புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 23, 2016

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.



கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில், கவிஞர் சுப்ரா அவர்களின் வண்டறிந்த ரகசியம்”, உமையவனின் வண்டிமாடுஹைக்கூ தொகுப்பு, கோ.கலியமூர்த்தி அவர்களின் தீபங்கள் பூத்த கார்த்திகை வீதிகவிதைத் தொகுப்பு, இவற்றோடு சேர்த்து எனது சிறுகதைத் தொகுப்பான இண்ட முள்ளுவையும் அறிமுகம் செய்து வைத்தனர். இண்ட முள்ளினைப் பற்றி நண்பன் கார்த்திக் புகழேந்தி நேர்த்தியானதொரு அறிமுக உரையை வழங்கினார். தான் காணும் நண்பர்கள் எல்லோரிடமும், “இவர் அரசன், இண்ட முள்ளு எனும் கதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கார், அட்டகாசமான கதைகள், வாசித்துப் பாருங்கள்” என்று கூறி, எனது கதைகளை நிறைய நண்பர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்த பெருமை கார்த்திக் புகழேந்தியைச் சேரும். இவருடைய நட்பு வெளி பெரிது, அதில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.


பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இரு பெரும் தூண்கள் பூபாலன் மற்றும் அம்சப் ப்ரியா. ஓரிரு கூட்டங்களை ஒருங்கிணைக்கவே மூச்சு முட்டுகையில், தொடர்ச்சியாக மூன்று வருடங்கள், 43 நிகழ்வுகள் என்பது பெரும் சாதனை தான். இருவருக்கும் பெரிய கைகுலுக்கல்கள். இளம் படைப்பாளிகளை இனங்கண்டு வெளிக்கொணரும் தங்களின் அரும்பணி தொடரட்டும். தன்னுடைய உரை முடிந்த பின் மெல்ல நழுவிய ஒன்றிரண்டு நபர்களை தவிர்த்து, நிகழ்வு முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த பொள்ளாச்சி இலக்கிய வாசக/படைப்பாளிகளுக்கு வணக்கமும், நன்றிகளும்.

கார்த்திக் புகழேந்தியின் அறிமுக உரைக்குப் பின் எனது ஏற்புரை. என்ன பேசினேன் என்பதை விட எப்படி பேசினேன் என்பது தான் முக்கியமான விஷயம். மேடைப்பேச்சு என்றாலே உதறல் தான், குடந்தையூர் சரவணன் அவர்களின் நூல் வெளியீட்டில் நான் வழங்கிய வரவேற்புரையை அவர் மறந்தாலும் நான் மறக்கவே மாட்டேன், அப்படியொரு சொதப்பலான பேச்சு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறினாலும், படைப்பது மட்டுமல்ல அதை சரியான முறையில் மக்களிடம் சேர்க்கவும் தெரிய வேண்டும், இன்னும் என் பேச்சை சரி செய்ய வேண்டும் என்ற கற்பிதத்தை வழங்கி இருக்கிறது பொள்ளாச்சி மண்.



நிகழ்வு முடிந்து மதிய உணவை முடித்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் திருமதி. கீதா பிரகாஷ் அவர்கள், கார்த்திக் புகழேந்திக்கு போன் செய்து ஐந்து கதைகளை வாசித்து விட்டதாகவும், பெண்களின் உணர்வுகளை அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் எழுதியிருக்கும் அரசனுக்கு வாழ்த்துகளைக் கூறுங்கள் என்று சொன்னதோடு, திங்கள் காலையில் எனக்கும் போன் செய்து மேடையில் பேச கூச்சப்படும் நீங்கள் தானா இந்தக் கதைகளை எழுதியது என்ற சந்தேகம் வந்ததாகவும், இன்னும் இன்னும் எழுதுங்கள் என்று கூறி என்னை வாழ்த்தினார்கள். வாங்கிய உடனே படித்துவிட்டு, போனில் அழைத்து கருத்துக்களைக் கூறிய அந்த நொடி சந்தோஷம் இருக்கிறதே, உணர்ந்தால் மட்டுமே தெரியும் அந்த நொடிகளின் பூரிப்பை. வழியில் திருமதி. சிவகாமசுந்தரி அவர்களின் இல்லத்திற்கு சென்று இண்ட முள்ளு பிரதி ஒன்றை வழங்கிவிட்டு நொறுக்குத் தீனியோடு காபி குடித்து, சாலை வரை வந்து அவரது மகள் தேஜுக்குட்டி வழியனுப்ப மகிழ்ச்சியுடன் நண்பன் ஆவியின் வீடு சேர்ந்து அம்மாவின் கையால் சுடச் சுட சப்பாத்தியோடு கோழிக்கறியை ஒரு பிடி பிடித்துவிட்டு சென்னைக்கு ரயில் ஏறினோம்.



இண்ட முள்ளு வெளி வர முக்கிய காரணி நண்பன் ஆவி, என்னோடைய எல்லாவிதமான பயணத்திலும் கூடவே  இருக்கும் மனிதர். மெரினாவில் நிகழ்ந்த அறிமுகக் கூட்டம், புதுக்கோட்டை வீதி அமைப்பின் அறிமுகக் கூட்டம், இப்போது பொள்ளாச்சி இலக்கிய கூட்டம் இப்படி எல்லாவற்றிலும் தனது வேலைகளை/பயணங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு என்னோடு கிளம்பி வரும் ஜீவன், ஆவி. இந்த அரவணைப்புக்கு வாழ்நாளைய அன்பும் பிரியமும் நண்பா.

நன்றிகள் சொல்ல நிறைய நல்ல உள்ளங்கள் இருந்தாலும், இண்ட முள்ளினை, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் கொண்டு சேர்க்க முக்கிய காரணியாக இருந்த(சுகமின்மையால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்று பெரிதும் வருத்தப்பட்டுக்கொண்டார்) திருமதி. முகில் நிலா தமிழ் அவர்களுக்கும், அண்ணன்கள் நாஞ்சில் மனோ மற்றும் இலியாஸ் அவர்களுக்கும் அன்பு கனிந்த நன்றிகள்.  

