புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 30, 2012

போதுமடி எனக்கு!




அளவாய் பேசிடும் 
உன் உதடுகளைவிட
அடிக்கடி அளாவி
என்னை மொத்தமாய் 
பழுதாக்கும் 
உன்னிரு கண்கள் 
போதுமடி எனக்கு, 
இந்த ஜென்மம்  நிறைவதற்கு! 

(மைதா மாவு காஜலை எதிர்ப்போர் சங்கம். இது சத்தியமா மயிலன் அண்ணாச்சிக்கு எதிரானது அல்ல)

Post Comment

ஆகஸ்ட் 29, 2012

ஊர்ப்பேச்சு # 2


இதன் முதல் பகுதி: ஊர்ப்பேச்சு # 1

என்னப்பா கனகசபை எப்படி இருக்கே, பாத்து ஒரு வாரமாச்சே, என்ன வேலை நடக்குது காட்டுல,என்ன போட்டுருக்கே மேல காட்டுல என்று கேட்டுக்கொண்டே வாயில வச்சிருந்த வேப்பங்குச்சிய ரெண்டா கிழிச்சி நாக்கு வழிக்க ஆயத்தமானார் ரத்தினம்,

அட ஏம்ம்ப்பா என் கதையை கேக்குற, அடிச்சி புடிச்சி மேல காட்டுல நிலக்கடல போட்டேன், ரெண்டு வெளாவுக்கு பயிர் பத்தாம பக்கத்தூரு பரமசிவதுக்கிட்ட அப்பவே ஓடி ரெண்டு மரக்கா வாங்கியாந்து போட்டேன்,

ஏ என்னப்பா சொல்ற, பயிர் முளைச்சு வந்துச்சா, இல்லையா பத்து நாளா மழ தண்ணி இல்லையே ஊர்ல!

அட அத ஏன் ரத்தினம் கேக்குற , போட்ட பயிற நாயும் , பறவைகளும் தின்னது போக ஏதோ அங்கொன்னும், இங்கொன்னுமா முளைச்சிருக்கு, இப்ப பார்த்தா பயிர விட கோரையும், அருவும் மண்டி கிடக்குது, இதுல எங்கிட்டு நான் கள கொத்தி பயிர கண்டுபிடிக்கிறது! நாலு நாளா நானும் எம் பொஞ்சாதியும் கொத்தி பார்க்கிறோம் இன்னும் ரெண்டு மென கூட தாண்டல, என்னத்த சொல்றது!

ஏன் கனகசபை இப்ப மழையும் இல்ல இதுல கள கொத்துற, காயுற காய்ச்சல்ல பயிறு வதங்கி போச்சுனா என்ன பண்ணுவ, மழ தூரட்டுமே அப்புறம் வெட்டினா என்ன?

இல்ல ரத்தினம் இப்பவே பயிர விட கள தான் மிஞ்சி நிக்குது, இன்னும் கொஞ்ச நாள் போச்சுனா, பயிர கண்ணுல கூட பாக்க முடியாதுப்பா! மழ தூறும் எங்கிற நம்பிக்கைதான் ரத்தினம்!

ஏன் கனகசபை நீயும் , உன் பொஞ்சாதியும் சேந்து காட்டுல உழளுரிங்க, கூலிக்கு நாலு ஆள வச்சு வேலையா முடிச்சாதான் என்னப்பா? ஏதாவது ஒண்ணுனு படுத்துகிட்டா பொழப்ப யார் பாக்குறது!

நீ சொல்றது வாஸ்தவம் தான் ரத்தினம், நான் என்னா வந்தா வேண்டாமின்னா சொல்ல போறேன், ஒருத்தரும் கூலி வேலைக்கு வர தயாரா இல்லையப்பா!

என்ன சொல்ற கனகசபை என்னாச்சு, நம்ம ஊரு ஆளுவோ தான் கூலி வேலைக்கு வருவாங்களே, அதை வைச்சி தான்  பாதி குடும்பமே நடக்குது!

நீ சொல்றது எல்லாம் ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ரத்தினம் , நீ வெளி நாட்டில இருந்ததுனால இங்க நடக்குற சங்கதி தெரியாம இருக்குது, வந்து பத்து நாளு தானே ஆவுது போவ போவ நீயே தெரிஞ்சிக்குவ!

என்னப்பா சொல்ற , ஒன்னும் புரியலையே , கொஞ்சம் வெளக்கமாதான் சொன்னாதான் என்ன?

