புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 23, 2014

நட்பு ...


இன்றைய நவீன யுகத்தில் நட்பு மிக எளிதாய் அமைந்துவிடுகிறது, என்ன அதை தொடர்வதுதான் வெகு சிரமமாக இருக்கிறது. சின்ன சின்ன கருத்து முரண்களினால், பல ஆழ்ந்த நட்புக்கள் முறிந்திருக்கின்றன. பள்ளிகளில், கல்லூரிகளில் துவங்கிய பல தோழமைகள் இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என்று தூசு தட்ட கூட நேரம் கிட்டாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவசர யுகமிது!

ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் பேசினால் அதை நட்பாகவும், இதே, ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் பேசினால் அதை காதல் என்றும் திட்டவட்டமாக நம்பிய ஒரு கேடுகெட்ட காலத்தில் படித்தேன்! பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஆண் - பெண் நட்பை  அந்த அரசுப் பள்ளிக்குள் நான் கண்டதில்லை. அதிசயமாய் பேசினாலும் கூட பாட சம்பந்தமான விசயங்களை தாண்டி அவர்களின் பேச்சு நீண்டதில்லை. இதிலொரு வேடிக்கை என்னவென்றால் இப்போது சில பள்ளிகளில் இருக்கும் மாணவனும், மாணவியரும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதிமுறைகள் எல்லாம் அப்போது கிடையாது! 

பத்திலிருந்து பனிரெண்டு வகுப்புகளுக்கு மட்டும் அந்த நட்பு விரோத போக்கு இருந்து வந்தது! அப்படியிருந்தும் இரகசிய சைட்டுகளுக்கு மட்டும் பஞ்சமிருக்காது! வாழ்க்கையை அனுபவிக்க துவங்கிய துளிர் காலங்கள் அவை. பருவம் அடைந்த பெண் பக்கத்து வீட்டுப் பையன் கூட பேசுவது கூட பாதகச் செயலாய் பார்த்த காலங்களிருந்து, போர்வைக்குள்ளிருந்து மொபைலில் காதல் பேசுவது வரை காலம் தன் சிறகை இராட்சசத்தனமாய் விரித்திருக்கிறது! வேடிக்கை என்னவெனில் இன்னும் நட்புக்குள் கட்டுப்பாடு இருக்கிறது என்பது தான்.

ஒரு படத்தில் "குத்தியது நண்பனாக இருந்தால், அதை வெளிய சொல்லக் கூடாது" என்பார் ஒரு நடிகர். திரையரங்கில் கைத்தட்டல் நிற்க வெகு நேரமாகியது  அந்த அளவுக்கு வலுவான வசனம் தான். நிதர்சன வாழ்க்கைக்கு பொருந்திப் போகா வசனமது. சின்ன கருத்து முறிவுக்கெலாம் கத்துக்குத்து விழுந்து கொண்டிருக்கும் காலத்தில், அப்படியொரு நண்பர்களிருந்தால் அவர்கள் தான் வாழ்க்கையின் உத்தமர்கள்! 

வழக்கமான சினிமாக்களில் நட்பு காட்சியமைப்பு என்றால், அதுவும் கிராமம் சார்ந்த நண்பர்கள் என்றால் உயிரைக் கொடுப்பதாக வலிந்து திணித்திருப்பார்கள். நகரத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் சுயநல வாதிகள் போலவே சித்தரிப்பது கொடுமையிலும் கொடுமை! உயிரைக் கொடுத்து நட்பை தாங்கும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு அடியேனின் ஆயிரம் நமஸ்காரங்கள்!

இலக்கண நட்புகள் போய், இலக்குகள் கொண்ட நட்புகள் வந்து விட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நட்புக்களை தெரிவு செய்வதும் ஒரு கலை என்றுதான் சொல்வேன். அரைவேக்காட்டு தனமாக நட்பு கொண்டாடி பின் ஒரு சூழ்நிலையில் உண்மை புரிகையில் புலம்புவது எல்லாம் மூளையுள்ளவர்களின் செயலல்ல! நட்பு போர்த்திய புலிகளும், பசுக்களும் திரியும் சமகால சூழலியலில், தனக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து களித்து மகிழுங்கள் தோழமைகளே .....


