புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 31, 2015

சொதப்பல் "இசை" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.




இசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு,

உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாடலை வெள்ளோட்டமாக விட்டு சற்று எதிர்பார்ப்பை கூட்டினிர்கள். சும்மா சொல்லக் கூடாது தல, உங்களுக்கே உரிய இரசனையில் கிளுகிளுப்பாய் இருந்தது. முதல்நாளே படம் பார்க்கும் வழக்கமில்லாதவன் நான், ரொம்ப நாள் கழித்து உங்களின் படம் வருவதாலும், புதிய பரிமாணமாக நீங்களே இசையமைத்திருப்பதாலும், நேற்றைய இரவுக்காட்சிக்கு சென்றிருந்தேன். அரங்கமும் நிரம்பியிருந்தது. உங்களின் படத்திற்கு பெண்கள் நிறைய பேர் வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. சரி விசயத்துக்கு வருகிறேன்.

பலரும் உங்களின் படத்தை அருமையான திரில்லர், ஆகா ஓகோவென்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எனக்கென்னமோ படம் சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலே வரும் பாடலில் தெருவோர சிறார்களை உங்களின் இசைக்கூடத்திற்கு அழைத்து சென்று ட்ரம்ஸ் வாசிக்க வைத்த போதே மண்டைக்குள் மர்ம ஒலி ஒலித்ததை சாதரணமாக எடுத்துக்கொண்டதின் விளைவாக, என்னுடைய உறக்கம் போனதில்லாமல், தீவிர மன உளைச்சலுக்கும் ஆளேனேன் என்று சொன்னால் மிகையாகாது. வழமையாய் உங்களின் படங்களில் இளசுகளை கவர்கிற மாதிரி சில அம்சங்கள் அழகாய் இருக்கும் தல, அது இந்த படத்திலும் இருக்கிறது. என்ன உங்களின் முந்தைய படங்களில் இதே இரக காட்சிகளை அதிகம் பார்த்தமையால் இது என்னோட பொறுமையை ரொம்ப சோதித்து விட்டது. 

இயற்கையின் இசையை சேகரிக்க காட்டிற்கு சென்ற தாங்கள் மனைவியை சேகரித்து வரும் காதல் காட்சிகள் அப்பட்டமாய் தனியாய் தொங்கி நிற்கிறது. சின்ன கிச்சு கிச்சுக்கூட மூட்டவில்லை என்பது தான் பரிதாபம். எதிர்பார்ப்பை கூட்டிய சத்யராஜ், அதன்பிறகு வெறும் புகையை மட்டுமே ஊதி எரிச்சலை கொட்டிக் கொண்டிருந்தார் என்பது தான் உண்மை. இறங்கி அடித்து ஆடவேண்டிய பந்துகளை எல்லாம் வீணடித்துவிட்டு கடைசி ஓவர்களில் சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தது மாதிரி இருந்தது அவரின் பாத்திர படைப்பு. உங்களை பழிவாங்கவும், தவறவிட்ட இசை நாற்காலியை மீண்டும் பிடிக்க போராடும் போராட்டத்தில் பாதியை அவரின் இசையின் மீது செலுத்தியிருந்தாலே, அஞ்சாறு அவார்ட் வாங்குமளவிற்கு சாதித்திருப்பாரே என்று இரு நண்பர்கள் படம் முடிந்து செல்கையில் நொந்தபடி பேசிக்கொண்டு  போனதை கேட்கமுடிந்தது தல.

நீங்கள் எழுதிய வசனங்களை எனக்கு பின்னால் அமர்ந்திருந்த தோழர் அநாயசமாய் சொல்லிக்கொண்டிருந்தார் நீங்கள் சொல்லும் முன், அந்தளவிற்கு வசனத்தில் புதுமையை புகுத்தியிருந்தது புதுசாக இருந்தது. அது ஏனென்றே தெரியவில்லை தல, தொடர் நாடகங்கள் மாதிரியே நகர்ந்தது ஒவ்வொரு காட்சிகளும். நீங்கள் என்ன நினைத்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே வெளிச்சம். நீங்கள் நாயகிக்கு பாவமன்னிப்பு கொடுக்கும் காட்சிகளில் மற்றும் இன்னபிற சில காட்சிகளில் எல்லாம் காண்கையில், தியேட்டர் என்றும் கூட பாராமல் எங்களுக்கும் பாவமன்னிப்பு கொடுங்கள் என்று மண்டியிட்டு கதறவேண்டும் போலிருந்தது.    


எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது ஜெனி என்று நீங்கள் கண்ணீர் விடுகையில், எங்களுக்கும் தான் என முன்வரிசையில் ஒரு தோழர் கதறியது சிரிப்பலையை கொடுத்தது. அப்புறம், அரசி போடும் முன் ஓடும் வெற்றுக் கிரைண்டர் போல பின்னணி இசை மண்டையில் மாவாட்டியது அருமை தல. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் மாவரைத்தது பிரமாதம் தல. எதையும் விட்டு வைக்காமல் எல்லா இடத்திலும் மிகச்சரியாக கோட்டை விட்டு படமெடுத்தது சிறப்பு தல. லாஜிக் என்றால் என்ன கேட்குமளவிற்கு படமெடுத்துவிட்டு, கடைசியாக அதையும் ஒப்புக்கொண்டு நீங்கள் ஒரு ஜகஜால கில்லாடி என்று நிரூபித்து இருக்கிறீர்கள் பாஸ்.

படம் ஒருமாதிரி சென்று கொண்டிருக்கையில், திடிரென ஒரு திருப்பத்தை நிமிர வைத்த தாங்கள், மீண்டும் ட்விஸ்ட்டுக்குள் ட்விஸ்ட் கொடுத்து படம் பார்க்க வந்த எங்களை பொடனியில் ஒரே சாத்து சாத்தியது தான் வேதனையிலும் வேதனை. 

கஞ்சா கருப்பின் சில காட்சி காமெடி, உங்களின் குழந்தை ஏக்கம் அதன் வளர்ப்பு பற்றி நீங்கள் சொல்லும் வசனமும் அதன் தாக்கத்தால் வரும் காதலும், சில சில கேமரா கோணங்கள் மட்டுமே படத்தில் சொல்லும்படி இருக்கிறது.

  
தல போதும் தல எனக்கே போரடிக்கிறது, புதுசா யோசித்து படமெடுத்தால் மட்டுமே பீல்டில் நிலைத்து நிற்க முடியும் என்பதை மனதில் வைத்து படமெடுங்கள் என்பதுதான் என்னோட  தாழ்மையான வேண்டுகோள்.

Written, Screenplay, Composed & performed என்று போட்டுக்கொண்டு, பாடியதை மட்டும் போட மறந்ததை நினைவு படுத்த விரும்புகிறேன் தல. 

இப்படிக்கு 

உங்கள் முன்னாள் இரசிகன்.  

       
                

Post Comment

7 கருத்துரைகள்..:

சதீஷ் செல்லதுரை சொன்னது…

என்னம்மா இப்படி எழுதிட்டேங்களேம்மா .. ஒருத்தன் ஆஹோ ஓஹோ..இன்னொருத்தன் தலைகீழாக மொக்கைன்னு சொல்றான்...

ஆனா இத லெட்டர் எழுதாம விமர்சனமாக எழுதிருக்கலாம்னு தோணுது எனக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

என்ன தல் ஒரே தாக்கா தாக்கிட்டீங்க....

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

அச்சச்சோ @ நீங்கள் சொல்வதைப்பார்த்தால் தேராது போலிருக்கிறதே ? ததலைவர் மாத்திரம் என்ன செய்வாஈர் , அவ்வப்போது வித்தியாசமான ஆங்கிலப்படங்கள் வந்தால் தானே தலைவரும் படம் எடுக்கமுடியும் . இந்த படம் இப்படி இருப்பதற்கு காரணம் , வித்தியாசமான ஆங்கிலப்படங்கள் வராஆமையே காரணம் என்று நினைகிறேன் .

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்ன அரசன், இந்த மட்டையடி அடிக்கற அளவு இருந்துச்சா படம்? விட்டா டின் கட்டி தியேட்டர விட்டே ஓட வைச்சுருவீங்க போலருக்கே!

பெயரில்லா சொன்னது…

இளையராஜா வாழ்க என்று ஒரு வார்த்தை எழுதி இருக்கலாம் ஏன் விட்டு விட்டீர்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முத்ல் நாள் முதல் ஷோ பார்த்தீர்களா அரசன்! :)

பொதுவாகவே S.J. சூர்யா படம் பார்க்கறது கொஞ்சம் கஷ்டம் தான் - டி.வி.ல அவரோட படம் பார்த்து நொந்து போயிருக்கேன்!

பெயரில்லா சொன்னது…

Felt the same while watched this crap. Should have seen this review before went to watch it....:(