பின்வரும் இணைப்பில் நண்பன் கார்த்திக் புகழேந்தி அவர்களின் அறிமுக உரை ஒலி வடிவத்தில் : https://soundcloud.com/gsrkteam/arasan-book-review

நன்றிகளுடன்

அரசன்    

Post Comment

அக்டோபர் 12, 2016

"வீதி" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...


எதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத சுகங்களினால் நிறைந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நானெல்லாம் எழுதுவேன் என்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தவன், இப்போது பாருங்கள் ஒரு சிறுகதை நூலினை வெளியிடுமளவிற்கு உருமாறியிருக்கிறேன். இப்படியான நிறைய நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என் வளர்ச்சிக்குப் பின்னாடி நிறைய நண்பர்களின் ஊக்கமும், ஆதரவும் நிறைந்திருக்கின்றது. அவர்கள் இல்லையெனில் இந்த அளவுக்கு எனது வளர்ச்சி இருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.



சென்ற வாரம் நடந்த புதுக்கோட்டை "வீதி" கலை இலக்கிய அமைப்பின் கூட்டத்தில் எனது இண்ட முள்ளு நூலினை அறிமுகம் செய்து வைத்து எனது முயற்சிக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறார்கள். நிகழ்வினைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் முன், "வீதி" அமைப்பினை பற்றி கூறி விடுகிறேன்.



மிகுந்த கவனமுடன், பலரின் அரவணைப்போடு நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அமைப்பு இது. படைப்பாளிகளை உருவாக்கும் பயிற்சி நிலையம் வீதி. புதிதாக எழுத முனையும் நண்பர்களுக்கு, தனது அகண்ட தோளினைக் கொடுத்து அரவணைத்து, படைப்பாளிகளின் குறை நிறைகளை எவ்வித சமரசமுமில்லாமல் விளக்கி கூறி அவர்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாய் இருந்து வழி நடத்துகிறார்கள் வீதியின் அமைப்பு நண்பர்கள். திரு. முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வீதி அமைப்பின் கூட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாடல், கவிதை, கதையென அனைவருக்குமான களமாக இருக்கிறது வீதி.

துல்லியமான திட்டமிடுதலில் துவங்கி, கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்துவது வரை மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள். சிறப்பம்சம் என்னவெனில் வீதி அமைப்பில் உள்ள பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அதனாலோ என்னவோ மிகுந்த உறுதியுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கூட்டம் முடிந்து வெளியே வருகையில் நம்ம ஊரில் இப்படியொரு அமைப்பு இல்லையே என்கிற ஏக்கம் மெல்ல எட்டிப் பார்த்தது எனக்குள். இன்னும் இன்னும் வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறகுகள் விரிய அன்பு நிறைந்த வாழ்த்துகள், அதன் உறுப்பினர்களுக்கு பெரிய கைகுலுக்கல்கள்.



கூட்டத்தின் ஒரு பகுதியாக எனது இண்ட முள்ளு நூலினை அறிமுகம் செய்து வைத்து துள்ளலான உரை ஆற்றினார் விதைக்கலாம் குழுவின் வேராக இருக்கும் நண்பன் ஸ்ரீ மலையப்பன். நான் என்ன நினைத்து ஒரு கதையை எழுதி இருந்தேனோ அதை மிகச் சரியாக கண்டு பிடித்து சொன்ன நண்பனுக்கு அன்பும் நன்றியும். நானும் எனது பங்கிற்கு சில மணித்துளிகள் பேசினேன். முதன் முறையாக படபடப்பின்றி பேசிய கூட்டமிது. என்றும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வாக மாற்றிய வீதிக்கு வாழ்நாளைய நன்றியும் அன்பும்.

எப்போதும் போல என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் நண்பர்கள் கோவை ஆவி, 'சேம்புலியன்' ரூபக்ராம், 'திடங்கொண்டு போராடு' சீனு,     திரு. கருணாகரசு, 'வானவல்லி' வெற்றிவேல், நண்பன் கார்த்திக் புகழேந்தி , வாத்தியார் பால கணேஷ், குடந்தையூர் ஆர் வி சரவணன், கார்த்திக் சரவணன் ஆகியோருக்கு அன்பும் பிரியமும்.

இண்ட முள்ளு வெளியறிய பெரும்பங்கு ஆற்றிய திரு, இலியாஸ் அபுபக்கர், திருமதி. முகில் நிலா, திரு. நாஞ்சில் மனோ, திரு. செல்வகுமார், திருமதி. தேவதா தமிழ், திருமதி. மாலதி, திரு. சோலச்சி ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.


Post Comment

ஆகஸ்ட் 09, 2016

ஐந்து நூலும் - மனம் நிறைந்த தருணங்களும்.



நிகழ்வு நடந்த மறுநாளே எழுதியிருக்க வேண்டும் அடுத்த நாளே எனது கிராமத்திற்கு சென்று விட்டதினால் உடனடியாக எழுத முடியவில்லை. மனதிற்கு நெருக்கமான நிகழ்வினைப் பற்றி உடனடியாக எழுத முயடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. ஆகுதி பதிப்பகம் மற்றும் நண்பன் கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் சாத்தியாமானது இந்த நிகழ்வு. நான்கு கதைத் தொகுதிகள், ஒரு கவிதை நூல் ஆக ஐந்து நூல்களுக்கான அறிமுக நிகழ்வு, அதுவும் ஐந்து நூல்களைப் பற்றி பேசப் போகும் அனைவரும் பெண்கள் என்பதினால் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. 

வழமையான இலக்கிய நிகழ்வுகள் போலில்லாமல் இது தனித்துவமாக இருந்தது. இதுமாதிரியான நிகழ்வில் முதல் முறையாக கலந்து கொள்கிறேன் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி என்றால் பேசவிருக்கும் ஐந்து நூல்களில் எனது கதை தொகுப்பான "இண்ட  முள்ளு" வும் இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. 



தொடக்கத்தில் சிறு வட்டம் போன்று அமர்ந்திருந்த நண்பர்கள் நேரம் செல்ல சற்று பெரிதாகி பெரிதாகி கடைசியில் கிட்டத்தட்ட ஐம்பது நண்பர்கள் கொண்ட வளையமாக மாறியிருந்தது. நட்பின் அடர்த்தியை அங்கே காண முடிந்தது. நண்பன் அகரமுதல்வன் நிகழ்வினை தொடங்கி வைக்க, முதல் புத்தகமாக தோழி நந்தினி வெள்ளைச்சாமி, பொன் முத்துவின் "நினைவுக்கு வரும் சாவுகள்"குறித்து திறம்பட பேசினார். பொன் முத்து நிகழ்வுக்கு வராத குறையை நந்தினியின் பேச்சு போக்கியது.






அடுத்ததாக கார்த்திக் புகழேந்தியின் "ஆரஞ்சு முட்டாய்" நூலைப் பற்றி தோழி பா. விஜயலட்சுமி பேசினார். இவரின் குரல் வளத்திற்காகவே பேசவிட்டு கேட்கலாம். கம்பீரமான குரல். 

அடுத்தப்  புத்தகமாக எனது நூலான இண்ட முள்ளு குறித்து தோழி மனுஷி பாரதி பேசினார். நேர்த்தியான பேச்சு. கதைகளை பற்றிய அவரின் மதிப்பீடு அவ்வளவு உண்மையாக இருந்தது. அவரின் வாசிப்பு திறன் பற்றியும், நினைவு கூறும் தன்மை பற்றியும் கண்டு வியந்து போனேன். நன்றி தோழி.

அடுத்து நண்பன் மாதவன் நூலான "சிமோனிலா கிரஸ்த்ரா" பற்றி தோழி சுபா அவர்களின் உரை மிகக்  குறுகியதாக இருந்தது, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். பேசியவரைக்கும் நறுக்கு தெறித்த பேச்சு தான். மாதவனும் குறைவாகவே பேசினார், நிறைய எதிர்பார்த்திருந்தேன். அடுத்த அவருடனான சந்திப்பில் அந்தக் குறையினை போக்கி கொள்ளவேண்டும்.   

முடிவாக ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" குறித்து தோழி விஜிலா அவர்கள் பேசினார். அவரின் பேச்சினை முழுமையாக கேட்க முடியவில்லை, அந்த நேரத்தில் வந்த அவசிய வேலைகளினால் அது தடைப்பட்டு போனது. குறைந்த நேரமே கேட்க முடிந்தது. கூடுதலாக  மாதவன் புத்தகம் பற்றியும் பேசினார் என்று பின்னர் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி.




இவ்வளவு சிறப்பாக நடந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில், குறிப்புகளில்லை, முன் திட்டங்கள் ஏதுமில்லை. இவ்வளவு நேரத்தில் தான் பேசவேண்டும் என்ற அவசரமில்லை, போலி புகழ்ச்சிகள் இல்லை, பேசியவர்கள் அனைவரும் நிறுத்தி நிதானமாக தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக முன் வைத்தார்கள். இதுமாதிரியான மனம் திறந்த மணற்வெளிக்கூட்டங்களை அவ்வப்போது வைத்து உரையாடலாம், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

நிகழ்வுக்கு வந்திருந்த தோழமைகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும். எனது அழைப்பை ஏற்று குடும்பமாக வந்திருந்த கார்த்திக் சரவணன் அவர்களுக்கும், ஊருக்கு செல்ல வேண்டிய பயணத்தை நட்புக்காக தள்ளிவைத்து விட்ட வந்த நண்பன் கோவை ஆவி அவர்களுக்கும், அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும், எங்களது வாத்தியார் பால கணேஷ் அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.

எனக்கே எனக்கேயான நிகழ்வு போன்று நிகழ்த்தி காட்டிய நண்பன் கார்த்திக் புகழேந்திக்கும், ஆகுதி பதிப்பகம் அகர முதல்வனுக்கும் என்றைக்குமான அன்புகள் நிறைந்திருக்கும். இந்த நிகழ்வினை காலத்துக்கும் மறக்க முடியாது அப்படியான அன்பு நிறைந்த அடர்த்தியான நிகழ்வு மற்றொன்று வீட்டம்மாவுடன் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. இண்ட முள்ளுக்கென தனி விழா வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கிய தினம் அன்று. ஓடோடி கருப்பட்டி தேநீர் வழங்கிய தோழர் கவி மணிக்கும், படமெடுத்த தோழர் கிரிதரனுக்கும் சிறப்பு நன்றிகள். இப்படியான ஊக்கங்கள் இருந்தால் இன்னும் இன்னும் முயன்று பார்க்கலாம். 
     

