புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 11, 2015

சாமியாடிகளும் - நானும்.


முன்குறிப்பு : இது கிண்டலுக்காக எழுதப்பட்டது அல்ல.



எங்கள் பகுதி கிராமங்களின் தீமிதி திருவிழாக்களுக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்பது நிம்மதியை தந்தாலும், தாவணிக் குமரிகள் சுடிதாருக்கு மாறிவிட்டமையால், திருவிழாக் கூட்டத்தில் கிடைக்கும் தாவணிக்குறும்புகள் மட்டும் கிடைப்பதில்லை என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இல்லாத அழகை இருக்கும்படி காட்டும் தாவணியை புறந்தள்ளி, இருக்கும் கொஞ்ச அழகையும் கெடுக்கும் சுடியை மாட்டிக்கொண்டு திரியும் யுவதிகளிடம் எப்படி சொல்வது உங்களுக்கு தாவணி தான் அழகென்று, மீறி அவர்களிடம் சொன்னால், முகத்தை திருப்பிக்கொண்டு செல்லும் திருக்கோலத்தை காண சகிக்காது.

உறவினர்களுக்கும் செய்திகளுனுப்பி, அவர்களும் குடும்பமாய் வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து திருவிழாவை பார்த்துச் செல்வார்கள். சாமி அருள் கிடைக்கிறதோ இல்லையோ, உறவுகளின் பிணைப்பு வலுபெற இம்மாதிரியான விழாக்கள் முக்கிய ஆதாரமாக விளங்கியது. உறவுகள் கூடுகையில் மண்டை உடைப்பு சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது, அது வேறுமாதிரியான பாசமது. இப்போவெல்லாம் குடும்ப விழாக்களுக்கே அழைப்பு வருவதில்லை, பிறகு கோவில் திருவிழாவிற்கு அழைப்பில்லையே என்று வருந்துவது. சரி வாங்க நம்ம கதைக்கு போவோம்.

சின்ன சின்ன கோவில் நிகழ்வுகளுக்கெல்லாம் ஊரில் சிலருக்கு சாமி வருவது வாடிக்கை. நான் விவரம் அறிந்த நாளிலிருந்து ஒருவரை பார்த்து வருகிறேன், பூசையோ?, சமியெடுப்போ? எந்த நிகழ்வாக இருந்தாலும் மூர்க்கத்தனமாக சாமியாடி, பின் ஓய்ந்து போய் கிடப்பார். ஆரம்பத்தில் அவர் ஆடுகையில் பயந்தாலும், போக போக மிக சாதரணமாக எடுத்துக் கொள்ள பழகிக்கொண்டனர். சின்ன சின்ன கோயில் மணிக்கும், உடுக்கை சத்தத்திற்கும் சாமிவந்து ஆட்டம் பட்டையை கிளப்புவார்கள்.

ஊரில் எங்களின் நட்பு வட்டத்தில் இப்படியொரு (ஆ)சாமி இருக்கான், அவன் குடும்பமே சாமியாடிகள் தான், அதனால் அவனும் சாமியாடி என்பதில் ஆச்சர்யமும் இல்லை. எங்காவது கோவில் நிகழ்வுகளுக்கு அவனோடு செல்ல நேரிட்டால், எங்களுக்கு அடி நெஞ்சில் பக்கென்று ஒரு அனல் உருவாகும், அவனை தனியா விட்டுடாதிங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று அவர்கள் வீட்டில் மேலும் அச்சத்தை மூட்டி அழகு பார்ப்பார்கள். பயல் பார்க்க பரம சாது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அஞ்சாறு யானை பலம் கொண்டு திமிருவான். விபூதியள்ளி முகத்தில் பூசி, எரியும் சூடத்தை அப்படியே விழுங்கியதும் பேக் டு நார்மல் மோடுக்கு வந்து ,வாங்கடா பொறி வாங்க போகலாம் என்பான்.