இல்ல ரத்தினம் இன்னைக்கு கால கரண்டு மாட்டுக்கு மாவு அரைக்க போவனும், இல்லைனா கரண்டு போயிரும் அது எப்ப வருது போவுதுனு தெரியல இன்னைக்காவது அரச்சிக்கிட்டு வந்துடுறேன், நாம இன்னொரு நாள் இத பத்தி பேசுவோம்!

சரிப்பா கனகசபை சீக்கிரம் போ மில்லுக்கு, கரண்டு நின்னுட போவுது!


Post Comment

ஆகஸ்ட் 28, 2012

என் பங்கிற்கும்...


என்னை விட பல பதிவுலக தோழமைகள் பதிவர் திருவிழாவை வெகு சிறப்பாய் எழுதி விட்டார்கள், என் பங்கிற்கு கொஞ்சமாய்! எதிர்பார்த்ததை விட பதிவர் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றதில் மன நிறைவை அடைய செய்தது.ஒளி, ஒலி அமைப்பு தான் கொஞ்சம் காலை வாரிவிட்டது மற்றபடி விழாவிலோ , திட்டமிடுதலிலோ எந்த குறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!

(சுய அறிமுகம் செய்து கொள்ளும் காட்சி)

மற்றபடி இதுவரை நேரில் சந்திக்காத உறவுகளை அன்று சந்தித்து உறவாடியதில் உள்ளம் நிறைந்தது!மூத்த பதிவர்கள் என்கிற இளம் எழுத்தாளர்களின் பாராட்டை காண்கையில் கொஞ்சம் பொறாமை எட்டி பார்த்தது, இந்த வயதில் நம்மால் எழுத முடியுமா? குறிப்பாக  மதிப்பிற்குரிய அய்யா புலவர் சா. ராமானுசம் என்கிற இளைஞரின் 
பேச்சில் நான் கரைந்து போனேன்! 

இது தான் முதல் மேடை என்பதினால் சுய அறிமுகம் என்னை சோதித்து தான் பார்த்தது, மனதில் பதிந்த வார்த்தைகள் அனைத்தும் மேடை ஏறியதும் முற்றிலுமாய் மறந்து என்ன பேசுவது என்று தெரியாமல் எதையோ உளறி விடை பெற்றேன்!

அப்புறம் கவியரங்கம், கொஞ்சம் நடுக்கமாகதான் இருந்தது இருந்தும் ஒருவழியாக சமாளித்து கவிதை பாடி முடித்தேன்! அன்றைய பொழுது ஏதோ ஒரு புதிய உலகத்தில் இருந்தது போலதான் இருந்தது! நெகிழ்வான நாட்களில் இந்த திருவிழாவும் நிச்சயம் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
(கவிதை வாசிக்கும் காட்சி)

மிகவும்  ஆர்வமுடன் விழாவில் கலந்து கொண்ட குடந்தையூர் தளம்   திரு. ஆர். வி. சரவணன் சார் முகத்தில் கண்ட மகிழ்வை என்னால் இங்கு வார்த்தையில் விவரிக்க இயலவில்லை அப்படியொரு சந்தோஷம் எனக்கும் இருந்தது!

மற்றபடி இந்த மாபெரும் திருவிழாவிற்கு வித்திட்டு அதை வெற்றிகரமாக செய்து முடிக்க  துணையாய் நின்ற அனைத்து நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்! 

இது போன்ற நிகழ்வு வருடம் ஒரு முறை நடந்தால் நட்பின் வலிமை கூடும் , பதிவர்களின் தோழமை சிறக்கும், பதிவுலகம் மென்மேலும் வளரும் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்! நன்றி  

Post Comment

ஆகஸ்ட் 25, 2012

பதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு...


Post Comment

ஆகஸ்ட் 24, 2012

சீக்கிரம் கெளம்புங்க ...

ஒரு சிறிய விதையின் விருட்சம் விண்ணை முட்டும் அளவிற்கு இன்று வளர்ந்து அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுள்ளது! இணையக்கண்ணாடிகளில்முகம் பார்த்து உறவாடிய உறவுகளை, நேரில் கண்டு உறவை வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் ஒரு பெரிய தொடக்கமிது!

இந்த முயற்சிக்கு பல உறவுகளின் பங்களிப்பும், அயரா உழைப்பும் இருந்தமையால் பல பரபரப்பையும் மிஞ்சி அதிரடியாக திருவிழா சிறப்பாக நடைபெறும் என்பதில் அச்சமில்லை!