Post Comment

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க


விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார்.
தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள். ஒன்பது சிறுகதைகளையும் ஒரு மெல்லிய கண்ணி இணைக்கிறது. அது, “மேல ஒருத்தன் இருக்கான். அவன் பாத்துப்பான். எல்லாக் கணக்குக்கும் கூலி இல்லாமலா போய்டும்?” என்ற எளிய மனிதர்களின் அறம் சார்ந்த நம்பிக்கையே! இந்தத் தொகுப்பு ஒரு குறுநாவலுக்கான நிறைவைத் தருகிறது. ஒன்பது கதையின் மனிதர்களும், அவர்களின் மொழியும், வாழ்க்கையை அவர்கள் காணும் விதமும் ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது அந்நிறைவிற்கான காரணமாக இருக்கலாம். மேலும், மடையை உடைத்துக் கொண்டு வரும் பெரு வெள்ளம் போல் களத்து மேட்டு வேலைகள் பற்றித் தணியாத ஆர்வத்தில் சிறுகதைக்கான தேவையையும் மீறிப் பதிந்துள்ளார் அரசன்.
இண்ட முள்ளு
இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் அனைவருமே உழைப்பின் அருமையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ‘நட்டு வச்ச கோயில் செல போல மரங்கள் அசையாம’ இருந்தாலும், ‘சின்ன தீப்பொறி வுழுந்தா போதும் மொத்தத்தையும் ஒரே மூச்சில் எரிச்சி விடுவது போல பங்குனி வெயிலு’ காந்தினாலும் உழைப்புக்கு அஞ்சாத மக்கள். ‘தூவானம்’, ‘வெள்ளாம’, ‘நலுவன்’ ஆகிய கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். மனதில் குற்றவுணர்வைப் ‘பெருஞ்சொம’யாய்ச் சுமந்தவாறு காடு காடாய்த் திரியும் மருதன் கூட உழைப்பதற்குச் சுணக்கம் காட்டுவதில்லை.
இரண்டு மாதம் முழுகாமல் இருந்த செந்தாமரையும், மூன்று மாத கைக்குழந்தையின் தாயான மேகலாவும் தற்கொலை புரிந்து கொள்கிறார்கள். குடிப் போதையில் தனது தந்தையைக் கணவன் கை ஓங்கிவிட்ட பொறுமலிலும், நிலையான வேலையில் இல்லாத காதல் கணவன் சொன்ன கடுசான வார்த்தையாலும் இறைவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். “நெதானம் தப்பின எதுக்கும் ஆயுசு கம்மி தான்” என தத்துவ விசாரம் மேற்கொள்கிறான் ராசா. மற்ற கதைகளுக்கும், ராசா வரும் ‘காயடிப்பு’ கதைக்குமுள்ள ஒரு வேறுபாடினை நன்றாக உணர முடிகிறது. அரசனின் இயற்பெயர் ராசா என சி.கருணாகரசின் அணிந்துரையில் உள்ளது. எல்லாக் கதைகளும் அனுபவங்களாக மட்டுமே தொக்கி நிற்க, காயடிப்பு கதையின் கடைசி வரி மனதைக் கனக்க வைக்கும் அழகியலோடு முடிவது சிறப்பு.
Writer Arasan‘கெடாவெட்டி’ எனும் கதையில் குருசாமி இறந்ததும், ஊர்ப் பெருசுங்க “வழி வுட”ச் செல்கின்றனர். அதைப் பற்றி எழுத்தாளரிடம் கேட்கையில், “ஒருவர் இறந்த சிறிது நேரத்தில், ஊருக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுருட்டு, எண்ணெய், பந்தம், சின்ன மடக்கு, சிறிய மண் பானை வைத்து சூடம், ஊதுவத்தி ஏற்றிச் செய்யும் சடங்கு. அதன் பின் தான் மேளம் அடிப்பார்கள்” என்றார். அரசன் அரியலூர் மாவட்டத்தை இன்னும் அதிகமாகத் தன் எழுத்தில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இண்ட முள் என்பது ஒரு கொடிவகை. அதன் முட்கள் உடலில் தங்காமல், சதையைப் பிய்த்துக் கொண்டு வெளியேறி விடும் தன்மையைக் கொண்டது. அப்படித் தன்னைத் தைத்த சில உண்மைக் கதைகளை ‘இண்ட முள்ளு’ எனும் தொகுப்பாகி விட்டார் அரசன். கதைகளின் தீவிரத்தன்மையைப் பிரதிபலிக்காத புத்தக வடிவமைப்பு பெரும் குறையாகப்படுகிறது. முன்னட்டையை விட பின்னட்டை பிரகாசமாக உள்ளது. ‘இயற்கையாகிப் போன எங்களூரின் மூத்தக் குடிகள் அனைவருக்கும்’ எனப் புத்தகத்தின் மூன்றாம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போடப்பட்டுள்ளது. அதையே முன்னட்டையிலும் போட்டிருந்தால், கதைகளுக்கு மேலும் நெருக்கமாய் அமைந்திருக்கும்.
புத்தகத்தை ஆன்லைனில் பெற: இண்ட முள்ளு (சிறுகதைகள்)
புத்தகத்தைத் தபாலில் பெற: +91 99 4343 7899

Post Comment

ஜூலை 13, 2016

அரசனின் இண்ட முள்ளு (கதைகள்) ஒரு பார்வை


வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம்,மரகதம், மாணிக்கம்,  நீலம் என ஒன்பதும் நவரத்தினங்கள் என்றழைக்கப்படும். அந்த நவரத்தினங்களைப் போலவே திரு. அரசன் அவர்கள், பெருஞ்சொம, தூவானம்,சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காத்து என ஒன்பது கதைகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு கதையும்அவர் தம் கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் வைத்து மண்மணம் மாறா பேச்சுமொழியில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் அதனுடன் வாசகன் பயணிக்க வேண்டும். அவ்வாறு வாசகனைக் கதையோட்டத்தோடு அழைத்துச்செல்ல வேண்டும். கதையையும் கதாமாந்தர்களையும் நம்முன் காட்சிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சிப்படுத்தும் கலை திரு அரசன்  அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதை அறிந்து அவரது திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.கதைதானே என்றில்லாமல், ஒவ்வொரு கதையிலும் தாம் வாழும் சமுதாயத்திற்கு ஒரு கருத்தையும் உள்ளடக்கிச்செல்கிறார். ஆனால், அறிவுரை என்பதை வெளிக்காட்டாமல் கதைக்குள்ளே படிப்பவர்கள் உணரும் அறவுரையாகத் தந்திருப்பது சிறப்பு.

பெருஞ்சொம & எதிர்க்காத்து– கதையில் பெண் ஆண் நட்பு – காதல், திருமணம் செய்து கொள்ளாமல் கருவுறுதல், கருக்கலைப்பு, எப்படியும் திருமணம் செய்து கொள்வான் என்ற பெண்ணின் நம்பிக்கை, ஏற்றத்தாழ்வால் ஏமாற்றம் இறுதியில் தற்கொலை, தனிமை. வாழ்நாள் முழுவதும் தன்னெஞ் சறிவது பொய்யற்க என மனசாட்சியே கொல்லுதல் என படிப்பவர்களையும் பெரிய சுமையை சுமக்க வைத்து விடுகிறார் ஆசிரியர். ஒருவர் தன் வயிறெரிந்து கொடுக்கும் சாபம் என்றும் பொய்க்காது என்பதையும் ஏமாற்ற வேண்டும் என்று எண்ணுபவனின் வாழ்க்கை என்றும் ஏற்றங்காணாது என்பதையும் உய்த்துணர முடிகிறது. 

