புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 18, 2015

கொம்பனும், சென்னை உ. அ . வரவேற்கிறதும்...





முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பதாக புக் பண்ணி, கிருஷ்ணசாமி கிச்சு கிச்சு மூட்டியமையால் இரண்டாம் நாள் இரவாக மாறிப்போனது, முதல் நாள் சாயந்திர காட்சி பார்த்துவிட்டு, பருத்திவீரனை தூக்கி சாப்பிட்டுவிட்டது, நடிப்பில் கார்த்தி பட்டையை கிளப்பியிருக்கிறார் என்ற சல்லைகளுக்கு மத்தியில் போய் பார்த்தால், எப்பவோ அரைத்து இறுகிப் போன மாவை மீண்டும் பழைய தண்ணியை கலந்து அரைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா, அவ்வளவே. சட்டென வந்து விருட்டென தியேட்டரை விட்டு கிளம்பியிருக்கும் கொம்பனை, தன்னுடைய வெட்கங்கெட்ட அரசியலுக்காக சர்ச்சையை கிளப்பி வாங்கி கட்டிக்கொண்டதில்லாமல், சற்று ஆசுவாசப் படுத்தி அனுப்பி வைத்த பெருமை திரு. கி. சாமி யையே சாரும். சென்சார் போர்டுன்னு ஒன்னு இருப்பது தெரியாமலே கொடி பிடித்தால் இப்படித்தான் இருக்குமென இனியாவது அவரவர் உணரட்டும்.

அதே வார கடைசியில் ஊருக்குப் போயிருக்கையில்,  மீண்டுமொரு தடவை கொம்பனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். ஊர்ப்புறங்களில் இருக்கும் தியேட்டர் லட்சணங்களை உலகமே அறியும். கொம்பையா பாண்டியன், சல்லையை கொடுக்கும் எதிரிகளை அல்லையில் மிதிக்கும் போதெல்லாம் அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது. படம் முழுக்க எவனையாவது போட்டு அடித்து துவைத்தாலும், இவர்களின் ஆராவாரிப்பும் ஓயவில்லை என்பது தான் வேடிக்கை. இப்படியொரு மூர்க்கத்தனமான ரசிகர்கள் இருக்கும்வரை கொம்பன் பல்வேறு வடிவங்களில் வந்து நம்மை மிரட்டுவது உறுதி என மனதில் நினைத்துக் கொண்டேன்.

****

 பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் ஓரளவிற்கு பேசப்பட்ட படமென்பதால் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" படத்தை பார்த்தேன். தரமான முயற்சி. சினிமா மீது ஆர்வமிருந்தாலும்  அடுத்த கட்ட நகர்வில்லாமல் முடங்கிவிடக் கூடிய பலருக்கு மத்தியில், அந்தளவில் துணிந்து இறங்கி தயாரித்து, இயக்கி வெற்றியும் அடைந்திருக்கும் இயக்குனர் மருது பாண்டியன் அவர்களுக்கு வணக்கமும் வரவேற்பும்.

புதுமுக இயக்குனர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறையாக எனக்கு தெரிவது என்னவெனில் தான் நினைத்த அத்தனை விசயங்களையும் தன்னுடைய முதல் படத்தில் புகுத்தி விட நினைப்பது தான். இவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத திரைக்கதை, கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் பார்க்க வைக்கும் படம் என்றளவில் இது வெற்றித் தான்.

நான் சென்னை வந்த புதிதில் பேச்சுலர்களுக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. சில காட்சிகளை காணும்போது, அம்பத்தூர் பாடியில் அண்ணன் ஒருவரின் சிறிய அறையில் அடைந்து கொண்டு, ஹவுஸ் ஓனர் வருகையில் கழிப்பறையிலும், குளிப்பறையிலும் மறைந்து நின்ற அவலக் காட்சிகள் மனதில் வந்து போனது, இப்படி படம் பார்க்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றை நினைவு கூற வைக்க கூடிய படைப்பு.

வசனம், காட்சியமைப்பு என்று சுவராசியமாக இருந்தாலும் இசை தான் இந்தப் படத்தின் மகா சொதப்பல். பின்னணி இசை கதை கடைகிறது, பாடல் மனதில் நிற்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் ரூமுக்கு பெண்ணை அழைத்து வந்து சல்சா பண்ணுவதினால் வீடு மாற வேண்டி இருக்கிறது என்ற காட்சி படு மொக்கையாக இருக்கிறது. சின்ன சின்ன குறைகள் தவிர்த்து, படம் பாராட்டுதலுக்குரிய தகுதியோடு இருக்கிறது.

சிவாஜி பாடல்களை வைத்து சில காட்சிகளை நகர்த்துவதும், வசனமின்றி வெறும் சிவாஜி பாடல்களை கொண்டு  விவரிப்பதும், ஒரு பெண்ணிடம் என் மேல் நம்பிக்கை இருந்தால் என் கூட ரூமுக்கு வா என்று ஒருத்தன் சொல்வதும் , அந்தப் பெண் இல்லையென்று அழுத்தமாய் சொல்வதும் சரி, அதே பெண் என்னை கல்யாணம் பண்ணிப்பல்ல என்று தன்னை இழப்பதும் செம செம காட்சிகள்.    இதுவே சொல்கிறது இயக்குனரிடம் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது என்று. பாத்திர தேர்வில் ஒரு நேர்த்தி இருக்கிறது. சின்னப் பையன் கூட அவ்வளவு அட்டகாசமாக நடித்திருக்கிறான்.  அடுத்தடுத்த படைப்புகளில் மீண்டும் பெரிய வெற்றியடைய வாழ்த்துவோம். திரையரங்கை விட்டு தூக்காமல் இருந்தால் (முடிந்தால்) திரையில் ஒருமுறை பார்த்துவிடுங்கள்...       

Post Comment

2 கருத்துரைகள்..: