புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 27, 2015

மலிவுக் கொலைகள்...



இனி, யாரிடமும் கோபித்துக் கொள்ள கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன், ஆம் இப்போதெல்லாம் சின்ன சின்ன கோபங்கள் எல்லாம் கொலையில் தான் முடிகின்றன. (என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம்தான்) நித்தம் நிகழ்ந்தேறும் கொலைகளுக்கான பின்னணிகளை படிக்கையில் சிரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மனதினுள் பயம் மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்குகிறது. சல்லிக்காசுக்கு பிரயோசனமில்லாத நிகழ்வுகளுக்கெல்லாம் கொலை தான் தீர்வாக இருக்கிறது. அத்தனை மலிவாகி விட்டது போலும் மனித உயிர்!

முன்பெல்லாம் சினிமாவில் காட்டுவது போல் முறுக்கு மீசையும், மிரட்டும் விழிகளுமாய் பார்ப்பதற்கே கர்ண கொடூரமாய் இருந்த கொலையாளிகள், இப்பொழுது 'ரே பான்' கிளாஸும், 'டச்' போனுமாய் அமைதியாய் நம்மில் ஒருவராய் கலந்துள்ளனர். அவர்களாக சொல்லாதவரை, அவர்களை கொலையாளி என்று இனங்காணுவது மிகக் கடினம். இப்பொழுது சினிமாவில் கூட வில்லன்கள் மிக அழகாகவே காண்பிக்கப் படுகிறார்கள். அவசரமாய் எல்லாத்தையும் அனுபவித்து விட வேண்டி ஏற்பட்ட துடிப்பின் மிகுதி தான் அழிவின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.     

சென்றவாரம் கோயம்பேடு அருகே, "எங்க தலைமுறையில் பெரியவங்க முன்னாடி நின்னு பேசவே பயப்படுவோம், இப்ப இருக்குற தலைமுறையை பாருங்க" என்று ஒரு பெரியவர் தன் கூட வந்தவரிடம் பேசிக்கொண்டு போனதைக் கண்டு நகைக்கத் தான் முடிந்தது. எல்லாம் தலைமுறையிலும் சல்லிப் பயலுக இருக்கத்தான் செய்கிறார்கள், அது என்னமோ இந்த தலைமுறையில் சற்று மிகுதியாக இருக்கிறது அவ்வளவே! என்னதான் கட்டிப்போட்டு வளர்த்தாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டே தானிருக்கிறது! வாழ்வியலை, அதன் நிதர்சனத்தை பிள்ளைகளுக்கு புரிய வைத்து வளர்க்காமல், வெறும் கட்டுப்பாடுடன் வளர்ப்பதினால் எந்த பலனுமில்லை! குடி என்றால் என்ன? அதனால் வரும் விளைவுகள் எல்லாவற்றையும் ஒரு நண்பனாக அவர்கள் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்து வளர்த்துப் பாருங்கள் தரமான விதையாக இருக்கும்! எல்லாவற்றையும் மூடி மூடி வைத்து வளர்ப்பதினால் அதை அறிந்து கொள்ளவே மனது பிரியப்படும் என்பது மனித இயல்பு என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?

முந்தைய காலம் மாதிரி இல்லை, இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பம் தனது வேரை மிக ஆழமாக வேரூன்றி, தனது கிளையை முடிந்த மட்டும் அகல விரித்திருக்கிறது. தமிழகத்தின் கடைக்கோடி சிறுவன் கூட உலக நிகழ்வுகளை நொடியில் அறிந்து கொள்ளுமளவிற்கு வசதிகள் பெருகி இருக்கும் இந்த காலகட்டத்தில் போய், எதையும் மறைத்து வைத்து வளர்க்க முடியாது. நடக்கும் முக்கால்வாசிக் கொலைகள் பாலியல் வன்புணர்வுகளாகவும், அதை சார்ந்த நிகழ்வுகளாகவும் தான் இருக்கின்றன, காரணம் நமது அலட்சியமும், கல்வி முறைகளும் தான்! செக்ஸ் என்ற ஒன்றை பிள்ளைகளை அறிந்து கொள்ளதாவறு இருக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்தில் அதை அறிந்து கொள்ள வைக்க எத்தனை வழிகளை நாம் யோசித்திருக்கிறோம்? மூடி மூடி வைக்க தான் இணையம் திறந்து வைத்துக் கொண்டே வருகிறதே! இதுவரை நிரந்தர தீர்வைப் பற்றி யாரவது யோசித்தார்களா? டில்லி, மும்பை, சென்னை, பொட்டாம்பட்டி என்று வன்புணர்வுகளும் ஊருக்கு ஊர் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற மொண்ணை காரணத்தை கூறிவிட்டு கைகழுவி விடுகின்றனர் எதிரணியினர். வெட்கங்கெட்ட ஊடகங்களும் நான்கு நாள் ஒப்பாரி வைத்துவிட்டு ஐந்தாம்நாள்  வசதியாக மறந்து விடுகின்றன.