Post Comment

செப்டம்பர் 13, 2014

அஞ்சப்பரில் ஆவியும் நானும் ....


நீண்ட சிந்தனைகளுக்குப் பிறகு, அஞ்சப்பர் செல்வதாக முடிவெடுத்தோம் நானும் ஆவியும்! (அந்த நீண்ட சிந்தனைகளுக்கு  சென்சாரில் கத்தரி விழுந்துவிட்டதாக நினைத்து கொள்ளுங்கள்). நான் அஞ்சப்பர் என்று சொன்னதும், "ஆவிப்பா" ரிலீசன்று இங்கு தான் வந்தோம், கேட்ட எதுவுமே இல்லையென்றதும் சிறு கலவரம் நடந்தது என்று ஆவி சொல்ல, சிறு தயக்கத்துக்கு பின் வாங்க போகலாம் என்று இருவரும் வெற்றி குறி போட்டுக் கொண்டோம்!

எங்களை கதவைக் கூட திறக்கவிடாமல் வாயிற்காவலரே திறந்து உள்ளனுப்ப, செவ்வக வடிவில் இருக்கும் மேசையின் பின்னே இருந்த சோபாவில் அமர்ந்தோம். சட்டையை பேண்டுக்குள் சொருகி பெல்ட் அணிந்திருந்த குறுந்தாடி இளைஞன் மின்னணு கருவியுடன் அருகில் வர, ஆவி அவர்கள் கேட்டதில் சிலது இல்லையென்றும், கேட்காத சிலவற்றை இன்றைய ஸ்பெஷல் என்றும் சொன்னார். 

இருவரும் கலந்தாலோசித்து பதார்த்தங்களை சொல்ல, கையில் வைத்திருந்த கருவியில் ஆர்டரை பதிந்து கொண்டு சென்ற சில மணித்துளிகளில் வெள்ளையுடை ஆசாமி பவ்யமாக, உணவுகளினால் எங்களின் டேபிளை நிறைத்தார்.  பரோட்டா வட்டமாகவும், இன்னொரு வகை முக்கோணமாக நறுக்கப்பட்டிருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். அதையும் மீறி அந்த அந்த பதார்த்தங்கள் அதனதன் வண்ணத்தில் இருந்தது தான் பெருத்த ஆச்சர்யம்! 

உணவில் சிறு துண்டை எடுத்து வாயில் வைத்து நிமிர்ந்து பார்க்கிறேன், வரிசையாய் ஆறேழு நபர்கள் கையை கட்டிக்கொண்டு, விறைப்பாக நின்றபடி நாங்கள் உண்ணும் அழகை கண்கொட்டாமல் இரசித்து கொண்டிருந்தார்கள்! அவர்கள் எங்கள் அழகை இரசிப்பதில் தவறில்லை. என்ன, எங்களுக்குத் தான் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது. கொஞ்சம் மறைவாக இருந்து இரசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! 

கஸ்டமர்களை திருப்தி படுத்த, அவர்களின் மேசையருகே நின்று கவனித்துக் கொள்ளும்படி நிர்வாகம் அப்படி செய்திருக்கும் என்று நினைக்கிறேன். கஸ்டமர்களை கவரலாம், ஆனால் அவர்களை ஒருவித சங்கடத்திற்கு உட்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது என்னோட கருத்து! அவர்களும் என்ன மன நிலையில் இருந்திருப்பார்கள்! எந்த வேலையும் எளிதல்ல என்பதை மறுக்கா மனசில் நினைத்துக் கொண்டேன்! 

ஒரு மனிதன் உணவுன்னுவதை, இன்னொரு மனிதன் குறு குறுவென்று பார்ப்பது சற்று கொடுமையாகத்தான் இருக்கிறது. நாற்பது ஐம்பது வருடங்கள் பாரம்பரியம் கொண்ட உணவகம் சற்று கவனத்தில் கொண்டால் சரி... 

(குறிப்பு: மற்ற பெரிய உணவகங்களுக்குள் அடியேன் சென்றதில்லை அதனால் மற்றவைகளை எனக்கு தெரியாது )        

Post Comment