இந்த நிகழ்வுக்கு விதையிட்டவர்களுக்கும் , அதை வெற்றிகரமாய் மாற்ற சளைக்காமல் உழைக்கும் அன்பின் உறவுகளுக்கும் நன்றியினை உங்களோடு இணைந்து நானும் தெரிவித்து கொண்டு, விழாவை சிறப்பிக்க பதிவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

இதுவரை வருகையை உறுதி செய்த தோழமைகளை இங்கே  காணலாம்! 

உறுதி செய்யாதவர்கள் விரைவில் உறுதி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்!

தொடர்புக்கு :

மதுமதி(தூரிகையின் தூறல்)98941 24021

பால கணேஷ்(மின்னல் வரிகள்)73058 36166



ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)9094969686


சிவக்குமார்(மெட்ராஸ்பவன்) 9841611301

========================================================================

இரட்டை விருது தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்பு தோழர்                           திரு.  அ .கா . செய்தாலி அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ...


                                        

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தோழர் திரு. சீனி  அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் ...

Post Comment

ஆகஸ்ட் 22, 2012

என் பால்யக்கால பசுமை நாட்கள்!




உடைந்த கோலி,
கையிழந்த மரப்பாச்சி,
உதடு கிழிந்த 
ஊதாங்குழல்,
முகம் சிதைந்த 
பழைய நாணயம்,
முகப்பு இல்லா 
பாடல் புத்தகம்,
செல்லரித்த 
நடிகனின் படம்,

இவற்றோடு இன்னும் 
உறவாடிக்கொண்டு தான்
இருக்கின்றது,
என் பால்யக்கால 
பசுமை நாட்கள்!


Post Comment

ஆகஸ்ட் 21, 2012

நான் செய்த நம்பிக்கை துரோகம்...


என்னடா இப்படி ஒரு தலைப்பு வச்சிருக்கானே, உண்மையைத்தான் சொல்கிறானோ இல்லை பொய் சொல்ல போறானோ என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது, சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான்! (போதும்டா உன் பில்டப்பு மொதல்ல மேட்டர சொல்லு...) 

சரி வாங்க பதிவுக்கு போவோம்(அப்படி ஏதும் இங்க இருக்கா என்று மட்டும் கேட்காதிங்க)எல்லோருக்கும் சின்ன வயசில் செய்த சேட்டைகள் அப்படியே மனசுக்குள் பசுமையான நினைவுகளாய் என்றுமே நிலைத்திருக்கும்! பின்னோக்கி பார்க்கும் தருணங்களில் நெஞ்சில் தேன் சுரக்கும் சுகமான நினைவுகள் அவை!

நான் சின்ன வயசில் சின்ன சின்ன தப்புகள் நிறைய செய்திருக்கிறேன், அதை அப்பவோ அம்மாவோ கண்டுபிடிக்காமல் இருக்க நிறைய பொய்கள் சொல்ல வேண்டி வரும், பேரும் நாடகம் நடத்தவேண்டி வரும்!(நாட்டுக்கு ரொம்ப முக்கியம்)

என்னை வீட்டில் மாட்டிவிட வாய்ப்பு தேடி திரியும் ஒரே ஒரு எதிரி யாரென்றால் அது என் தங்கை தான்!நிறைய நேரங்களில் அப்பாவிடம் தர்ம அடி வாங்க பேருதவியாய் இருந்த நல்ல உள்ளம் என் தங்கை மட்டுமே!இந்த பிரச்சினைக்கு எப்படி முடிவு கட்டுவது என தீவிரமாக மூளையை கசக்கி (பார்ரா) ஒரு நாள் நான் நைசா பேசி இனி என்னை மாட்டிவிடாதே, அது போல் உன்னையும் மாட்டி விட மாட்டேன் என்று ஒரு ஒப்பந்தம் (?!)(ரொம்ப முக்கியம்) போட்டுக்கொண்டோம் நானும் என் தங்கையும்!

சொன்னது போல் நான் உடைத்த கண்ணாடி விளக்கை பூனை தள்ளி விட்டுதான் உடைந்தது என எனக்காக பொய் சொல்லி என்னை காப்பாற்றிய என் தங்கையை, அது செய்த தவறை முதல் ஆளாய் ஓடி வந்து அம்மாவிடம் சொல்லி அடி வாங்கி கொடுத்தேன்!

இப்ப சொல்லுங்க நான் நம்பிக்கை துரோகம் செய்த எட்டப்பன் இல்லையா? (தம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா ? நீ நல்லா வருவடா , வரணும் ...)


