புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 27, 2015

"Poet the Great"- Short Film


நண்பர் திரு. ஆர் வி சரவணன் இயக்க, ஆவியும், நானும் நடித்த "சில நொடி சிநேகம்" குறும்பட ஷூட்டிங்கில் தான் திரு. துளசிதரன் அவர்களை முதன்முதலில் சந்தித்தேன். அவரின் இயல்பான பேச்சு, எளிதில் அவரோடு ஒன்றிவிடலாம்.  துளசி சார் தேர்ந்த "கதைசொல்லி" என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவர், என்னைப்பொறுத்தவரை அவரொரு தேர்ந்த நடிகர், பிறகுதான் கதை சொல்லி மற்ற எல்லாமும் என்பேன்! புதிய நபர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதில் சிலவற்றை இவரிடமிருந்து சிலவற்றை கற்றிருக்கிறேன். 

ஆசிரியர் என்பதாலோ என்னவோ ரொம்ப எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை இருக்கிறது. இந்த வசனத்தை இப்படித்தான் சொல்லவேண்டும், இந்தக் காட்சிக்கு இப்படித்தான் முகபாவனை இருக்கவேண்டும் என்று மிகவும் நாசூக்காக சொல்லி தருவதில் வல்லவர் என்று சொல்லலாம்! கும்பகோண பேருந்து நிலையத்தில் மிகுந்த படபடப்புடன் இருந்த என்னை, அமைதிப் படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த பெரிதும் உதவியதும் இவரே! அடுத்து திரு. ஆவி அவர்கள் இயக்கிய "காதல் போயின் காதல்"  என்ற குறும்பட ஷூட்டிங் தினத்தன்று சற்று அதிகமாக பேசி மகிழ நேரம் கிடைத்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன்!

வருடம் ஒரு குறும்படம் என்ற கொள்கையில் இந்த வருடம் இயக்கியிருக்கும் படம் "Poet the Great". நண்பர்களையும், சக பதிவர்களையும் நடிக்க வைத்து எடுத்திருக்கிறார், இதில் எனக்கொரு வாய்ப்பும் தருவதாக சொன்னார், என்னால் தான் இம்முறை கலந்து கொள்ள இயலாமல் போனது (மன்னிக்கவும் சார், நிச்சயம் அடுத்த படைப்பில் இணைந்து கொள்கிறேன்). 





"Poet the Great"

வரலாறுகளை பெரும்படமாக  பண்ணுவது என்பதே வெகு சிரமம், அதை குறும்படமாக சுருக்கி பண்ணுவதின் கஷ்டம் நாமறிந்ததே, அந்த வகையில் இந்த முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பெரிய அனுபவம் இல்லாதவர்களை கொண்டு ஓரளவிற்கு நேர்த்தியான படைப்பாக்கியதில் தெரிகிறது இவரின் அனுபவம். புதிய நடிகர்கள், சின்ன சின்ன தொழில் நுட்ப குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் முழுமையான படைப்பு தான்.  மேலும் அடுத்தடுத்த படைப்புக்களில் இன்னும் சற்று சிரத்தை எடுத்து தரமான படைப்பாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்! எங்களின் எல்லா முயற்சிகளிலும் "பில்லராக" இருக்கும் கீதா ரங்கன் அவர்கள் இந்தப் படத்தின் ஆணி வேர் மட்டுமல்ல நடிக்கவும் செய்திருப்பது நிறைவைத்  தருகிறது!       


மிகச் சிறந்த உடல்மொழியும், வசன உச்சரிப்பகளுமாய் படத்தின் முதுகெலும்பாகிய எங்கள் தலைவர் திரு. துளசி அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக் கொள்கிறேன்!

படத்தினை நீங்களும் பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிருங்கள், அடுத்தடுத்த படைப்புகளுக்கு உதவியாக இருக்கும்!

இப்படத்தில் நடித்திருக்கும் எங்களின் வாத்தியார் பாலகணேஷ் அவர்களுக்கும், திரு. R V சரவணன் அவர்களுக்கும், கலைப்பெட்டகம் திரு. ஆவி அவர்களுக்கும், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


லிங்க்:


                                                                        Part - 1



Part - 2







Post Comment

ஜூன் 24, 2015

சண்டி வீரன் ...


நையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இனி,  இவரின் படங்களை முதல் நாளில் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்த என்னை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது சண்டி வீரன் முன்னோட்டம். தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாய்ச்சலால் பாய்ந்திருப்பார் என்று தெரிகிறது. ஆடியோ வெளிவந்து சில நாட்கள் ஆகியும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தான் இருந்தேன், பின்பொரு பொழுது போகாத சாயந்திர வேளையில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் தான் சண்டிவீரன் பற்றிய நினைப்பு வர பாடல்களை தரவிறக்கினேன். 



எடுத்த எடுப்பிலையே அல்டாப்பு மாப்பு என்னும் பாடலை கிளிக்க ஒருவித  கிலியை ஏற்படுத்த, ஒருவித தயக்கத்துடன் தான் "கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே, உச்சாணி கொம்பெத்தி என்னை உக்கார வைச்சானே" வரிகள் மனதை என்னமோ பண்ணியது. அன்றிரவு மட்டும் சுமார் நாற்பது தடவைக்குள் மேல் கேட்டிருப்பேன். என்னவென்று தெளிவாக சொல்ல தெரியவில்லை அப்படியொரு ஈர்ப்பிருக்கிறது இந்த பாடல் வரிகளில்! பாரதிராஜா அவர்களின் அன்னக்கொடி படத்தில் வரும் "பொத்தி வைச்ச ஆசை தான்", ரம்மி யில் வரும் "கூட மேல கூட வைச்சி" இப்படியான பாடல்களுக்குப் பின், என் மனதை பிசையும் பாடலாக இதுதான் இருக்கிறது. எத்தனையோ பாடல்கள் வந்தாலும் ஒரு சில பாடல்கள் மட்டுமே நம்முடைய பால்யத்தையோ, அதனுள் ஒளித்து வைத்திருக்கும் நினைவுகளையோ கிளறிவிட்டுச் செல்லும், அந்த ரகமென்று இந்த பாடலை உறுதியாகச்  சொல்வேன். 

இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை, பாடியது கூட அனிதா மற்றும் MLR கார்த்திகேயன் என்று இருக்கிறது, இரண்டு பேரின் குரலும் இந்த வரிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரொம்ப எளிமையான வரிகள், இந்த பாடல் முடிகையில் 

"ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் சோடியில்லையடி, 
ரெண்டும் ஒண்ணா சேரும் நேரம் வந்தா, 
ஒன்னு கொதிக்கும், 
ஒன்னு வெடிக்கும் 
காதல் இதுதாண்டி"! இது போதும் நின்னு பேசுமென்று நம்புகிறேன்! இந்தப் பாடலை கேட்கும்போதே இதன் காட்சிவடிவம் எப்படி இருக்குமென்ற ஆவல் மேலோங்குகிறது. 

 வழமையான காதல் பாடல்களைப் போல தான் இருக்கிறது இன்னொரு பாடலான "அலுங்குறேன், குலுங்கிறேன்" என்கிற பாடல்! 

இயக்குனர் பாலா தயாரிப்பில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சண்டிவீரனை காண ஆவல் அதிகமாகிறது. 

SN அருணகிரி என்பவர் இசையமைத்திருக்கும், இப்படத்தின் பாடல்  நகரத்தில் எப்படியோ, ஊர்ப்புறங்களில் ஒரு ரவுண்டு வருமென்று நம்பலாம் அதுவும், இந்த "கொத்தாணி" பாடல் பட்டையை கிளப்புமென்று நம்புகிறேன், பொறுத்திருந்து பார்ப்போம்!     
       

Post Comment

ஜூன் 08, 2015

காக்கா முட்டை...


நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு மாற்று சினிமா இந்த "காக்கா முட்டை", இரண்டு சுள்ளான்கள் பண்ணும் அதகளம், படத்தின் முதுகெலும்பு. தேசிய விருது வாங்கிய பின்பு வெளியிட்டமையால் தான் பரவலான கவனத்தைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறது. அப்படியில்லாமல் படத்தை முன்னரே வெளியிட்டிருந்தால் வழக்கம் போல நல்ல சினிமாக்களுக்கு நேரும் கதியே தான் இதற்கும் நேர்ந்திருக்கும், இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கையில் சற்று ஆறுதலாக இருக்கிறது. இது போன்ற முயற்சிகளை மக்கள் அரவணைக்க ஆரம்பித்தால் மட்டுமே நம்முள் புதைந்திருக்கும் ஏகப்பட்ட கதைகள் காட்சி வடிவம் பெற வாய்ப்பாக இருக்கும்!