தூவானம் –ஒற்றைப் பெற்றோராக இருக்கும் ஒருவர் வாழ்க்கையில் தன் குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்குப்படும் சிரமங்களை உணர முடிகிறது. தனித்து வாழும் பெண்கள்,சமுதாயத்தில் குரலை உயர்த்தியும் கறாராகப் பேசவேண்டிய அவசியத்தையும் இக்கதை உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெள்ளந்தெளிவாகக் காட்டுகிறது.  அப்படி இருந்தால்தான் சமுதாயத்தில் உலவும் பல மானிட வல்லூறுகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்பதையும் கூறுகிறது இக்கதை. பெண்ணுக்குத் திருமணம் செய்ய தான் மட்டுமே  அலைந்து திரிந்து முடிப்பதைச் சற்றும் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

சாந்தி – கதையின் தலைப்பே அமைதியின்றித் தவிக்கும் ஒரு பிறவியைக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது. ஆண் பெண் இருவரும் எப்படி இருக்கக்கூடாது என்பதையும், கட்டாயத் திருமணத்தால் பெற்றோரைப் பழிவாங்குவதாக நினைத்து தன் வாழ்க்கையையே தொலைத்த பெண்ணும்  சமுதாயத்திற்குக் காட்டப்பட்ட அறவுரை எனக் கொள்ளலாம். ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த சாந்தி ஒரு எடுத்துக்காட்டு. சமுதாயத்தில் சரியான வழிகாட்டுதலும்  விழிப்புணர்வும் இல்லாத பெண்களுக்கு இந்த சாந்தி ஒரு சரியான முன்னுதாரணம்.

வெள்ளாம;சாதாரண வேளாண் குடும்த்தைப் பற்றிய கதையாக இருந்தாலும், மனைவி தவிர பிற பெண்களைத் தொடமாட்டேன் என்ற உறுதி கொண்ட பழனி, இன்றும் பல குடும்பங்களில் இருப்பதைப் போல  கணவனுக்கும் மகனுக்கும் நடுவே அல்லாடிக்கொண்டு இருக்கும் தங்கம், காதல் கணவன் இறந்தபின்னும் கண்ணியமாக வாழும் செல்லம்மா, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பாங்கு, ஒரே ஊரிலிருந்தும் தாய் தந்தையோடு ஒட்டுறவாக இல்லாத மகன், விளைநிலம் அறுவடை என சாதாரண சூழலில் பல அறக் கருத்துக்களை உள்ளடக்கிச் செல்கிறது இந்த வெள்ளாம. விளைந்த பொருள் வீடு வந்து சேர்வதற்குள் விவசாயி படும் பாடு அவனுக்கு மட்டுந்தான் தெரியும். இக்கதையிலும் பழனியின் மன உறுதி தன் நெஞ்சுவலியும் தாங்கிக்கொண்டு வெள்ளாமையை வீட்டிற்குக் கொண்டு வந்தபின்பு அவர் உயிர் பிரியும் அவலம் படிப்போர் மனத்தைக் கனக்கச் செய்கிறது என்றார் அது மிகையில்லை.

தாய்மடி மதுவினால் அழியும் மனிதர்களைப் பற்றியது. மகள் இறந்தபின்பு பாஞ்சாலையை மகளாக நினைக்கும் தாயுள்ளம் என கதை செல்கிறது.

காயடிப்பு– இக்கதை ஒன்றும் அறியாத ஒரு சிறுவனின் மனத்தில் இருக்கும் ஓராயிரம் விடைதெரியா வினாக்களை வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. அக்காலத்தில், பெற்றோருக்கு உதவும் சிறுவர்கள், பிறருக்கு உதவும் ஓரூர் மக்கள்,தெரிந்தவர்களின்  இறப்பு படுத்தும்பாடு, நினைவுகளில் தேங்கி நிற்கும் தாவரங்கள், ஓரிரு வினாடிகளில் எடுக்கப்படும் தற்கொலை முடிவுகள் என அனைத்தும் வாசிப்பவர்களுக்குத் தொய்வு ஏற்படுத்தாமல் செல்கிறது இக்கதை.

நலுவன்  காலங்காலமாக நடக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகப் போராட்டம். குறைந்த கூலியில வேலைக்கு ஆள், எதைச் செய்தாலும் எதிர்த்துக் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணம் என பணம் படைத்தோர், மானம்தான் பெரிசு மற்ற எதுவும் பெரிதில்லை என வாழும் இல்லாதோர் என இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை இக்கதை எடுத்துரைக்கிறது. இக்கதைக்கரு அக்காலம் முதல் இக்காலம் வரை இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலமாக இருந்தாலும் கதையைக் கொண்டு செல்லும் பாங்கு சிறப்பு.

மொத்தத்தில், நூலின் பெயர், அட்டைப் படம் என அனைத்தும் பசுமை மாறா கிராமியச் சூழல். கழனிவெளி, நெற்களம்,கிராமிய மக்களின் வாழ்வியல், ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி மண்மணம் மாறா சிறுகதைகளை அக்கிராமிய மொழிகளில் எழுதி ஒரு நூலாக நம் கைகளில் தவழ விட்டிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தாவரத்தின் தன்மை குறித்தோ அல்லது நிலத்தைப்பற்றியோ கதைக்குத் தொய்வு ஏற்படாமல் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் கதாசிரியரின் முதல்நூல் என்று சொல்ல முடியாத அளவிற்கு அமைந்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழன்னைக்கு மேலும் பல நூல்களால் நூலாசிரியர் அழகு சேர்க்கட்டும்.

