புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 30, 2013

அவசர கவனம், அவசியம் தேவை ....


நம்மில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதை பற்றிய சிறு பார்வை தான் இந்த பதிவு . பெரும்பாலும் அனைவரும் இரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள். இப்போ உள்ள சூழலில் ரயிலில் பயணச்சீட்டு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் பட்சத்தில், அதற்கடுத்த வாய்ப்பு பேருந்து தான்! பேருந்தில் பயணம் செய்து வீடு திரும்புவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் களிப்பும், களைப்பும்! 

சாதாரண பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் நிலையை கண்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும்! அதுவும் எங்கள் பகுதி பேருந்தில் பயணிப்பவர்கள் நரகத்தை நான்கு முறை சுற்றி வந்த மாதிரி ஒரு வித விரக்தியில் தான் இருப்பார்கள்! கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள  மூட்டையில் பாதி இங்கு தான் இருக்கும்! பின்பகுதி முழுதும் வெறும் மூட்டைகளாகவே நிறைந்திருக்கும்! மூட்டை எது பயணி எது என்று சில நேரங்களில் நடத்துனரே குழப்பமடைந்து பின் தெளிவார்!

இது ஒருபுறமிருக்க, கோயம்பேட்டிலிருந்து செல்லும் பேருந்துகளில் பெரும்பாதி விழுப்புரத்திற்கு முன்பு உள்ள விக்கிரவாண்டி அருகே உள்ளே ஹோட்டல்களில் நிற்கும்! அங்கு உள்ள உணவகங்களின் தரம் பற்றி நானூறு பதிவு எழுதலாம்! இரவு நேர பயணத்தில் பெரும்பாலனவர்கள் அங்கு உண்பதில்லை, பகல் நேர பயணிகளின் தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது!

அங்கு உள்ள கழிப்பிடங்களின் நிலை கண்டு  இந்தியனாய் பிறந்ததிற்கு வெட்க பட தூண்டும்! பெட்ரோல் விலை ஏற்றத்தை போல் இவர்களும் நாளுக்கு நாள் ஏற்றிக்கொண்டு வரும் பயணிகளின் வயிற்றை வாயிலிலே கலக்கி உள்ளே அனுப்புகின்றனர்! கொடுமை என்னவெனில் வாங்கும் காசில் ஒரு பகுதிக்காவது கொஞ்சம் சுத்தப் படுத்த கூடாதா? ச்சே என்ன ஒரு செயல்! கேட்டால் ஒரு நாளைக்கு உங்களை மாதிரி லட்சம் பேர்  வந்து  செல்கின்றனர் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்!

இதை தவிர்க்கவே பெரும்பாலான ஆண்கள் பேருந்து நின்றதுமே நெடுஞ்சாலையை நோக்கி விரைந்து விடுகின்றனர்! பாவம் பெண்களின் நிலை, வேறு வழியின்றி அந்த நரகத்தை நோக்கி நடக்க வேண்டும்! 

இல்லாத வளர்ச்சியை வாய் கிழிய, பதவியில் இருப்பவர்கள் பேசும்போது தான் மண்டை கிறுகிறுக்கிறது! அவசர , அவசிய தேவை இதை கூட வழங்காத இவர்கள் எம்புட்டு வளர்ச்சி அடைந்து என்ன பயன்! அது வெறும் அதற்கு தான் சமம்! அவசிய தேவைகளான குடிநீர் , கழிப்பிட வசதி இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை! அவசரமாய் ஓடும் நாம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் விடுவதினால் தான் இவர்களின் அராஜகம் பெருகுகின்றது! "என் தங்கம் , என் உரிமை" அளவுக்கு இல்லாமல் போனாலும், அதில் ஒரு பாதியாவது இருந்தால் நன்றாக இருக்கும்!    


