படம் : சண்டக்கோழி
பாடல் : தாவணி போட்ட ..
இசை : யுவன்ஷங்கர் ராஜா
வரிகள் : கவிஞர். யுகபாரதி
ஒருமுறை கேட்டால் மறுபடியும் கேட்க மனம் தூண்டும் அந்த வகையில் என்னை கவர்ந்த பாடல் இதுவும் ஒன்று. கேட்டாலே காதலில் நம்மையும் விழ வைக்கும் அப்படியொரு அழகிய வரிகள் வழங்கி அசத்தி இருக்கின்றார் கவிஞர். யுகபாரதி.
"தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு "
ஆரம்பமே அதிரடியாய் வரிகளை தொகுத்து சரவெடியாய் வெடித்து நம்மை உள்ளே கூட்டிச்செல்லும் வித்தை இவருக்கு நன்றாகவே வந்துள்ளது.
"பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்க்கமா
பச்ச தண்ணி நீ கொடுத்த ஆகிப்போகும் தீர்த்தமா"
"மகா மகா குளமே என் மனசு கேட்ட முகமே
நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே!"
இயல்பான வரிகளை இணைத்து பாடலின் சுவையையும் தரத்தையும் ஒருசேர மெருகேற்றி இருக்கின்றார் கவிஞர். அதே வேளையில் காதலர்களை பற்றி மிக ரம்மியமாய் அழகிய சொற்களை சேர்த்து காதலின் ஆழத்தையும் , அழகையும் அற்புதமாய் செதுக்கி வைத்துள்ளார் இந்த காதல் மனிதர்.
"கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே!
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே!"
இப்படி பெண் பாடுவதாய் அமைத்து பெண்ணின் கோணத்தில் இருந்து காதலின்
நெருக்கத்தையும், நேசத்தையும் நிறைவாய் கூறி இருக்கின்றார்.
"தேக்கு மர சன்னல் நீ தேவ லோக மின்னல்
ஈச்ச மர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அருந்த வாலு, குறும்பு தேளு
ஆனாலும் நீ ஏஞ்சலு!"
இயற்கையாய் வந்து விழுந்த வார்த்தைகளை தொடுத்து அழகிய காதல் மாலை
தொடுத்து நம்மிடம் ரசிக்க கொடுத்துள்ளார். இப்பாடலை கேட்டு முடித்த பின் நெஞ்சுக்கூட்டில் காதல் ஊற்று சுரக்கும் அப்படி ஒரு அழகிய காதல் வர்ணனை.
சலிப்பு தட்டா வண்ணம் இயல்பான மெல்லிசை அமைத்து இவ்வரிகளின் சுவையை மேலும் கூட்டி, பாடலோடு நம்மையும் பயணிக்க தூண்டி இருக்கின்றார் இசை அரசரின் வாரிசு திரு. யுவன் ஷங்கர் ராஜா.
அற்புத வரிகளுக்கு அம்சமான குரல்களால் உயிர் கொடுத்திருப்பர் திரு. விஜய் யேசுதாஸ் மற்றும் திருமதி. சிரேயா கோஷல். இவர்களின் குரல்வளம் இந்த பாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்.
சிறப்பான நடிப்பினால் உள்ளத்தை கொள்ளை கொள்வார்கள் விஷாலும் , நாயகி மீரா ஜாஸ்மினும். இந்த பாடலில் மீராவின் அழகும் , துள்ளலான துல்லிய நடிப்பும் நவரசத்தை கூட்டும்.
அற்புத காட்சி அமைப்புகள் , நல்லதொரு வசனங்கள் என்று மொத்த படத்தையும் தரம் குறையாமல் நமக்கு வழங்கி இருப்பார் இயக்குனர் திரு. லிங்குசாமி. அனைவரின் ரசணைக்கும் ஏற்றார் போல் அழகிய பாடல்களும், காட்சிகளும் நிறைந்த தரமான படம் இது.
எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!
(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)