Post Comment

ஆகஸ்ட் 20, 2012

செம்மண் தேவதை # 3

உன்னிடம் முத்தம் 
கேட்டால், 
நீ மறுப்பதும்
நான் கெஞ்சுவதும், 
தினசரி 
கடமையாகிறது 
நமக்கு ...







தாவணி முகப்பை 
இழுத்து இடுப்பில் 
சொருகிக்கொண்டு 
எதிர்வீட்டு 
குழந்தைகளுடன்
நீ, 
துள்ளி 
விளையாடுகிறாய்,

நானோ, 
துவண்டு போகிறேன்!

Post Comment

ஆகஸ்ட் 17, 2012

ஊர்ப்பேச்சு # 1

என் தம்பிக்கு மூளை குழம்பி கிறுக்கு புடிச்சு அலையபோறானோ? தெரியலையே என்று தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை 
அவிழ்த்துவிட்டு அமர்ந்தார் கனகசபை ... 

என்னப்பா ? யாரை சொல்ற என்றார்  அருகில் அமர்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்த ரத்தினம் ...

நான் யாரை சொல்ல போறேன்... என் தம்பியைதான் சொல்றேன்!

ஏன் என்னாச்சி அவனுக்கு? நல்லாதானே இருந்தான் என்றார் ரத்தினம் ...

அடபோப்பா இப்ப வர வர அவன் போக்கே சரியில்லை, நடு ராத்திரியில கொலைவெறி பாட்டு கேக்குறான், திடிர்னு சிரிச்சிகிட்டே
காட்டுத்தனமா ஆடுறான்.. என்னடா என்னாச்சு என்றால் ஒண்ணுமில்லை என்கிறான்! - கனகசபை...



விடுப்பா இந்த வயசுல இதெல்லாம் சகஜம்.. நம்ம வயசுல எவ்வளவு பண்ணிருக்கோம்! எத்தனை ராத்திரி ராமசாமி சினிமா கொட்டகைக்கு போயிட்டு வரப்ப நாயெல்லாம் துரத்தி விழுந்து எந்திரிச்சி வந்தோம் .. என்றார் ரத்தினம் ...

ம்ம்ம். அதுவும் ஒரு காலம்தாப்பா... எப்படில்லாம் அலைஞ்சோம், திரிஞ்சோம் இப்ப கட்டி போட்ட காளை மாதிரி போய்ட்டோம் ..
ஆனா அதெல்லாம் ஒரு வரைமுறை இருந்துச்சி பெரியாளுவுளுக்கு பயந்தோம், தப்பு தண்டா பண்ண துணிச்சல் வராது, இப்ப இருக்குற 
பசங்க அப்படியா? என்னா அழிச்சாட்டியம் பண்ணுதுக.. 

ஆமாம் கனகசபை நானும்தான் பார்த்துட்டு இருக்கேன், எல்லாம் ஒரு தலைகனத்துல திரியுதுங்க, எதைக்கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டதுங்க .. ஏன் என் மவ வூட்டு பேரன் மூணாவது தான் படிக்கிறான், அவன் பண்ற சேட்டை தாங்க முடியலைப்பா, டிவி முன்னாடியே கதியா கிடக்கான், ஓடியாடி விளையாட மாட்டேங்குறான், டிவி இல்லைனா கம்ப்யூட்டர் இதுதான் உலகம் இப்ப உள்ள பிள்ளைகளுக்கு.. என்னமோப்பா நாம பார்த்த வாழ்ந்த உலகத்த, இவனுங்க பார்க்க முடியாது போல ...

ஆமாம் ரத்தினம் இப்ப உள்ள பிள்ளைகள் உடலளவில் வளர்ந்தாலும் மனசளவில் அவர்கள் வலுவாக இல்லைப்பா .. நேத்து சேதி தெரியுமா, முருகேசன் மவன் வூட்டு பேரன் ஏதோ பரிட்சையில மார்க் கம்மியா எடுத்துட்டான்னு திட்டியிருக்காங்க அத கூட தாங்க முடியாம நாண்டுகிட்டானாம் , சாவ வேண்டிய வயசா இது .. என்னய்யா உலகமிது .. நாம எங்க இருக்கோம், நம்மளை எல்லாம் நம்மள பெத்தவுக எப்படில்லாம் அடிச்சாக அதையெல்லாம் நாம தாண்டி தானே வந்திருக்கோம், இதுங்க ஏன் இப்படி பண்ணுது என்று தெரியலையே, 

ஆமாம் கனகசபை இப்படி எல்லாம் பிஞ்சுல பழுக்க ஆசைபடுதுங்கப்பா, வளர்ப்பு முறையும் சரியில்லைப்பா, யாரை குத்தம் சொல்லி என்ன பண்றது, உசுர் போனா திரும்பி வருமா? 

