புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 25, 2014

மொபைல் கிளிக்குகள்...


வைக்கோல் போர் போட அடிபட்டரைக்கு பயன்படுத்த, சோளத்தட்டைகள் வீணாகாமல் இருக்க சேமித்து வைக்கும் முறை. 


நண்பகலில் ஒருத்தரை கூட காண இயலா எங்களூர், இதே நேரத்தில் சென்னையை நினைத்தால் ? 


வறண்டு கிடக்கும் பாசன ஏரி, இதே நிலைதான் விவசாயத்துக்கும்...


காளைக்கு செருப்பணிவிக்கும் வைபவம் .... 

குளித்து களிக்கும் சிறுவர்கள்.  


இதன் பெயர் தெரியவில்லை. 


அரிதாகி வரும் "பத்தாயம்". 


கூட்டுக்குடும்பம். 


இதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர். 


மழைக்கு முந்திய மதியவேளையில். 


Post Comment

வளைந்த பனை...




தாவுகால் போட்டு 
கிளுவை கொழுந்தை 
உன் ஆடுகள் தின்று கொண்டிருக்க,
மேல்கரையோரம் 
என் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க,


வறுத்த ஈசல் கலந்த அரிசியில் 
நாமிருவரும் பசியாறிய 
அந்த வளைந்த "பனை",
அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது  
நீயற்ற 
"என்னிருப்பை". 




Post Comment

நவம்பர் 24, 2014

கயலும், அன்புடன் அன்பரசியும்....


முன்பெல்லாம் பாடல் வெளியிட்ட மறுதினமே தரவிறக்கம் செய்து கேட்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்த என்னை, தமிழ் இசையமைப்பாளர்கள் பெரிதும் சோதிக்க ஆரம்பித்ததும், "வேண்டாம் டா சாமீ, இந்த விபரீத விளையாட்டு" என்று நானாக ஒதுங்கி கொண்டேன். அவ்வப்போது சில ஆதர்ச இசையாளர்களின் படங்களை மட்டும் தரவிறக்கி கேட்டு வருகிறேன். அவர்களும் தற்பொழுது அடித்த மத்தளத்தையே திருப்பி போட்டு அடிக்க ஆரம்பித்திருப்பது தான் சோகத்திலும் சோகம். அளவுக்கு மீறி நிறைய படங்களில் ஒப்புக் கொண்டுவிட்டால் இப்படித்தான் அரைத்த மாவையே அரைக்க வேண்டும் போல, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள் போலும். துட்டுக்களின் உலகத்தில் இயங்கிகொண்டு, தொழில் தர்மம், பயபக்தி பற்றி பேசும் என்னை,  இளம் பெண்ணொருத்தி,  முச்சந்தியில் வைத்து முத்த தண்டனை கொடுக்க உரக்க சபியுங்கள்.



மைனா, கும்கி கொடுத்த உந்து சக்தியால், "கயலை" தரவிறக்கம் செய்து கொண்டிருந்த என் கண்ணில் சிக்கினாள் அந்த "அன்புடன் அன்பரசி". ஆம் அது ஒரு தமிழ் சினிமாவின் பெயர். பெயரில் சொக்கிவிழுந்து  அன்பரசியையும் தரவிறக்கி எனது மியூசிக் பிளேயரில் சேமித்த நான் அத்தோடு அன்பரசியை மறந்து விட்டு, கயலை ஓடவிட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். கும்கி அளவிற்கு கயல் என்னை ஈர்க்கவில்லை. பெரிதும் நம்பிய யுகபாரதியும் என்னை ஏமாற்றி விட்டார். யுகபாரதியின் வரிகளில் இருக்கும் இளமை துள்ளல் ஏனோ "கயலில் மிஸ்ஸிங்", ஒருவேளை திரையில் காட்சியாக மிரட்டுவாளா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

கேட்டவரை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது 

ஒரத்தநாடு கோபு என்பவரின் குரலில், "அவ மேல ஆசைவைச்சான்" கானா வகை பாடல் கேட்க புடிக்கிறது. 

 அடுத்து, பால்ராம் குரலில் "உன்னை இப்போ பாக்கணும்" வரிகளுக்காகவே கேட்கவேண்டும் போலிருக்கிறது.