மாநகரத்தின் மையத்தில் இருக்கும் ஏழ்மை வாசிகளின் ஏக்கங்கள் மிகுந்த ஆசைகள் தான் கதையின் மையமென்று சொல்லலாம். கதையென்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாமல் போனாலும், திரைக்கதை ஆளுமையினால் படத்தை அவ்வளவு அழகாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

இதுநாள் வரை,  அரசியல் ஆதாயத்துக்காக தீ வைத்து கொளுத்தவும், குப்பையில் பிறந்த நாயகன் குபேரனாக ஆனது போல் சிம்பதிக்காகவும், முதலாம், இரண்டாம் கட்ட ரவுடிகளின் வாழ்விடமாகவும் காட்டப்பட்ட அழுக்கு மனிதர்களின் வாழ்விடத்தை அவர்களின் உணர்வுகளோடு கட்டியிருக்கிறார் இயக்குனர்! வெறுமனே காட்டி இருக்கிறார் என்பது அபத்தம், ஆம் அவர்களின் கோபம், துக்கம், மகிழ்ச்சி, ஏக்கம், துரோகம் இப்படி அந்த மனிதர்களின் தினசரி வாழ்வியலை அதன் இயல்பு மாறாமல், நுணுக்கமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

எல்லாமும் எளிதில் கிடைக்க அனுபவித்து வாழும் மேல்தட்டு பையனையும், கோழி முட்டைக்கூட கிடைக்காமல் காக்கா முட்டை குடித்து வாழும் அடித்தட்டு வர்க்கத்தின் ஏற்ற தாழ்வுகளைப் பற்றி பேசாவிட்டாலும், சில காட்சிகள் உணர்த்துகையில் நெஞ்சம் நெருடுகிறது. நிதர்சனம் எப்பவுமே வலிக்கத்தானே செய்யும்.

வெளிப்பார்வைக்கு ஒரு குறுகிய வட்டம் மாதிரி தெரிகிறது இவர்களின் உலகம், ஆனால் உள்நுழைந்து பார்த்தால் மட்டுமே தெரிகிறது எவ்வளவு பெரிய ராட்சச உலகமென்று, அனுபவித்து வாழும் மனப்பக்குவத்தை இளம் வயதிலையே கற்றுக் கொள்ளுகின்றனர். சுற்றி இருக்கும் சூழலை கவனித்து அதற்கு தகுந்தாற் போல் சிரிக்கவோ, அழவோ செய்யும் மேல்தட்டு போலில்லாமல், தமது உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தி வாழுகின்றனர். எந்தவொரு இறுக்கத்தையும் வெகு சுலபமாக மாற்றிவிடக்கூடிய மனத்தெளிவு இவர்களிடம் மட்டுமே இருப்பதாக நம்புகிறேன்!

இந்த மாதிரி இடங்களை பார்க்கவே முகம் சுளிக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில் இப்படியொரு சூழலில் நடித்துக் கொடுத்ததற்காகவே ஐஸ்வர்யா ராஜேஷை வெகுவாக பாராட்ட வேண்டும். கச்சிதமான உடல் மொழி. திறமையான முயற்சிக்கு ஊக்கமாய் இருந்த இரு தூண்களான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரையும் தமிழ் சினிமா நினைவில் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை! தரமான ரசனை நிறைந்த சினிமாவை வழங்கிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!

========================================================================

நண்பர்கள் குழாமுடன் கேசினோவில், நேற்று "பண்டக சேஸ்கோ" என்ற தெலுகு படத்தை பார்த்தேன், அந்த சுகானுபவத்தை பெரிய பதிவாகவே எழுதவேண்டும் என்று உள்ளம் துடித்தாலும் உங்களின் நிலையை கருத்தில் கொண்டு அதற்கு தடா போட்டுவிட்டேன்.

அரைத்து, சலித்து, உளுத்து, மீண்டும் அரைத்து, சலித்த ஒரு கதையை எடுத்து ரசிகர்களை குஷிப் படுத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் மண்டை காய்ந்தாலும், போகப் போக படத்தோடு ஒன்றிணைத்துக் கொண்டு தெலுகு ரசிகர்களாகவே மாறிவிட்டோம். சிவகாசிகாரனுக்கும், தென்காசிக்காரனுக்கும் இடையில் அமர்ந்து ரசித்த தெலுகு திருவிழாவை வாழ்நாளில் மறக்கவே இயலாது, அப்படியொரு சுகானுபவம்!    


   




Post Comment