சரி ரத்தினம், இதை பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம், கீழ காட்டுல மாட்டுக்கு தீனி அறுத்துட்டு வந்துடுறேன், வானம் கொஞ்சம் கருக்குற மாதிரி தெரியுது, நா வாறன் ...

ஆகட்டும் கனகசபை ....

Post Comment

ஆகஸ்ட் 15, 2012

சராசரி இந்தியனாம்!



ங்கோ இறங்கிய 
இடியில் 
நான் எரிந்தேன்!

யாரோ உண்டதற்கு 
என் சேமிப்பு 
கரைந்தது!

எவன் கனவோ
நானும் 
பங்காளியானேன்!

அவன் பயணித்தான்
நான் 
சுமையிழுத்தேன்!

உடல் நசுங்கி 
உயிர் ஒழுகி 
இறுதி மூச்சில் 
இளைப்பாறுகிறேன்!

இதோ இன்னொருவன் 
வந்துவிட்டான்!

என்னைப்போலவே 
அவனும், 

சராசரி இந்தியனாம்!

Post Comment

ஆகஸ்ட் 14, 2012

சென்னை திணற போகிறது ....


வணக்கம் தோழமைகளே ...
தமிழ் வலைபதிவர்கள் வருகிற 26 .08 .2012 அன்று தமிழ் சினிமாவின் முகவரியாக திகழும் கோடம்பாக்கத்தில் பெருந்திரளாக கூடி கலக்கும் மாபெரும் திருவிழா நடைபெற இருக்கின்றது! நமது ஒற்றுமையை கண்டு அனைவரும் திணற வேண்டும்! 




இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் பதிவர்களும் அதிகளவில் வருவதாய் உறுதி அளித்துள்ளனர்,மேற்கொண்டு விழா ஏற்பாடுகளை சென்னையில் உள்ள தோழர்கள் வெகு சிறப்பாய் செய்து வருகின்றனர்...
மேலும் வருகையை உறுதி செய்யாத நண்பர்கள் விரைவில் உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறோம்.

விழா அன்று நமது தோழர் திரு. வேடியப்பன் அவரின் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக புத்தக கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் கூறி இருக்கின்றார் . இதுபோல் மேலும் சுவையான நிகழ்வுகள் உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...



வருகையை உறுதி செய்ய கீழுள்ள எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
திரு. மதுமதி 98941 24021
திரு. பாலகணேஷ் 73058 36166  

திரு. ஜெயகுமார் 90949 69686 
திருமதி. சசிகலா  9941061575

வாருங்கள் தோழர்களே ஒன்றாய் கூடுவோம், அந்த நாளினை எதிர்பார்த்து உங்களோடு நானும் ...

Post Comment

ஆகஸ்ட் 13, 2012

ஆளுயர கண்ணாடி...



நீ 
உடை மாற்றும் அறையில் 
எவரையும் அனுமதித்தில்லை
உன்னைத்தவிர 
என்றாய்!

அப்புறம் எதற்கு 
அந்த 
ஆளுயர கண்ணாடி?

Post Comment

ஆகஸ்ட் 10, 2012

இப்படியும் சில அதிமேதாவிகள் ...

                      
                 செழியனும் அவனது அப்பாவும் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள், இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் வந்து சேரும் என்று அறிவிப்பு வந்தது , ரயில் வந்ததும் அவர்களுக்குரிய பெட்டியில் ஏறி இருக்கை எண்ணை சரி பார்த்து அமர்ந்து கொண்டார்கள் 

செழியனின் அப்பா சன்னலோர இருக்கையிலும் , செழியன் அவருக்கு எதிரில் நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டார்கள்! காலை நேர டிபன் விற்பனையாளர்கள் சற்று அதிகம் அடிக்கடி வந்து போனார்கள்! ஏதும் சாப்பிட வாங்கவா என்று தன் அப்பாவிடம் கேட்டான் செழியன், அவர் ஒன்றும் வேண்டாம் என்றதும் தான் கொண்டுவந்த பேக்கில் உள்ள புத்தகத்தை எடுத்தான்! 