என் நெஞ்சுக்குள் குடியிருக்கும் குரலழகி ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் "என் ஆளை பாக்க போறேன்" பாடல் தான் அடிக்கடி காதை சிலிர்ப்பூட்டுகிறது. இதை எப்படி காட்சிப் படுத்தியிருப்பார் பிரபு சாலமன் என்று இப்பவே மனம் ஒரு தவிப்பிலிருக்கிறது. 

மற்ற பாடல்களில் மைனா, கும்கி சாயலிருந்தாலும் மோசமில்லை, கேட்கலாம் இரகம். 

சரி வாங்க அன்பரசியை பார்ப்போம். 

அன்புடன் அன்பரசியை கொஞ்ச நாள் கழிச்சி தான் கேட்டேன். பல தமிழ் சினிமாவில் கேட்ட இசையை இவர்கள் சற்று வேறு வித்தியாசமாக? போட்டிருந்தார்கள். அதில் ஒன்றிரண்டு ஓகே இரகம். "உன்னை மட்டும் தான்டா, நான் கண்ணா நெனச்சேன்டா, ஓகே சொல்லு போதும் விளையாடலாம்" என்றொரு பாடாவதி பாடலொன்றை ஒரு பெண் பாடியிருக்கிறாள். பாடல் சுத்த மோசம், ஆனால் அதை பாடிய பெண்ணின் குரல் கிறுக்க புடிக்க வைக்கிறது, ஏதோ ஈர்ப்பு இருக்கிறது, அதற்காகவே அந்த பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பெண்ணின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில் கூகுளை ஆராய்கையில், அப்படத்தின் ட்ரைலரை பார்த்து பீதியில் உறைந்துள்ளேன்.    

(தலைவர் டூயட்டின் போது) 


இசை சத்ய தேவ் என்று போட்டிருந்தார்கள், இதற்கு முன் கேள்வி படாத  பெயர். வேறு எவரையும் இம்சிக்காமல் இயக்குநர் ஆல்வின் அமல பிரசன்னாவே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பதோடு மட்டுமில்லாமல் நடித்தும் இருக்கிறார். இதுவரை எவரும் சொல்லாத காதலை இவர்கள் காட்டப்போவதாய் சொல்லியிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு உன்னத இலட்சியத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் அக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

(தலைவர் காதல் கொள்ளும் அழகே தனி தான்)

வாலிபன் சுற்றும் உலகம், திருமதி தமிழ் போன்ற திரைகாவியங்கள் வரிசையில் இப்படமும் மிகப்பெரிய வெற்றியடையட்டும்...


Post Comment

நவம்பர் 21, 2014

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி)




ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,
மற்றும் "ஆவி".


விதிமுறைகளும்நிபந்தனைகளும்:
  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  • கதைகள் நகைச்சுவைகாதல்க்ரைம்சமூக உணர்வுக் கதைகள்,விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோயார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை'இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வாரமாத இதழ்களுக்கோஇணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.

  • கதை உங்கள் தளங்களிலோவேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோநிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும்தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு12 மணிக்குள் (IST)

  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:

  •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால்MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

  •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்திபிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : 


Dates to Remember : 





Post Comment

நவம்பர் 19, 2014

குட்டிகளிரெண்டும்...


ரெண்டு நாளா அந்தப்பக்கம் போகமுடியல, அஞ்சாறு தடவைக்கு மேல சாணிய கரைச்சிப் போட்டு பார்த்தும் , குடலை குமட்டிக் கொண்டு வருது குருணை மருந்தின் நாத்தம். "இந்த வழியா போற சனங்களுக்கு பதில் சொல்லி மாளல...


எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இப்ப நெனச்சாலும் இருதயம் எக்குத்தாப்பா துடிக்குது. பங்காளிச்சி கூட சண்டைன்னு புத்தி மலங்கி போயி மருந்த திங்க போவேனா? கதவை உடைச்சிகிட்டு எம்புள்ள வரலைன்னா, "வடக்க போயி" ரெண்டு ராத்திரியாயிருக்கும். கையிலிருந்த மருந்தை புடுங்கி கொண்டு போயி கெழக்கால கொட்டிவிட்டு வந்துட்டான், நாத்தம் ஊர கூட்டுதுன்னு ரெண்டு நாளைக்கு முந்தி நடந்த கதையை ரோம்பாளிடம்(லோகம்பாள்) சொல்லிக்கொண்டிருந்தாள் தேனு...