சென்ற மாதத்தில் எனது கிராமத்திற்கு மிக அருகில், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபனை, ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியோட, அந்தப் பையன் அதே இடத்தில் காலி. சில நாட்கள் கழிந்த பின் மூன்று பேர் சரணடைந்து இருக்கிறார்கள் அதன் பின்னர் மூன்று பேர் சிக்கி இருக்கிறார்கள். கொலைக்கான காரணமாய் அவர்கள் சொன்னது வேடிக்கையாக இருந்தாலும், அந்த ஆறு பேரில் இருவரை தவிர்த்து, நான்கு பேருக்கு வயது இருபத்தைந்துக்கும் கீழ் தான். இந்த சின்ன வயதில் கொலை செய்யக் கூடிய அளவிற்கு என்ன விரோதம்? கொலை செய்வது என்ன அவ்வளவு எளிதா? இன்னொரு சம்பவம் ராமநாதபுரம் அருகே என்று நினைக்கிறேன், ஏழாம் வகுப்பு படிக்கும் பையனை, அவனது கூட்டாளிகள் இரண்டு பேர் சேர்ந்து பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்று பிடிபட்டிருக்கிறார்கள். வெறும் பதினைந்து வயதைக்கூட பூர்த்தி செய்யாத இவர்களின் மனதில் எவ்வளவு வன்மம் இருந்திருந்தால் இந்த செயலுக்கு துணிந்திருப்பார்கள்? சமூகத்தின் பிரதிபலிப்பு தான் இந்த இளம்வயது கொலையாளிகள்!

ஒவ்வொரு பதினைந்து வருடத்துக்கு ஒருமுறை ஒரு தலைமுறை மாறுவதாக சொல்கின்றனர், வரும் தலைமுறையினரைக் கண்டால் சற்று பீதிக் கொள்கிறது மனது! ஆம், சென்னை கேளம்பாக்கத்தில் மூன்று இஞ்சினியர் பட்டதாரிகள் சரியான வேலை கிடைக்காதலால் வழிப்பறியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டுள்ளனர். சீரற்ற கல்வி முறையினால் தரமற்ற பட்டதாரிகளை உருவாக்கிய கல்வியாளர்களையும் அதனை நடத்தும் ஆட்சியாளர்களையும், அதனை அனுமதித்த அரசாங்க இயந்திரத்தை இப்படி சங்கிலி போல் தொடரும் குற்றங்களை யார் சீர் செய்வது?

எல்லாத்துக்கும் மேலாக பேராசை, தான், மட்டும் சொகுசாக வாழ்ந்தால் போதுமென்ற மனம் பரவலாக விரவிட்ட இந்த சமூகத்தின் மக்களாகிய நாம் தான் முதன்மையான குற்றவாளிகள். நீதித்துறையும், நிர்வாகத்துறையும் பணத்திற்கு வளைந்து கொண்டிருப்பதைக் கண்கூடாக கண்டும், ஒரு சின்ன எதிர்ப்பைக் கூட பதிவு செய்யத் துணிவில்லாத நமக்கு அடுத்தவனை சிறுமைப் படுத்தி பேச என்ன யோக்கியதை இருக்கிறது? சமதளமற்ற சமூகத்தில் சாதிக் கொலைகளும், ஜாலியாய் துவங்கிய கல்யாண மது விருந்தில், சின்ன வாக்குவாதத்தில் காலையில் தாலிக் கட்டவேண்டிய மணமகனின் மார்பில் பீர் பாட்டிலை இறக்கி விட்டு நண்பன் தலைமறைவு, இப்படி வித விதமான கொலைகள் நடந்துக் கொண்டுதானிருக்கும்! இல்லாதவன் தலையில் இருப்பவனின் கால் மிதித்துக் கொண்டே தானிருக்கும் போல!

தனக்கென சுய ஒழுக்கமும், சுய புரிதலும், சுயக் கட்டுப்பாடும் வகுத்துக் கொண்டு வாழாத வரை எதுவும் மாறப்போவதில்லை, அதை உணரக்கூடிய மனநிலையில் மக்களுமில்லை என்பதுதான் ஆழ்ந்த வருத்தமான செய்தி!  

   

Post Comment

7 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


யதார்த்தமான வாழ்வில் மறைந்து போகும் விடயத்தை

அழகாக,
ஆழமாக,
இதமாக,
ஈர்ப்புணர்வாய்,
உணர்வாக,
ஊக்கத்தனாய்,
எளிமையாக,
ஏமாற்றமின்றி,
ஐம்புலண்களும்,
ஒன்றினைக்க,
ஒங்காரமிட்டு,
ஔத்தடமாய்,

தடவியிருக்கின்றீர்கள் நண்பரே மென்மையாய்.... வாழ்த்துகள்
தமிழ் மணம் இணைய மறுக்கின்றதே...

KILLERGEE Devakottai சொன்னது…

தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கும் எதிலும் எப்போதும்...



சுயநலம் ஒன்றே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

மது மிக முக்கிய காரணம்!

Kasthuri Rengan சொன்னது…

ஏதோ ஒன்று எங்கோ ..தவறாய் இருக்கு ..
சரி பண்ணனும்..
தம +

MARI The Great சொன்னது…

அருமையான எழுத்து நடையில் தங்களது மனக்குமுறலை கொட்டிவிட்டீர்கள் சகோ

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அருமையான கட்டுரை அரசன்! குடோஸ்! கை கொடுங்க...!

மூடி மூடி வைக்க தான் இணையம் திறந்து வைத்துக் கொண்டே வருகிறதே!// அதே!! அதே!

//சீரற்ற கல்வி முறையினால் தரமற்ற பட்டதாரிகளை உருவாக்கிய கல்வியாளர்களையும் அதனை நடத்தும் ஆட்சியாளர்களையும், அதனை அனுமதித்த அரசாங்க இயந்திரத்தை இப்படி சங்கிலி போல் தொடரும் குற்றங்களை யார் சீர் செய்வது?// நச்! ஆணி அடித்தாலும் விளங்கப் போவதில்லை....

தனக்கென சுய ஒழுக்கமும், சுய புரிதலும், சுயக் கட்டுப்பாடும் வகுத்துக் கொண்டு வாழாத வரை எதுவும் மாறப்போவதில்லை,// மிகச் சரியாகச் சொன்னீர்கள்! உண்மை இதுதான்...