அருகில் அமர்ந்திருந்த அந்த நபர் என்ன 
புத்தகம் என்று கேட்டார். 
அவனும் அந்த புத்தகத்தை அவரிடம் காட்டினான், அவர் உடனே வாங்கி பார்த்துவிட்டு ஐயோ இதை படிக்க முடியாது, நெஞ்சு வலிக்கும் என்று கூறிவிட்டு செழியனிடமே நீட்டி விட்டார், செழியனும் வாங்கி அதை படிக்க புரட்டினான்! 

சற்று நேரம் கழித்து மெல்ல பேச்சு கொடுத்தார் அந்த நபர்!

"தம்பி நீங்க எந்த குருப்பு"

எனக்கு புரியலை சார் என்றான் செழியன்!

இல்லை நீங்க அணிந்திருக்கும் பனியன் ஒரு வண்ணத்தில் உள்ளது!
புத்தகமும் அதை சார்ந்து உள்ளது! நீங்க ..... அவரோட குருப்பா? இல்லை இன்னொரு கோமாளி குருப்பா?

இல்லை சார் நான் தமிழ் உணர்வாளன், நான் யாரையும் சார்ந்திருக்க வில்லை , என்றான் செழியன்!

இல்லை தம்பி சும்மா சொல்லுங்க என்றார் அந்த மனிதர்!

மீண்டும் இல்லை என்றுதான் சொன்னான் செழியன்!

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர் மேலும் தொடர்ந்தார் , நீங்க எதிலும் சார்ந்தவரில்லை என்பதில் சந்தோஷம், 
இந்த மாதம் நாங்க தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க ஒரு மாநாடு நடத்த போகிறோம் உங்களை போன்ற உணர்வாளர்கள் வர வேண்டும் என்றார்!

ஐயோ சார், எந்த அரசியல் சாயமும் எனக்கு வேண்டாம், என் வழியில் நான் பயணித்து கொண்டிருக்கின்றேன்,ஆளை விடுங்க போதும் என்றான் செழியன்!

அவர் விடுறமாதிரி தெரியவில்லை, அதிக மூளைசலவை செய்ய ஆரம்பித்தார், எங்கள் தலைவர் சமயோசித புத்தி கொண்டவர், 
அறிவாளி, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்தவர், அது இது என்று கதை அளக்க ஆரம்பித்தார்!(அதான் ஊருக்கே தெரியுமே...)

செழியன் சட்டென்று எனக்கு விருப்பம் இல்லை விட்டுடுங்களேன் என்றான்!

அவரும் பேச்சை மாற்றி மீண்டும் பிடிக்காத அரசியல் தலைகளை திட்ட ஆரம்பித்தார்! கோமாளிகள், குரங்குகள் என்று வசைபாடினார்.சுற்றி இருப்பவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு வந்தார்கள்...  

அவன் தான் ஈழத்தை உருவாக்க வந்தவன், இன்னொருவன் நான் இல்லையென்றால் ஈழம் இருக்காது என்கிறான் என்று அவரின் ஏசுதலில்
அவரின் தங்க தலைவரை மட்டும் விட்டு விட்டு அனைவரையும் திட்ட ஆரம்பித்து விட்டார்! 

இன்னும் இவர்களின் ஈழத்தை வைத்து செய்யும் அரசியல் முடியாது போலும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே 

பொறுமை இழந்த செழியன் உங்கள் விருப்பம் அதுவாக இருப்பின், அதை அடுத்தவரின் மேல் திணிக்க முயலுவது சரியில்லை!
ப்ளீஸ் இதை பற்றி பேசுவதை முதலில் நிறுத்துங்கள், இது உங்களின் வயதுக்கு தகுதியில்லை என்றான். 

தலைவன் மேல் கொண்ட பற்று ஒரு மனிதனை எந்த பாடு படுத்துகின்றது, தலைவன் தவறே செய்து இருந்தாலும் அதை சரி என்று நியாய படுத்தும் அளவுக்கு அவரின் பேச்சுக்கள் இருப்பதாய் செழியன் மனதுக்குள் எண்ணிகொண்டான்! 

தனக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் செழியனின் அப்பா அடிக்கடி அவனை பார்த்துகொண்டிருந்தார்!அவனுக்கு அது மேலும் சங்கடத்தையும் 
அந்த நபரின் மேல் கோபத்தையும் அதிகரித்து கொண்டே வந்தது!