பொருளடக்கம் அல்லது உள்ளடக்கம் என ஒரு பக்கத்தில் தலைப்புகளையும் பக்கங்களையும் எழுதி இருக்கலாம். இளங்கன்று பயமறியாது என்ற பழமொழியைப் படித்ததுண்டு. ஆனால் ருசிகண்ட பூனை பயமறியாது என்பதை இங்குதான் தெரிந்து கொண்டேன். கெடாவெட்டி என்னும் கதையை என்னால் படிக்க முடியவில்லை. கொஞ்சம் நெருடலாக இருந்தமையால் அதைப் படிக்க என்னால் இயலவில்லை. இண்ட முள் என்பது எப்படி இருக்கும் எனத்தெரியாது. அதனை ஒரு படமெடுத்துப் போட்டிருக்கலாம். (இது என்கருத்து மட்டுமில்லை. கவிஞர் கோ. கண்ணனுடையதுமாகும்.) மறுபதிப்பில் சேர்த்து விடுங்கள். இந்தப்புத்தகத்தைக் கொடுத்த கவிஞர் கருணாகரசுக்கு மனமார்ந்த நன்றி. இது ஒரு நூலாய்வோ அல்லது மதிப்புரையோ இல்லை. இங்கு எழுதப்பட்டவை நான் இந்த நூலைப் படித்தபோது நான் உணர்ந்தவை மட்டுமே. நன்றி.

திருமதி. உஷா சுப்புசாமி
கல்வியாளர்

சிங்கப்பூர்.


Post Comment

மே 14, 2016

வானவல்லி - நூல் அறிமுகம்


சில வருடங்களுக்கு முன்பு 'இரவின் புன்னகை' என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத்தான் இவனைத் தெரியும், அடுத்தடுத்த பேச்சுக்களில் எனது மண்ணுக்காரன் என்று தெரிந்ததும் கூடுதல் நெருக்கமானது. இப்படித்தான் சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி அறிமுகமானான்.



அமெச்சூர் கவிதைகளை எழுதி உருகிக் கொண்டிருந்தவனை பல முறை திட்டியிருக்கிறேன், கவிதையின் வலிமையை பற்றியும், சமகால படைப்பாளிகளின் தவறுகளையும் பற்றியும் மணிக்கணக்கில் பேசித் தீர்த்திருக்கிறோம். தற்போது கவிதைகள் எழுதுவதை குறைத்திருக்கிறான் என்பது ஆறுதல். களப்பிரர்கள் பற்றி இவன் எழுதிய பதிவுகள் தரமான படைப்புகள். அதிகம் கவனம் பெறாமல் போனது காலத்தின் சோகம்.

பிறகொரு நாள் 'வானவல்லி' என்ற வரலாற்றுப் புதினத்தை இணையத்தில் தொடராக எழுதுவதாக கூறி, எழுதிவிட்டு என்னை வாசிக்கச் சொல்லி கருத்தினைக் கேட்டான். வரலாற்று நூல்களை வாசித்து பழக்கமின்மையால் முதல் இரண்டு தொடரினை வாசித்துவிட்டு கருத்தினை கூறினேன். அதன்பிறகு மின்னல் வேகத்தில் எழுத துவங்கிவிட்டான் நான் தான் அவனைப் பின்தொடர இயலாமல் போய்விட்டது. வாழ்வில் முதன் முறையாக இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்றால் அது 'வானவல்லி' என்ற தம்பியின் நெடிய கனவு நூல் தான்.

இந்த நூலினை எழுத வெற்றிவேல் மேற்கொண்ட ஆய்வும், வாசிப்பும் மிகப் பெரியது. ஒருமுறை எனது அறையில் வந்து தங்கியிருந்தவன் சட சடவென்று எழுதுவதைக் கண்டதும், வெறும் ஐந்து பக்கங்கள் எழுதவே நமக்கு நாக்கு தள்ளுகிறதே, ஆனால் இவனுக்கோ எப்படி சாத்தியமாகிறது என்ற ஆச்சர்யமும் கொஞ்சம் பொறாமையும் எட்டிப் பார்த்தது. அவ்வளவு கடின உழைப்பைக் கொடுத்து இந்நூலினை எழுதியிருக்கிறான்.



அவனது ஒருவருடத்திய உழைப்பினை வானதி பதிப்பகம் நான்கு பாகங்கள் கொண்ட புத்தகமாக வானவல்லியை வரும் புத்தக திருவிழாவினில் வெளியிட இருக்கிறது, அவனது எடையை விட புத்தக எடை கூடுதலாக இருக்குமென்று நம்புகிறேன்.

எனது 'இண்ட முள்ளு' நூல் வெளிவர முதன்மை காரணிகளில் இவனும் ஒருவன். எல்லோரிடமும் நட்பு பாராட்டும் தன்மையே அழகு. இவனின் சிறகு இன்னும் பெரிதாக விரியட்டும்.

இந்த ஒல்லிப்பிச்சான் இன்னும் பல நூல்களை எழுதி தனது இருப்பினை மிக அழுத்தமாக பதிவு செய்ய வாழ்த்துகளை கூறிக்கொண்டு, வானவல்லிக்காக காத்திருக்கிறேன்... நீங்களும் வாழ்த்துங்கள் அவன் வளரட்டும்....


Post Comment

மே 05, 2016

"இண்ட முள்ளு" - நூல் அறிமுகம்




உள்ளூர ஒரு கலக்கத்துடன் தான் முதன் முதலாக சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னை சேர்ந்து பல இன்னல்களுக்குப் பின்பு ஒருவழியாய் சீராக பயணிக்க துவங்குகையில் இணையப் பரிச்சயம் கிட்டியது. 2010ல் இணையப் பக்கத்தை துவங்கினாலும் இரண்டு மூன்று வருடங்கள் கவிதை என்கிற பெயரில் மொக்கைப் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தான் முதல் வலைப்பதிவர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு தான் நண்பர்களின் வட்டம் கொஞ்சம் விரிவடைந்து அவர்களின் எழுத்தை தீவிரமாக பின்தொடர்ந்து எனது தவறுகளை களைய முற்பட்டேன். அதன்பிறகு கவிதை எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு கதைகளின் பக்கமும் கட்டுரைகளின் பக்கமும் கவனத்தை திருப்ப முயன்றேன். 