என்னதான் சண்டையா இருந்தாலும், இந்த மாதிரி முடிவு எடுக்குறது தப்பு தேனு, தலைக்கு ஒசந்த ஆம்பள புள்ள இருக்கு, வயசுக்கு வர மாதிரி பொம்பள புள்ளைய வைச்சிகிட்டு இப்படி ஒரு விபரீதம் தேவையா ? சொல்லு ன்னு சொல்லிக்கிட்டே, திருகையில் கைப்பிடி உளுந்தை கொட்டி அரைக்க ஆரம்பிச்சா- ரோம்பா.

அதாம்புள்ள, சொல்றேனே எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இன்னும் ஆச்சர்யமா இருக்கு, அதுமட்டுமில்ல அந்த *&#டியா பேசுன பேச்சு அப்படி, இல்லாதது பொல்லாதத சொல்றவளுக்கு நல்ல சாவே வராது பாரேன்...

நரம்பில்லாத நாக்கு என்ன எழவை வேணும்னாலும் பேசும், நாம தான் பொறுமையா இருக்கணும். நிமிசத்துல நாம கண்ண மூடிக்குவோம், ஆனா பெத்ததுக தவிக்குற பாவத்தை எந்த சென்மத்தலையும் போக்க முடியாது தேனு. பெத்தவ ஊத்துற கஞ்சி போல வருமா ? மத்தவ ஊத்துற கஞ்சி. உன்னைய நம்பித்தான் வூட்டுக்காரர் வெளிநாடு போயிருக்கார், அதையும் மனசுல நிறுத்தி இனி பொழப்ப பாரு, இனியும் இந்த மாதிரி மோசமான முடிவெல்லாம் வேணாம் புள்ள.

இனியும் இந்த மாதிரி கனவுல கூட நெனைக்க மாட்டேன் ரோம்பா, எந்த சாமி புண்ணியமோ தொடாமலே புத்தி வந்தது. அப்பன் இல்லாம கூட புள்ள வளர்ந்துரும், ஆனா ஆத்தா இல்லாம வளரும் புள்ளைகளோட நெலம இருக்கே, சொல்லி மாளாது. 

ஆமாம் தேனு, என் நாத்தனார் வழியில ஒருத்தி இப்படித்தான், புருஷன் ஏதோ சொல்ல, நடு சாமத்துல கயித்துல தொங்கிட்டா, பாவம் அந்த ரெண்டு பொட்ட புள்ளைகளும். அவன் மறு கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமாத்தான் இருக்கான், புள்ளைங்க நெலம தான் மகா மோசமாம்.

அட ஏன் ரோம்பா அம்புட்டு தூரம் போற,  நம்ம பொன்பரப்பியா ஒடுவந்தழ தின்னுட்டு கண்ண மூடிக்கிட்டா, மறு கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் குடியே கதின்னு கெடக்குறான் சின்னதுரை. புள்ளைங்கள பார்த்தியா தெவையா தெவைக்குதுக. அதுவும் இந்த பொங்க, தீவாளிக்கு நல்லது பொல்லது பண்ணி கொடுக்க ஆத்தா இல்லாம ரெண்டும் ஏங்கி தவிக்கிறத பார்த்தா நெஞ்சு சுருக்குங்குது, எத்தனை நாளைக்கு தான் அக்கா காரி தங்கச்சி புள்ளைகளை பார்த்துக்குவா ?

அவளும் பாவமில்ல தேனு, அவளும் மூணு புள்ளைகளை வைச்சிருக்கா, அதோட சேர்த்தி தான் இதுகளையும் பார்த்துக்குறா... கட்டுனவன் ஒன்னும் சொல்லலைன்னாலும் மாமியாக்காரி சும்மா இருப்பாளா?

"என்ன பண்றது எல்லாம் விதி" - தேனு.

ஆமாம் கேக்க மறந்துட்டேன் எங்க புள்ளைய காணோம்? 

கால் பரீட்சை லீவுல்ல, அதான் எங்கம்மா வூட்டுல விட்டுட்டு வந்திருக்கேன் ரோம்பா. "வீரன்" அங்க தங்க மாட்டேன்னுட்டான். வர சனிக்கிழம போய் கூட்டியாரனும். 

பெறாக்கா அப்படி ரெண்டு நாளு தங்கிட்டு வரட்டுமே"ன்னு சொல்லிக்கொண்டே ஒடச்ச உளுந்த சல்லடையால சலிச்சும் முடிச்சா லோகம்பாள்.

"வாங்கு" விழுற சத்தம் கேட்டு வாசல்ல எட்டிப்பார்த்தா, வேப்பந்தழை கட்டை வாசலில் சாய்த்து வைத்து விட்டு கை கால் கழுவ போனான் வீரன். 

கிண்ணத்துல சோறள்ளி போட்டு, புளிச்ச தயிர கலந்து கொண்டாந்து வைச்சா தேனு. 

ஒடைச்ச உளுந்த கூடையில அள்ளிக்கொண்டு, வாரேன் தேனு ன்னுட்டு கெளம்பினால் ரோம்பா..

என்ன அத்த, திருமால் என்ன பண்றான் ன்னு கேட்டான் வீரன். 

"அது எங்கையாவது பம்பர கட்ட அடிக்க போயிருக்கும் வீரா" ன்னு சொல்லிக்கொண்டே தெருவை தாண்டி ரோட்டை தொட்டு, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் லோகம்பாள்.

 ரெண்டு வாய் சோறை அள்ளி போட்டுக்கொண்டு, "தொட்டுக்க எதுனா கொண்டாம்மா" என்று சொல்லி முடிப்பதற்குள்,

பலாக்கொட்டை, முருங்கை காயை சுண்டிய கொழம்போடு கொண்டு வைத்தாள் தேனு.

சாப்புட்டு பெரு ஏப்பமொன்றை விட்டபடி எழுந்து போனவனை பார்த்து, 
ரொம்ப நேரம் ஏரில குதியாட்டம் போடாம, மத்தியானம்  ஒழுங்கா நேரத்துக்கு சாப்புட வந்துடணும் வீரா என்று சொல்ல,

சரிம்மா ன்னு சொல்லிபுட்டு சாவகாசமா நடந்தான் வீரன் பசங்க கூடியிருக்கும் கோவிலை நோக்கி .....

வீரன் போறதையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு நின்னவ மனசுல, சட்டுன்னு ஆட்டுக் குட்டிக நெனப்பு வர ஓடி,  தும்ப திரிச்சி விட்டா.

வாசலில் சாத்தியிருந்த வேப்பந்தழைகளை, வாலை ஆட்டியபடி தின்று கொண்டிருக்கின்றன, பத்து நாட்களுக்கு முன் இரயிலுக்கு "தாயை பலி கொடுத்த ஆட்டுக் குட்டிகளிரெண்டும்".....      

Post Comment

நவம்பர் 14, 2014

வெள்ளமொன்றில்...



கோடு சேரா 
கோலப் புள்ளிகளைப் போல
தனித்தே இருக்கின்றன,
அந்த ஏகாந்த நினைவுகள்!

வேண்டாமென்று விலக்கி,
ஆறு முடிந்து 
ஏழாம் வருடம் துவங்கி 
ஒன்பது நாட்களாகிறது!

அனல் வெயில்,
தொடர் மழை 
இதில் ஏதாவதொன்று 
உணர்த்திக் கொண்டிருக்கிறது
அந்த கிறக்கச் சுவையை!

பெருமழைக்கு முந்திய 
இடியொன்றில் சாயாமல்,
பிந்திய 
சிறு வெள்ளமொன்றில் 
கரைந்து போகவே காத்திருக்கிறேன்!










Post Comment

நவம்பர் 05, 2014

சில நொடி சிநேகம் - குறும்பட அனுபவமும், கன்னிகளும்....


திரும்புகிற பக்கமெல்லாம் அழகிகளாக?, சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் தான் காண கிடைக்கும் என்று நம்பி கொண்டிருந்த என் எண்ணத்தை பொய்யென்றது கும்பகோணம் நகராட்சி.  திரு. ஆர் வி சரவணன் இயக்கி சமீபத்தில் வெளியான சில நொடி சிநேகம் குறும்படத்திற்கான ஷூட்டிங்கிற்காக குடந்தையில்  காலடி வைத்த நொடியிலிருந்து நோக்குமிடமெல்லாம் தேவதைகளாக காட்சி அளித்த கும்பகோணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதற்காகவே இயக்குனருக்கு தனி நன்றி சொல்லியாகவேண்டும். 