எப்போடா இந்த ஆள் இடத்தை காலி செய்வார், நம்மளை நிம்மதியாக பயணம் செய்ய விடுவார் என்பதிலே செழியனின் எண்ணங்கள் அலை பாய்ந்தன, அதற்கு தகுந்த மாதிரி டிக்கட் பரிசோதகர் வந்தார், அவரின் waiting list டிக்கட் அடுத்த பெட்டியில் confirm பண்ணி தருவதாய் சொன்னதும் தான் செழியனுக்கு பெரும் நிம்மதி வந்தது, அப்போதான் தெரிந்தது அவருடன் மனைவி மற்றும் மகன் வந்திருப்பது!
இவரின் செய்கை அவர்களை எவ்வளவு உறுத்தி இருக்கும் என்பது அவர்களின் பார்வைகளிலே கண்டான் செழியன்...

இந்த மாதிரி மனிதர்களும் இப்பூமியில் உலவுகிறார்கள், எப்படி எல்லாம் கண் மூடித்தனமான நம்பிக்கை, பாவம் இந்த மனிதர்களை எவ்வகையில் சேர்ப்பது, இவர்கள் மாறுவார்களா? நாம் தான் ஒதுங்கி கொள்ளணுமா? இப்படி ஏகப்பட்ட சிந்தனைகளை கண்ணை மூடி யோசித்து வந்த செழியனை அப்பா எழுப்பி விட ரயிலை விட்டு இறங்கி நடந்தார்கள்! நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும் என்று சிந்தித்துக்கொண்டே நடந்தான் செழியன்.... 

(ஏனய்யா ஏன் ... பாருங்க நம்ம செழியன் பைத்தியம் பிடிக்காத ஒரு குறையா அலையுறான்... போதும் அதிமேதாவிகளே நிறுத்திக்கொள்ளுங்கள் ...)

Post Comment

ஆகஸ்ட் 08, 2012

விலகிய பிறகும்...



வேண்டாமென்று
 நீ 
விலகிய பிறகும்,
உன்னை வேண்டியே   
துடிக்கும் என் 
இதயத்தை என்ன 
செய்ய... 

Post Comment

ஆகஸ்ட் 06, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 9


மேகங்கருக்குது மழை வர பாக்குது... 


செம்மறிஆடு .. செம்மறி ஆடு 


அந்தியில வானம்... 



காவல்காரன் குதிரை...   


கடலையின்னா கடலை  



குண்டு மாங்காதோப்புக்குள்ள... 


பூவே மாம்பூவே ...


மாவிலை தோரணம் கட்டுங்கடா... 


கத்திரிக்கா கண்டங்கத்திரிக்கா 


அல்லி மலரே ...


(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment

ஆகஸ்ட் 01, 2012

சேனல்களின் சேட்டைகள்...

இந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும் பல வருசத்துக்கு என்னால மறக்க முடியாது ... அப்படி யொரு அனுபவம், அதை உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன் தோழமைகளே... (நான் பட்ட அவஸ்தை கொஞ்சமாய் உங்களுக்கும் ... )

ஆசையா ஒரு சேனல் வைத்தேன் அதுல குழந்தைகளுக்கான நடன போட்டி நடுவரா ரெண்டு தடியன்கள் இருந்தானுங்க குழந்தைகள் எல்லாம் காட்டுத்தனமா ஆட்டம் போடுதுக, அதுல மேக்கப் வேறு பார்க்கவே பயங்கர டெரரா இருந்துச்சி , ஒரு குழந்தை பொண்ணு வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுச்சி அதை பார்த்துட்டு நடுவனா வந்த தடியன் கம்மென்ட் சொல்றான் இவ தான் என் அடுத்த படத்தோட ஹீரோயின் என்று, அட நாறப்பயலே அது குழந்தைடா? அது கூடவா உனக்கு தெரியல, சரி இதுதான் இப்படி மண்டைய சூடு ஏத்துதே என்று காமெடி பார்க்கலாம் என்று இன்னொரு சேனலுக்கு மாற்றினேன் அதுல நேரலை போயிட்டுருக்கு போன் பண்ணி பேசுபவர்களை வித்தியாசமா சிரிச்சி காட்டுங்க என்று அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி இன்னும் சூடு ஏத்த போன் பண்ணி பேசும் பதறுகளும் வெட்கமே இல்லாம சிரிச்சி சிரிச்சி என் பல்ஸ் பதம் பார்க்க, அடக்கருமமே என்று இன்னொரு சேனலுக்கு தாவினேன் ,(விடவா முடியும்)