2014 இறுதியில் தான் 'இண்ட முள்ளு'க்கான துவக்கப் புள்ளியை விதைத்து அதற்கான வேலைகளில் இறங்கினாலும் உள்ளூர எழும்பிய தயக்கத்தினால், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு எனது வழக்கமான வேலைகளில் கவனத்தைச் செலுத்தினேன். எனது மாமா கருணாகரசு, கோவை ஆவி, சீனு, தம்பி வெற்றிவேல் போன்றோர் புத்தக வேலை என்ன ஆச்சி, எந்த நிலைமையில் இருக்கிறது என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க, அவர்களிடம் தயங்கி தயங்கி புத்தகம் வெளியிடுமளவிற்கு எனது எழுத்து முதிர்ச்சி அடையவில்லை என்று நினைக்கிறேன், இன்னும் சில வருடங்கள் போகட்டும் என்று கூறினேன். 'உனது எண்ணம் தவறானது, நன்றாகத்தான் எழுதி இருக்கிறாய், தொடர்ந்து எழுதி புத்தகத்தை முடி' என்று ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் புத்தகப் பணியை உயிர்ப்பித்தேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இக்கதைகளை எழுதினேன், குறிப்பாக இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் எனது மண்ணில் நிகழ்ந்த நிகழ்வுகளே! அந்த நிகழ்வுகளையும், அதன் சார் மாந்தர்களையும் காயப் படுத்தாமல், நிகழ்வுகளை திரித்துக் கூறாமலும் கதையாக்க பெரும் சிரமமாக இருந்தது. இப்போது புத்தகமாக அதை வாசிக்கையில் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகுக்கு நானொரு திசை மாறிய பறவை. 2010 முன்புவரை எனக்கும் தமிழ் எழுத்துலகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இலக்கிய ஆளுமைகள் என்று நம்பப் படும் எவர் பெயரையும் அறிந்தது கூட கிடையாது. எங்கோ வெல்டிங் பட்டறையில் இரும்புகளோடு இரும்பாக கிடக்க வேண்டியவன் பாதை விலகி இப்படியொரு நிலையில் இருக்கிறேன். காலம்தான் எத்தனை வித்தியாசமானது. 

எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந்து ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களை அன்போடு நினைவு கூர்ந்து எனது ஒருவருட கனவும் கடின உழைப்பும், 'இண்ட முள்ளு' எனும் கதை தொகுதியை வாங்கி வாசித்துவிட்டு அதன் நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

பேரன்புடன் 

அரசன் 
  
புத்தக தொடர்புக்கு : 9943437899 

for online: Click here    

Post Comment

ஜனவரி 03, 2016

சுய புலம்பலும் - நூல் அறிவிப்பும்...


கிட்டத்தட்ட இது சுய சொரிதலே, ஆகவே நண்பர்களே, கொஞ்சம் பொறுத்தருள்க! "வாசிப்பு என்பது ஒரு போதை மச்சி, அதை ஒரு தடவை தொட்டிட்டின்னா, நீ விடணும்னு நெனச்சாலும் அது உன்னை விடாது.. அதனாலத்தான் நான் .............." என்று அளவுக்கு மீறிய குடிகாரனை விட வெகு ஜோராக பாடமெடுத்து படுத்தினான் நெருங்கிய நண்பனொருவன். அன்றிலிருந்து இன்றளவும் அவனிடம் பேசுகையில் சர்வ ஜாக்கிரதையாக பேசிக்கொண்டு இருக்கிறேன். 

"எப்படி மச்சி உன்னால மட்டும் படிக்க முடியுது, ஸ்கூல் டேஸ்ல கூட நீ இப்படி படிச்சி நான் பார்த்ததில்லையே டா... என்னால முழுசா ரெண்டு பக்கங்கூட படிக்க முடியலைடா, நீ என்னடான்னா இம்புட்டு புத்தகத்தை வாங்கி குமிச்சி வைச்சிருக்கியே மச்சி" என்று தன்னோட இயலாமையை வெளிப்படுத்தினான் இன்னொரு சிநேகிதன். இரண்டு பக்கத்திற்கு மேல் படித்தால் உறக்கம் வருகிறது என்று இவனைப் போன்று உண்மையை ஒப்புக் கொள்பவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழும்பலாம், தவறில்லை! அதை விடுத்து, வண்ணத்திரை நடுப்பக்கத்தையோ, டைம்பாஸ் புக்கையோ இல்லை ஆகாவலி எவனோ ஒருவன் எழுதியோ ஏதோ ஒரு புத்தகத்தை இடையிடையே கொஞ்சம் மேய்ந்துவிட்டோ, இல்லை எங்கேயோ யாரோ பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு வந்து, ஏதோ தமிழ் இலக்கியத்தை மட்டுமில்லாமல் அண்டவெளி இலக்கியங்களை எல்லாம் ஒரே மிடறில் குடித்தவன் மாதிரி நீட்டி முழங்கி, சும்மா இருப்பவனை தூக்கு மாட்டிக் கொள்ளலாமா என்று யோசிக்க வைத்துவிட்டு செல்லும் அரை வேக்காடுகளை வெள்ளாவியில் வைத்து வேகவைக்க வேண்டும்.

இதையெல்லாம் கடந்து இன்னொரு கர்ண கொடூரமான வகையறா ஒன்று இருக்கிறது. அவர்கள், பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தாயா? சிவகாமியின் சபதம் கண்டாயா? எனக் கேட்டு, இல்லையென்று மறுத்து நாம் தலையசைக்கையில், 'என்ன இன்னும் படிக்கலையா நீ' என்று பிறப்பிலும் இழி பிறப்பை போன்று நம்மை நோக்குகையில், ஆயிரம் "பீப்" பாடல்களை ஒருசேர எழுதி அவர்களை நோக்கி பாடக் கூடிய வல்லமை கண நேரத்தில் வழங்கிச் செல்வர்.