Post Comment

ஏப்ரல் 27, 2013

முத்த கிறக்கம் (Semman Devathai # 12)


ஒற்றை முத்தத்தில் 
பெரும் பசி தணிக்கும்,
வித்தையறிந்த 
தெத்துப்பல்
தேவதையடி நீ ... 



பெரும் மழையின் ஊடே
இதழ் முத்தம் தந்தாய்,
மழை "தீ"யாகிறது 
 என்னுள்!

Post Comment

ஏப்ரல் 24, 2013

புத்தகங்களுக்கு வந்த சோதனை


நேற்று இரவு தொலைக்காட்சியில் புத்தக வாசிப்பு பற்றியும், பதிப்பகத்தின் இன்றைய நிலை, எதிர்காலம்,  பற்றியும் விவாதம் நடந்து நடந்துகொண்டிருந்தது, சானலை மாற்றுகையில் எதேச்சையாக காண நேரிட்டது. வந்திருந்த பிரபலங்கள் தெளிவாத்தான் பேசுனாங்க போல இருந்தது, ஆனால் எனக்குத்தான் ஒரு மண்ணும் விளங்கல. குறுகிய நேரம் தான் பார்த்தேன், கை தானாகவே அடுத்த சானலுக்கு மாற்றிவிட்டது!


வந்திருந்த பிரபலங்களில் சொன்ன சில கருத்துக்கள் பிடித்திருந்தது, சிலது சகிக்க கூட முடியவில்லை! பதிப்பகத்தின் தரம் மாறனும், வாசகர்களை எளிதில் சென்று சேரும் நல்ல விடயங்களை தாங்கிய புத்தகங்களை சிறப்பு கவனம் எடுத்து வெளியிட்டால் பாதிப்பு இருக்காது, எப்போதும் வாசிப்புக்கென்ற ஒரு வட்டம் இருக்கத்தான் செய்கிறது அவர்களை நாம் இழக்க கூடாது என்று பேசினார் ஒருவர்!


இன்னொருவர் அதெல்லாம் ஒன்னுமில்லைங்க, இலங்கை பிரச்சினையை வைத்து எந்த புத்தகம் போட்டாலும் விற்பனை தூள் கெளப்பும் என்கிற தோரணையில் வெளுத்து வாங்கினார்! இப்படியாக விவாதம் சூடு பிடிக்க, ஒரே அதகளம் தான்! 


பணம் கொடுத்தால், எந்த குப்பையாக இருந்தாலும் புத்தகமாக அச்சிட்டு அதை வெளியிடும் பதிப்பகங்களுக்கு மத்தியில், தரமான புத்தகங்களை வழங்கும் சில நல்ல பதிப்பகங்களும் இருக்கத்தான் செய்கின்றன! இப்போ பிரச்சினை என்னவென்றால் இவர்களின்  "என் தங்கம், என் உரிமை" மாதிரியான போராட்டத்தால் விளைவு இவர்களுக்கு தான் என்று உணர மாட்டார்கள் போல!


இணைய எழுச்சியினால் புத்தக விற்பனை சற்று தொய்வடைந்திருக்கும் இக்கால கட்டத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்காமல், இவர்கள் பங்காளி சண்டை போட்டுக்கொள்வது எனக்கு நல்லதாக தோன்றவில்லை! இது தமிழனுக்கே உரிய சிறப்பு போலும்!  நல்ல படைப்புகள் சந்தைப்படுத்த தெரியாமல் இன்னும் அச்சகத்திலே முடங்கி கிடக்கின்றன! மேலும் நல்ல விடயங்கள் அச்சேறாமல் அடைப்பட்டு கிடக்கின்றன! அதை தேடி இனங்கண்டு, மக்களிடம் சேர்க்க தவறினால் இவர்கள் தமிழுக்கு இழைக்கும் அநீதியே! 


அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் சொன்னது போல், மாற்றம் வரவில்லையெனில் இன்னும் பத்து, பதினைந்து வருடங்களில் பதிப்பகங்கள் இருந்த தடம், இல்லாமல் போகும். புத்தகம் என்ற ஒன்று காட்சி பொருளாகும்! 

Post Comment

ஏப்ரல் 22, 2013

திருமதி தமிழ் - மகா காவியம்



நமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட்லண்ஸ் திரை அரங்கையே வட்டமிட ஆரம்பித்தது! வேறு எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு மிகையாகி , என் நாடியை சோதிக்க ஆரம்பித்தது. 

யாரும் ஆப்சென்ட் ஆகாமல் சொன்ன மாதிரியே எல்லோரும் கச்சிதமாய் வந்து நெஞ்சில் பிஸ்லரி வார்த்தனர்! தலைவனோடு முடியாமல் போன வருத்தத்தை அவரின் கொரில்லா போஸ்டரோடு  நின்று போட்டோ எடுத்து மனதை தேற்றிக்கொண்டு, அரங்கை ஆக்கிரமித்தோம்! 



திரையுலகில் இருக்கும் அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் தலை காட்ட தவறவில்லை. பொண்டு பொடிசு எல்லோரும் இப்படத்தில் ஆஜர்! அதையும் மீறி நாயகன் தான் ஏற்ற பாத்திரத்துக்கு பங்கம் வராமல் ஒரு படி மேலே போய்  நடித்து, என் பிறவிப்பயனை அடையச் செய்துவிட்டார்!

படத்தை பற்றி மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் நமது நண்பர்கள் உங்களுக்கு புரியும் வண்ணம் எதை எதையோ போட்டு விளக்கிய காரணத்தினால் இத்தோடு முடித்துக் கொண்டு, வேறொரு சப்ஜக்ட்க்கு தாவுகிறேன்!

சனிக்கிழமை படம் பார்த்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் தலைவனும், தலைவிகளும் நேற்று தொலைக்காட்சியின் மூலம் வந்து என்னை இன்பக்கடலில் ஆழ்த்திவிட்டனர். திரையில் தலைவனை காண்கையில் எந்த மன நிலையில் இருந்தேனோ அதே நிலையில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரை வேறு எங்கும் என் கவனத்தை சிதற விடாமல் பார்த்து முடித்தேன்! தலைவனின் பேச்சும், தலைவிகளின் பொங்கு தமிழும் என்னை அலேக்கா தூக்கி கொண்டு போய் அரைமணி நேரம் நயாகராவில் நீராட்டியது  போல ஒரு பேரானந்தத்தை தந்தது என்றால் மிகையில்லை!



நிகழ்ச்சி "நேரலை" என்பதால், இரசிக கண்மணிகள் போன் பண்ணி தங்களது உணர்ச்சியை கட்டுபடுத்தாமல் பொங்கியது கண்டு நெஞ்சுருகிப் போனேன்! அதிலும் தலைவி தேவயாணி தனது கொஞ்சும் குரலில் ஒரு ரசிக பக்தனிடம், கண்டிப்பாக குடும்பத்தோடு படத்தை பார்க்கவும் என்று சொல்லவும், தலைவன் அதை ஆமோதித்ததையும் காண கண்கள் நூறு வேண்டும்! 

ஒரு ரசிகன் பரபரத்த குரலில் தலைவனிடம், இதுவரை நான்கு முறை பார்த்துவிட்டேன், இன்னைக்கு ஈவ்னிங் ஷோ போலாம்னு இருக்கேன் என்று என்னை சூடாக்க நானும், தலிவனிடம் நாலு வார்த்தையாவது பேசிடனும் என்று வெறி கொண்டு போன் செய்தேன்.. செய்தேன்... செய்தேன்... நிகழ்ச்சி முடியும் வரை லைனே கிடைக்கவில்லை! உடைந்த மனதோடு டிவியை நிறுத்தியது போல், இந்தப் பதிவையும் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்!


Post Comment