அங்க இதைவிட கொடுமையா ஒரு வெள்ளைக்காரனும், வெள்ளைக்காரியும் அரை நிர்வாணமா நின்றுகொண்டு தமிழ்ல ஏவாரம் பண்ணுதுக, ஒரு நாளைக்கு ஒரு டீ குடிச்சா போதும் ஒரு வாரத்துல ஒன்பது இன்ச் உங்க இடுப்பு குறையும், இதோட விலை வெறும் 1800/- தான் ,என்று வெள்ளைக்காரி வெறுப்பேத்த, வெள்ளைக்காரன் அறுக்கிறது, நறுக்குறது, கூட்டுறது, ஒரே மெசின் போதும் ஒரு மணி நேரத்தில் 1000 கலோரிகளை குறைக்கின்றது என்று அவன் குரைத்துக்கொண்டிருக்க, இன்னைக்கு விதி சதி பண்ணுதே என்று இன்னொன்னுக்கு தாவினேன்..(மறுபடியும் தான்)

அதுல ஒரு அதிமேதாவி நடுவர், பேச வந்தவங்கள ரெண்டு குருப்பா பிரிச்சி உட்கார வைச்சுட்டு அவரே எல்லாத்தையும் பேசிட்டு இருந்தார், நம்பி வந்தவங்க மானத்தை வாங்கிட்டு இருந்தார் போதுமடா சாமி ன்னு உடனே தாவினேன் (விடமுடியுமா) அங்கிட்டு ஒரு பொம்பள கிட்ட தன் புருசன போட்டு மிதி மிதின்னு மிதிச்சிகிட்டே தன்னோட பாரத்தை எறக்கி வைக்குது ஒரு பொண்டாட்டி, ஏதோ அதுதான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சினைகளை தீர்க்க வந்த தெய்வம் மாதிரி... எவன் செஞ்ச சதி இன்னைக்கு நம்மள இப்படி கொல்லுராயிங்களே ன்னு இன்னொன்னுக்கு தாவினேன் (மறுபடியுமா?)

அதுல தான் நான் ஆப் ஆனேன், ஆட்டம் போடுற நிகழ்ச்சி, பாவம் பொண்ணுங்களும், பசங்களும் உயிரை கொடுத்து ஆடுச்சிங்க, என்னமோ இவங்க தான் நடனத்த கண்டுபுடிச்ச நங்கை மாதிரி அந்த நடுவர் அம்மா கருத்து சொல்லி சும்மா கிழி கிழி ன்னு அவங்கள கிழிக்க, ஒரே ஓட்டம். (கொஞ்சம் நேரம் இருந்தா நம்மளையும் கிழிச்சிடுவாங்களோ என்ற பயம்தான்) இன்னொன்னுல கல்யாண வரவேற்பு கொடுத்து கல்லா கட்டிட்டாங்க, நெசமா கல்யாணம் பண்ணிகிட்ட சோடிகளுக்கு கூட இப்படி வரவேற்பு இருக்காது போல அந்த ரேஞ்சுக்கு அலப்பர... 

இப்படி கொடுத்த இவனுங்க கொடுத்த தொல்லைய சமாளிக்க முடியாம டிவிய ஆப் பண்ணிட்டேன்.(அவிங்க ஆப் பண்ண வைச்சுடாயிங்க) எங்கோ கிராமத்துல இதுல எந்த ஒன்னையோ சரோசா அக்காவும், வெள்ளையம்மா அக்காவும் வச்ச கண் வாங்க பாத்து ரசிச்சுகிட்டு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல .. மொத்த தமிழ்நாட்டுல சொச்ச பேரு தவிர்த்து எல்லாமே பார்த்தா என்ன ஆகும் எதிர்காலம். எப்படில்லாம் யோசிக்கிதுக அடிமையாக்க துடிக்கும் மூளைகள், நம்மை மழுங்கடிக்கவே இந்த நிகழ்ச்சிகள் என்பதை உணரும் நிலையில் இல்லை என்பதே கசப்பான உண்மை!

கொஞ்சமா ஆரம்பிச்ச முடி உதிர்தல் இன்னைக்கு முழு தலையும் மொழுக்கட்டின்னு ஆன கணக்கா எப்படி இருந்த சேனல்கள் எல்லாம் இன்னைக்கு இப்படி இருக்குதுக, மொட்டதலையிலும் நம்ம ஆளுங்க சடை பிண்ணி பூவு வைக்க ஆசை படுதுக... வெளங்கிரும் அய்யா வெளங்கிரும் ... 

நாம, நம்மோட ரசனை  மாறினால் தான் சேனல்களும் மாறும் என்பதை என்னைக்கு இந்த தமிழ் சாதி உணருதோ அன்னைக்கு எல்லாமே மாறும்...      

Post Comment