நன்றாகத்தான் வருவான், பேசுவான், எங்களோடு இணைந்து கொண்டு சைட்டும் அடிப்பான். திடிரென ஆவேசமாக உடம்பை போட்டு முறித்துக் கொள்வான். அருகிலிருந்து சரியான நேரத்தில் அவனை பிடித்துக் கொள்ளவில்லையெனில் கீழே விழுந்து புரண்டு தன் விரல்களை கடித்துக் கொள்ளவும் செய்திருக்கிறான். கோவில் கும்பாபிசேகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம், தலைவர் ஆடவும் அருகிலிருந்த பூசாரி சூடத்தோடு எலுமிச்சை பழமொன்றையும் வாய்க்குள் திணிக்க சரியாகி இயல்பு நிலையில் நின்று கொண்டிருந்தான். கூட வந்த ஒருத்தனை இவனோடு நிறுத்திவிட்டு, பூசை சாமான்கள் வாங்கிகொண்டு வந்து பார்த்தால் வாயெல்லாம் இரத்தத்தோடு இவன் நிற்க, கூட இருந்தவன் விரல்களை பிடித்துக்கொண்டு நிற்கிறான், இரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டு இருக்கிறது. பாவம் அவனின் இரண்டு விரல்கள். அன்றிலிருந்து யாரும் அவனோடு கோவில் நிகழ்வுகளுக்கு செல்வதில்லை, அவனும் இம்மாதிரியான நிகழ்வுகளில் பங்குபெறாமல் தள்ளியே இருந்தான். பின்பு வேலை நிமித்தமாய் அரபு நாடொன்றிற்கு சென்றுவிட்டான்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆடிமாத அம்மன் பால் குட திருவிழாவொன்றில் நண்பனுக்கு(இது வேறொருவன்) துணையாக என்னையும் கூப்பிட, நானும் அவனோடு இணைந்து கொண்டேன். அவன் தலையிலிருக்கும் பால் குடம் சரிந்து விடாமல் சப்போர்ட் செய்வது தான் என்னோட வேலை. ஊரை சுற்றி வர நான்கிலிருந்து ஐந்து மணிநேரம் ஆகுமென்பதால் ஒவ்வொரு வேண்டுதல் காரருக்கும் ஒரு உதவியாள் இருந்தனர். இரண்டு தெருவை தாண்டி மூன்றாவது தெருவில் அடியெடுத்து வைக்கையில் என் வலது பின்னங்காலில் ஊசி இறங்கிய வலி, அடுத்த கணமே இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. என்னவென்று நிதானித்து பார்த்தால் முறைக்கார பெண்ணொருத்தி சாமியின் அருள் வந்து ஆடிய உற்சாகத்தில் அவளின் முன்னங்காலை கொண்டு என் பின்னங்காலை பதம் பார்த்துவிட்டாள். நண்பனிடம் இன்னொரு உதவியாளை வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற, மறுநாள் தண்ணியெடுக்க வந்தவள் என்னிடம் மன்னிப்பு கேட்க அது ஒரு மாதிரியாக முடிந்தது.



சென்ற வாரத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில், பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது, மெல்ல நானும் கூட்டத்தோடு கூட்டமாய் இணைந்து கொண்டேன். எங்கள் பக்கங்களில் திருவிழா கச்சேரியாக இருந்தாலும் கூட துவக்கத்திற்கு மட்டும் இரண்டொரு சாமி பாடல்களாக இருக்கும், மீதி எப்படியிருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்று நம்புகிறேன். இங்கு அப்படியில்லை நான் கேட்டவரை அனைத்து பாடல்களும் இறைப்பாடல்களே. ஒரு அம்மன் பாடலொன்றை துவங்கியது தான் தாமதம், அதுவரை அமைதியாய் இருந்த கூட்டம் பொங்கியெழுந்து ஆட ஆரம்பித்துவிட்டது. ஆம் அமர்ந்திருந்த கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கினர் சாமியாட ஆரம்பித்துவிட்டனர். இசை வலுக்க வலுக்க, இவர்களின் ஆட்டமும் சூடு பிடிக்க துவங்கி, சுமார் ஏழு நிமிடங்களுக்கும் மேலாக ஆட்டம் நீடித்தது. சின்ன குழந்தையிலிருந்து, இளம்பெண்கள், வயதான குமரிகள் வரைக்கும் எல்லோரும் சாமியாடினார்கள். குறிப்பாக இளம் பெண்ணொருத்தி தன்வயம் மறந்து ஆடிக்கொண்டிருந்தாள், திருமணம் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். நமது பக்த பதர்களும் அவர்களின் ஆட்டங்களை தங்களது மொபைல்களில் பதிவு செய்து தங்களது கடமையை ஆற்றினர். கிராமத்திலாடும் சாமியாடிகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக ஆடுகிறார்கள் நகரத்தில் கொஞ்சம் நளினமாக ஆடுகிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் இங்குமங்கும்.