பெரும்பாலும் புத்தகங்கள் பற்றி எல்லோரிடத்திலும் நான் விவாதிப்பதில்லை, என் ரசனையோடும், எண்ண அலைவரிசையோடும் ஒத்துப் போகும் வெகு சிலரோடு மட்டும் புத்தகங்கள் பற்றி பேசுவது என் வழக்கம். அவ்வகையில் பதிவுலகில் மிக சொற்ப எண்ணிக்கையிலான நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். பேசாமைக்கு  மிக முக்கிய காரணம் இருக்கிறது, படித்த நூலைப் பற்றி, அதன் உள்ளடக்க விழுமியங்களை கூறுவதை விட்டுவிட்டு, தன்னோட வாசிப்புத்திறன் பற்றிய அருமை பெருமைகளை பெருங்குரலெடுத்து பாடுவதினால், "வேணாம்டா சாமீ இந்த மன உளைச்சல்" என்று விலகி நழுவிவிடுவேன்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு வெரைட்டியான சுகானுபவங்களை வழங்கிவிட்டுத் தான் போகிறார்கள். இப்போதெல்லாம் அவர்களை பேசவிட்டு கேட்பதையே ஒரு பொழுதுபோக்காக வைத்துள்ளேன் என்பது தனிக்கதை!

என்னோடு நெருக்கமாய் வாசிப்பு/படைப்பு வெளிகளில் இயங்கும் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவரை பெரும்பாலான தோழமைகளுக்கு முறையான வாசிப்புத் துவக்கம் இருந்திருக்கிறது அதை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித சிக்கல்களுமில்லை, அவ்வாறான நண்பர்கள் பலரும் வாசிப்பதில்லை என்று சொல்லக் கேட்கையில் கவலையில் உறைகிறது மனம். எனக்கோ வாசிப்பு என்பது பள்ளிப் புத்தக வாசிப்பு தான். அதன்பிறகு எப்பவாது குமுதம், குங்குமம் அவ்வளவு தான். நான் பயின்ற அரசுப் பள்ளிகளில் நூலகமென்ற ஒன்று இருந்தது தெரியாது அதுதான் உண்மை, அவ்வாறு தான் நான் பயிற்றுவிக்கப் பட்டேன். அதன் பிறகு ஊர்க்காரர் ஒருவர் உதவியுடன் செந்துறை அரசு கிளை நூலகத்தில் உறுப்பினர் ஆனேன் அத்தோடு சரி, காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும், நூலகர் தொல்லையும்! எதை வாசிக்க வேண்டும் என்ற முறையான  புரிதலில்லை என்பது கூடுதல் காரணம். 

ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு ஊர்க்கார அண்ணன் சூர்யபிரகாஷ் என்பவர் வைத்திருந்த "காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்" என்ற தபு சங்கரின் கவிதைப் புத்தகம் தான் என்னோட வாசிப்புக்கு முதல் துவக்கம் என்று சொல்லலாம். அதன் பிறகு பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் போட்டிருந்த பிரம்மாண்ட புத்தக திருவிழாவில், சென்னையைப் பற்றி பெரிதான அறிமுகமின்றி தனியொருவனாய் சென்று சில புத்தகங்களை வாங்கி வந்தது தான் புத்தக சேமிப்புக்கான பிள்ளையார் சுழி! அதன் பிறகு வாங்குகிறேனோ இல்லையோ வருடா வருடம், புத்தகச் சந்தையை வேடிக்கைப் பார்க்கவாது செல்வதை வழக்கமாய் வைத்திருகிறேன். அந்த காலக் கட்டங்களில் வாங்கிய புத்தங்கள் பல தொலைக்கப்பட்டும், சிலதுகள் களவாடப்பட்டதும் போக எஞ்சியிருக்கும் நூல்களை இப்போது பார்த்தால் பயங்கர  சிரிப்பாக இருக்கிறது. அப்போதைய ரசனையிலிருந்து இப்போது முற்றிலும் மாறுபட்டிருக்கிறேன்.

இப்போதெல்லாம் அலுவலகம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன், எங்கு நேரம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் என்னோட வாசிப்புக்கு தீனி போட துவங்கி விடுவேன். எனக்கு வாசிப்பதற்கென்று ஒரு தனி இடம் தேவையாய் இருந்ததில்லை. நேரமும் அதற்கான மனநிலையும் வாய்த்தால் போதும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பேன். இனியும் அப்படித்தான் தொடர்வேன் என்று நம்புகிறேன். என்னுடைய வாசிப்புக்கு அரசனும் நானே, அரக்கனும் நானே!
    
என்னோடு புத்தகம் வாங்க வந்தீர்கள் என்றால், இவனை மாதிரி ஒரு பைத்தியத்தை பார்க்க முடியாது என்று தலைதெறிக்க ஓடுவீர்கள் அப்படியொரு நூல் தேடலிருக்கும். அதனாலே பெரும்பாலும் தனியாக சென்று வாங்குவது தான் வழக்கம். இப்போது தான் நம்பிக்கைக்கு உரிய சிலரின் பரிந்துரையில் நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

அதிக எண்ணிக்கையிலான நூல்கள் வாங்கியதும், வாங்கிய நூல்களை அதிகமாக வாசித்ததும் கடந்த வருடத்தில் தான். அது போல் இந்த வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன், அதுமட்டுமின்றி எங்கெங்கோ எப்படியெல்லாமோ ஓட வேண்டியவன், திசை மாறி, தடம் புரண்டு தமிழ் எழுத்துலகில் நுழைந்துவிட்டேன். கரம் பிடித்து வலையுலகில் உள் நுழைத்த காலத்திலிருந்து இன்றுவரை என்னை கரிசனத்துடனும், கவனத்துடனும் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமா என்ற உறவையும் தாண்டி பேனாவின் மூலம் எங்கள் மண்ணை அறிமுகப்படுத்திய திரு. கருணாகரசு  அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, இன்னும் சில மாதங்களில்,  "சிறுகதைத் தொகுதி" ஒன்றை வெளியிடவும் முடிவு செய்து களமிறங்கி அதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்று கூறுவார்கள், எனவே இதுவும் சாத்தியமாகும் என்றே கருதுகிறேன்! பார்க்கலாம்.... 
    


Post Comment