புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 20, 2015

சேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...




எந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்று வருத்தம் கொள்கிறது. தங்களது ஆதர்ச வீரனை இனி அந்தந்த விளையாட்டுக்களில் பார்க்க முடியாது என்ற நிலை வருகையில் பலரும் அவ்விளையாட்டுகளின் மீது செலுத்திய அதீத கவனத்தை குறைத்துக் கொள்வதை நேரில் கண்டிருக்கிறேன். 

நான் கிரிக்கெட்டை ரசிக்க துவங்கிய சமயங்களில் கோலோச்சி தங்களது திறமையை வெளிப்படுத்திய கிட்டத்தட்ட எல்லோரும் ஓய்வை அறிவித்து விட்டார்கள், அதில் சச்சின் எனும் சகாப்தத்தை தவிர வேறு எவரையும் நல்ல முறையில் வழியனுப்பி வைக்க தவறி விட்டது (அதிலும் நிறைய அரசியல் இருப்பதாக சொல்லப் படுகிறது) இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம். 

வங்கப் புலி கங்குலியை கிட்டத்தட்ட கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அழுத்தம் கொடுத்து ஓய்வை அறிவிக்க வைத்தார்கள், அவ்வாறே திராவிட்டையும் செய்ய வைத்தார்கள். அணில் கும்ப்ளே மற்றும் திராவிட் போன்ற ஜாம்பவான்களை முழுக்க முழுக்க பக்கா அரசியல் உள்ளீடுகளின் அழுத்தத்தினால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். 

இதில் உச்சம் எனில் லக்ஷ்மண் எனும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ரன் குவிக்கும் எந்திரத்தை முடக்கி வைத்தது தான். ஓய்வை அறிவிக்கச் சொல்லி கட்டாயபடுத்தி இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து போன் போட்டார்கள் என்பது அப்போதைய பரபரப்பு, அதையும் தங்களது அதிகாரத்தினால் நீர்த்துப் போக செய்து விட்டார்கள். 

இடையில் சில வருடங்கள் சீனிவாசனும், தோனியும் செய்த அரசியில் மிகப்பெரியது. அணிக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறேன் என்று சொல்லிக் கொண்டு பல சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய பெருமை திரு. தோனி மற்றும் தேர்வாளர்களுக்கு உண்டு. கவுதம் கம்பீர், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் இப்படி சில பட்டியல் உண்டு. 



வயது கூட கூட, ஆட்டத்தில் திறமை குறைவது இயல்பு தான் அதை மனதில் வைத்து அவ்வீரர்களை ஓரங்கட்டுவது கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் முன்னொரு காலத்தில் அணிக்கு அளித்த பங்களிப்பை மறந்து அவர்களை மிகவும் மோசமாக நடத்தி ரிட்டையர் செய்யத் தூண்டுவது தான் அசிங்கத்திலும் அசிங்கமாக இருக்கிறது. இன்று நாம் செய்யும் அரசியல் நாளைக்கு நமக்கே நேரிடலாம் என்பதை உணர்ந்தால் இந்த அவலங்கள் நடைபெறாது.

சென்ற வாரத்தில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெற்றார், ஒருகாலத்தில் துவக்க ஓவர்களை வீசி எதிரணி மட்டையாளர்களை மிரள வைத்த காட்சிகள் வந்து போயின. இந்தியாவின் சிறந்த துவக்க மட்டையாளர், ரன் குவிக்கும் எந்திரம், இவர் களத்தில் இருக்கும் வரை எதிரணி செய்வதறியாது குழம்பி தவிக்கும், தோற்றாலும் சிரித்த முகத்துடன் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது இப்படி பல்வேறு அடைமொழிகளுக்கு சொந்தக்காரர் சேவாக் இன்று எல்லாத் தரப்பு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். 

அப்பர் கட் மன்னன், களத்தில் நிற்கும் வரை அசராமல் எல்லா பந்துகளையும் விளாசும் வல்லமை கொண்ட மனோதிடம், டெஸ்ட் மேட்ச் என்றால் வெகு தூரம் ஓடும் என் போன்ற ரசிகர்களை அதிரடியாக மட்டையை சுழற்றி டெஸ்ட் டின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய வித்தைக்காரர் இந்த டெல்லியை சேர்ந்த சேவாக். இரட்டை சதமும் சரி, முச்சதமும் சரி சிக்சர் பவுண்டரிகளால் மட்டுமே நிறைவு செய்த அசாத்திய துணிச்சல்காரர், எந்த நிலையிலும் தன்னிலை ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாதவர். தோனியுடன் ஏற்பட்ட பூசலினால் ஓரங்கட்டப்பட்டு, தற்போது தன்னோட பிறந்த நாளில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

சேவாக் என்ற வீரனுக்கு மதிப்பளிக்கவில்லை என்றாலும் அவர் செய்த சாதனைகளுக்கு மதிப்பளித்தாவது இந்த தென்னாப்பரிக்க டெஸ்ட் தொடரில் விளையாட வைத்து கௌரவம் செய்திருந்தால் என் போன்ற சேவாக் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும், அவருக்கும் ஓய்வு அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும். அவரின் இத்தனை வருட கடின உழைப்பை கொச்சைப் படுத்திய உணர்வு தான் மிஞ்சி நிற்கிறது. உங்களது ஒவ்வொரு அடியும் வரலாற்றில் பதிந்துவிட்டது இன்றைய சிலுவண்டுகள் எப்படி சிலுத்துக் கொண்டு திரிந்தாலும் உங்களின் அபரிமிதமான துணிச்சலும், எப்பேர்பட்ட பவுலரையும் கலங்கடிக்க கூடிய அதிரடியும் வேறு எவருக்கும் சாத்தியப்படாது. உங்களைப் போன்று கிரிக்கெட் ரசிகர்களை குஷிப் படுத்த முடியாது. உங்களது ஓய்வு அமைதியாகவும், குடும்பத்தினரோடு நிம்மதியாகவும் இருக்கட்டும் வீரு. 

சரி வீருவை விடுங்கள் வயதானவர், கம்பீர் இன்றளவும் ஐபில் வகையறா போன்ற கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கிக் கொண்டு தானே இருக்கார், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணியிடம் அடிமேல் அடி வாங்கி கொண்டிருக்கும்  இந்திய அணியில் அனுபவ வீரரான கம்பீருக்கு ஏன் இடம் அளிக்கவில்லை? ஒருவேளை அவரையும் ஓய்வுக்கு தயார் செய்கிறார்களோ, என்னவோ? 
   

Post Comment

3 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சேவாக்கின் பல ஆட்டங்கள் கண் முன்னே விரிகின்றன! எனக்குத்தெரிந்து அமர்நாத்தில் தொடங்கி இப்படி பலர் ஓரங்கட்டப்படுவது தொடர்கிறது! கம்பீரும் அணிக்கு திரும்புவார் என்று யோசிக்கமுடியவில்லை! தோனிக்கும் இதே நிலை கோஹ்லியால் விரைவில் வரலாம்!

Swathi சொன்னது…

அருமை. தொடர்கிறேன் நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/

Swathi சொன்னது…

அருமை. தொடர்கிறேன் நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/