்டு விபூதி வைத்து, போயிட்டு வாடா ராசா என்று வாய் நிறைய சிரித்து வழியனுப்பினாள்! எந்த சூழலையும் பதட்டமின்றி கையாளுவாள், எப்படியென்று கேட்டால், எல்லாம் உன் தாத்தா சொல்லிக்கொடுத்தது தான்டா என்பாள்! வேலை கிடைத்து நகரத்திலே தங்கும்படி ஆன சூழ்நிலையில் இது உன் முப்பாட்டன் காலத்துலிருந்தே இங்கதாண்டா இருக்கோம், மண்ணை மறந்துடாதடா என்பாள்!

ஊருக்கு செல்லும் குறுகிய நாட்களிலும் பாட்டியிடம் முடிந்தவரை நிறைய நேரம் செலவிட ஆரம்பித்தேன்! வீரியமான ஆலமரம் போலிருந்தவள் சின்ன காய்ச்சலென்று படுத்த நான்கு நாட்களில் மூச்சை நிறுத்திக்கொண்டாள்! அடித்துப்பிடித்து ஓடி பார்க்கிறேன் கண்ணாடி  பெட்டிக்குள் உறங்கும் பாட்டி அப்போதும் அழகாகவே இருந்தாள், பாட்டி இறந்துவிட்டாள் என்று சில மணித்துளிகள் கழித்தே புத்திக்குள் உரைத்தது!

எத்தனை வலிகளையும், ஏமாற்றங்களையும், இன்பத்தையும், துன்பத்தையும் பார்த்தவள் இப்படி ஒடுங்கி கிடக்கிறாள்! மூன்று தலைமுறைகளை கண்டவள் இன்று கண்மூடி படுத்திருக்கிறாள்! சடங்கு முடித்து, சிதைக்கு தீ வைத்து விட்டு திரும்பாமல் நடக்கிறார்கள்! மனதுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பி அடங்குகின்றன, முன்னோக்கி தான் நடந்துகொண்டே பின்னோக்கி பயணிக்கிறேன்! 


வீடு சேர்ந்ததும்  அவளின் பழைய படமொன்றை காண்கையில்  "உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !

  

Post Comment

ஆகஸ்ட் 12, 2013

உந்தனழகை! (Semman Devathai # 13)



எல்லா மழையும் 
ஒன்றாய் இருப்பதில்லை,
அதுபோல தான் 
அவளின் முத்தங்களும்,
தடத்தோடும், தடமற்றும்!




சன்னலை திறந்து வைத்து
உறங்காதே!
மின்மினிகள் 
உளவு பார்க்கின்றன 
உந்தனழகை!


Post Comment