சின்ன வயதிலிருந்தே, சாமியாடிகள் மீதும் அவர்கள் பேசும் மொழிகள் மீதும் எனக்கு பயம் இருந்ததே தவிர, அவர்களை நம்பியதில்லை. அவர்களின் மீதான பயமும் நான் வளர வளர கரைந்துவிட்டது. அவர்களை நான் பழிக்கவோ, அல்லது அவர்களின் மத ரீதியான நம்பிக்கையை குலைக்கவோ இதை இங்கு நான் பகிரவில்லை. ஏதோ ஒன்றுக்கு எளிதில் வசியப்பட்டுவிடுவதின் விளைவுகள் தான் இம்மாதிரியான சாமியாடிகள் நிலை என்று பலதரப்பட்ட அறிவியல் உண்மைகள் இருக்கிறது, இது ஒரு உளவியல் ரீதியான வியாதியாக இருக்க கூடும் என்று நம்ப படுகிறது. மாவட்ட மன நல திட்டத்தின் மூலம் பயிற்சி அளிப்பதாக செய்தியும் வருகிறது, பயன்படுத்தி பலனடைவது புத்திசாலித்தனம். வடபழனியில் ஆடிய இளம்பெண் ஒரு சாமியாடி என்று தெரிந்தால் திருமணம் செய்துகொள்ள எவரும் ஒரு கணம் யோசிப்பர், பிறகு திருமணம், குழந்தை என்று நீளுகையில் இன்னும் சிக்கலின் தன்மை கூடுமே தவிர குறைய வாய்ப்பிருக்காது. ஆகவே கடவுள், இறைநம்பிக்கை என்று பலதையும் போட்டு குழப்பிக்கொண்டு இராமல் சீக்கிரம் விழித்தெழுவது நலம்.


பட உதவி: இணையம்
      

Post Comment

5 கருத்துரைகள்..:

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

நான்கூட ஊர்த்திருவிழாவைப்பற்றிய பதிவு எழுதினேன் அண்ணா . இந்த விஷயத்தைப்பற்றி அடுத்த பதிவு எழுதிக்கொண்டிருக்க , அதைவிட சிறப்பாக நீங்கள் எழுதியுள்ளீர்கள் . நன்றி அண்ணா .

KILLERGEE Devakottai சொன்னது…


திருவிழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் நண்பா அருமை
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த நேரத்து "வீரம்" (!) எப்படித்தான் வருகிறதோ...?

aavee சொன்னது…

//அந்த நேரத்து "வீரம்" (!) எப்படித்தான் வருகிறதோ...?//

DD, நீங்க சொன்னது மேலே உள்ள பதிவைப் பற்றி தானே? ;)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நெய்வேலியில் இப்படி சில சாமியாடிகளைப் பார்த்ததுண்டு..... சமீபத்தில் கூட ஹிமாச்சலப் பிரதேசத்தில் இப்படி ஒரு சாமியாடியைப் பார்த்தேன்..... இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை சாமியாடினார்! பார்க்கும்போதே போலியாக ஆடுகிறார் எனத் தெரிந்தது!