தேவதைகளைப் பற்றி சொல்லுமுன் உங்களிடம் எனது முதல் நடிப்பு அனுபவத்தை சொல்லிட வேண்டுமென்று அடி மனசு அடம்பிடிப்பதால் சொல்லிவிடுகிறேன். 

பள்ளியில் கூட நாடகமென்றால் பின்னோக்கி நகரும் சுபாவம் கொண்ட நான், எந்த துணிச்சலில் குறும்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சில இரவுகளில் வியந்திருக்கிறேன் சாரி பயந்திருக்கிறேன்! சின்ன உதறலுடன் தான் குடந்தையூருக்கு பயணமானேன். இருப்பினும் அண்ணன் ஆவி, துளசிதரன் சார், மற்றும் கீதா மேடம் போன்ற அறிந்த முகங்களே இருப்பதால் கொஞ்சம் தைரியமாகவும் இருந்தது. 

பதற்றத்தில் துவங்கியதால் முதல் காட்சி ஓகே ஆகவே கொஞ்சம் நேரம் பிடித்தது, பிறகு அனைவரும் இயல்பு நிலைக்கு வந்தமையால் காட்சிகள் சற்று எளிதாகவும் நினைத்த மாதிரியும் வர ஆரம்பித்தன. மதிய உணவுக்கு பிந்திய பேருந்துநிலைய இறுதி காட்சிகளில், மூணே மூணு வசனத்தை வைத்துக்கொண்டு நான் தவித்த தவிப்பை குடந்தை பேருந்து நிலையத்திடம் கேட்டாலும் சொல்லும், ஒருவழியாய் ஓகே என்று இயக்குனர் சொன்னபிறகு தான் மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.

சரி வாங்க நம்ம தேவதைகள் கதைக்கு வருவோம். ஷூட்டிங் நடைபெறும் தருணங்களில் சில தேவதைகள் எங்களை கடந்து போனாலும் கவனிக்க நேரமின்றி இருந்தமையால், மதிய உணவுக்கு முன்பு அண்ணன் ஆவி அவர்களின் காட்சிகளை பேருந்து நிலையத்தில் படமாக்க, நான் பேருந்து நிலையத்தை சற்று வலம் வந்தேன், பேருந்து நிலையம் பராமரிப்பின்றி படு கேவலமாக இருக்கிறது, ஆனால் நகரப் பேருந்து நிலையம் அருமையாக இருக்கிறது. கண்ணில் விழுந்த கன்னிகள் சிலர் தேவதைகளாகவும், பலர் தேவதைகளின் தோழிகளாகவும் இருந்தது பெரும் வியப்பு...

கண்ட முக்கால்வாசிப் பெண்கள் ஒப்பனைகளற்ற இயற்கை எழிலோடு இருப்பதால் சட்டென்று கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். அண்ணன் ஆவியும் இதே கருத்தை சொன்னதில் மனம் சந்தோசத்தில் திளைத்தது. மறுநாள் இயக்குனரின் இல்லத்தில் சுவையான காலை உணவை உண்டோம், வெகுநாள் கழித்து விருந்து உண்ட நிறைவை தந்தது.

வலங்கைமானிலிருந்து குடந்தை வரும் வழிகளில் சின்ன சின்ன கால்வாய்களும், தென்னை மரங்களுமாய் மனதை திணறடித்துக் கொண்டிருந்தது இயற்கை. சின்ன சின்ன இடைவெளிகளில் கோயில் இருப்பது கூடுதல் இனிமை. பெரிதாய் சுற்றிப் பார்க்கவில்லை என்றாலும், துண்டு துண்டுகளாய் ரியல் எஸ்டேட் கூறு போட்டதில் போக மிச்சமிருக்கும் அந்த சின்ன கிராமங்கள் இவ்வளவு அழகென்றால், ஒரு 40, 50 வருடங்களுக்கு முந்தி என்ன ஒரு எழிலோடு இருந்திருக்குமென்ற  எண்ண ஓட்டங்களுடன் சென்னை நோக்கி விரைந்தது எங்களின் விரைவுப் பேருந்து ..... 

Post Comment